Friday 15 March 2013

தமிழக மாணவர் எழுச்சி: அவசியக் குறிப்புரை பகுதி (2)





தமிழக மாணவர் எழுச்சி: எழுச்சியின் தருணத்தில் ஒரு சுருக்கமான அவசியக் குறிப்புரை
பகுதி (2)

தமிழீழத் தேசியப் பிரச்சனையும் தமிழகமும்

1) நாடாளமன்றவாத அரசியல் கட்சிகள்

இவர்கள் தமிழகத்தின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடாதவர்கள், தமிழீழத்தின் விடுதலைக்காகப் போராடுவார்களா என்ன!

1983 ஜூலை இனப்படுகொலை தமிழகமக்களைக் கொந்தளிக்க வைத்த போது, அதைப் பயன்படுத்தி இலங்கை அரசை இந்திய மேலாதிக்கத்துக்கு அடிபணிய வைக்கவும், விடுதலைப் போராட்ட அமைப்புக்களை சிதைத்து சீரழிக்கவும் இந்திய அரசு திட்டமிட்டபோது அதை தமிழகத்தில் அமூலாக்கியவர்கள் இவர்கள்.இது முதல் இந்திய விரிவாதிக்கத் திட்டத்துக்கு அடங்கி ஒடுங்கி அடிமைச் சேவகம் செய்வதே இவர்களது பிறவிப் பயன் ஆக இருந்து வந்துள்ளது.இதனால் தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து இவர்கள் வாயே திறப்பதில்லை! இந்திய அரசு இழைத்த யுத்தக் குற்றங்கள் குறித்து பேசுவதே இல்லை. பகுதி 1 இல் நாம் வகுத்தளித்த இந்திய விஸ்தரிப்புவாத அரசு தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரைத் திட்டமிட்டு கருவறுத்து வந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ `தமிழீழத்தில் இந்திய விஸ்தரிப்புவாத திட்டத்துக்கு சேவகம் செய்து வந்ததைக் காண முடியும்.

2) அதிகாரபூர்வ ஈழத்தமிழின ஆதரவாளர்கள் ( பழ.நெடுமாறன் ஐயாவை அடியொற்றிய அமைப்புக்கள்)

இவர்களும் தமிழகத்தின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடாதவர்கள், தமிழீழத்தின் விடுதலைக்காகப் போராடுவார்களா என்ன!

இந்திரா-எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் இந்தியா தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக இருந்தது என்ற கடைந்தெடுத்த ஏமாற்றை நெடுமாறன் தொடர்ந்து செய்து வருகின்றார்.

முள்ளிவாய்க்காலில் நாம் மூச்சுத் திணறி நின்றபோது பி.ஜே.பி ஆட்சிக்கு வரும் பிரச்சனை தீரும் என்று வாக்களித்து `பின்வாங்க வேண்டிய தருணத்தில் முன்னேற` புலிகளுக்கு வழி சொன்னவர் வை.கோ.

தமிழீழம் கடந்துவந்த 30 ஆண்டுகால வேள்வியை தன் சொந்த (வர்க்க) அரசியல் எதிர்காலத்துக்காக ``நாம் தமிழர்`` கேவலப்படுத்தி வரும் அளவுக்கு வேறு யாரும் செய்ததில்லை.புலிகள் தலைவரை,புலிகள் சின்னத்தை,புலிகள் உறுதிமொழியை, புலிகளின் மாவீரர் கீதத்தை தம் தேர்தல் வேட்கைக்காக இழிவுபடுத்தி மலிவு படுத்தி எமது இரத்தத்தை வெறும் சத்தமாக மாற்றியவர்கள் இவர்கள்.

முத்துக்குமாரன் மூட்டிய தீயை திட்டமிட்டு அணைத்தவர்கள், முள்ளிவாய்க்காலுக்கு கொள்ளிவைத்தவர்கள்.

3) NGO கருங்காலிகள்
`அரபுவசந்த` நவீன காலனியாதிக்கத் திட்டத்தின் அடிப்படையில், மே- 18 இற்குப் பின்னால் அமைப்பாக முளைத்தவர்கள். அமெரிக்க உலகமறுபங்கீட்டு ஆட்சிக் கவிழ்ப்புத்திட்டத்துக்கு சேவகம் செய்பவர்கள்.நவீன காலத்தின் புதிய எதிர்ப்புரட்சிகர சக்திகள்.

4) CPI, CPM திருத்தல் வாதிகள்

இந்த இரண்டு கும்பலுமே தம் சொந்த சித்தாந்தக்கு துரோகம் இழைத்த `ரசிய சீன பாண்டியர்கள்`! சித்தாந்தத்துக்கே துரோகம் இழைப்பவன் வேறு எதில் நியாயமானவனாக இருப்பான்?

இந்த சமூக சக்திகள் தான் பிரதானமாக  (அகக் காரணமாக), தமிழீழ விடுதலைப் போருக்கான தமிழக மக்கள் ஆதரவை தணித்து அடக்கி முடக்கி சிதைத்து சீரழித்து வந்தவர்கள்!

புறவயப் பாதிப்புகளின்  உடனடி விளைவாக இந்த மூடு திரையோடு முட்டி மோதி எழுந்துள்ளது இந்த மாணவர் இயக்கம்.
===========
இப் பிரச்சனையில் மாணவர் இயக்க மதிப்பீடு (2) :
ஒட்டுமொத்தமாக இந்தக் கும்பலை மாணவர் இயக்கம் தலை தறித்து நிராகரித்திருக்கிறது.இது ஒரு திருப்பமாகும்.எனினும் இச் சமூக சக்திகளை புரிந்து கொண்ட அளவுக்கும், தெரிந்து கொண்டுள்ள அளவுக்கும் உள்ள விகிதாசாரமே இன்று  வெடித்திருக்கும் தன்னியல்பான எழுச்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.  
எழுச்சி தொடர்க! எழுச்சி நடைமுறையில் இருந்து கற்றறிக! எழுச்சி வெல்க! மக்கள் ஆதரவு பெறுக, பெருகுக!

புதிய ஈழப்புரட்சியாளர்கள் ENB

தமிழக மாணவர் எழுச்சி: அவசியக் குறிப்புரை பகுதி (1)



தமிழக மாணவர் எழுச்சி: எழுச்சியின் தருணத்தில் ஒரு சுருக்கமான அவசியக் குறிப்புரை

பகுதி (1)

தமிழீழத் தேசியப் பிரச்சனையும் இந்திய விஸ்தரிப்புவாத அரசும்.

1983 இல் தமிழீழத் தேசியப் பிரச்சனை ஒரு உள்நாட்டு யுத்தமாக வடிவெடுத்தது முதல் இந்திய விஸ்தரிப்புவாத அரசு தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரைத் திட்டமிட்டு கருவறுத்து வந்துள்ளது.

1) 1983-தமிழீழப் போராளிகளை மண்ணில் இருந்து வேரறுத்தது.

2) 1984-ஆயுதம் மற்றும் பணத்தைக் கொடுத்து அவர்களது தமிழீழ இலட்சியத்தைக் கைவிட நிர்ப்பந்தித்தது.

3) 1985- திம்புப் பேச்சுவார்த்தையில் போராளிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தது.

4) 1986- போராளிக்குழுக்களுக்கிடையே மோதலை `ரோ` மூலம் உருவாக்கி, ``சகோதர யுத்தத்தைத்`` தூண்டியது!

5) 1987- இந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை அடிமைப்படுத்தும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை, ஜே.ஆர்.அரசை `ஈழப்போராட்ட ஆதரவு மூலம்``
அடிபணிய வைத்து திணித்தது.

6)1987-1988- இந்தியப் படைகளை அனுப்பி இலங்கை மீது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தைக்  கட்டவிழ்த்தது, தமிழீழ விடுதலைப் புலிகளை வேட்டையாடியது. தமிழீழ மக்கள் மீது எண்ணற்ற யுத்தக்குற்றங்களைப் புரிந்தது.

7) எனினும், இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்திலும், இலங்கை அரசின் இன ஒடுக்குமுறை யுத்தத்திலும் விடுதலைப்புலிகள் தொடர் வெற்றிகளை ஈட்டி, அதன் உச்சமாக ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தை வீழ்த்தி தமிழீழத்தின் பெரும்பகுதியை சிங்கள இராணுவ அடக்குமுறையின்  ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து யாழ் நோக்கி முன்னேறிய வேளையில், மீண்டும் ஒரு `அமெரிக்க-இந்திய கூட்டு` இரணுவத்தலையீட்டைக்காட்டி எச்சரித்து சமரச வழியில் திசை திருப்பியது.

8) 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் முதல் விடுதலைப்புலிகளை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தி, அவர்களை பயங்கரவாத இயக்கமாக சித்தரித்து தடை செய்ய முன்னின்று செயற்பட்டது.

9) சிங்களத்தை அடுத்த கட்ட யுத்தத்திற்கு தயார் செய்தது.

10) ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசு யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மீறி கட்டவிழ்த்த, கோர இனப்படுகொலை யுத்தத்தின் பங்காளியாகி, ஆனந்தபுர
விசவாயுப் படுகொலை மூலம் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளை கோழைத்தனமாகக் கொன்றொழித்து, சிங்களத்தின் வெற்றிக்கு வழி
வகுத்தது.

11) விஸ்தரிப்புவாத நலனின் பேராலும், பொருளாதார நலனின் பேராலும் சிங்களத்தின் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கோரும் ஜனநாயக,மனித நேய, இன நல ஆதரவு இயக்கங்களின் சர்வதேச முயற்சிகளை தொடர்ந்து சர்வதேச அரங்கில் முறியடித்து வருகிறது.

12) இலங்கை ஒரு நாடு இரு தேசம், என்ற உண்மையை மூடி மறைத்து, இலங்கையில் தமிழர் ஒரு `சமூகம்` என்றும் அவர்களுக்கு 13 வது
திருத்தமே தீர்வு என்றும் தொடர்ந்து ஒப்புக்குச் சொல்லி  வருகிறது.
முடிவாக:
1983-2013 முப்பது ஆண்டுகளின் வரலாற்றுப் புள்ளிகள் இணைந்து வரைகின்ற கோலம் என்னவென்றால் இந்தியா இலங்கையின் நட்பு நாடு என்பதும் தமிழீழத்தின் எதிரி நாடு* என்பதுமேயாகும்.
 
( ஐ .நா. மனித உரிமை சபையின் 22வது கூட்டத்தொடர் இன்று நடந்து கொண்டிருக்கும் தருணத்திலும், அமெரிக்கத் தீர்மானத்துக்கு 4வது திருத்தத்தை, இலங்கையை பாதுகாக்க இந்தியா  மேற் கொண்டுள்ள இந்த வேளையிலும் இதுவே உண்மையாகும்) 
---------------
* எதிரி நாடு என்று குறிப்பிடும் போது நாம் அந்த நாட்டின் ஆளும்வர்க்கங்களையும், அரசுமுறையுமே கருதுகின்றோம்.மக்களை அல்ல. இந்தியா பெரு நிலப்பிரபுத்துவ, தரகுமுதலாளிய ஆளும் வர்க்கங்களின் பிடியில் அரசியல் அதிகாரமும், அதனால் இயற்கையாகவே அரைக்காலனிய பாசிச அரசுமுறையையும் கொண்ட நாடாகும். இதன் தர்க்க ரீதியான  விளைவாக உள் நாட்டிலும் அண்டை அயல் நாடுகளிலும், பிராந்தியங்களிலும் தேசிய சுதந்திரத்தின் எதிரியாகும்.
============================
இப் பிரச்சனையில் மாணவர் இயக்கம் குறித்த மதிப்பீடு (1) : இந்த வரலாற்றைப் புரிந்து கொண்ட அளவுக்கும், தெரிந்து கொண்டுள்ள அளவுக்கும் உள்ள விகிதாசாரமே இன்று  வெடித்திருக்கும் தன்னியல்பான கிளர்ச்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.  
எழுச்சி தொடர்க! எழுச்சி நடைமுறையில் இருந்து கற்றறிக! எழுச்சி வெல்க! மக்கள்ஆதரவு பெருகுக!
புதிய ஈழப்புரட்சியாளர்கள் ENB
============================