Saturday 27 October 2007

ENB:அநுராதபுரத் தாக்குதல் அடுத்தது என்ன?

அநுராதபுரத் தாக்குதல் அடுத்தது என்ன?

ர்வதேச ஏகாதிபத்திய வாதிகளை ஒரு பூதம் ஆட்டிப்படைக்கிறது. இயல்பாகவே இந்தப் பூதம் அவர்களது சர்வதேச வாலாட்டி ஆளும் கும்பல்களது அரசியல் அத்திவாரங்களை உலுக்கி நொருக்குகிறது. 'பயங்கரவாதம்' எனப் புனைபெயர் சூட்டப்பட்ட இப்பூதத்துக்கு எதிராக அவர்கள் ஒருசேரப் போர் தொடுத்துள்ளனர். இந்தப் பூதத்தை வரையறை செய்ய, இந்தப் போர்கள் நடந்த வழித்தடத்தைப் பின் பற்றுங்கள்.இந்த விபரங்களில் இருந்து ஆறு முக்கிய கண்ணிகளைக் காண்பீர்கள்.

1) ஒற்றைத்துருவ உலக ஏகாதிபத்திய அமைப்புக்குத் தலைவனாக இருக்கும் அமெரிக்கா, இராணுவ ரீதியில் பலவீனமான இதர ஏகாதிபத்திய
நாடுகளின் சந்தையை பலாத்காரத்தால் அபகரித்துக் கொள்வது. (ஈராக்)
2)மூலவளக் கொள்ளைக்காகவும் கடத்தலுக்காகவும்,வருங்கால யுத்த தளங்களுக்காகவும் பிற தேசங்களை- பிரதேசங்களைக் கைப்பற்றுவது; ( ஆப்கானிஸ்த்தான்)
3) ஏகாதிபத்தியதின் உலகைக் கொள்ளையிடும் வேட்கைக்கு நேர் எதிர் முரணான தேசிய விடுதலைப் புரட்சிகளை நசுக்குவது.(ஈழம் முதல் குர்திஸ்தான் வரை)
4) ஏகாதிபத்திய நாடுகளில் புரட்சிகர சோசலிஸ ஜனநாயக இயக்கங்களை நசுக்குவது;( தெரிந்தும் தெரியாமலும் மேலை நாடுகளில் குரல்வளை நெரிக்கப்பட்ட எண்ணற்ற புரட்சிகர ஜனநாயகக் குழுக்கள், கட்சிகள்)
5)மூன்றாவது உலகப் போரை நோக்கி மிக வேகமாக முன்னேறும் அமெரிக்காவும், சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளும் பாசிசத்தின் துணைகொண்டு மட்டுமே தம் குறிக்கோளை அடைய முடியும்.இதனால் அனைத்து மக்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் நசுக்குவது;('யுத்த எதிர்ப்பு' இயக்கங்கள் மீதான தாக்குதல்கள்)
6) இந்தப்போக்கை உந்துவிக்கும் காரணி என்ன?முதலுலகப் போர் நிலைமையை விடவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சர்வதேச ஏகாதிபத்தியத்தின் மூன்று ஆதாரத்தளங்களும், (அமெரிக்கா, ஜப்பான், ஈரோப்பியன் ஜூனியன்)ஏககாலத்தில் சிக்கியுள்ளன. இதிலிருந்து மீள்வதற்கு உலகை மறு பங்கீடு செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.யுத்த வெறியாட்டமும், சமாதான நாடகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் மட்டுமே. தேசங்களை கபளீகரம் செய்யும் இரு வேறு தந்திரங்கள்.

இந்த ஆறு கண்ணிகளையும் இணைத்தால் ''பயங்கரவாதம்'' எனப் பெயர் சூட்டி ''மக்களின் நலன்களைப் பாதுகாக்க'' நடத்தப்படும் யுத்தமாக
சித்தரிக்கப்படும் விவகாரம்:' சர்வதேச ஏகாதிபத்திய உலகப் பொதுப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக உலகை மறுபங்கீடு செய்வதற்கான
பகுதியான யுத்தம்' எனப் பொருள் காண்பீர்கள். இந்தப்பகுதியான பிராந்திய யுத்தங்கள் ஒரு முழு அளவிலான மூன்றாவது உலக யுத்தமாக
வளர்வதற்கான அனைத்து முரண்பாடுகளும் முழு அளவில் வளர்ந்துள்ளன. இந்த யுத்தம் ஏகாதிபத்திய நலன்களுக்கு அவசியமானவை.இவை
மக்களின் நலன்களுக்கு முற்றிலும்எதிரானவை. எனவேதான் யாரெல்லாம் இந்த யுத்தத்தில் 'உலக மறு பங்கீட்டுக் கொலை வெறித் தாண்டவத்தில்'
பங்காளிகளாக இல்லையோ அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்-மற்றும் அதன் இதர வியாக்கியானங்களில் அடக்கப்பட்டு அழித்தொழிக்கப்
படுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தான், அடுத்தது என்ன?- என்ற வினாவுக்கு விடை தேட வேண்டும்.
(22-10-2007) திங்கள்அதிகாலை 3.20 மணிக்கு இலங்கையின் வடமத்திய மாகாணம் அனுராதபுரத்தில் அமைந்துள்ள, ஈழதேச மக்களை அன்றாடம்
குண்டு வீசிக்கும் கொன்றொழிக்கும் ஸ்ரீறிலங்கா அரசின் பிரதான யுத்த விமானத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்தனர். சுமார் எட்டு
மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இத்தாக்குதலில் தமிழீழ வான்படையும் பங்கு கொண்டு வெற்றிகரமாக ஈழதேசம் திரும்பியது. சேதாரம் பற்றிய
ஸ்ரீறிலங்கா அரசின் பொறுப்பான பொய்கள் எல்லாம் அம்பலமாகிப்போயின. 21 கரும்புலிகளின் தீரம் மிக்க தியாக வேள்வியில் இலங்கை
விமானப்படையின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது என்பதே உண்மை.
2002 இல் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிடப்பில் போட்டு விட்டு, ஏகாதிபத்திய வாதிகளும் இந்திய விஸ்தரிப்புவாத அரசும்
ராஜபக்சவின் பேடித்தனமான, ஈழதேசத்தை கட்டாயமாக ஸ்ரீலங்காவுடன் கட்டிவைத்திருக்க முயலும் அநீதியான யுத்தத்திற்கு பக்கத் துணையாக
உள்ளனர்.யுத்தத்தின் மூலம் தீர்வு சாத்தியமில்லை என எமக்கு உபதேசம் செய்து கொண்டு எம்மீது யுத்தத்தை ஏவுகின்றனர்.இத்தாக்குதல் நடந்து முடிந்த கையோடும் ''பயங்கர வாதத்தில் இருந்து இலங்கையை காப்பாற்ற'' இந்தியா வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விட்டது.
இதுவே ஏகாதிபத்திய சர்வதேச சமூகத்தினதும் நிலைப்பாடாகும்.
ஆனையிறவுத்தாக்குதலின் பயன்களை அடைய விடாமல் தடுத்த அதே சக்திகள், அநுராதபுரத் தாக்குதலுக்குப்பின்னாலும் சிறீலங்கா அரசுடன்
அணிசேர்ந்து நிற்கின்றர். 1985 இலும், 1987இலும் இவர்கள்தான் விடுதலைப் போரைப் பின்னடித் தவர்கள்.
கட்டாய இணைப்பை எதிர்த்து தமிழ் மக்கள் 1977 இலேயே பிரிவினைக்கு ஆணையிட்டனர். அந்த மக்கள் ஆணையை ஸ்ரீறிலங்கா அரசோ, இந்திய
விஸ்தரிப்புவாத அரசோ, ஏகாதிபத்தியவாதிகளோ ஏற்கத் தயாராக இல்லை.இதற்குமாறாக அவர்கள் ஸ்ரீறிலங்கா அரசுடன் அணி சேர்ந்து எம்மை ஒடுக்குகிறார்கள்.எம்மைக் காலனித்துவ கட்டாய இணைப்புக்குள் கட்டுப்பட்டு வாழ எம் மீது வன்முறையைத் திணிக்கிறார்கள்.

அவர்கள் நம்மை எதிரிகளாக நடத்தும் போது நாம் அவர்களை நண்பர்களாகக் கருதுவது தவறான அரசியல் யுத்த தந்திரமும்,
சந்தர்ப்பவாதமுமாகும்.இதன் அரசியல் வெளிப்பாடுதான் 2002 இல் முன் மொழியப்பட்ட' அகசுய நிர்ணய உரிமை'என்கிற அதிகாரப்பரவலாக்கல்
கோரிக்கையாகும்.
இந்த அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் கொடுத்த விலை மகத்தானது.
கேட்கக் கேட்க ஆயிரம் ஆயிரம் புதல்வியர்களை,புதல்வர்களை அள்ளி அள்ளித்தருகிற அந்தச் சின்னஞ் சிறு தேசம் இந்த சந்தர்ப்பவாதங்களை
அதிககாலம் தாங்கிக் கொள்ளாது.

தருணம் வந்துவிட்டது.

இலங்கை அரசுமட்டுமல்ல, இந்திய விஸ்தரிப்புவாத அரசும், சர்வதேச ஏகதிபத்தியமும் நமது எதிரிகளாகும்.

அவர்கள் எம்மீது கட்டவிழ்க்கும் இந்த யுத்தம் யனநாயக விரோத, தேச விரோத, மக்கள் விரோத அநீதியான யுத்தமாகும்.அவர்கள் அனைவருக்கும்
எதிராக நாம் ஒரு நீதியான நீண்டகால மக்கள் யுத்தத்தில் ஊன்றி நிற்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதுவே தீரமிக்க தியாக வேள்வியில் தீய்ந்து போனகரும் புலி வீரர்களின் ஈழ தாயகக் கனவை நனவாக்கப் பொருத்தமான அரசியல் யுத்த
தந்திரமாகும்.
இத்திசை வழியில் உள்நாட்டு ஜனநாயக கடமைகளின்பாற்பட்டு எமது முழக்கங்கள்:

* இலங்கை ஒரு நாடு, இரு தேசம்!
* 'அகசுய நிர்ணய உரிமை' என்கிற அரசியல் சந்தர்ப்பவாதத்தைக் கை விடுவோம், பிரிவினைக் கோரிக்கையை உயர்த்திப் பிடிப்போம்!
* வடக்குப் படையெடுப்பை முறியடிக்க, கிழக்கை மீட்டெடுக்க விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்போம்!
* அரசியல் வழியில் தீர்வுகாண்பதாய் ஆடும் நாடகத்துக்கு:
1) 1977 மக்கள் ஆணையை அரசியல் அமைப்பில் உறுதி செய்ய-வடக்குக் கிழக்குத் தமிழ்பேசும் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்து எனப்
பதிலளிப்போம் !
2) 2002 யுத்தநிறுத்த உடன்பாட்டின் நிலைக்கு ஸ்ரீலங்கா இராணுவம் திரும்பிச் செல்வதை முன்நிபந்தனையாய் வைப்போம்!
3) கிழக்கு மாகாண அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி, அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட அனைத்து தமிழ் பேசும் மக்களையும் அரசு செலவில்
உடனடியாக மீளக்குடியமர்த்தக் கோருவோம்!

சர்வதேச ஜனநாயக கடமைகளின்பாற்பட்டு எமது முழக்கங்கள்:
*ஏகாதிபத்தியம் ஒழிக!
* தென்னாசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடியாளான இந்திய விஸ்தரிப்புவாத அரசை தோற்கடிப்போம்!
*ஈராக், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அந்நிய துருப்புக்களையும் உடனடியாக வெளியேறக் கோருவோம்!
*ஈரான் மீதான அமெரிக்க யுத்த முஸ்தீபுகளை அம்பலமாக்கி தடுக்க முயல்வோம்!
*மூன்றாவது உலகப்போரைத் தடுத்து நிறுத்த முழு ஊக்கத்துடன் போராடுவோம், மூளும் தருணத்தில் உள்நாட்டு யுத்தமாக மாற்றுவோம்.

ஈழமக்களின் தாகம் மக்கள் ஜனநாயக குடியரசு! இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!!