Thursday 6 October 2011

ஈழத்தில் வர்க்கப் போராட்டம்- இணைய நூல்

உதய சூரியனை உறுமும் புலி வென்ற கதை

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் 

தேசிய இன விடுதலையில் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்

(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர்விடுதலைக் கூட்டணிவரை 1921-1976) 

பகுதி 6 (1)
http://senthanal.blogspot.com/2011/09/blog-post_29.html

பகுதி 6 (2)
http://senthanal.blogspot.com/2011/09/2.html

பகுதி 6 (3)
http://senthanal.blogspot.com/2011/10/3-1-6-3.html

பகுதி 6 (4)
http://senthanal.blogspot.com/2011/10/6-4.html

பகுதி 6 (5)
http://senthanal.blogspot.com/2011/10/6-5.html

பகுதி 6 (6)
http://senthanal.blogspot.com/2011/10/6.html

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் பகுதி 6 (6)


தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,

(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 1921-1976)

பகுதி 6   
பதில். . . . . . . படுகொலையா ?
       
தமிழ்தரகுமுதலாளிய வர்க்கம் எதிர்ப்புரட்சி வர்க்கமாகும். அதன் தோற்றம் முதல் இன்று வரை தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் புரட்சியை திசைதிருப்பி மழுங்கடிக்கும் எதிர்ப் புரட்சிப் பாத்திரத்தை ஆற்றிவருகிறது. தமது விடுதலையை வென்றடுப்பதற்காக தமிழ்மக்கள் சிந்திய இரத்தத்தை, அவர்களின் அளப்பரிய தியாகத்தை, பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களை, உடமை இழப்புக்களை இந்த எதிர்ப்புரட்சிக்கும்பல் தன் சொந்த வர்க்க நலனுக்காக வேட்டையாடியுள்ளது. சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து, இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் துணையோடு போராடும் மக்களை இரத்தப் பலி கொண்டுள்ளது. இதற்குத் தமிழ்த்தேசிய இனம் ஒருநாள் பதில் சொல்லியே தீரும். . . எவ்வாறு?
     
கடந்த ஜீலைமாதம் கொழும்பில் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் உரிமை கோரிக் கொள்ளாத ஒரு குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழியில் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு பதில் சொல்லிவிடலாம் என நாம் கருதவில்லை. ஏன்?
      
எந்தக் கட்சியையும் போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு வர்க்கத்தின் கட்சி. இது தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் – நலனுக்காக போராடிய – கட்சி. இந்த வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதி என்றவகையில் தான் அமிர்தலிங்கம் தனது பாத்திரத்தை ஆற்றியுள்ளார். தனிமனிதனை அழிப்பதனால் அவன் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்கம் அழிந்து போய்விடுவதில்லை. (வெகுசாதாரண உண்மைதான் என்றாலும் சொல்ல வேண்டியுள்ளது தானாகவே செத்துப் போனவர் செல்வநாயகம், இதனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் செத்துப் போய்விடவில்லையே!). இவ்வாறு பெளதீக ரீதியாக ஒரு வர்க்கத்தை, அதன் அரசியற் பாத்திரத்தை, செயற்பாட்டை அழித்துவிடவும் முடியாது. உலக வரலாறு முழுமையிலும் இதற்கு ஒரு உதாரணத்தைத்தானும் காணமாட்டோம்.
        சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளது. இச் சமூக வர்க்கங்களின் முரண்பட்ட நலன்களில் இருந்தே பல்வேறு கருத்துப்போக்குகளும், ஸ்தாபன அமைப்புக்களும் தோன்றுகின்றன. இச்சமூக வர்க்கங்களும் சமூக நிறுவனங்களும் திட்டவட்டமான பொருளாயத அடிப்படையிருப்பதன் காரணமாகவே அவை விடாப்பிடியாக தமது இருப்புக்காக போராடுகின்றன. ஒரு வர்க்கத்தின் முன்னணிப்பிரிவு, அவ்வர்க்கத்தின் நலன்களை உறுதி செய்யும் அரசியற் குறிக்கோள்களையும், அவ்வரசியல் குறிக்கோள்களின் அடிப்படையில் கட்சியாகவும் ஸ்தாபனப்படுகிறது.
     
அரசியல் போராட்டங்களில் அரசதிகாரத்தைக் குறிக்கோளாகக் கொண்ட வர்க்க நலன்களே மோதிக்கொள்கின்றன. இம் மோதல்களில் தனிமனிதர்களின் இழப்புக்கள் ஒரு வர்க்கத்தின் இருப்பை இல்லாதொழித்து விடுவதில்லை. இதற்கு மாறாக அவ்வர்க்கம் உள்ள வரையில் தனது அரசியல் தலைவனை உடனடியாகவோ சற்றுக் காலந்தாழ்த்தியோ உருவாக்கிக் கொள்கிறது. எனவேதான் அமிர்தலிங்கத்தை கொலை செய்வதனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கமோ, அதன் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரமோ இல்லாதொழிந்துவிடாது என்கிறோம்.
      
ஆனால் எதிர்ப்புரட்சி வர்க்கமான தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் அரசியல் செல்வாக்கிலிருந்து தமிழ்மக்களை விடுவிக்க வழிகாட்டவேண்டும். இதற்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. நிச்சயமாகவும் முடிவாகவும் ஒரேயொரு வழி மட்டுமே உண்டு. ‘நாடுதழுவிய வகையில் அரசியல் அம்பலப்படுத்தலைத் திரட்டி ஒழுங்கமைப்பதே’ அவ்வழியாகும்.  தீர்க்கமான தாக்குதலையும், தீர்மானகரமான வெற்றியையும் இவ்வழியில் மட்டுமே சாதிக்க முடியும்.
     
ஏனெனில்”ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமாகும்.” ஆளும் வர்க்கங்கள் – அதன் இளைய கூட்டாளியான தமிழ்ததரகுமுதலாளிய வர்க்கமும் – தமது எதிர்ப்புரட்சி அரசியலை வைத்து மக்களைத் தம்பின் திரட்டுகின்றன. நாம், நமது அரசியலை வைத்து இவர்களை அம்பலப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அரசியல் தெளிவை ஊட்டுதல் வேண்டும். கூட இருந்து குழிபறிக்கும் சமரச வர்க்கங்களைத் தனிமைப்படுத்த வேண்டும். எதிரிகளை மக்களுக்கு இனங்காட்டி அவர்களை எதிர்த்துப் போராட மக்களைத் திரட்டி அமைப்பாக்க வேண்டும். இந்த ’அரசியல் போராட்ட வழியில்’ செல்வதன் மூலம் மட்டுமே நாம் வர்க்கப் போராட்டத்தில் முன்செல்லலாம்.
      
’இவ்வழியில் நம்பிக்கையோ இதனைச் சாதிப்பதற்கான ஆற்றலோ பொறுமையோ இல்லாதவர்கள் தமது வெஞ்சினத்தைத் தீர்த்துக் கொள்ள பயங்கரவாதம் தவிர வேறு போக்கிடம் தேடுவது கஸ்டம்தான்’ இதனால் அவர்கள் அமிர்தலிங்கத்தைக் கொன்று விட்டார்கள். ஆனால் அமிர்தலிங்கத்தின் ஆவியைச் சந்திப்பார்கள். அது மக்களின் சிந்தனையில் அமுக்குப் பேயைப் போல் உட்கார்ந்திருக்கிறது.!
       
புரட்சியைத் துப்பாக்கிகள் தீர்மானிப்பதில்லை. அரசியல் தான் தீர்மானிக்கிறது. (ஈழப்போராட்டத்தின் பின்னடைவு துப்பாக்கிகளின் பற்றாக்குறையால் ஏற்படவில்லை. பிரதானமாக அது ரசிய சமூக ஏகாதிபத்தியம், இந்திய விஸ்தரிப்புவாத அரசு, தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் மற்றும் போராட்ட நடைமுறை குறித்த தவறான அரசியல் மதிப்பீடுகளின் விளைவாக, போராட்டப் பாதையைத் தவறவிட்டதால்தான் ஏற்பட்டதென்பது கண்கூடான உண்மையல்லவா!). 


தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் மூன்று எதிர்ப்புரட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில் தான் தமிழ்மக்களின் மத்தியில் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இக்கோட்பாடுகளில் இருந்து தமிழ்மக்களை விடுவிக்காத வரையில் ஒரு வர்க்கம் என்கிற முறையில் அதன் எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தை எந்தத் துப்பாக்கியும் எதுவும் செய்துவிடாது.
    
எனவே தமிழ்த்தரகுமுதலாளிய மூன்று கோட்பாடுகளின் பழைய முழக்கங்கள் மண்மூடிப்போகட்டும். ‘இந்திய – இலங்கைப் பாசிஸ அரசுகளை எதிர்த்து தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்’ என்ற புதிய முழக்கத்தோடு போராட்டப் பாதையில் முன்னேறுவோம்.
(முற்றும்)


குறிப்பு: இக்கட்டுரை நவம்பர் 1989 இல் (22 ஆண்டுகளுக்கு முன்னால்), எழுதப்பட்டு புதிய ஈழப்புரட்சியாளர்களால் தமிழீழத்தில் தலைமறைவாக விநியோகிக்கப்பட்டது. 22 ஆண்டுகளுக்கு முன்னால் பிரச்சாரப்படுத்தப்பட்ட இச் சிறு பிரசுரம் எந்தக் கருத்துத் திருத்தமும் இல்லாமல் இங்கே அப்படியே மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது


புதிய ஈழப் புரட்சியாளர்கள்

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் பகுதி 6 (5)


தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,

(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர்விடுதலைக் கூட்டணிவரை 1921-1976)

பகுதி5. 
தரகுமுதலாளிய வர்க்கத்தின் யுத்த தந்திர செயல்தந்திர ஸ்தாபனக் கோட்பாடுகளின் எதிர்ப் புரட்சித் தன்மை

உலக ஏகாதிபத்திய பொருளியல் அமைப்பை பாதுகாப்பது தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்துக்கு தவிர்க்க இயலாத அவசியமாகும். இதன் பொருட்டு உலக ஏகாதிபத்தியச் சுரண்டலின் பிரதான உறுஞ்சு குழலாக இருக்கும் இலங்கையின் அரைக்காலனிய அமைப்பு முறையை பாதுகாப்பது தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் கடமையாகிறது. இது இலங்கையின் முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்திமுறையையும், அதன் மேல்கட்டுமானங்களைப் பாதுகாப்பதுமாகும். இதுவே தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் குறிக்கோள் ஆகும்.
     
இக்குறிக்கோளுக்கு சேவகம் செய்யும் வகையில் சமூக வளர்ச்ச்சிப் போக்கின் திருப்பங்களுக்கேற்ப தனது செயல்தந்திர வழியைத் தீர்மானித்துள்ளது. காலனியாதிக்கக் காலத்தில் ‘அதிகாரப் பங்கிற்கு’ முயன்றது. அதிகாரக்கைமாற்றத்தின் பின் தமிழ்மக்களைத் தன் சமுக அடிப்படையாக மாற்றிக்கொள்ளும் அவசியம் எழுகிறது. இதனையும் தனது குறிக்கோளுக்கு இசைவாக மூன்று எதிர்ப்புரட்சிக் கோட்பாடுகளின் 
(1) குறுமினவாதம் 
(2) சமரசவாதம், 
(3) பாராளுமன்ற – சட்டவாதம், 
அடிப்படையில் சாதிக்கிறது. 70 களின் பின்னால் தேசியப் போராட்டம் முன்னுக்கு வருகிறபோது, அதனைத் திசைதிருப்ப தனிநாட்டுக்கோரிக்கையை தானே ஏற்றுக்கொள்வதாக நடிக்கிறது.1981 இல் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச்சபை இதன் உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறது. 1983 ஜீலை இன அழித்தொழிப்பைத் தொடர்ந்து தேசியவிடுதலைப் போராட்டம் பேரெழுச்சி அடைந்ததும் இந்திய தரகுப்பெருமுதலாளிய வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு குழிபறித்து சமரசத்தீர்வு ஒன்றின்மூலம் தனது அதிகாரப் பங்கை அடைய முயல்கிறது. இணைப்பு ‘ C ‘; இலிருந்து, இந்திய – இலங்கை ஒப்பந்தம் 13 வது திருத்தச் சட்டம் வரை இதற்கான முயற்சிகளால் நிறைந்துள்ளன. ஒப்பந்தத்திற்குப் பின்னால் .இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் துணையோடு சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை ஒடுக்கும் பாத்திரத்தை ஏற்கிறது. “சட்டவிரோத துப்பாக்கிகளிற்கு” எதிராக சட்டபூர்வ துப்பாக்கிகளை அணைத்துக் கொள்கிறது.
    சூழ்நிலை மாற்றங்கள் திருப்பங்களை ஒட்டி செயல்தந்திர வழிகள் மாற்றப்பட்ட போதும் அடிப்படை முழக்கம் ‘அதிகாரப்பங்காகவே’ இருந்துள்ளது. சமஸ்டிக்கோரிக்கையும், 81இல் மாவட்ட அபிவிருத்திச் சபையும், 13 வது திருத்தச்சட்டமும் இதனையே காட்டுகின்றன. இப் பொதுப்போக்கிலிருந்து விலகி நிற்பது தனி நாட்டுக் கோரிக்கை ஆகும். 77 இற்குப் பிந்திய முயற்சிகள் ‘தமிழீழம்’ அவர்களது ஏமாற்று மோசடி என்பதை நிரூபிக்கின்றன. இவை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தனது குறிகோளில் மிகவும் தெளிவாக இருந்துள்ளதைக் காட்டுகின்றன.
     
தன்முழு வரலாற்றுக் காலப்பகுதியிலும் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம் நிலவுடைமை வர்க்கங்களுடன் இறுக்கமான கூட்டை வைத்திருந்துள்ளது. பொதுவாக சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கங்களுடன் ‘போராட்டத்துடனோடு ஐக்கியப்பட்டுக்கொண்ட போதும்’ சிங்கள வணிகத் தரகுமுதலாளிய வர்க்கத்துடனான அதன் ஐக்கியம் மிக நெருக்கமானதாகும். 70 கள் வரை இந்திய தமிழ்மாநில தரகு முதலாளிகளுடன் (பிரதானமாக திராவிட முன்னேற்றக் கழகம்) இருந்த கூட்டுக்கு மாறாக ’83 இற்குப் பின்னால் மத்தியிலுள்ள இந்திய தரகுப்பெருமுதலாளிய வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. சிங்கள தேசத்தின் பிற வர்க்கக் கட்சிகளுடனோ அல்லது தமிழ்த்தேசத்தின் குட்டிபூர்சுவா, தேசிய பூர்சுவா வர்க்கங்களுடனோ தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் கூட்டுக்குச் சென்றதில்லை. தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தனது நண்பர்களையும் எதிரிகளையும் பற்றித் தெளிவான மதிப்பீட்டையும் ஐக்கிய முன்னனிக்கொள்கையையும் வைத்திருந்தது. (போராட்டசக்திகளுக்கு இது ஒருகசப்பான உண்மையாக இருக்குமாக்கும்!)
    போராட்ட வடிவங்களாக, ஆளும்வர்க்கத்தின் சட்ட ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு இடைஞ்சல் விளைவிக்காத, மக்களுக்குப் போர்க்குணத்தை உண்டுபண்ணாத, அரைக்காலனிய அமைப்புமுறைக்கு உட்பட்டு நிற்கிற மென்மையான வடிவங்கள் கையாளப்பட்டதை முன்னர் விரிவாகப் பார்த்தோம்.


ஸ்தாபன வடிவத்தைப் பார்போம், நிலவுடைமை வர்க்கம், சொத்துடைய வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கிற அப்புகாத்துக்கள், உயர்சாதியினர், ஏகாதிபத்திய நவீன கல்விமுறையின் அசல்வாரிசுகளான கல்விமான்கள் இவர்களுள் இருந்துதான் கட்சியின் மூலஸ்தானத்துக்குச் செல்லும் பாக்கியம் பெற்ற நபர்கள் வருகிறார்கள். இதில் தேறாதவர்கள் ‘நந்திப்பீடத்தோடு’ நின்று கொள்ள வேண்டும். அரசியல் நெருக்கடிகள், தேர்தல் காலத்தையொட்டி ‘வசந்த மண்டபம்’ திறக்கப்படும். மாநாடுகள் கூடும். இது மூலஸ்தானத்துத் ‘தலைமைக்குழுவின்’ தீர்மானங்களுக்கு சம்பிரதாய ஒப்புதல் பெறுவதை நோக்காகக் கொண்டு கூட்டப்படும். ஆதரவாளர்கள், அனுதாபிகள், பார்வையாளர்களாக கலந்து கொள்வர். முடிவெடுக்கும் அதிகாரம் எப்போதுமே தலைமைக்குழுவிடமே உள்ளது. அதாவது தலைமைக்குழுவுக்குப் புறம்பாக கட்சியின் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் ஆலோசனை வழங்கவோ. திருத்தங்கள் விமர்சனங்கள் செய்யவோ எந்த இடைநிலை ஸ்தாபன வடிவமும் இல்லை.  கட்சிக்கிளைகள் என்று சொல்லப்படுபவை ‘தேர்தல் திருவிழா’வுக்குத் திறக்கப்படுகிற கடைகள் மட்டுமே. திருவிழா முடிந்ததும் கடை மூடப்பட்டுவிடும். தமிழ் இளைஞர் பேரவை, தமிழ்மகளீர் பேரவை போன்ற விளம்பரப்பலகைகளுக்குப் பின்னால் தேர்தல் பணியாட்கள் கூடுவர். இவையும் தேர்தல் முடிவதோடு செயலிழந்து போய்விடும். கட்சிக்கென்று சொந்தமாக பிரச்சாரப் பத்திரிகை இருந்ததில்லை. (திரு. செல்வநாயகத்தின் சொந்தப்பத்திரிகையான ‘சுதந்திரன்’ கட்சிப் பத்திரிகையாக இருந்து வந்தது. பின்னர் அது மகனுக்குச் சொந்தமாகி விட கட்சி ஆரம்பித்த ‘உதய சூரியன்’ பத்திரிகை சில இதழ்களோடு நின்று போய்விட்டது.) இவை மக்களின் ”உரிமை”க்காக போராடுகிற ஒரு கட்சியின் இலட்சணங்களாக இல்லையென்பதுமட்டுமல்ல ஒரு பிழைப்புவாதக் கட்சிக்குரிய இலட்சணங்களாகவும் கூட இல்லை. மேலும் அடிப்படையில் இது ஜனநாயக விரோத எதேச்சாதிகார தலைமை முறையுமாகும்.
     புரட்சியின் விஞ்ஞானம் பற்றிய பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் இருந்து விளக்கினால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யுத்ததந்திரம், செயல்தந்திரம், அடிப்படை முழக்கம், போராட்டவடிவங்கள், ஸ்தாபனவடிவங்கள், ஊழியர் ‘கொள்கை’ என்பன இவ்வாறுதான் இருந்து வந்துள்ளன. இவற்றின் சாரமாக இருப்பதும், தமிழ்ச் சமுதாயத்தைப் பிடித்துள்ள நோய்களாக இருப்பதும் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் மூன்று எதிர்ப்புரட்சிக் கோட்பாடுகள் ஆகும். இவை தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனையில் இன்றளவிலும் கூட மிக ஆழமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன. தமிழ்ச்சமுதாயத்தின் விடுதலைக்காகப் போராடுகின்ற வர்க்கங்கள் கூட இச்சிந்தனைப் போக்கில் இருந்து தம்மை கோட்பாட்டு ரீதியில் முறித்துக் கொள்ளவில்லை. தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்திடமிருந்து தமிழ்த்தேசிய இனம் மரபுரிமையாகப் பெற்றுக்கொண்டிருக்கும் இம்மூன்று கோட்பாடுகளுக்கு அவற்றின் எதிர்ப்புரட்சித் தன்மை காரணமாக புதைகுழி தோண்டும் காலம் வந்துவிட்டது. இல்லையென்றால் இவை விடுதலைக்கு புதைகுழி தோண்டிக் கொண்டே இருக்கும். எனவே இவற்றைத் தெளிவாக ஆராய்வோம்.

1)  குறுமினவாதம்
   தேசியம் என்றால் என்ன? தேசிய இனப்பிரச்சனை ஏன் தோன்றுகிறது? என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் குறுமின வாதத்தின் வேரையும், அதன் தீங்கையும் எம்மால் புரிந்துகொள்ள முடியும். தேசங்கள் (NATIONS) மனித குலத்தின் வரலாறு முழுமையிலும் இருந்துவந்தவையல்ல. அதுபோல் என்றென்றைக்குமாக நிலைத்து இருக்கப் போறவையும் அல்ல. வரலாற்று வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தான் தேசங்கள் தோன்றின. உலக சமூகத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிப் போக்கிற்கேற்ப தேசங்களின் தோற்றமும் முந்தி அல்லது பிந்தி நடந்துள்ளன. ஸ்ராலின் ”தேசம் என்பது முதலாளித்துவ உதயகாலகட்டத்தைச் சேர்ந்த வரலாற்று ரீதியான வகையினம்” என்பார். (அழுத்தம் நமது). இங்கே தேசம் என்பது முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சியோடு இணைத்துக் காணப்படுகிறது.      
          மனிதர்களை ஒரு சமுதாயமாக இணைப்பது உற்பத்தி முறையாகும். எனவே வரலாற்று வளர்ச்சியில் நிலவிவந்த வெவ்வேறு வகையான உற்பத்தி முறைகளுக்கேற்ப மனிதர்கள் சமுதாயமயமாகும் பாங்கும், அச்சமுதாயத்தின் வரம்பும், பண்புகளும் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளன.
   நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ‘கிராம சமுதாயங்களாக’ மக்களை ஒன்று திரட்டியது. இது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் தன்னிறைவுப் பொருளாதாரத்தில் இருந்து (பற்றாக் குறையில் தன்னிறைவு) தோன்றிய சமுதாய அலகாகும். சுய தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிலேயே – அல்லது அதற்கு குறைவாகவே – உற்பத்தி இருக்கிற போது சமுதாயத்தின் பரப்பளவும் குறுகியதாகவே இருக்கிறது. உற்பத்தியின் பின்தங்கிய தன்மைக் கொப்ப அந்த சமுதாயத்தின் சிந்தனையும் குறுகியதாக இருக்கும். ’இராமன் ஆண்டால் என்ன? இராவணான் ஆண்டால் என்ன?’ என்பது இக்கிராம சமுதாய உணர்வின் வெளிப்பாடாகும். இந்நிலவுடமைக்காலத்தைய சுயதேவை உற்பத்தி முறைக்கான வேலைப்பிரிவினை வடிவமாகவே ‘சாதி’ தோன்றியது. பின்னர் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப்பிரிவுகளும் தோன்றின. இந்தளவிலான அல்லது இதிலும் வளர்ந்ததான ‘மக்கட் சமுதாயப் பிரிவுகள்’ எல்லாம் அடிப்படையில் முதலாளித்து வத்துக்கு முந்திய உற்பத்திமுறையைச் சார்ந்த வகையினங்கள் ஆகும். இவையல்ல தேசங்கள். ஸ்ராலின் ’தேசம் என்பது இன அடிப்படையிலோ அல்லது குல அடிப்படையிலோ அமைந்ததல்ல” என்கிறார். இவ்வாறு தன் சமுதாயப்பரப்பை விரிவாக்கி மென்மேலும் ஒன்று திரளும் போக்கு அதிகரிப்பது ஏனெனில் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையினுள்ளேயே – மனித அறிவு, தொழில்நுட்பம், உற்பத்திக் கருவிகள் போன்ற – உற்பத்திச் சக்திகள் இடையறாது வளர்ந்து வருவதனாலாகும்.
     
ஒவ்வொரு பழைய சமுதாயமும் புதிய சமுதாயத்தைத் தன்னுள்ளேயே கருத்தரித்துக் கொள்கிறது. நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே பூர்சுவா உற்பத்திச் சக்திகளை உருவாக்கிக் கொள்கிறது. “ஒரு புதிய சமுதாயத்தைக் கருத்தரித்துள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்துக்கும் வன்முறையே மருத்துவச்சி. இதுவே ஒரு பொருளாதாரச் சக்தியுமாகும்.” (மார்க்ஸ்). பூர்சுவா ஜனநாயக (வன்முறைப்) புரட்சிகள் நடந்தேறுகின்றன. (நவீன வரலாற்றின் இப்புதிய கதாநாயகர்கள் வேறு யாருமல்ல. இன்று ஒடுக்கப்படும் மக்களுக்கு வன்முறையின் தீங்கைப் பற்றி போதனை செய்யும் ஏகாதிபத்திய முதலாளிய வர்க்கங்களின் மூதாதையர்களே!) நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையின் சிதைவில் ‘கிராம சமுதாயம்’ சிதைக்கின்றது. தற்போது ஆளும் வர்க்கமாய் உயர்ந்துவிட்ட பூர்சுவா வர்க்கம் சமுதாயத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியான அரசின் அதிகாரத்தை” பயன்படுத்தி முதலாளித்துவப் பொருளுற்பத்தி வளர்ச்சிக்கு வழிதிறந்து விடுகின்றது.
    முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையானது தனது வளர்ச்சிக்கும் வீச்சுக்கும் ஏற்ப மக்களை மென்மேலும் சமுதாய மயப்படுத்துவதில் தனது பாத்திரத்தை ஆற்றுகிறது. பழைய உற்பத்தி முறையின் குறுகிய சமுதாயவட்டம் தகர்க்கப்பட்டு பொதுமொழி, பண்பாடு, பிரதேசம், உணர்வு என்பவற்றால் ஒன்றிணைகின்ற தேசிய சமூகங்களை – தேசங்களை – தோற்று விக்கிறது. இவ்வாறு “முதலாளித்துவ உதயகாலகட்டத்தைச்  சேர்ந்த வரலாற்று வகையினமாக” (ஐரோப்பிய) தேசங்கள் உருவாகின.
     
நமது நிலைமை வேறு, நமது நாட்டில் முதலாளித்துவம் உதயமாகவில்லை.ஏகாதிபத்தியம் அதனை அஸ்தமிக்கச் செய்து விட்டது. நிலப்பிரபுத்துவத்தில் சிதைவு நடந்துள்ளது. ஆனால் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படவில்லை. (ஜனநாயகப் புரட்சி நடந்தேறவில்லை) ஏகாதிபத்திய சுரண்டல் காரணமாக இவ்விடை நிலையில் சிற்றுடைமைப் பொருளாதாரமே தக்கவைக்கப் படுகிறது. இவ்வாறு இலங்கையில் சமூகப் பொருளாதார அமைப்பு அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவமாக இருக்கிறது. ஆனால் ஏகாதிபத்திய உற்பத்திப் பொருட்களினதும் ஏகாதிபத்திய நிதிமூலதனத்துடன் கூட்டுச்சேர்ந்துள்ள தரகுமுதலாளிய உற்பத்திகளினதும் பண்ட வாணிகம் வளர்ந்துள்ளது. ஏகாதிபத்திய சுரண்டல் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட ரெயில்வே பாதைகள், பிற போக்குவரத்து வசதிகள் உள்ளன. தொலைத்தொடர்பு சாதனங்கள் வளர்ந்துள்ளன. துறைமுகங்களை அண்டிய வணிக நகரங்கள் தோன்றியுள்ளன. இவையெல்லாமும் சேர்ந்து பழைய சமூக கட்டுக்கோப்புக்களை தகர்த்துள்ளன. இந்தளவில் அரைக் காலனிய அரைநிலபிரபுத்துவ அமைப்புக்குள்ளேயே தேசிய உருவாக்கம் நடந்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சிப்போக்கு பூர்த்தியாகவில்லை. இந்த அமைப்பு முறைக்குள் பூர்தியாகவும் முடியாது. மேற்கண்ட அதனது வளர்ச்சிக்கு தேசிய அரசு – அரசியல் அதிகாரம் – முன்நிபந்தனையாக உள்ளது. இவ்வரசதிகாரத்தைக் கொண்டு சுதந்திர முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சிக்கு வழியமைப்பதன் மூலமே சுதந்திரமானதும் பூரணமானதுமான தேசங்கள் தோன்ற முடியும். இதனால் ஏகாதிபத்தியத்தின் காவல்நாயான இலங்கையின் அரைக்காலனிய அரசும், தமிழர்தேசமும் ஒன்றுக்கொன்று பகைமையான முரண்பாடு கொண்டவையாகும். இனிமேல் ஒரு சுதந்திர தேசத்தைப் பிரசவிக்க வன்முறையே மருத்துவச்சி.
     
இலங்கையின் தரகுமுதலாளிய ஆளும் கும்பல்களாலும், அவர்களின் சகபாடியான தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தாலும் இதனைத் தாமதப்படுத்தத்தான் முடிந்தது. தடுத்துவிட முடியவில்லை..’70 களின் பின்னால் இது தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமாக வெடிக்கிறது. ஏகாதிபத்தியமும் அதன் தரகு முதலாளிய வர்க்க அரைக்காலனிய அரசும் நிலவுடமை வர்க்கங்களுடன் கூட்டணி சேர்ந்து இவ்வளர்ச்சிப்போக்கை தடுத்து நிறுத்தி அரைக்காலனிய அமைப்பு முறையை கட்டிக்காக்க விடாப்பிடியாக முயல்கின்றனர். இவர்கள் சமுதாய வளர்ச்சியை தடுத்து நிறுத்த முயல்கிற பிற்போக்கு வர்க்கங்கள் ஆவர்.
      
முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சியையும், சுதந்திர தேசங்களையும் வேண்டிநிற்கின்ற தேசிய முதலாளியவர்க்கம் (இடது பிரிவு), குட்டிபூர்சுவா வர்க்கம் (இடது பிரிவு), தொழிலாள வர்க்கம், விவசாயிகள் மேற்கண்ட பிற்போக்கு வர்க்கங்களை எதிர்த்துப் போரிடுகின்றனர்.இவ் வர்க்கங்களுக்கிடையான போராட்டமாக நமது நாட்டின் ‘தேசியப் போராட்டம்’ நடக்கிறது.
      
இந்த திருப்புமுனையில் நிற்கிற ஒரு சமுதாயத்தில் (”தமிழினத்தில்”) “பற்று” கொண்டுள்ள ஒருவர் உண்மையில் செய்ய வேண்டியது முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சிக்குத் தடையாக உள்ள ஏகாதிபத்திய சுரண்டலையும், முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையையும் ஒழிப்பதற்காக போராடுவதுதான். அதுதான் தமிழ்மக்களின் பிரதேசத்தை பொருளாதார ரீதியில் ஒன்றிணைக்கவும், அப்பிரதேசத்தின் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுக்கவும், அதன் மூலம் சமுதாயத்தை முன்னேற்றவும் வரலாற்று வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்குள் உந்தித்தள்ளவும் அவசியமானதாகும்.
      
தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கமோ நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் புதைகுழியைத் தோண்டி பழைய ‘இனசமுகத்தின்’ ஊனத்தை எடுத்து தமிழ்மக்களின் கண்களை மறைத்து விட்டது. ‘தமிழனைத் தலைநிமிர்ந்து நிற்கச் சொல்லுகிற போதும்’ – ஏகாதிபத்தியங்களுக்கு கூழைக்கும்பிடு போடுகிற இந்தத் தரகு முதலாளியத் தமிழர்கள்! – ‘ஆண்டபரம்பரைக்கதை’ பேசுகிறபோதும்  ‘தமிழனுக்கு ஒரு நாடு’ என்கிற போதும் நிலவுடமைச் சிந்தனையின் முடைநாற்றத்தைத்தான் காண்கிறோம். ஆனால் இது வரலாற்றுச் சக்கரத்தை பின்நோக்கி இழுக்கிற தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் எதிப்புரட்சி இயல்பில் இருந்து வருவதைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
    
இந்த குறுமினவாதக் கோட்பாடு தமிழ்த்தேசிய (இன) பிரச்சனையின் புரட்சிகர உள்ளடக்கத்தை காணவிடாததன் மூலம், போராட்டப் பாதையில் முன்னேற முடியாமல் இழுத்துப் பிடிக்கிறது. மக்களுக்கு ஊட்டப்பட்ட இப்போலி இனப்பெருமையில் தமிழ்த்தரகுமுதலாளியத்துக்கு (அரைக்காலனிய அரசுக்கு) கிடைத்த அடுத்த வெற்றி சிங்களப் பெருந்தேசிய இனத்தோடும், இன, மத சிறுபான்மையினரோடும் ஐக்கியப்படுவதற்கு விரோத மான மனஉணர்வை தமிழ்மக்களிடையே உருவாக்கியதாகும்.
      
‘மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்த சிங்களவன்’ ‘தொப்பி பிரட்டிச் சோனகன்’, ’வயிற்றுக்குத்தை நம்பினாலும் நம்ப முடியாத வடக்கத்தேயன்’. . . இந்த வாய்மொழிக் கூற்றுக்கள் தமிழ்த்தரகுமுதலாளிய குறுமினவாதத்தின் சாதனை ஆகும். இதனால் தமிழ்த்தேசிய (இன) த்துக்கு கிடைத்ததெல்லாம் தனது போராட்ட அணியைத் தானே பலவீனப்படுத்தி பொது எதிரிக்கு முன்னால் பலமிழந்து நின்றதுதான். தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் இதற்கான கைக்கூலியைப் பாராளுமன்றத்தில் நாகரீக மாகப் பெற்றுக்கொண்டது. இதற்கு மேல் தமிழ் மக்களிடத்தில் வலியுறுத்தப்பட்ட “இனப்பற்றை” “மொழிப்பற்றை” தமிழ்க் கலாச் சாரத்தை” இவர்களிடத்தில் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் காண முடியாது. அனைத்திலும் ஐரோப்பிய நெடி.
    
மக்கள் தமது வாழ்நிலையின் தேவையாக தேசியம் இருப்பதை உணர்ந்து கொள்ள முன்பே, பழைய உறவுகளின் பின்தங்கிய, தன்னியல்பான உணர்வுகட்கு கொள்கை வடிவம் கொடுத்ததன் மூலம் அவர்களது வாழ்நிலையின் கடமைகளை புரிந்து கொள்ளவிடாது தடுத்துவிட்டதே இவர்களது சாதனையாகும். ஆனால் தேசியம் சமுதாயத் தேவையாகி விட்ட நிலையில் அதன் உயிர் ஏகாதிபத்திய எதிர்ப்பில் அடங்கியிருப்பதை உணர்த்தவும், இலங்கையின் ஆளும் கும்பல்களால் ஒடுக்கப்படும் பிற மக்கள் பிரிவினருடன் ஐக்கியப்படவும் குறுமின வாத சிந்தனைப்போக்கை துடைத்தொழிப்பது இன்றியமையாததாகும். இதற்கு, தேசியத்துக்கும் குறுமினவாதத்துக்குமிடையில் தெளிவான எல்லைக்கோட்டை வரைந்து கொள்வது அவசியம். அப்போதுதான் தேசியத்தை வளர்த்தெடுக்கவும், தேசியத்துள் ஒழிந்து நிற்கும் குறுமினவாதத்தை ஒழித்துக் கட்டவும் நம்மால் முடியும். மாறாக தேசியப்போராட்டத்தில் ஒதுங்கி நின்று “சோசலிஸம்” பேசுவதோ, குறுமினவாதத்தின் பக்கம் சாய்ந்து சமரசம் செய்து கொள்வதோ புரட்சிப்பாதையில் இருந்து தடம் புரள்வதே ஆகும். 

2)  சமரசவாதம்
    
இது ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கு இவ் அரைக்காலனிய அமைப்பு முறைக்குள் தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. பொருளாதாரத் துறையில் ‘முதலாளியத்துக்கு முந்திய உற்பத்திமுறையையும், அரசியலில் ஏகாதிபத்திய சுரண்டலுக்கான அரசியல் கொள்கைகளும் சட்டங்களும், அரச முறையில் பாராளுமன்ற திரைக்குப் பின்னால் நிலவும் பாசிஸமும். சமுகப் பண்பாட்டுத்துறையில் ஏகாதிபத்திய அடிவருடிச் சிந்தனையும், நிலவுடமையின் எச்சசொச்சங்களும் ஒன்றுதிரண்ட இவ் அரைக்காலனிய அமைப்புமுறை ஏகாதிபத்திய தரகுமுதலாளிய, நிலவுடமை வர்க்கங்களின் நலன்களைக் காப்பதற்கானதாகும். அடிப்படையில் இது தேசியத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானதாகும்.
    
மக்களிடம் இருந்து இவ் அமைப்புமுறையைப் பாதுகாப்ப தற்காக ஆளும் கும்பல்கள் படை, நீதிமன்றம், சிறைச்சாலை போன்றவற்றைக் கொண்டுள்ளன. மக்கள் தமது அடிமை நிலைமையையும், ஜனநாயகம் மறுக்கப்பட்ட வாழ்வையும் உணர்ந்து கொள்ளாதவாறு தடுப்பதற்காக பாராளுமன்றம் உள்ளது. இந்நிலையில் இப்பாராளுமன்ற ஏமாற்றை அம்பலப்படுத்தி, இது பாசிஸத்துக்கு மூடுதிரையாக இருப்பதை மக்களுக்குப் புரியவைத்து, இவ் அமைப்பைப் பாதுகாக்கும் சட்டபூர்வ வன்முறை ஏற்பாடுகளை, மக்களின் ஆயுதந்தாங்கிய போராட்டத்தால் முறியடிப்பதன் மூலமே மக்கள் தமது விடுதலையை அடையத் தக்க அமைப்பை உருவாக்கலாம். இதனால் ஆயுதப் போராட்டம் இன்றியமையாத் தேவையாகிறது.
       
தேசியத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான இவ் அரைக்காலனிய அமைப்பு முறையைத் தூக்கியெறியும் தேசிய விடுதலைப் புரட்சியே நமது நாட்டின் இன்றைய உடனடித் தேவையாகும். இவ்வரைக்காலனிய அமைப்பு முறையால் ஒடுக்கப்படும் அனைத்து மக்கட் பிரிவுகளையும் தேசிய விடுதலைப் புரட்சியில் ஐக்கியப்படுவதற்கு, ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்துக்கு பாட்டாளிவர்க்கம் முன்வைக்கும் திட்டமே சுயநிர்ணய உரிமையாகும்.
     
நமது நாட்டில் ஏகாதிபத்திய, தரகுமுதலாளிய சுரண்டலை மூடிமறைக்கும் திரையாக ‘சிங்கள பேரினவாதமும் பெளத்த மதவாதமும்’ பயன்பட்டு வந்தது. அதற்குச் சிங்களப் பெருந்தேசிய இனம் பலியாகிப் போனதுமான நிலைமை இரு தேசிய இனங்களதும் ஐக்கியப்பட்ட புரட்சியைச் சாத்தியமற்றதாக்கியுள்ளது. இந்நிலைமை ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை சிங்கள பெரும்தேசிய இனம் – அதன் புரட்சிகர வர்க்கங்கள் – அங்கீகரிப்பதைப் பொறுத்தே மாற்றியமைக்க முடியும். (இதற்காக சிங்கள பெருந்தேசிய இனத்தின் மத்தியில் சுயநிர்ணய உரிமைக்கான பிரச்சாரத்தைக் கொண்டு செல்வது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் புரட்சியாளர்களின் கடமையாகும்) அந்நிலைமை ஏற்படுகிற வரை ‘தமிழ்த்தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசமைத்தல்’ என்பது மார்க்சிய – லெனினிய வழியில் முழு நியாயமுடையதாகும்.
      
இவற்றில் எந்த வழியில் தேசிய விடுதலைப் புரட்சி சாத்தியமாகும் என்பது வருங்காலத்துக்குரிய விடயமாகும். ஆனால் தேசிய விடுதலைப் புரட்சிதான் நமது நாடு இன்று எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது வரலாற்றில் முடிவு செய்யப்பட்டுள்ள விடயமாகும். இப்புரட்சியானது அரைக் காலனிய அமைப்பு முறைக்கு உட்பட்டதாக அன்றி அதனைத் தூக்கியெறிகிற வரலாற்றுக் கடமையைச் சாதிக்கும்.
       புறவய யதார்த்த நிலைமைகளின்படி இதுவே தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கான பாதையாக உள்ள போது இந்த அரைக்காலனிய அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வுகண்டு விடலாம் எனக்கூறுவது இரண்டு நோக்கங்களில் இருந்து மட்டுமே வரமுடியும். ஒன்று, தமிழ்ச்சமுகத்தை அதன் விடுதலைப் பாதையில் இருந்து திசைதிருப்பி தம் சொந்த வர்க்க நலனை அடைவது. இரண்டு; அரைக்காலனிய அமைப்பு முறை யைப் பாதுகாப்பது தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் சமரசவாதக் கோரிக்கைகளின் நோக்கம் இவை இரண்டுமே ஆகும். இது தமிழ்மக்களின் நலனுக்கு விரோதமானது. தமிழ் மக்களின் முழக்கம் ‘சுயநிர்ணய உரிமை வழங்கு இல்லையேல் பிரிந்து சென்று தனிநாடமைக்கப் போராடுவோம்” என்பதாகும்.


3)  பாராளுமன்ற – சட்டவாதம்
       
இது பிரச்சனைக்குத் தீர்வுகாணும் இடமாக பாராளுமன்ற த்தைக் காட்டுகிறது. தேர்தல் பாதையை முன்மொழிகிறது. மக்களின் போராட்டங்களை சட்டவாத வரம்புகளுக்குள் கட்டிப் போடுகிறது. உண்மை இதுவா?
      
இந்தப் பாராளுமன்றம் பத்துலட்சம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறித்தது. தனிச்சிங்களச்சட்டம் அரசநிர்வாகத் துறையில் இருந்து தமிழ் மக்களை விரட்டியடித்தது. தரப்படுத்தல் சட்டம் தமிழ்மாணவர்களின் கல்வி வாய்ப்புக்குக் குழிபறித்தது. சிங்களக் குடியேற்றச் சட்டம் பிரதேசத்தைப் பறித்தது. அரசியல் அமைப்புச்சட்டங்களும் திருத்தங்களும் அவசரகாலச் சட்டம் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாதச்சட்டம் போன்ற பிணந்தின்னிச் சட்டங்கள் போராடும் மக்களைக் கொன்று பழிதீர்த்தன. பொருளாதாரச் சட்டங்கள் நாட்டை ஏகாதிபத்தியங்கள் சூறையாட அனுமதித்தன. இந்திய – இலங்கை ஒப்பந்தம் நாட்டை இந்தியாவுக்கு அடகு வைத்தது.. . . இத்தியாதி.... . . இத்தியாதி. . . .
       
இந்தப் பாராளுமன்றம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் இடமா? அல்லது இந்தப் பாராளுமன்றமே தீர்வுகாணப்பட வேண்டிய பிரச்சனையா? உண்மையில் இது இரண்டாகவும் இருக்கிறது. ஏகாதிபத்தியத்துக்கும் தரகுமுதலாளிய வர்க்கத்துக்குமிடையே, சிங்களத் தர்குமுதலாளிய வர்க்கத்துக்கும் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்துக்குமிடையே சுருங்கச் சொன்னால் ஆளும் கும்பல்களிடையே எழும் பிரச்சனைகளுக்கு இது தீர்வுகாணும் இடமாகவுள்ளது. ”பரஸ்பரம் மனம் விட்டுப் பேசவும்” ”கலந்துரையாடவும்” இது அவர்களுக்கு வழிசெய்து கொடுக்கிறது. ஆனால் அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு இதுவே பிரச்சனையாக இருக்கிறது. உண்மையில் எது தீர்வு எனச் சொல்லப்படுகிறதோ அதுதான் பிரச்சனையாக இருக்கிறது.
     
இந்தப் பாராளுமன்றம் அரைக்காலனிய அமைப்புமுறையின் காவல்நாயாக சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் ஆதிக்கத்துக்கான கருவியாக இருப்பதும், கட்டாய இணைப்பின் மூலம் தமிழ்த்தேசத்தின் மீதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தமுனைவதும் இப்பிரச்சனைகளுக்கான அடிப்படையாகும்.
     
இந்த நிலைமைகளின் அடிப்படையில் தான் பாராளுமன்ற த்தின் பெரும்பான்மையும் சிறுபான்மையும் உருவாகிறது. இந்த நிலைமைகள் ஜனநாயகத்துக்கு விரோதமானவை. இதன் அடிப்படையில் அமைகிற பெரும்பான்மை – சிறுபான்மை ஜனநாயகத்தோடு சம்பந்தமில்லாதவை. ஜனநாயகம் என்பது மக்களின் ஜீவாதார நலன்களைக் காத்து நிற்கிற அரசுமுறை பற்றியதாகும். எந்த நிலைமைகளின் கீழும் திரட்டப்பட்டு விடுகிற பெரும்பான்மையினதும் சிறுபான்மையினதும் தலைகளை எண்ணுவதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல. அதை நமது நாட்டு தரகுமுதலாளிய வர்க்கங்கள் எண்கணிதம் படிப்பதற்கு விட்டு விடுவோம். ‘அவர்கள் தங்களுடைய வழியில் போராடுகிறார்கள். நாங்கள் எங்களுடைய வழியில் போராடுவோம்.’
      
இந்தப்பாராளுமன்றம் தனது ஜனநாயக யோக்கியதையை நிரூபிக்க வேண்டுமென்றால் கட்டாய இணைப்பைக் கைவிட்டு தமிழ் மக்களின் சுயவிருப்பத்தின் பேரில் சுயநிர்ணய உரிமையை வழங்குவதன் மூலம் ஐக்கியப்படுத்தட்டும். தமிழ்மக்களை ஒரு தனியான தேசிய (இன)மாக அங்கீகரித்து சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இரு தேசங்களையும் ஒரு கூட்டாட்சி அமைத்து ஜனநாயக பூர்வமாக ஐக்கியப்படுத்தட்டும். இவர்கள் இதற்குத் தயாராக இல்லாதது மட்டுமல்ல, கட்டாய இணைப்பைக் கொண்டு பலவந்தமாக தமிழ்மக்களை ஒடுக்கியும் வருகிறார்கள்.
      
சனத்தொகை அடிப்படையில் 74% மாக இருக்கும் சிங்கள தேசத்தையும் 13% மாக இருக்கும் தமிழ்த்தேசத்தையும் பலவந்தமாக கட்டிவைத்து ‘ஜனநாயகம்’ பற்றிப் பேசுவது, தமிழ்மக்கள் ஒடுக்கப்படுவதற்கு ஆதரவாயிருப்பது மட்டுமல்ல கடைந்தெடுத்த அயோக்கியத்தனமுமாகும்.
      
ஏகாதிபத்தியத்தின் சட்டபூர்வ தரகனாகவும், தரகு முதலா ளியவர்க்கங்களின் சட்டபூர்வ ஒடுக்குமுறையாளனாகவும், சட்டபூர்வ கொலைகாரனாகவும், சட்டபூர்வ சுரண்டலாளனாகவும் இருக்கும் இந்தப் பாராளுமன்றத்தை, ஒடுக்கப்படும் மக்களின் – சுதந்திரம் காக்கப்படுகிற – சட்டவிரோத வழிகளில் மட்டுமே தூக்கியெறியமுடியும்.
     
இதனால் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் விடுதலை, பாராளுமன்ற சட்டவாத வரம்புகளைத்தாண்டி, அரைக்காலனிய அமைப்பு முறையைத் தூக்கிவீசி, தேசிய புரட்சிகர வர்க்கங்கள் தனது கைகளில் அரசியல் அதிகாரத்தைப் பறித்தெடுத்துக்கொள்ள நீடித்த மக்கள் யுத்தப்பாதையில் நடத்தும் தேசிய விடுதலைப் புரட்சியின் மூலமே அடையப்படமுடியும்.
     
தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் பாராளுமன்றத் தேர்தல் பாதையையும், அகிம்சையையும் தெருக்கம்பத்தில் கட்டிச் சுட்டுப் போடுவோம். 


தமிழ்மக்களின் முழக்கம் 
“சிங்களத் தரகுமுதலாளிய வர்க்க, புத்தமதவாத, பேரினவாத, பாசிஸவாத, அரசைத் தூக்கியெறிவோம்” என்பதாகும்.


தேசிய இன விடுதலையில் தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் பாத்திரம் பகுதி 6

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் பகுதி 6 (4)


தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,

(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 1921-1976) 


பகுதி4
தேசிய விடுதலை எழுச்சியும் தமிழ்த் தரகு முதலாளியத்தின் காட்டிக் கொடுப்பும் (1977 – 1987)
       
1977 இல் சிங்கள வணிகத்தரகுமுதலாளியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஏற்கனவே வளர்ந்திருந்த பொருளாதார அரசியல் சமூக முரண்பாடுகள் மேலும் கூர்மையடைகிறது. தமிழ் மக்கள் தனித் தமிழீழ அரசை வேண்டி நின்றனர் ஜே.ஆர். 1915 இல், முஸ்லீம் வணிகத்தரகுமுதலாளிகளை அடித்து பணிய வைத்த வழிமுறையில், மக்களின் விடுதலை உணர்வையும் அடித்து பணியவைக்க நினைத்தார்! “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என யுத்தப் பேரிகை முழங்கியது . ஆவணியில் ஒரு இன அழித்தொழிப்புக் கலவரத்தின் இரத்தக்கறையோடு ஆட்சியை ஆரம்பித்தார் ஜே.ஆர். “தமிழினத் தலைவன்” அமிர்தலிங்கம் தமிழ்மக்களின் எதிர்ப்புக்களைக் காலில் போட்டு மிதித்து ‘எதிர்க்கட்சித்தலைவர்’ பதவியை ஏற்றுக் கொண்டார். (தமிழீழத்துக்காக சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்ய ஒரு அரிய சந்தர்ப்பம்!”, “ஒரு தமிழன் எதிக்கட்சித் தலைவனாக இருப்பது எத்துணைப் பெருமை!”என்றெல்லாம் இது விளக்கப்பட்டது.)
        
மக்கள் ‘தமிழீழம் எங்கே’ என்று கேட்டார்கள். ‘”அந்நிய நாட்டில் அரசாங்கம்” வைகுந்தவாசனின் மசாசூட்ஸ் தமிழீழம்! அமைக்கப் போவதாகப் புரட்டினர். இப்படிச் சேடம் இழுக்கத் தொடங்கிய தமிழ்த்தரகு முதலாளியத்தின் “தமிழீழத்துக்கு” சீக்கிரமே மூச்சு நின்று போய்விட்டது. சிங்களத் தொழிற்துறைத் தரகர்களின் 1972 அரசியல் யாப்பு எதிர்க்கப்பட்டது. செல்வா பதவி துறந்தார். சிங்கள வணிகத்தரகர்களின் 1978 பாஸிச     அரசியல் யாப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. `அமிர் அண்ணா` எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப் படுகின்றது.(1978). பயங்கரவாதத் தடைச்சட்டம். அவசரகாலச்சட்டம்  கொண்டுவரப்பட்டு (1979) தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப்படுகின்றனர். தாராள இறக்குமதிக் கொள்கை, சுதந்திர வர்த்தக வலயம் என ஏகாதிபத்திய சுரண்டலுக்கு நாட்டை அம்மணமாக நிறுத்தியது, நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியது. ஒடுக்குமுறையும் கூர்மையடைந்தது. தமிழ்த்தேசிய விடுதலை எழுச்சி தீவிரமடைந்தது.
        
தமிழ்த்தரகுமுதலாளியம், தன் வணிகச் சுரண்டல் நலனுக்குக் கிடைத்த வாய்ப்பாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பயன்படுத்திக் கொண்டது. எந்த ஒரு போராட்டத்திலும் இறங்கவில்லை. எல்லா ஒடுக்குமுறைக்கும் துணைபோகிறது. வர்க்க நலனின் முன்னால் ‘இன நலன்’ அர்த்தமற்ற செல்லாக்காசாகி விட்டது.
        
இறுதியாக அரைக்காலனிய அமைப்பு முறைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய தேசிய விடுதலை எழுச்சிக்கு வடிகால் அமைக்க சிங்களத் தரகுமுதலாளியத்துடன் கூட்டுச் சேர்ந்து ‘மாவட்ட அபிவிருத்திச் சபை’த் திட்டத்தை முன்வைக்கின்றனர். இதிலேயும் குறைந்தபட்சம் ஒரு சுயாட்சிக்கான சுவடு கூடக் கிடையாது. போராளிக் குழுக்களதும், மக்களதும் தீவிர எதிர்ப்பின் மத்தியில் தமிழ்த்தரகுமுதலாளியம் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் பங்கேற்கிறது. இச்சமரச முயற்சி படு தோல்வியைத் தழுவியது.
       
தமிழ்த்தரகுமுதலாளியத்தின் கையை மிஞ்சி வளர்ந்து சென்ற தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ’83 ஜூலை இன அழித்தொழிப்பு’ பெரும் உந்து விசையை அளித்தது. தேசம் தழுவிய பேரெழுச்சியாக விடுதலைப் போராட்டம் குமுறி வெடித்தது. எல்லோரும் ஆயுதங்களைத் தேடினர். “வீட்டுக்கு ஒருவன்” அல்ல பலர் வீதிக்கு வந்தனர். “பழம் பழுத்தது”!
      
இப் பேரெழுச்சியைத் ஒடுக்க சிங்களத்தரகுமுதலாளிய பேரினவாத பாஸிச அரசு (ஈழக்கோரிக்கையைத் தடைசெய்யும்) ஆறாவது திருத்தச் சட்டத்தை இயற்றியது; தமிழ்த்தரகுமுதலாளியத்தை நெருக்கடிக்குள் தள்ளியது. 6 வது திருத்தத்தை (பகிரங்கமாக) ஏற்றுக் கொண்டால் தமிழ்மக்களிடமிருந்து முற்றாகத் தனிமைப்பட வேண்டும், தனது பின்புலத்தை இழந்து போனால் சிங்களத்தரகுமுதலாளியத்துடன் பேரம்பேசுவதற்கான பலத்தை இழந்துவிட நேரிடும், இந்தக் கதியேற்பட்டால் சிங்களத்தரகுமுதலாளியம் போடுகின்ற பிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதற்கு மேல் அதிகம் கோர பலமிருக்காது. திருத்தத்தை ஏற்கமறுத்தால் “பாராளுமன்ற பஞ்சுமெத்தை” பறிபோய்விடும். பாராளுமன்றத்தை விட்டுவிட்டு மக்களிடம் போனால் அவர்கள் ‘விடுதலையுணர்வோடு” இருக்கிறார்கள். போதாக்குறைக்கு ஆயுதங்கள் வேறு அது “தம்பிமாருக்குத்” “தலைவர்கள்” பணிந்து போகவேண்டிய கேவலமாகும்: பிறவர்க்கங்களுக்கு சேவகம் செய்கிற கொடுமையாகும். இந்த நேரத்தில் தான் வனாந்தரத்தில் ஒரு அசரீரி ஒலிக்கிறது. “தமிழ்மக்கள் அடக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.தமிழ்த்தரகுமுதலாளியம் பாக்கு நீரிணையைத் தாண்டுகிறது.
        
இந்திய அரசின் துணைகொண்டு இலங்கை அரசை பணிய வைத்து அதன் மூலம் தமது வணிகத்தரகுமுதலாளிய நலங்களை அடைய முயல்வது, இதற்குத் தடையாக இருக்கக் கூடிய விடுதலைப் போராட்டத்தையும், போராளிகளையும் இந்திய அரசைக் கொண்டே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, இதற்காக இந்திய விஸ்தரிப்புவாத அரசுக்கு சேவகம் செய்வது இதுதான் அவர்களது திட்டம்.
·         ஒப்புதல் வாக்குமூலம் ‘செல்வா ஈட்டிய செல்வம்’, (இந்திய – இலங்கை ஒப்பந்த வரலாறு), அ.அமிர்தலிங்கம், தமிழர் கூட்டணி வெளியீடு. சென்னை 13.09.1987 இல் இருந்து எடுக்கப்பட்டன. (பக் -29)
      
இந்த சதித்திட்டத்தை சாத்தியமாக்க தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் நாலு ஆண்டுகள் (83 -87) பாடுபட்டுள்ளது! முதல் கட்டத்தில் தமிழ்மக்களின் பாதுகாவலனாக இந்திய அரசு ஆடிய கபட நாடகத்துக்கு அங்கீகாரம் பெறவும், இலங்கை அரசைத் தனிமைப்படுத்தவுமான சர்வதேசப் பிரச்சாரத்தில் இந்திய விஸ்தரிப்புவாத அரசுக்கு சேவகம் செய்கிறார்.  அமிர்தலிங்கத்தின் ஒப்புதல் வாக்குமூலம் * (1)
       
” . . .இப்படியே உலகநாடுகளுக்கெல்லாம் எம் நிலையை விளக்க நாம் எடுத்த முயற்சி, மக்கள் துன்பப்பட ஓடிப்பதுங்கும் செயலா, துன்பம் துடைக்க இந்திய உதவியை அதற்கு உலகின் ஆதரவைத் திரட்டும் முயற்சியா? என்பதை நம்மக்கள் நிச்சயமாக அறிந்தே இருக்கின்றனர்.”

அதே நேரத்தில் சமரசத்தீர்வுக்கான முயற்சியில் இறங்குகிறார். இது இணைப்பு “c“ இலிருந்து இந்திய –இலங்கை ஒப்பந்தம் வரையான நீண்ட முயற்சியாகும். இந்த நீண்ட முயற்சிகளில் எங்கும் சுயநிர்ணய உரிமை பற்றியோ, குறைந்த பட்சம் ஒரு பூரண சுயாட்சிக்காகவோ தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் முயலவில்லை. அதன் குறி அனைத்தும் மைய அரசின் அதிகாரத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்பதே. தமிழ்மக்களின் நண்பனாக நாடகமாடிய இந்திய அரசு போராளிக்குழுக்கள் திம்புவில் வைத்த கோரிக்கைகளை மறுக்கிறது. இந்த மறுப்பை ஏற்றுக்கொண்டு தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் ஒரு ‘மாற்றுத்திட்டத்தை’ முன்வைக்கிறது. இத்திட்டம் வடக்கு கிழக்கு இணைப்புக்கூட கோரவில்லை. இந்தத் துரோகத்தை பூசி மெழுகிறார் அமிர்தலிங்கம். ஒப்புதல் வாக்குமூலம் * (2)
         
        “1985 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட    மாற்றமானது சூழ்நிலையில் – திம்புக்கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்க மறுத்து விட்ட சூழ்நிலையில் ;-  நாம் ஒரு மாற்றுத்திட்டம் முன்வைக்கா விட்டால் எமக்கு (தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு) நமக்குச் சார்பான ஒரே நாடான இந்தியாவின் ஆதரவை இழக்கும் ஆபத்து ஏற்பட்டது. இதைத் தவிர்ப்பதற்காக இந்தியாவின் நட்பைப் பேணுவதற்காக. நாம் ஒரு திட்டத்தைப் பாரதப் பிரதமரிடம் கையளித்தோம்.”
         
திம்புக்கோரிக்கை தமிழர்களின் ஜீவாதார நலன்களை உள்ளடக்கியது. இதை வலியுறுத்தினால் “இந்தியாவின் நட்புக்” கெடுகிறது! இதற்காக, அதை கைவிட்டுவிட்டு “இந்தியாவின் நட்புப் பேணப்படுகிறது” என்றால், அந்த நட்பு யாருடைய நலனைக் காப்பதற்காக?
       
பெங்களூர் பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகள் சமரசமுயற்சியை நிராகரிக்கின்றனர். ஒப்புதல் வாக்குமூலம் (3)

”இதற்கு உடன் சம்மதத்தைப் பெறும் நோக்கத்தோடு இரவோடிரவாக தமிழீழ புலிகளின் இயக்கத்தலைவர் திரு.பிரபாகரன் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார். நீண்டவிவாதங்கள் நடைபெற்ற போதும் எவ்வித முடிவும் ஏற்படவில்லை.”

        இதற்குப்பின்னால் போராளிக்குழுக்களை ஓரங்கட்டி வைத்து விட்டு தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் இந்திய விஸ்தரிப்புவாத அரசின் சமரசத் திட்டத்துக்கு சதியாலோசனை வழங்கும் பாத்திரத்தை ஆற்றுகிறது. ஒப்புதல் வாக்குமூலம் (4)

“இதனால் இத்திட்டம் (டிசம்பர் -19) உத்தியோகபூர்வமாக தமிழ் இயக்கங்களுக்கு அறிவிக்கப்படவோ அவர்கள் கருத்துக்கள் கோரப்படவோ இல்லை.”
   
இறுதியாக இலங்கை அரசை இந்திய மேலாதிக்கத்தை ஏற்கப்பண்ண இந்திய அரசே நேரடியாக அச்சுறுத்தியது. 
1) சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஒழித்துக் கட்டவும், 
2) இலங்கைபாஸிச அரசைப் பாதுகாக்கவும், 
3) இந்திய மேலாதிக்கத்தை நிறுவவும் தமிழ்த்தரகு முதலாளியத்தின் முழு ஒத்துழைப்போடு இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஒப்புதல் வாக்குமூலம் (5)

“ஏற்கனவே நாலு வருடங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் படிப்படியாக வளர்ந்து வந்த திட்டத்தில் இருந்து உருவாகிப் பிறந்ததுதான் ஜீலை 29 ந் திகதி கையெழுத்தான இலங்கை – இந்திய ஒப்பந்தமாகும்.”

  தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் (தேசத்துரோக இந்திய கைக்கூலிக் குழுக்களும்) மேலாதிக்க ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது. தனது எதிர்ப்புரட்சிப் பாத்திரம் காரணமாக மக்களிடம் இருந்து தனிமைப்பட்ட இக்கும்பல், மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை வன்முறை கொண்டு நசுக்குவதன் மூலம் தமிழ்த்தேசிய இனத்தை இந்திய மேலாதிக்கத்தின் அடிமைகளாக்கி தனது தரகுமுதலாளிய வர்க்க நலனை அடைய இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இருந்த ‘குறைபாடுகளுக்கு’ தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் முன்வைத்த திருத்தம் இதுதான்!. ஒப்புதல் வாக்குமூலம் (6)

“வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு நேரடி இந்தியத் தலையீடு அவசியம். சிங்களப் பொலிஸையோ, இராணுவத்தையோ அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது.”

  ஈழப்போராட்டத்தை ஒடுக்கி, தமிழ்த்தேசிய இனத்தை தேர்தல் பாதைக்குள் இழுத்துவிட்டு இலங்கை அரசை இந்திய மேலாதிக்கத்துக்கு பணியவைத்து தனது தரகுமுதலாளிய வர்க்க நலனுக்கு பக்கதுணையாக இருக்க வேண்டுமென இந்திய விஸ்தரிப்புவாத அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஒப்புதல் வாக்குமூலம் (7)

”இந்தியாவின் மேலான ஆதரவும் பாதுகாப்பும் எப்போதும் எமக்கிருக்க வேண்டும்.அதுவே எமது பாதுகாப்புக்குஉத்தரவாதம், அதற்குப் பாத்திரமானவர்களாக (இந்தியக்கைக் கூலிகளாக!) நாம் நடந்து கொள்வோம்.”

  இவ்வாறு தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தேசிய விடுதலைப் புரட்சியின் இலக்காக, தேசத்துரோக இந்திய கைக்கூலிக்கும்பலாக தமிழ்மக்கள் முன்னால் தன்னை முழு நிர்வாணமாக நிறுத்தியுள்ளது.
தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம் பகுதி 5         

Monday 3 October 2011

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் பகுதி 6 (3)


தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,

(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 1921-1976) 


பகுதி 3
விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியும் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தி ன் வீழ்ச்சியும் ( 1970-1977)

தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தமிழ்மக்களின் தேசியவிடுதலையை அரைக்காலனிய அமைப்பு முறைக்குக் கட்டிப்போட்டு சீரழிக்க தன்னாலான வரையும் முயன்ற போதும் அந்த முயற்சிகள் அனைத்தையும் மீறிக்கொண்டு தேசியவிடுதலைப் போராட்டம் வெளிக்கிளம்பியது. ஏன்? எவ்வாறு?
          அரைக்காலனிய அமைப்பு முறையை தனது பிரதான உறுஞ்சு குழலாக  கொண்ட ஏகாதிபத்திய சுரண்டல் முதலாளித்துவத் தொழிற்துறை வளர்ச்சியைத் தடுத்துவிட்டது. அதிகாரக் கைமாற்றத்தின் பின்னால் தரகுமுதலாளிய ஆளும் கும்பல்கள் ஏகாதிபத்திய நிதி நிறுவனமான உலக வங்கியின் “பாரியமுதல் தேவைப்படும் கைத்தொழில் முயற்சிகளுக்குப் பதிலாக, சிறுகைத்தொழில்களிலேயே இலங்கை கவனம் செலுத்த வேண்டும்” என்ற கட்டளையை (1951) ஏற்றுக்கொண்டு நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையிலேயே தக்க வைத்துக் கொண்டது. இதன் விளைவாக நாட்டின் 78%ஆன சனத்தொகை விவசாய முறையிலேயே தங்கியிருக்கச் செய்யப்பட்டது. இந்த விவசாயத் துறையும் மரபுரீதியான பின்தங்கிய தன்மையைக் கொண்டதாகவும், சிற்றுடமை விவசாயமாகவும் உள்ளது. இச் சிறு உடமை விவசாயம் பெருகிவரும் சமுதாயத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததாக இருக்கிறது. இதனால் விவசாயத் துறையில். ஏற்கக்கூடிய அளவுக்கு மிஞ்சிய ஒரு உபரிச் சனத்தொகை அத்துறையில் இருந்து வெளியே தூக்கி வீசப்படுகிறது. இச்சனத்தொகையில் பதிவுசெய்யப்பட்ட பகுதியினர் மட்டும் (அரசாங்கத் தகவல்களின் படி) 1963 இல் 4 இலட்சம் ஆகவும், 1970 இல் 7 இலட்சத்து 92 ஆயிரமாகவும் இருந்தது. இந்த உபரிச்சனத்தொகையை உள்வாங்க எந்த உற்பத்தித் துறையும் இல்லை. இதுவே தனிநபர் மட்டத்தில் வேலையில்லாப் பிரச்சனையாக உணரப்படுகிறது. உண்மையில் முதலாளித்துவ தொழிற்துறை வளர்ச்சி மட்டுமே இவ் உபரிச்சனத் தொகையை உள்வாங்கி உற்பத்தி சக்திகளை மென்மேலும் வளர்த்து, உற்பத்தியைப் பெருக்கி சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க முடியும். அது இல்லாத போது சமுதாயம் தன் தேவைகளை நிறைவு செய்ய கொந்தளிக்கும். . . .போராடும்….. இந்த புரட்சிகளும் அவற்றை முன்னெடுக்கும் வர்க்கங்களுமே உற்பத்தி சக்தியின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் வழிகோலுகின்றன.
        
 உற்பத்தித்துறையின் இப்பின்தங்கிய நிலைமைக்கும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் இடையிலான இம்முரண்பாடு 1971 ஏப்ரலில் சிங்களக் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் ஆயுதக் கிளர்ச்சியாக வெடித்தது.  உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் தடுக்கிற ஏகாதிபத்தியங்களின் காவல் நாயும், பிற்போக்குவர்க்கமும் ஆகிய சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கம், இந்தியத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் துணையோடு இக்கிளர்ச்சியை ஒடுக்கி ஏகாதிபத்தியத்துக்கு சேவகம் செய்தது. அத்துடன் நீடித்திருக்கும் முரண்பாடு தனக்கெதிராக மீண்டும் வெடித்து விடுவதைத் தடுக்க சிங்கள மக்களைத் தமிழ்மக்களுக்கு எதிராக திருப்பியது.


விவசாயத்தில் இருந்து பிரிந்த உபரிச் சனத்தொகையை மீளவும் விவசாயக் காணிகளிலேயே குடியமர்த்தும் முயற்சி தமிழ்விவசாயிகளிடம் இருந்து காணிகளை அபகரிக்கும் ’திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாக’ வெளிப்பட்டது. (அட்டவணை 2)

 அட்டவணை 2  சிங்களக் குடியேற்றம்
மாவட்டம்
ஆண்டு
தமிழர் %
சிங்களவர்  %
திருகோணமலை
1971
38.1 %
29.1 %
1981
36.4 %
33.6 %
அம்பாறை
 
1971
22.8 %
30.2 %
1981
19.9 %
37.6 %
மன்னார்
1971
68.1 %
4.1 %
1981
63.8 %
8.1 %

   
அரசாங்க நிர்வாகம் மற்றும் சேவைத்துறைகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பைப் பறித்து சிங்களமக்களுக்கு அளித்தது. கல்வியில் தரப்படுத்தல் முறைகளைப் புகுத்தி தமிழ்மாணவர்களின் கல்விவாய்ப்பைப் பறித்து சிங்கள மாணவர்களுக்கு அளித்தது.  (அட்டவணை 3) மேலும் 1970 -1977 ஆண்டுகளில் தமிழ்மாணவர்களின் மருத்துவத் துறை அனுமதி 64% ஆலும், பொறியியல் துறை அனுமதி 44% ஆலும் வீழ்ச்சியடைந்தது.

அட்டவணை 3 பல்கலைக்கழக அனுமதி 1970 -1974 

1970-1971
1971-1972
1973
1974
விஞ்
கலை
விஞ்
கலை
விஞ்
கலை
விஞ்
கலை
சிங்களவர் %
60.6
89.9
63.2
92.6
67.4
91.5
75.4
86
தமிழர்  %
35.3
7.6
33.6
 4.8
29.5
6.1
20.9
10

          
   அடிப்படையில் பார்த்தால் ‘விவசாயத்திலிருந்து வேறுபிரிந்த உபரிச்சனத் தொகைக்கு’ வடிகால் அமைக்க தமிழ்மக்களுக்கு இருந்த அற்ப வாய்ப்புக் களையும் (அட்டவணை 1) பறிக்கும் கொள்கை தீவிரமாக்கப்படுகிறது. இது சிங்கள மக்களின் மீதான பாசத்தால் உந்தப்பட்டு செய்யப்பட்டதல்ல. அப்படியானால், ஏகாதிபத்திய சுரண்டலை ஒழித்து தேசியத் தொழிற்துறையைப் பெருக்குவதன் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வைக் கண்டிருக்க முடியும். ஆனால் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கம் கண்ட தீர்வு, அந்நிய நிதி மூலதன இறக்குமதியைத் தொடர்ந்தபடியே, அதன்மூலம் தமது தரகுமுதலாளிய நலன்களை அடைந்தபடியே, அதன் விளைவாக எழும் பொருளாதார, அரசியல் சமுதாயப் பிரச்சனைக்கு சிங்கள – தமிழ் சமுதாயங்களை மோதவிடுகிற கேடுகெட்ட வழிமுறையாகும். இது நிலவுடமை வர்க்கங்களதும், தரகுமுதலாளிய வர்க்கங்களதும், அந்நிய நிதி மூலதனத்தினதும் நலன்களுக்குச் சேவை செய்கிற வழிமுறையாகும்.
                 
      ஆனால் இவர்களின் சகபாடியான தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கமோ அரசினதும், சிங்கள ஆளும் கும்பல்களினதும் அந்நிய நிதிமூலதனத்துக்குச் சேவகம் செய்யும் தரகுமுதலாளியவர்க்க இயல்பை’ மூடிமறைத்து சிங்கள எதிர்ப்புணர்விலும், குறுமினவாத உணர்விலும்  வளர்த்தது. ஆக நாட்டின் அடிப்படைப் பிரச்சனையில் இருந்து இரு தேசிய இனங்களது தரகுமுதலாளிய வர்க்கங்களும் இனவாதத்தின் துணைகொண்டு மக்களைத் தேசியபுரட்சிப் பாதையில் இருந்து திசைதிருப்பி தமது வர்க்க நலனைப் பாதுகாக்கவே முயன்றனர்.
       
ஆனாலும் மேலே கண்டவாறு அரைகாலனிய அமைப்புமுறைக்குள் இருந்த அற்பமான உற்பத்தி வாய்ப்புக்களையும் சிங்கள பேரினவாதம் பறித்தெடுத்துக் கொண்டதானது தமிழ்மக்களின் பிரச்சனையை புதிய பரிணாமம் எடுக்கவைத்தது.  ’70 களின் பின்னால் தமிழ்தேசிய பிரச்சனையின் தீவிர போக்குக்கான அடிப்படையாக ‘உற்பத்தி வாய்ப்பற்ற உபரிச்சனத்தொகையின் பிரச்சனையும்’, அதன் மீதான சிங்கள பேரினவாதத்தின் இனவெறித்தாக்குதல்களும் அமைந்தன. இந்நிலைமையானது தமிழ்த்தரகுமுதலாளியத்தின் சமரச வாதத்தையும், பாராளுமன்ற சட்டவாதத்தையும் நிராகரித்து அரைக்காலனிய அமைப்புமுறைக்கு எதிரானதாக தமிழ்த்தேசிய பிரச்சனையை வெளிக்கொணர்ந்தது. அதுவே தனிநாட்டுக் கோரிக்கை. இது தமிழ் முதலாளிய வர்க்கத்தின் சமக்ஷ்டிக் கோரிக்கையைப் போல் அந்நியக்குரலாக இப்போதும் இல்லை. தமிழ் சமுதாயத்தின் சொந்தக்குரலாக வெளிவருகின்றது.
     
தமிழ்மக்களின் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட இத்திருப்பத்தின் பலம், பலவீனம் பற்றிய பகுப்பாய்வு மிக இன்றியமையாதது. ஏனெனில் இவையே 80களுக்குப் பின்னால் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடிப்படையாக விளங்குகிறது. இத் திருப்பத்தின் கவனத்துக்குரிய அம்சங்கள் பின்வருமாறு;

அ) இத் திருப்பம் புறநிலையில் இதுவரையான தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் கோரிக்கைகளைப் போலல்லாது, இலங்கையின் அரைக்காலனிய அமைப்பு முறைக்கும், இனஒடுக்குமுறையின் மீது கட்டியமைக்கப்பட்ட பாசிஸ அடக்குமுறைக்கும், ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கும் எதிரானதாக அமைகிறது.

ஆ) ஆனால் அகநிலையில் இது இருபிரதான பலவீனங்களைக் கொண்டிருந்தது. ஒன்று, இக்கோரிக்கை தமிழ்ச்சமுதாயத்துள் ஆதாரப்பட்டுநிற்கிற சமூகவர்க்கம் குட்டிபூர்சுவாவர்க்கமாகும். இரண்டு, இக்கோரிக்கையும், அதற்கான போராட்டங்களும் தன்னியல்பானவையாகும். உணர்வுபூர்வமானவை அல்ல.

 இதன் விளைவு என்னவெனில் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் சிந்தனை வரம்புகளைத் தாண்டி ‘தனிநாட்டுக் கோரிக்கை’ தனது உள்ளட்டக்கத்தைப் பெற்றுக் கொள்ள இயலவில்லை. பிரதானமாக தனிநாட்டுக் கோரிக்கையின் உயிர், ஏகாதிபத்திய எதிர்ப்பில் அடங்கியிருப்பது உணர்ந்து கொள்ளப்படவில்லை. “சிங்கள அரசிடம்” இருந்து தமிழ்மக்கள் விடுதலை பெறுவதாக குறுக்கிப் புரிந்து கொள்ளப்படுகிறது. இது மறுபக்கத்தில் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டத்துக்கு ஒரு குறுமினவாத உருவத்தைக் கொடுத்து விடுகிறது. இதனால் தனிநாட்டுக் கோரிக்கை தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்துடன் தன்னைக் கொள்கை ரீதியில் முறித்துக் கொள்ளவில்லை. தமிழ்த்தரகுமுதலாளிய அரசியல் கைவிடப்படாமலேயே தனிநாட்டுக் கோரிக்கை கையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. குட்டிபூர்சுவா வர்க்கத்தின் வர்க்கப் பார்வையின்மையும், ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற தன்மையும் காரணமாக தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தை தவறாக எடைபோட்டுக் கொள்கிறது.  அதிகபட்சம் அதனது விமர்சனம், ‘இதயசுத்தி’, ‘தனிநபர் நேர்மை’, ‘பதவி வெறி’, ‘பிழைப்பு வாதம்’ என்பதாகவே இருக்கிறது. இவற்றுக்குப் பின்னால் (தமிழ்த்தரகுமுதலாளிய) வர்க்கம் இருப்பதையும், அதன் நலன்கள் தேசியப் புரட்சிக்கு எதிராக இருப்பதையும் குட்டிப்பூர்சுவா வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தமிழ்த்தரகு முதலாளியத்திடம் கண்ட குறைபாடுகளை நீக்கி தான் நேர்மையாகவும் ஊக்கத்துடன் செயற்படுவதின் மூலம் விடுதலையை அடைந்துவிடலாம் என எண்ணுகிறது. போதாக்குறைக்கு குட்டிபூர்சுவா வர்க்கத்தின் எல்லாக் கற்பனாவாதங்களும் போராட்ட இயக்கத்தில் தொற்றவைக்கப்படுகிறது. “சோசலிஸத்தமிழீழமும்” அத்தகைய ஒரு கற்பனைவாதமே! இத்தனை பலவீனங்களோடும் தான் குட்டிபூர்சுவா வர்க்கம் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்துடன் மோதுகிறது.

70 களின் பின்னால் தமிழ்க்கூட்டணியினரோடு சம்பந்தங் கொள்ளாத சுயாதீனமான குட்டிபூர்சுவா மாணவர் இளைஞர் ஸ்தாபனங்கள் தோன்றின. தமிழ் இளைஞர் பேரவை உடைந்தது. ஈழவிடுதலை இயக்கம் தோன்றியது. ‘எரிமலை’(பத்திரிகை) வெளிவந்தது. போட்டிக்கு ‘குமுறல்’ (தமிழ்த்தரகு முதலாளிய ஆதரவுப் பத்திரிகை) வந்தது. மாணவர்கள். இளைஞர்கள். இளம்பெண்கள், மத்தியில் தனிநாட்டுப்பிரச்சார இயக்கம் தன்முனைப்போடு கொண்டுசெல்லப்பட்டது. தேர்தல் பாதை நிராகரிக்கப்பட்டது. தமிழர்கூட்டணியினர் “குற்றவாளிக்கூண்டில்” நிறுத்தப்பட்டனர். இந்த எதிர்ப்புக்கள் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் ‘செயலற்ற கையாலாகாத்தனத்தின்’ மீதான குட்டிபூர்சுவா வர்க்கத்தின் வெறுப்பின் வெளிப்பாடுகளாக இருந்தன. அதே வேளை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் எதிர்ப்புரட்சி அரசியலின் மீதான தாக்குதலாக அமையவில்லை. இந்த எதிர்ப்புக்கு தன்னியல்புதான் அடிப்படை. தேசிய விடுதலைக்கான திட்டம் அடிப்படையல்ல.

இதன் விளைவாக, தேசியப் புரட்சியின் நடுவே புகுந்து அதனைத் திசைதிருப்பி சீரழிக்கப்பாடுபடும் சமரசசக்தியாக தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தை இனங்காணவில்லை. இவர்களை அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தி மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தும் கொள்கை இருக்கவில்லை. சமரசசக்திகளை தனிமைப்படுத்தும் கோட்பாட்டுத்தீர்வின் அடிப்படையில் அமையாத தன்னியல்பான எதிர்ப்புக்களாக ‘70களின்’ எதிர்ப்புக்கள் அமைந்தன. இத்தன்னியல்பே திம்புப் பேச்சுவார்த்தையிலும் அதன்பின்பும், தமிழர் கூட்டணியினருடன் ‘ஐக்கிய முன்னனி’ அமைக்கவும், பின்னர் “முதலாளித்துவ ஜனநாயகம்” பேசுவதற்கும் காரணமாயிற்று.


இந்தப் பலவீனங்கள் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் ‘குளிர்காய்வதற்கு’ இடம்விட்டுக் கொடுத்தன. குட்டிபூர்சுவா வர்க்கத்தின் தனிநாட்டுக் கோரிக்கையும், தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு ‘கருவேப்பில்லை’ ஆனது. முதல் கட்டத்தில் இளைஞர்களது நம்பிக்கையைப் பெறவும், அதே நேரத்தில் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் முயல்கின்றனர். “தமிழின த்தின் ஒற்றுமையைக் கெடுக்க வேண்டாம்” என்ற எச்சரிக்கை. “தம்பிமார் படிக்க வேண்டும்” என்ற ஆலோசனை. “மார்க்சியத்தில் மனந்தோய்தவன்” என்ற ஏமாற்று.  “நிதானம் இழந்தால் இனத்துக்கு அழிவு” என்கிற புத்திமதி. “நான் இளைஞனாக இருந்த காலத்தில்………” என்கிற வரலாற்றுப் போதனை. திருவாளர் அமிர்தலிங்கம் அவர்கள் “அமிர் அண்ணா” ஆகுதல்` இந்த மோசடிகள் எதுவும் பலிக்காமல் போகிறது.  தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தானே அம்பலமாகிறது. இந்த நிலைமையில் குட்டிபூர்சுவா எழுச்சியை வடிய வைக்க தனிநாட்டுக் கோரிக்கையை தாமே எடுத்துக் கொள்கிறனர்.
      
1970 – 1976 வரை ஆட்சியில் இருந்த சிங்களத் தொழிற்துறைத் தரகுமுதலாளிய வர்க்கத்திற்கெதிராக வணிகத் தரகர்கள் ஒன்றுசேர்ந்து கொண்டனர். தொண்டமான் ஜே. ஆருடன் கூட்டுச் சேர்ந்து மலையகத்திலும் தென்னிலங்கையிலும் போராட்டம் நடத்தி வந்தார். (1977 இல் இவருக்குப் பதவி கிடைக்க இருந்தது!) மறுபுறம் தமிழ் வணிகத் தரகர்களுடனும் கூட்டுக்குப் போனார். இந்த வணிகத்தரகர்களின் கூட்டை “தமிழர் கூட்டணி” (1974) என்று பெயரிட்டு அழைத்தனர். (இக்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் ‘விடுதலை’ பற்றிய கருத்து வளர்ந்து வந்ததால் பின்னர் இது தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியது!) 1976 இல் வட்டுக்கோட்டையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். 1977 இல் பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி வரவிருக்கிறது. “இந்தமுறைத் தேர்தல் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு” என்றாகிறது. தேர்தல் விஞ்ஞாபனம் சொல்வதாவது;


”எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழும் தொடர்பான பிரதேசம் முழுவதும் உள்ளடங்கியதான சுதந்திரமான, இறைமையுள்ள, மதச்சார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை நிறுவுவதற்கு தமிழ்த்தேசிய இனத்தின் கட்டளையைத் தமிழர் கூட்டணி நாடி நிற்கிறது.”
  
குட்டிபூர்சுவா வர்க்கம் முன்னெடுத்துச் சென்ற தனியரசுப் பிரச்சாரத்தை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் அறுவடை செய்தது. என்றுமில்லாத பெரும்பான்மை வெற்றியடைந்தனர். ஆனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் வழக்கமான ‘கருவேப்பிலை’ விளையாட்டில் இருந்து இது வித்தியாசமானது. தமிழீழக்கோரிக்கை சமக்ஷ்டிக்கோரிக்கையல்ல. அது பொருளாதார அடித்தளத்தில் வேர்கொண்டு, முழுச்முதாயத்தினதும் ஜீவாதார நலன்களை உள்ளடக்கி நின்ற அரசியல் கோரிக்கை ஆகும். வாக்குரிமை பறிக்கப்பட்ட போது இருந்த தீர்க்கதரிசனம், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போது இல்லாது போய்விட்டது!
      
81 இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளுடன் வருகிறார்கள்.; யாழ் பல்கலைக்கழக வளவில் உதய சூரியன் (”தமிழீழத்தேசியக் கொடி”) கொடிபோர்த்திய அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி சுடர்விட்டு எரிகிறது. 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் வருகிறார்கள்; பொதுத்தேர்தலில் தமிழ்த்தரகுமுதலாளியம் மண்கவ்வுகிறது. 1989 ஜூலையில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை ‘வெளியேற வேண்டாம் தமக்குப் பாதுகாப்பில்லை’ என்கிறார்கள். அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் சுட்டுத்தள்ளப்பட்டார்கள். இவை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றன என்பது உண்மைதான். ஆனால் இவை நிச்சயமான வீழ்ச்சிகள் அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். 80 களின் இந்த எதிர்ப்புக்கள் ’70 களின்’ எதிர்ப்புக்களில் இருந்த அடிப்படைத் தன்மையில் மாறாதவை. ’தன்னியல்பானவை’ என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
    
தமிழ்த்தேசிய இனம் தனது விடுதலைக்காக போராடும் போது, நண்பர்க ளையும் சந்திக்கிறது; எதிரிகளையும் எதிர்கொள்கிறது. “நமது எதிரிகள் யார்?” நண்பர்கள் யார்?” புரட்சியில் இந்தப்பிரச்சனை முதல்முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.” தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தேசியப்புரட்சியில் நண்பனா? எதிரியா?. சமுதாய அளவில் இந்தப்பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை.
       
தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் அரசியல் செல்வாக்கிலிருந்து மீள்தல், தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கு முன்நிபந்தனையாகும்.  எனவேதான் போராட்ட முன்னனியினரதோ, மக்களதோ தன்னியல்பான எதிர்ப்புக்களில் அன்றி தமிழ்த்தரகுமுதலாளியத்தின் எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தை விஞ்ஞான வழியில் புரிந்துகொள்வதின் மீது இயக்கம் தனது பலத்தை கட்டியமைக்க வேண்டும். அப்போதுதான் மக்களைத் தேசியப்புரட்சியில் ஊன்றி நிற்கச் செய்வது சாத்தியமாகும்.



தேசிய இன விடுதலையில் தமிழ்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம் பகுதி 4