Thursday 29 September 2011

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் பகுதி 6 (2)

தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்

(’தமிழர் மகாசனசபை’ இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 1921-1976)

பகுதி-2
தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் எழுச்சியும் அதற்கான அடிப்படையும்

காலனித்துவ ஆட்சியில் ஏகாதிபத்தியம் வழங்கிய அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் சிங்கள – தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களிடையே ஏற்பட்ட போட்டி தமிழ்த்தரகுமுதலாளியத்தை வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களை நோக்கிச் சாயச் செய்ததை முற்பகுதியில் கண்டோம். தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கிடையேயான போட்டி 1915 இல் முஸ்லீம் வணிகத் தரகுமுதலாளியத்தை அடித்து விழுத்தியதையும், 1930 களோடு இந்திய வம்சாவழி வணிகத் தரகுமுதலாளியத்துக் கெதிராக திரும்பியதையும் இவ்விரு சந்தர்பங்களிலும், சிங்கள – தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கங்கள் கூட்டுச் சேர்ந்து நின்றதையும் பார்த்தோம். ’கொழும்புப் பிரதிநிதித்துவம்’ நிராகரிக்கப்பட்டமை (1920), 1931 தேர்தலில் 6% பங்கு கிடைத்தமை, 1936 மந்திரி சபையில் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் ஏகபோகம் நிறுவப்பட்டமை, தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத் தின் ‘சம அதிகாரக் கோரிக்கை’ (50:50) சோல்பரி ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டமை, ஆகியவை சிங்கள – தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தி வந்தன. இவ்வரலாற்றின் தொடர்ச்சியாகவே ‘அதிகாரக்கைமாற்றம்’, மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதோடு சிங்கள – தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களின் உறவில் ஒரு கொள்கை ரீதியான மாற்றம் உருவாகிற்று. தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ் மக்களைத் தனது ஆதாரமாக்கிக் கொள்வது தவிர்க்கவியலாத அவசியம் ஆகிவிட்ட போதுதான் ‘தமிமக்களின் பிரச்சனைகள்’ தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்படுகிறது. அப்போதுங்கூட தமிழ்மக்களின் பிரச்சனைக்காக  முன் வைக்கப்பட்ட தீர்வுகளும், நடத்தப்பட்ட போராட்டங்களும் தமிழ்த்தரகு முதலாளிய நலன்களை அடைந்து கொள்வதுக்கு அப்பால் சென்றுவிடாதவாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது.

அதிகாரக் கைமாற்றத்தின் முதற் சாதனை மலையகத்தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டமையே என்பது எல்லோரும் அறிந்ததே!. இதன்மூலம் வாக்குரிமை அளிக்கத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டோர் 1) புத்திசுவாதீனமற்றவர், 2) கைலஞ்ச ஆள்மாறாட்டக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர், 3) மலையகத் தொழிலாளர்கள்! ! இந்த மானங்கெட்ட செயல் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் ஜனநாயகப் பண்புக்கும், அவர்கள் பெற்றுக் கொண்டது ”சுதந்திரம்” தான் என்பதற்கும் போதுமான சான்று என்பதை போகிற போக்கில் சொல்லிக் கொள்கிறோம். – மலையகத் தமிழரின் வாக்குரிமையே இந்திய வம்சாவழித் தரகுமுதலாளிய வர்க்கத்தின் அரசியல் பலமாக அமைந்தது. இது பாராளுமன்றத்தில் அவர்களுக்கு 10 பிரதிநிதித்துவத்தைத் தேடிக்கொடுக்க வல்லதாக இருந்தது. சிங்கள –இந்திய வம்சாவழி வணிகத் தரகுமுதலாளிய வர்க்கங்களிடையே எழுந்த போட்டி இவ் அரசியல் பலத்தை தகர்ப்பதை அவசியமாக்கியது. 1930 களில் தீவிர மடைந்த இம்மோதல் 1948 இல் அதிகாரம் கைக்கெட்டியதோடு ஒரு முடிவுக்கு வந்தது.

வாக்குரிமையைப் பறித்ததானது, அரசியல் அதிகாரத்தில் தனது ஏகபோகத்தை நிலைநிறுத்தும் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் முயற்சியாகும். இதுவே தமிழ்த்தரகுமுதலாளியத்தை அச்சுறுத்தியது. அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கு முன்னர் நின்றதுபோல் இனிமேலும் இவ் ஏகபோக விருப்பத்துக்கு துணை நின்றால் அது தன் தலைக்கே ஆபத்து என்பதை செல்வநாயகம் உணர்ந்து கொண்டார். இந்த நிலையில் சிங்கள –தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கிடையேயான உறவு குறித்து ஒரு கொள்கைப் பிரச்சனை எழுகிறது. ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் கருத்துப்படி ‘சிங்களத் தரகுமுதலாளியத்தின் ஏகபோகத்துக்குத் துணைபோய் அது போடுகிற பிச்சையை வாங்கிக் கொண்டு அண்டிப்பிழைப்பதாகும்! இதற்கு அவர் வைத்த பெயர் “இணைப்பாட்சி”. செல்வநாயகத்தின் கருத்துப்படி; ‘இது தலைபோகிற காரியம்; சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்துடனான கூட்டுறவை முறித்துக் கொள்ளாமலே, தமிழ்மக்களைத் தன் சமூக அடிப்படையாக மாற்றி அவர்களது பின்பலத்தில் தங்கியிருந்து, போடுகிற பிச்சையை வாங்குபவர்களாக இல்லாமல் போராடி அதிக அதிகாரத்தைப் பெறுவதற்கு முயல வேண்டும்.’ என்பதாகும். இதற்கு அவர் வைத்த பெயர் ”சமஸ்டி”. (மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’.) இங்கு ஒரு விடயத்தைக் கவனித்தாக வேண்டும். இவர்களுடைய பிரச்சனையும் சரி. அதற்குக் கண்டு கொண்ட தீர்வும் சரி தமிழ்ததரகுமுதலாளிய வர்க்கத்தின் நலன்கள் சம்பந்தப்பட்டவை. இதற்கும் வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களுக்கும் அல்லது மலையகத் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்தை ஏகபோகமாக்கிக் கொள்ளும் போக்கில் இருந்து, தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்க நலனை எவ்வாறு காத்துக் கொள்வது என்ற கொள்கைப் பிரச்ச னையில் தமிழ்காங்கிரஸ் உடைந்து சமஸ்டிக்கட்சி (FEDERAL PARTY) 1949 இல் தோன்றியது.பேச்சு வழக்கில் இது தமிழரசுக் கட்சி எனத் தந்திரமாக அழைக்கப்பட்டு வந்தது*

தன்வர்க்க இயல்பை மூடிமறைப்பதற்காக தமிழரசுக் கட்சி ஒரு பொய்யோடு பிறந்தது. ”மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராகவே தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை செல்வநாயகம் உருவாக்கினார்.” என்பது அந்தப் பொய். வரலாற்றைத் திரித்துப் புரட்டுகின்ற இந்தக் கும்பல் 1948 முதல் 1955 வரையான யு. என். பி ஆட்சிக்காலத்தில் இதற்காக மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் இறங்க வில்லை. இந்த மானங்கெட்ட செயலுக்கெதிராக வடக்குக் கிழக்குத் தமிழர்கள் மத்தியில் தொடர்ச்சியாகப் பிரச்சார இயக்கத்தைக் கொண்டு செல்லவில்லை. 1950 எஸ். எஸ். எவ். பி ஆட்சிக்காலத்தில் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் மூலம் தமக்கு அற்பச் சலுகைகள் கிட்டிவிட வேண்டும் என்ற நப்பாசையில் பண்டார நாயக்காவின் வேண்டுகோளுக்கிணங்க மலையகத் தமிழரின் வாக்குரிமைக் கோரிக்கை கைவிடப்பட்டது. மீண்டும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து “தேசிய அரசாங்கம்” அமைத்தபோது இதனை முந்நிபந்தனையாக வைக்கவுமில்லை. இதற்குப் பிந்திய முழுவரலாற்றிலும் இப்பிரச்சனைக்காக தமிழ்தரகுமுதலாளிய வர்க்கம் எந்த முயற்சியும் எடுத்துக் கொண்டதில்லை. ‘பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்.!

இலங்கையின் அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிந்திய வரலாற்றை மிகவும் மேலெழுந்த வாரியாக ஒப்புநோக்கும் ஒருவருக்குக்கூட தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கம், சிங்களத் தொழிற்துறைத் தரகுமுதலாளியக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலங்களில் போராடப் புறப்பட்டிருப்பதும். சிங்கள வணிகத் தரகுமுதலாளியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலங்களில் ஓய்வெடுத்துக் கொண்டதும் எளிதில் புலனாகும். இந்நடத்தையைத் தீர்மானிப்பது எது?

யு . என். பி யும் எஸ். எல். எவ். பி யும் சிங்களத்தரகு முதலாளிய வர்க்கத்தின் வணிகத்துறை தொழிற்துறைப் பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்த சிங்களப் பேரினவாதக் கட்சிகளாகும். தமிழ்மக்களை ஒடுக்கவதைப் பொறுத்தவரைக்கும் இவ்விரு கட்சிகளும் ’அஞ்சல் ஓட்டமே’ நடத்தின. ஒன்றுவிட்ட இடத்திலிருந்து மற்றையது ஒடுக்குமுறையைத் தொடரும். எனவே யு. என். பி ஆட்சிக்காலங்களில் போராட்டங்கள் கைவிடப்படுவதற்கு எந்த தர்க்க நியாயமுமில்லை. …..; இவை தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களாக இருந்திருக்குமானால் ! உண்மையில் இந்தப் போராட்டங்கள் தமிழ்மக்களின் நலனை அடைவதற்காக நடத்தப்பட்டவையல்ல. எஸ். எல். என்.பி யினரின் ‘பண்ட ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கை’ பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டமை’ போன்ற தொழிற்துறை, தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலன்களைப் பேணுவதற்கான வணிகக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளால் பாதிப்படைந்த தமிழ்வணிகத் தரகுமுதலாளிய வர்க்கம் தமது வணிக நலன்களைக் காத்துகொள்ள நடத்திய போராட்டங்களே இவையாகும். யு. என். பி இனரின் பொருளாதாரக் கொள்கைகள் வணிகத் தரகுமுதலாளிய நலங்களுக்கு வாய்ப்பாக அமைந்தமையால் தமது வர்க்க நலனை அடைந்து கொள்ளவும், சிங்கள வணிகதரகுமுதலாளிய வர்க்கதுடனான வர்க்க ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் இவர்கள் தமிழ்மக்களையும் போராட்டங்களையும் கைவிட்டு வந்தனர்.

இதனால் அடிப்படையில் தமிழ்தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுவது ஒருபோதும் பிரச்சனையாக இருந்தது இல்லை. சுயநிர்ணய உரிமையை மறுத்துக் கொண்டே தமிழ் மக்கள் மீது அதிகாரத்தைச் செலுத்துவதில் தமக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்பதிலேயே பிரச்சனை எழுகின்றது. இந்த அதிகாரப்பங்கு தமிழ்த்தரகுமுதலாளியவர்க்கத்தின் நலங்களைக் காப்பதற்கானவையே தவிர தமிழ்மக்களின் நலங்களைக் காப்பதற்கல்ல என்பது சொல்லாமலே புரியும்…… மத்தியில் இந்த அதிகாரம் போதுமான அளவு ‘கவனிக்கப்படுமானால்’ மாநிலத்தில் தமிழ்மக்களை ஒடுக்கும் பாத்திரத்தை தானே செய்வதற்கு அது தயாராக உள்ளது. எப்படியும் இந்த அதிகாரத்தை பெற்றுவிடுவதற்காக அது விடாப்பிடியாக முயல்கிறது. என்வே சிங்கள –தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களைப் பொறுத்தவரையில் அவை சுயநிர்ணய உரிமைக்கு எதிரா னவை ஆகும். அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டுள்ள சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கம் வன்முறை கொண்டு ஒடுக்குவதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்குச் சேவகம் செய்கிறது. அதிகாரத்தில் பங்கு பெறுவதற்காக போராடுகின்ற தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் சுயநிர்ணய உரிமைப்பாதையில் இருந்து தமிழ்மக்களைத் திசைதிருப்பி சீரழிக்கும் சமரச சக்திப் பாத்திரத்தின் மூலம் ஏகாதிபத்தியத்துக்குச் சேவகம் செய்கிறது. இங்கே வழிமுறைகள் தான் வேறுபடுகின்றன. தேசியப் புரட்சியை ஒடுக்குவதில் சிங்கள தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்கள் ஒன்றுபடுகின்றன.

அதிகார கைமாற்றத்துக்குப் பிந்திய அரைக் காலனிய இலங்கை அரசு, காலனியாதிக்கச் சுரண்டலைத் தொடர்ந்து வந்த, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. 1950களின் ஆரம்பத்தில் இந்நெருக்கடி கூர்மையடைந்து உணவுப் பொருட்களுக்கான மானியங்கள் வெட்டப்படு மளவுக்குச் சென்றது. இதற்கு எதிரான 1953 ஆம் ஆண்டின் ஹர்த்தால் அரசஎந்திரத்தை ஸ்தம்பிக்கச்செய்து பிரதம மந்திரியை பதவி இறக்கியது. சர்வஜன வாக்குரிமையும், 1940 களில் சுயபாசைக்கல்வி விரிவடைந்த போதும் அரசியல் அதிகாரத்திலும், அரசநிர்வாகத்துறைகளிலும் ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்து (1832-1956) சொத்துடைய மேட்டிக்குடியினரின் ஆதிக்கம் பாதுகாக்கப்பட்டு வந்தது. பெருகிவந்த ‘வேலையில்லாத் திண்டாட் டத்தால்’ பாதிக்கப்பட்ட குட்டிபூர்சுவா வர்க்கம் ‘ஆங்கில ஆட்சிமொழிக் கொள்கைக்கு’ எதிராக சுயபாக்ஷைக் கோரிக்கையை முன்வைத்தது. இக்கோரிக்கை ஆரம்பத்தில் தமிழ், சிங்கள இருமொழிகளையும் ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையாகவே முன்வைக்கப்பட்டது என்பது முக்கியமானது. சிங்களத் தரகு பூர்சுவா வர்க்கங்கள் இருமொழிக் கொள்கையை ஆரம்பத்தில் வரவேற்றுப் பேசியது இதன் காரணமாகவே! ஆனால் சுயபாக்ஷை கோரிக்கை ஆளும் (ஐக்கிய தேசியக் கட்சி) கும்பல்களு க்கு எதிராகத் திரும்புகிறது. இது ஒரு நெருக்கடியாகும். உற்பத்தி வாய்ப்பற்ற, விவசாயத்தில் இருந்து வேறுபிரிந்த உபரிச் சனத்தொகைக்கு உற்பத்தி வாய்ப்பளித்துத் தீரவேண்டிய நெருக்கடியாகும். ஏகாதிபத்திய சுரண்டலின் காவல்நாய்களாக விளக்கும் சிங்களத்தரகு பூர்சுவா வர்க்கங்களுக்கு இந்நெருக்கடிக்கு எதிரான எதிர்ப்புக்களைத் திசைதிருப்ப வேண்டியது அவசியமாகி விட்டது.

நாடுதழுவிய இப்பிரச்சனைக்கு ஏகாதிபத்திய சுரண்டலை ஒழித்து சுதந்திர, முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் தீர்வுகாண்பதற்குப் பதில், சிங்களக் குட்டிபூர்சுவா வர்க்கத்தை தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பித் தமிழர்களுக்கிருந்த வாய்ப்புக்களைப் பறித்துக் கொடுப்பதன் மூலம் “தீர்வு காணப்பட்டது.” இதனால் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் சுயபாக்ஷைக் கோரிக்கை சிங்களத் தரகு பூர்சுவா வர்க்கங்களால் தனிச் சிங்களக் கோரிக்கையாக உருச்சிதைக்கப்பட்டது. “தனிச் சிங்களச் சட்டம் சிங்களவர்களுடைய வேலையில்லாப் பிரச்சனையைப் போக்கும் எனக்கூறப்பட்டது.” (பீற்றர் கெனமன்) இதன் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், அரைக்காலனிய அரசுக்கு எதிராகவும் சென்றிருக்கவேண்டிய போராட்டம் தமிழ்தேசிய இனத்துக்கு எதிராக திருப்பபட்டு விட்டது. “தேசியவாதி” பண்டாரநாயக்காவின் சாதனை இது!!

இதன்மூலம் சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கம் தனது பிற நோக்கங்களையும் சாதித்துக் கொண்டது. தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கிடையான போட்டியில் சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கத்தின் கருத்தியல் ஆயுதமாக வளர்ந்து வந்த “சிங்களப்பேரினவாத – பெளத்தமதவாதம்” மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்ததோடு சிங்கள ஆளும் வர்க்கங்களின் பின் சிங்கள மக்களைக்கட்டிப் போடுவதற்கான சித்தாந்த ஆயுதமாக திடப்பட்டுவிடுகிறது. 1950 களில் இலங்கையின் அரைக்காலனிய அரசை இச் சித்தாந்த அடிப்படையில் கட்டியமைத்து சிங்கள மயமாக்குவதற்கான முயற்சி ஆரம்பமாகிறது. இதன் முதல் நடவடிக்கை அரசதுறையில் இருந்த தமிழ்மக்களை வெளியேற்றுவதாகும். அரசதுறையில் தனிச்சிங்களப் பிரயோகத்தைச் சட்டமாக்கியதன் மூலம் சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கம் இதனையும் சாதித்துக்கொண்டது. தமிழரசுக்கட்சியினரின் 1957 இன் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டமும், 1961 இன் சத்தியாக்கிரகமும், இந்த தனிச்சிங்கள பிரயோகத்தை எதிர்த்து நடத்தப்பட்டவையே. இப்போராட்டங்கள் தமிழ் மக்களை தம் பலமாக்கிக் கொள்ளும் அவர்களது நோக்கத்தை நிறைவேற்றி வைத்தன.

”1956 ஜூன் 14 ம் நாள் சிங்கள மொழிமட்டுமே அரசகரும மொழியாகும் என்ற சட்டம் பாரளுமன்றத்தில் நிறைவேறியது. 1956 இன் 33ம் இலக்க அரச கருமமொழிச் சட்டத்தின் ஏற்பாட்டுக்கமைய தமிழ் அல்லது ஆங்கில மொழிமூலம் அரச சேவையில் சேரும் சகல ஊழியர்களும் மூன்று ஆண்டுகளில் சிங்கள மொழியில் தேர்ச்சிபெற வேண்டுமென நிர்ப்பந்திக்க ப்பட்டனர். அவ்வாறு தேர்ச்சிபெறத் தவறுவோரின் வழமையான சம்பள உயர்வு இடைநிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட கால எல்லையுள் சிங்கள மொழியில் தேர்ச்சிபெறத் தவறிய அரச ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப் பட்டனர்.” இதன் விளைவை அட்டவணை 1 எடுத்துக் காட்டுகிறது.

அட்டவணை 1 – அரச துறையில் தமிழர்களின் விகிதாசாரம்

துறைகள்------------ 1956           1965              1970

நிர்வாகத்துறை       30%             20%               5%

எழுதுவினைஞர்     50%             30%               5%

மருத்துவம்,
பொறியியளாளர்,
விரிவுரையாளர்.     60%             30%               10%

ஆயுதப்
படையினர்                 40%               30%               1%

தொழிலாளர்
பிரிவினர்                     40%                20%              5%

வேறுவிபரங்களில் இருந்து இக்காலப்பகுதியில் (1959 – 1970) அரசதுறை சராசரியாக 82% சிங்களமயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மெய்விபரங்கள் நமக்கு எடுத்துக் காட்டுவது என்ன ?

தன்தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையற்றிருக்கிற ஒரு தேசிய இனத்தின் தலைவிதியை சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கம் எவ்வாறு தீர்மானித்தது என்பதைத்தான். அரசதுறையில் இருந்து தமிழர்கள் கழுத்தைப்பிடித்து வெளியில் தள்ளப்பட்டார்கள்!

எனவே மொழிப்பிரச்சனையில் தமிழ் மக்களின் நலனுக்காக குரல் எழுப்புகிற ஒரு கட்சியாக இருந்தால் அது சுயநிர்ணய உரிமைக்காக குரல் எழுப்பித்தீர வேண்டும். ‘தாய்மொழிக்கொள்கையை’ முன்வைத்துப் போராடி யிருக்க வேண்டும். மேலும் அரைக்காலனிய அமைப்புமுறையை தூக்கியெறிவதை நோக்கித் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கத்தையும் கிளர்ச்சி நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்க வேண்டும்.

அதனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் செய்தது என்ன? அது தனிச் சிங்களச்சட்டத்தின் அரச எந்திரத்தை சிங்களமயமாக்கும் நோக்கம், சிங்கள ஆளும் கும்பலின் தரகுமுதலாளிய வர்க்க இயல்பில் இருந்து வருவதை மூடிமறைத்து விட்டது. அரைக்காலனிய அமைப்பு முறையில் இவ் இன ஒடுக்கலில் இருந்து விடுதலை பெற சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதில் இருந்து தமிழ்மக்களை திசைதிருப்பி விட்டது. இந்த வரம்புக்கு உள்ளே நின்றுதான் அது போராட்டத்தில் குதித்தது. இப்போராட்டம் தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு அவசியமாகியது. ஆட்சியில் இருப்பது எஸ். எல். எவ். பி இனர் என்பதாலாகும் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்! “தூக்குமேடை பஞ்சுமெத்தை” “குண்டாந்தடிக்கு அஞ்ச மாட்டோம்” இவை சத்தியாக்கிரகத்தின் வீரமுழக்கங்கள்: அடுத்த பொதுத் தேர்தல் வருகிறது. தமிழரசுக்கட்சி பெரும் வெற்றியடைகிறது. ஐக்கியதேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து “தேசிய அரசாங்கம்” அமைக்கின்றது. அதிகாரப்பங்கை அடைந்து கொண்டதும் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டது. இந்தக் கசப்பான உண்மையைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்னவோ; 1965 – 1969 வரை தமிழரசுக்கட்சியினர் அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலத்தில் அரசுத்துறையில் இருந்து தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்ட வீதாசாரம் முந்தைய ஆட்சிக்காலத்தை விட பன்மடங்கு அதிகமாக இருந்ததை அட்டவணை 1 காட்டுகிறது.! எது உண்மை? தமிழரசுக் கட்சியினர் தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராடினார்களா? தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலன்களை அடைய தமிழ்மக்களின் பிரச்சனையைப் பயன்படுத்தினார்களா?

மேலும் இவர்கள் செய்துகொண்ட இரண்டு ஒப்பந்தங்களைப் பார்ப்போம்;

பண்டா – செல்வா ஒப்பந்தம் (1957 ஜூலை) கூறுகிறது;

”வடமாகாணத்தை ஒரு மாவட்டசபைப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி கிழக்கு மாகாணத்தை இரண்டு அல்லது மூன்று மாவட்டசபைப் பிரதேசங்களாகப் பிரித்தல்.”

டட்லி –செல்வா ஒப்பந்தம் (1965 மார்ச்) கூறுகிறது;

“இரு தலைவர்களாலும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அதிகாரங்களைக் கொண்ட மாவட்டசபைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல். எனினும் தேசிய அவசியங்களைக் கருத்திக் கொண்டு மேற்படி சபைக்கு பணிப்புரை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் எனவும் உடன்பாடு காணப்பட்டது.”

இவை சுட்டிக்காட்டும் உண்மைகள் ஆவன:

அ) தமிழ்தேசிய இனத்தின் பாரம்பரிய பிரதேசமான வடக்குக் கிழக்குப் பிரதேசங்களைத் துண்டாடி தமிழ்மக்களைத் ஒரு தேசிய இனமாக இல்லாதொழிக்கும் சதியை சிங்களத் தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்கள் கூட்டாகவே நிறைவேற்றுகின்றன. (1981 இன் மாவட்ட அபிவிருத்தி சபைகளும், பின்னர் இணைப்பு ‘C’ யிலிருந்து இந்திய இலங்கை ஒப்பந்தம், 13ஆவது திருத்தச்சட்டம் வரையான சமரசங்களும் இச்சதியை நிறைவேற்றுவதற்கான விடாப்பிடியான முயற்சியே.)

ஆ) ”தேசிய அவசியம்” என்பது அடிப்படையில் தமிழ்மக்கள் ஒரு தனியான தேசமாக இருப்பதை நிராகரித்து இலங்கையை ஒரே தேசமாக அங்கிகரிக்கிறது. “பணிப்புரை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இருத்தல் வேண்டும்” என்பது தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து  அவர்களைச் சிங்களப் பெருந்தேசியவாத ஆளும் கும்பல்களின் அதிகாரத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கட்டிப்போடுவதே அன்றி வேறொன்றுமில்லை.

இ) தமிழ்த் தேசியத்தின் பிரதேசத்தையும், சுயநிர்ணய உரிமையையும் சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டதற்கு பின்னால் “இருதலைவர்களும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான அதிகாரம்” என்பதற்கு என்ன பொருள்? தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலனை எந்தளவு கவனித்துக் கொள்ள சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கம் இணங்கி யுள்ளது” என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

இவை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலனை வேண்டி நிற்கின்றனவே அன்றி தமிழ்மக்களின் நலன்களை அல்ல. எனினும் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கிடையிலேயே உள்ள போட்டியால் – இப்போட்டிக்கு எப்போதுமே பேரினவாதம் ஒரு கருவியாகப் பயன்பட்டு வந்திருப்பதனால் – இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. இதனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் நஸ்டமடைந்திருக்கலாம். ஆனால் இவை அமுல்படுத்தப் பட்டிருப்பினும் கூட தமிழ்மக்கள் தமது தேசியத் தேவைகளை இவை மூலம் அடைந்திருக்க முடியாது.

தமிழரசுக் கட்சியின் போராட்ட வடிவங்களைப் பார்ப்போம். கறுப்புக் கொடி காட்டுதல், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம், அமைதியான ஊர்வலம், பாராளுமன்ற வெளிநடப்பு இந்த வகையான மென்மையான போராட்ட வடிவங்களையே த.அ.கட்சியினர் கையாண்டு வந்தனர். அது ஆளும் வர்க்கத்துக்கும் அதன் சட்ட ஒழுங்கு ஏற்பாடுகளுக்கும் இடைஞ்சல் விளைவிக்காத, மக்களுக்குப் போர்க்குணத்தை உண்டுபண்ணாத தரகு முதலாளிய வர்க்கத் தேவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். இந்த வடிவங்களைக் கொண்டு சாதாரண நிலைமைகளைச் சரிக்கட்டிக் கொள்கிற இவர்கள், ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களின் போராட்ட உணர்வு வளர்ந்துவிடுகிற அசாதாரணமான நிலைமைகளில் மக்களின் இந்த எழுச்சிக்கு வடிகால் அமைக்க கையாளுகின்ற வடிவம் ‘சட்டமறுப்பு இயக்கம்’ ஆகும்.

சட்டமறுப்பு இயக்கம் பெரும் விளம்பரத்தைப் பெறும். உணர்ச்சி பீறிட்டுப் பாயும், கட்டம் கட்டமாக போராட்டம் திட்டமிடப்படும். வழக்கம் போல் எப்போதும் முதல் கட்டம் தான் நடக்கும். அடுத்த கட்டம் வரவே வராது. அனுமதி பெறாமல் - சரியாகச் சொன்னால் அனுமதி பெற்றது மக்களுக்குத் தெரியாமல் – ஊர்வலம் தொடங்கும். பொலிஸ் குண்டர்கள் ஊர்வலதைத் தடுத்தால் கிழித்த கோட்டைத் தாண்டாது. இப்போது சட்டம் மறுக்கப்படவில்லை. ஏற்கப்படுகிறது. சட்டவிரோதமாகத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படும். கைது செய்யப்பட்டால் ‘ட்ரயலற்பார்’ ( Trail at Bar) இல் வழக்காடும். இவர்களின் சட்டமறுப்பு என்பது சிறிய சட்டத்தை மறுத்து பெரிய சட்டத்தை ஏற்பதாகும். ஒரு கட்டத்தில் சட்டத்தை மறுத்து பிறிதொரு கட்டத்தில் சட்டத்திற்குக் கட்டுப்படுவதாகும்.

இதன்மூலம் மக்களின் போராட்ட எழுச்சி அரைகாலனிய அமைப்பு முறைக்கும், அரசுக்கும், அரசபடைகளுக்கும் எதிராகப் போய்விடாதவாறு பார்த்துக் கொள்ளுகிறார்கள். மறுபுறம் இத்தகைய போலிப் போராட்டங்கள் மூலம் மக்களின் எழுச்சிக்கு வடிகால் அமைத்து விடுகிறார்கள். இந்தக் கைங்கரியத்துக்கான கூலியை பாராளுமன்றத்தில் நாகரீகமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இப்படி தமிழரசுக் கட்சியினர் தமது தரகுமுதலாளிய வர்க்க நலன் பாதிக்கப்படுகிற போது – எஸ். எல். எவ். பி. ஆட்சிக்காலங்களில் – “தமிழ்மக்களுக்காக போராடுவதுபோல் காட்டிக்கொள்வதும், அப்போராட்டக் கோரிக்கைகளிலும் சரி, போராட்டவடிவங்களிலும் சரி தமது வர்க்கநலனைக் காத்துக்கொள்வதும் வரலாறாக இருந்திருக்கிறது. இதே நேரத்தில் இவர்கள் தமிழ்மக்களின் காவலர்களாக, தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடுப வர்களாக கருதப்பட்டார்கள். தமிழ்மக்களின் மீது இவர்கள் தமது ஏகபோக தலைமையை நிறுவியிருந்தனர். இந்த முரண்பாட்டை இப்போது நாம் விளங்கியாக வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகியது?

எப்போதுமே வரலாற்றுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று ஒடுக்குவோரின் பக்கம், மற்றையது ஒடுக்கப்படுவோரின் பக்கம். ஒடுக்கு வோரின் நலன்களும் ஒடுக்கப்படுவோரின் நலன்களும் ஒன்றுக் கொன்று பகைமையானவை. ஏனெனில் ஒன்றை மற்றொன்று வலுக்கட்டாயமாக அடக்குவதன் மூலமே தனது நலனை அடைய நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிவர்க்கங்களும், தரகுமுதலாளிய நிலவுடமை வர்க்கங்களும் காலனிய, அரைக்காலனிய நாடுகளின் ஒடுக்கும் வர்க்கங்கள் ஆகும். தேசிய முதலாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள் இவர்களால் ஒடுக்கப்படும் வர்க்கங்கள் ஆவர். இவ் ஒடுக்கப்படும் வர்க்கங்களையே நாம் ‘மக்கள்’ என்கிறோம். ஏகாதிபத்திய, தரகுமுதலாளிய. நிலவுடமை வர்க்கங்களின் கூட்டான எதிரிமுகாம் இம்மக்களை வலுக்கட்டாயமாக அடக்குவதன் மூலம் மட்டுமே தன் நலனைப் பெருக்கிக் கொள்ளமுடியும். இதற்கு அவர்கள் அரசியல் அதிகாரத்தை, சட்டங்களை, கூலிப்படைகளை, “சட்டபூர்வத்துப்பாக்கிகளை” பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான வர்க்கப் போராட்டமே இதுநாள் வரையான மனித குலத்தின் ஏடறிந்த வரலாறு அனைத்தையும் உந்தித் தள்ளிய சக்தியாக இருந்து வந்துள்ளது.

ஒடுக்கும் வர்க்கங்களின் நலன் பரந்துபட்ட பெரும்பான்மையான வர்க்கங்களின் நலனுக்கு நேர்விரோதமானது. இதனால் ஒன்று: அவர்கள் தமது சொந்தவர்க்க நலனைப் பகிரங்கப்படுத்த முடியாது. இரண்டு; தமது சொந்தவர்க்கத்தின் பலத்தில் மட்டும் தங்கி இருந்து தமது நலன்களை அடைய முடியாது. மூன்று; ஒடுக்கப்படும் வர்க்கங்கள் இருக்கவும் வேண்டும். ஆனால் அவை ஒடுக்குமுறையை எதிர்க்கவும் கூடாது. இது ஒரு முரண்பாடாகும். இம்முரண்பாட்டுக்கு ஏதோ ஒரு வழியில் தீர்வு காணாமல் ஒடுக்கும் வர்க்கங்கள் தமது நலனைக் காத்துக்கொள்ள முடியாது. ஒடுக்கும் வர்க்கங்களின் இப்பொதுவான அவசியம், ஒடுக்கப்படும் சமூக வர்க்கங்களை பொய்யான வழிகளில் ஏமாற்றி தம்பின்னே திரட்டிக் கொள்ளவைக்கிறது. ஒருபுறம் இவ்வாறும் மறுபுறம் சட்டபூர்வ வன்முறை மூலமும் இம்முரண்பாட்டுக்குத் ( தற்காலிக) தீர்வுகாண முயல்கின்றனர்.

இன்னொன்றும் நடக்கிறது. அது ஒடுக்கும் வர்க்கங்களுக்குள்ளேயே உள்ள போட்டியின் விளைவானதாகும். இபோட்டியின் காரணமாகவும் இவை தம்முள் போராட வேண்டியுள்ளது. இப்போராட்டத்துக்கான பின்பலத்தையும் இவர்கள் ஒடுக்கப்படும் சமூகவர்க்கங்களிடமிருந்தே பெற்றுக் கொண்டாக வேண்டும்.இங்கேயும் ஒரு முரண்பாடு உள்ளது. ஒடுக்கும் ஒரு சமூக வர்க்கப்பிரிவே தன்னால் ஒடுக்கப்படும் சமூகவர்க்கங்களைத் தன்பின்னால் திரட்டிக் கொள்வது அம்முரண்பாடாகும். சமுதாய வரலாற்றில் இதுவும் சாத்தியமாகவே செய்கிறது. .. .. ஆனால் முற்றிலும் தற்காலிகமாக; இது எவ்வாறு சாத்தியமாகிறது?

சமுதாயத்தின் வளர்ச்சி என்பது, அச்சமுதாயம் தானே உற்பத்தி செய்து கொண்ட உற்பத்திச் சக்திளின் வளர்ச்சியினால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு சீரான பரிணாம வளர்ச்சிப்போக்காக இருப்பதில்லை. மார்க்சின் கண்டுபிடிப்பின்படி; “வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமுகத்தின் பொருளாயத உற்பத்திச்சக்திகள் அன்றைக்கிருந்த உற்பத்தி உறவுகளோடு – அல்லது அவற்றைச் சட்டபூர்வமான சொற்களில் வெளிப்படுத்துகிற சொத்துரிமை உறவுகளோடு – இதுவரை இவை இயங்கிவந்திருக்கிற சுற்றுவட்டத்துக்குள்ளேயே மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதில் இருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகபுரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது. பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம் அந்த மாபெரும் மேல்கட்டிடம் முழுவதையுமே விரைந்தோ சற்று தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன.

ஆனால் பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம் – முதலாளியத்துக்கு முந்திய உற்பத்திமுறையில் இருந்து சுதந்திர முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கிய மாறுதல் அப்படியே கண்ணாடியில் தெரிகிற விம்பத்தைப் போல் மேல்கட்டுமானத்தில் – அரசியலில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் – அச்சொட்டாக பிரதிபலிப்பதில்லை. மேலும் மார்க்ஸ் கூறுகிறார்,

“இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிறபோது உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல் இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்.) சட்டம், அரசியல், மதம், கலைத்துறை அல்லது தத்துவஞானத்துறைகளில் – சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் – இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதிமுடிவாகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்போதுமே அவசியமாகும்.”

(மார்க்ஸ் ‘அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒருகருத்துரை’ – முன்னுரையில்)

இங்கே பழைய உற்பத்தி முறையின் மேல்கட்டுமானங்களான சித்தாந்த அரசியல் கருத்துக்களும் தம்மை நிலைநிறுத்தப் போராடும். இவை மாறுதலை வேண்டிநிற்கும் சமுதாய இயக்கத்தின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தி நிற்கும். இது மக்களின் சிந்தனையில் பலமாக பதிந்தும் இருக்க முடியும். இந்த நிலைமை உள்ள வரையில் பழைய உற்பத்தி உறவுகளைப் பாதுகாத்து நிற்கிற பிற்போக்கான சமுகவர்க்கங்களும் – தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கம் – தமது அரசியல் தலைமையை மக்கள் மீது நிறுவ முடிகிறது. இதுவே தமிழ்த்தரகுமுதலாளியத்தின் ‘சமரசசக்தி’ பாத்திரத்துக்கான அடிப்படை ஆகும். தமிழ்மக்களின் தேசியத்துக்கு முந்திய  சாதிய, இனக்குழு, மத உறவுகளுக்கு கொள்கை வடிவம் கொடுத்து, மக்களின் வாழ்நிலையையும் அதன் தேவையாக தேசியம் இருப்பதையும் காணவிடாது தடுத்ததன் மூலம் தனது தலைமையை நிறுவிக்கொண்டது. இவ்வாறுதான் தமிழ்த்தரகுமுதலாளியவர்க்கத்தின் எழுச்சி சாத்தியமாகியது.

எனினும் இத் தலைமையானது சமுதாய வளர்ச்சிப்போக்கில் கழித்துக்கட்டப்பட்டு விடுகிற பின்தங்கிய உற்பத்தி உறவுகள் மீது ஆதாரப்பட்டு நிற்பதாகும் .இதனால் அதன் வீழ்ச்சி சர்வநிச்சயமானது. ஆனால் இது தானாகவே வீழ்ந்துவிடாது. இது வீழ்த்தப்பட வேண்டும். பொருளாதார அடித்தளம் வேண்டிநிற்கும் முதலாளித்துவப் பொருளாதார மாறுதல் அவசியமாக இருக்கும் வர்க்கங்கள் (– தேசிய முதலாளித்துவ வர்க்கம் (இடது), குட்டிபூர்சுவா வர்க்கம் (இடதுபிரிவு), தொழிலாளர்வர்க்கம், விவசாயிகள் –) தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் பிரதிநிதித்துவம் செய்யும் பின்தங்கிய உற்பத்தி உறவுகளின் எதிர்ப்புரட்சித் தன்மையை அம்பலப்படுத்தி அதன் சித்தாந்த அரசியல் செல்வாக்கிலிருந்து மக்களை மீட்டெடுத்து தேசியப் புரட்சியை முன்னெடுப்பதன் மூலமே இவ்வர்க்கத்தை வீழ்த்தமுடியும். அல்லாத வரையில் – புதிய பொருளாதார உறவுகளுக்கும் அதனடிப்படையில் வளர்ந்து செல்லும் சமுதாய இயக்கத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் இவ்வர்க்கம் தன்னைத் தானே எவ்வளவு அம்பலப்படுத்திக் கொண்டாலும் கூட – ஒரு வர்க்கம் என்ற முறையில் அதன் எதிர்ப்புரட்சிச் செல்வாக்கு நீடிக்கவேசெய்யும்.

ஏனெனில் எவ்வளவுதான் தமிழ்த்தரகுமுதலாளியத்தின் சித்தாந்த அரசியல் செல்வாக்கு, தேசியவிடுதலை வேண்டிநிற்கும் சமுதாய இயக்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற போதும் இறுதியாக பொருளாதார உறவுகளே தீர்மானிக்கும் காரணிகளாய், புரிதலுக்கு இட்டிச் செல்பவையாய் அமைகின்றன. முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையில் இருந்து முதலாளித்துவ சமூக வளர்ச்சிப் போக்கை வேண்டிநிற்கும் பொருளியல் முரண்பாடு மேல்கட்டுமானத்தில் தேசியவிடுதலைப் போராட்டமாக விடாப்பிடியாக வளர்ந்துவந்த போது அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தமிழ்த்தரகுமுதலாளியம் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டது. அதன் பிற்போக்குப் பாத்திரம் அரைகுறையான வடிவில் வெளித்தெரியத் தொடங்குகிறது. இந்தளவில் தமிழ்த்தரகுமுதலாளியத்தின் வீழ்ச்சியும் அமைகின்றது. நமது பணி இந்தக் கிழட்டுக்கட்டையின் ஈமைக்கிரிகையை முடித்து வைப்பதாகும். இது தமிழ்த் தரகு முதலாளியத்தின் எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தை அம்பலப்படுத்துதல், தேசியப்புரட்சியை விடாப்பிடியாக முன்னெடுத்தல் ஆகிய இரு முனைகளில் சாதிக்கப்பட வேண்டும்.

தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,பகுதி 3

No comments: