Saturday 11 March 2017

தோழர்கள் விசு, ரமணிக்கு லண்டனில் நினைவுக் கூட்டம்




11-03-2017 கிழக்கு லண்டன் Eastham Trinity Centre இல் இடம் பெற்ற நினைவு வணக்க பொதுக்கூட்டத்தில்

தோழர் ஏ குமரன் உரையாற்றி விநியோகித்த அறிக்கை

தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக் குரல்களே,
உங்கள் பணி தொடர் வோம்!
உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்!
ண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தேசத்தின் கிராமங்களுக்கு இலங்கை இராணுவம் தலைமறைவான விடுதலை வீரர்களைத் தேடி வருவதும், தமது வாகனங்கள் சென்று திரும்ப முடியாத ஒழுங்கைகளின் வேலிகளை நாசப்படுத்துவதும், அகப்படுவோரை சித்திரவதை செய்து கொன்று பாலங்களின கீழ் வீசி எறிவதும் என தமிழ்த்தேசத்தை ஒடுக்கும் தன் அடக்குமுறைக் கொடுங்கரங்களை வலுப்படுத்தி வந்தது.

பத்திரிகைகளில் வங்கிக் கொள்ளைகள் பற்றியும், துரோகிகளாக தண்டனை பெற்ற இலங்கை காவல் துறை அலுவலர்கள் மற்றும் ஆயுத குழுக்களிடையே நடந்த துப்பாக்கி மோதல்கள் , படுகொலைகள் பற்றியும், இலங்கை அரச நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலை வீரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் வழக்குகள் குறித்தும் செய்திகள் வந்து கொண்டிருக்கும்.

தாயக மீட்புச் சமரின் ஆரம்ப நாட்களிலேயே வெகுசன முன்முயற்சியைப் புறந்தள்ளியும் வெகுசனங்கள் மத்தியிலான அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது , அரசியல் கருத்து முரண்பாடுகளைப் பேசித் தீர்க்காது ஆயுதங்களால் , உயிர்பறித்து பிற வர்க்க சக்திகளை அல்லது மாற்றுக்கருத்துக்களை இல்லாதொழிக்கும் அராஜகமும் ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் தாயக மீட்சிக்காக ஆயுதமேந்திப் போராட முன்வந்தவர்களுக்கு அரசியல் கல்வி சம்பந்தமாக என்ன முன்முயற்சி எடுக்கப்பட்டிருக்கும் என்பது அனைவராலும் உய்த்துணரக்கூடிய ஒன்றே...
இக்காலகட்டத்தில் ஈழமாணவர் பொதுமன்றம் தமிழ்த்தேசம் மீதான சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக வெகுசன ஊர்வலங்களையும், சுவரொட்டிப் பிரச்சார இயக்கத்தையும், பொதுக்கூட்டங்களையும் நடாத்திவந்தது.

தோழர் விசுவானந்த தேவா அவர்கள் பற்றி எங்களுக்கு தெரியவந்த இதே காலப்பகுதியில் அவர் தனது பல்கலைக்கழக கால தோழர்களின் அநுசரணையுடனும், மகாசனாவின் மூத்த மாணவர்களின் ஒத்துழைப்புடனும் "திருவிழா" நாடகத்தை பரவலாக மேடையேற்ற ஆரம்பித்திருந்தார்.

காங்கேயன் சீமெந்து தொழிற்சாலையில் தற்காலிக தினக்கூலிகளாக,மாவை கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற தரகர்களிடம், ஊதியத்திலும் பத்து சதவீதத்தை பறிகொடுத்து , குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாத , மூன்றாம் கட்டிட தொகுதி கட்டுமாணப்பணிகளில் அங்கவீனமுற்றும், உயிர்ப்பலி எடுக்கப்பட்டும் வந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக தோழர் விசுவானந்ததேவா அவர்கள் தனது தொழில்நுட்ப அதிகாரி உத்தியோகத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்..

பன்குளத்தில் அரச காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டபோது "பன்குளத்தில் பதினாறு வீடுகள் தீக்கிரை" எனும் தலைப்பில் வடமாகாணமெங்கும் சுவரொட்டிப் போராட்டத்தை நடாத்தினார்.
"போராடுவதே மனிதனின் விதி எனில் போராட்டத்தில். மரணம் அடைவதும் மகத்துவம் உடையதே!
வாழ்க்கையின் முடிவே மரணம் என்போம்... ஆனால் மரணமே எங்களின் வாழ்வென உள்ளது"
என்ற. கவிஞர் சுபத்திரனின் கவிதைக கனலை பட்டி தொட்டி எங்கும் மக்கள் மயப்படுத்தினார்.

சுவரொட்டி எழுதுபவர்களையும் ஒட்டுபவர்களையும் மாணவர்கள் மத்தியிலிருந்தே கண்டுபிடித்து அவர்களுடனிருந்து ஆற்றுப்படுத்தினார்.

மேலும் அவர்களுக்கு விடுதலை இலக்கியங்களை அறிமுகம் செய்தார்

 நிரஞ்சனாவின் "நினைவுகள் அழிவதில்லை" மாக்ஸிம் கார்க்கியின் "தாய்" மிகயீல் ஷோலகோவின் "கன்னிநிலம் உழப்படுகின்றது" போன்ற மக்கள் நவீனங்களும், "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" போன்ற அடிப்படை மார்க்ஸிய நூல்களையும் பரவலாக படிக்கச் செய்தார். எம் ஏ நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்த "பாலஸ்தீனக் கவிதைகள்" புத்தகத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கினார். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் கவிஞர். சேரனின் "இரண்டாவது சூரிய உதயம்" தொகுதியும் வெளிவந்தது.
மகாசனக்கல்லூரி முன்பிருந்த தனியார் கல்வி நிறுவன இயக்குனரோடு தோழர் விசுவானந்ததேவன் அவர்களுக்கிருந்த பல்கலைக்கழக காலத்தைய நட்பால் அங்கு அரசியல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

1982 ம் ஆண்டு மேதினத்தை கிளிநொச்சி றொட்றிகோ மைதானத்தில், திருவிழா நாடகத்துடன் கொண்டாடிய பொழுது இலங்கை காவல்துறை கொடுத்த இடையூறுகளை, சிங்கள மொழியில் சலிக்காது,வாதாடி வெற்றி பெற்று நிகழ்வு சிறக்க அரணாக நின்றார். யாழில் ஈழமாணவர் பொதுமன்றம் ஒழங்கு செய்திருந்த மே தின நிகழ்விலும் தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியின் தொண்டர்கள் பங்குபற்றியிருந்தனர்.

வீதி நாடமாக "திருவிழா" தமிழ்மக்களின் கால்நூற்றாண்டு கால வரலாற்றை தமிழ்மக்களுக்கே சொன்ன இடங்களிலெல்லாம் கூட்டணிக் குண்டர்களை அச்சுறுத்த எப்போதும் அவர் காவித்திரியும்
 துணித் தோள் பைக்குள் ஒரு கையை விட்டபடி காவலிருப்பது இன்றும் சம்பந்தப்பட்டவர்களின
 மனக்கண்ணை விட்டகலாது.

அவரின் வாமனரூபம் அழுக்குப் படிந்த "டெனிம்" காற்சட்டையுடனும் , ஒரு சாதாரண மேலங்கியுடனும் அன்று மூவுலகளந்தது என்றால் அது மிகையாகாது.

"கலை மக்களுக்காக" என்ற முழக்கத்தை என்றும் கைவிடாத தோழர் அவ்வடிப்படையிலமைந்த திரைப்படங்களை, கவிதைகளை கட்டுரைகளை எப்பொழதும் தன் தோழர்களுக்கு சிபார்சு செய்து கொண்டே இருப்பார்.

அரசியல் நடவடிக்கைகளுக்காக காலில் இவர்க்கு சக்கரங்கள் வாய்த்ததோ என மற்றவர் ஐயுறும் வண்ணம் நடந்து கொண்டாலும் கடித்தொடர்புகளையும் கடிதெனப் பேணுவார்.
 
தோழர் விஸ்வாவின் சிந்தனையில்  இருந்து

(சித்திரை - வைகாசி 1983  புதுசு  சஞ்சிகையில் வெளியான "மலையக மக்களின் பிரச்சனை" எனும் தோழரின் கட்டுரையிலிருந்து )

"மலையக மக்களைத் தனியான தேசிய இனம் என்று சொல்பவர்கள் பல நோக்குடையவர்கள் உள்ளனர்.
ஒரு சாரார் தேசிய இனம் என்பதில் தெளிவின்றிச் சிறுபான்மை இனங்கள் யாவும் தேசிய இனம் என்று .இன்னொரு சாரார் மலையக மக்களை தேசிய இனம் என்று சொல்வது அவர்களது அந்தஸ்தைக் கூட்டும் என்ற தவறான சிந்தனையிலும் மலையக மக்களிடையே தமது தனித்துவமான தலைமையை உருவாக்கவும் வேண்டி இந்தக் கோஷத்தை முன் வைக்கின்றனர்.

மலையக மக்கள் தனித் தேசிய இனம் என்று அங்கீகரிக்கக் கோரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் பரந்த அளவில் கிளர்ந்து வருகையில் மலையக மக்களை அத்துடன் இணையவிடாது குறுக்கே பிரிக்கின்ற தந்திரோபாயமாகத்தான் இ்தொ.காங்கிரஸ் இதனைக் கையாள்கின்றது."

மேலும் இதே கட்டுரையிலிருந்து...

ஈழவர் என்ற கருத்தாக்கம் தேசிய இனங்களின் வரலாற்று ரீதியான உருவாக்கத்தை மறுப்பதோடு மட்டுமல்லாமல் நடைமுறையைக் கவனத்திலெடுக்காத வெறும் கற்பனையாகும். இங்கு முஸ்லிம்கள் மலையக மக்கள்  போன்றவர்களுடைய தனித்துவங்கள் சிதைக்கப்படுகின்றன.

தேசிய இனப்பிரச்சனை என்பது சாராம்சத்தில் வர்க்கப் பிரச்சனையே. குறிப்பாக இது விவசாயப்புரட்சியுடன் சம்பந்தப்பட்டது. முதலாளித்துவம் வளர்ந்து சந்தைப்பொருளாதாரம் உருவானவுடனேயே ஒரு மொழி பேசும் , ஒரே பிரதேசத்தில் வாழும் மக்களிடையே ஒரு பொருளாதாரப்பிணைப்பு உருவாகும். இதன் நிமித்தமே தேசிய இனங்கள் (Nation) உருவானது.
இதே நாலில் தொகுக்கப்பட்டுள்ள சமுத்திரனின் இலங்கை தேசிய தின இனப்பிரச்சனை எனும் நூல் அறிமுகம் என்ற கட்டுரையிலிருந்து.

"குறைவிருத்திப் பொருளாதாரத்தின் விளைவாக சிறு உடமையாளர்களும், வர்த்தகர்களும் நாட்டில் பிரதான சக்திகளாயினர்.

தொழில் வளர்ச்சியின்மை இன்னமும் விரிவாகச் சொல்வதானால் ஏகாதிபத்தியவாதிகள் தமது காலனிகளில் சுயமான முதலாளித்துவத்திற்கு இடமளிக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் இந்நடவடிக்கைகளை விபரித்திருந்தால் இந்நூல் முழுமை பெற்றிருக்கும்."

மேலே குறிப்பிட்ட தோழர் விசுவானந்ததேவனின் அரசியல் நடவடிக்கைகளையும், அவரது கருத்துக்களையும் தொகுத்துப் பார்த்து அவர் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தில் செலுத்திய செல்வாக்கை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளலாம்

"தட்டி எழுப்பி எம் சக்தி தலைநிமிர வைப்பதற்கு கட்டி எழுப்பிடுவோம் கடல் போன்ற மானுடத்தை"
என்ற தோழர் கையெடுத்த முழக்கத்தின் பின்னால் அணிதிரண்டு ஒடுக்கப்பட்ட தமிழ்த்தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்காய் உயிர் கொடுத்தவர்களே இன்று நினைவு கூரப்படும் தமிழ்த்தேசத்தின் சுயநிர்ணய உரிமைக் குரல்களாவர்.

சந்ததியார் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைமை அமைப்பாளர்களில் ஒருவர் மட்டுமல்ல. தமிழ் இளைஞர் பேரவையின் முன்னணிச் செயற்பாட்டாளர்களிலும் ஒருவர்.
இந்தியத்தலையீடு துலாம்பரமான காலத்தில் "வங்கம் தந்த பாடம்" நூலை வெளியிட்டவரும் கூட என்பது மிக மிக முக்கியமானது.

---------------------------------------------------------------- *

தோழர் ரமணி மற்றும் தோழர்கள்

தோழர் ரமணி என மக்கள் மத்தியில் அறிமுகமான யாழ் மருத்துவ பீட மாணவர் செல்வகுமாரனும் "திருவிழா" மேடையேற்றப்பட்ட 1981-1982 காலப்பபகுதியில் தோழர் விசுவானந்ததேவன் அவர்களால் ஆகர்ஷிக்கப்பட்டார்.

தோழர் அன்ரன் என அழைக்கப்பட்ட சாரங்கபாணி விவேகானந்தன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியால் எழதப்பட்ட "தாங்கொணாத் துன்பம்" நூலில் இருந்து ஒரேயொரு பந்தி
புலிகளின் ஏகபோகம் நிலைநாட்டப்பட்ட அராஜக வெறியாட்டத்தை , அதன் வெகுசன விரோத போக்கை  தங்களுக்குப் புரியவைக்கும்.

அது வருமாறு:

“மூன்று காரணங்களுக்காக நீங்கள் என் கணவரை சிறையில் வைத்திருக்கலாம்
ஒன்று அவர் யாருக்காவது உங்களது தகவல்களை வழங்கியிருந்தால்,
இரண்டு அவர் யாரையாவது கொலை செய்திருந்தால்
மூன்று உங்களுடன் இருந்த எவரையாவது கொலை செய்திருந்தால்.
அப்படியானால் அவரை பொது மக்களின் முன்னிலையில் வைத்து சுட்டுக் கொன்று அதை பிரசித்தப் படுத்துங்கள்.
ஆனால், அவர் இதில் ஒன்றையாவது செய்தார் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
எனக்குத் தெரியும் இதில் ஒன்றையுமே அவர் செய்யவில்லை அதனால் அவரை விடுதலை செய்யுங்கள்”

நான் தயா என்வரை சந்தித்த பொழுது அவர் கூறினார், “நாங்கள் அவரை விடுதலை செய்ய முடியாது, ஏனென்றால் அவர் வீட்டில் ஆயுதம் வைத்திருந்தார்” நான் அவரை திருப்பிக் கேட்டேன் “ஏன் அவர் ஆயுதம் எடுத்தார்? தமிழ் மக்களுக்காக போராட, நீங்களும் அதைத்தானே செய்கின்றீர்கள்! எனது கணவர் பிழையென்றால், நீங்கள் செய்வதும் பிழை தான்!”.

“இல்லை, இல்லை எங்களது இயக்கத்தில் உள்ளவர்களுக்கு ஆயுதம் வைத்திருக்க அனுமதி உள்ளது,” என ஒரு சிறுபிள்ளையிடம் கதைப்பது போல் அவர் கதைத்துக் கொண்டிருந்தார்.

சர்வதேசப் படிப்பினை

: "மகத்தான தூய்மையாக்கம்" சோவியத் யூனியனில் கடைப்பிடிக்கப்பட்டபோது கட்சி கையாண்ட அணுகுமுறை கீழ்வருமாறு....

போல்ஷ்விக் கட்சியிலிருந்து ஊடுருவி பரவியிருந்த எதிரிகளைக் களையெடுக்கும் வேலை,1937 இல் நடந்த மத்தியக் குழுவின் முழுக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தொடங்கியது. 1937 ஆடி இரண்டாம் தேதி அன்று ஸ்டாலினும், மாலட்டோவும் கையெழுத்திட்ட சுற்றறிக்கை மூலம் இந்த முடிவு பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.

 களையெடுக்கும் நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.அதன் விவரம் வருமாறு.

1) யாரை இலக்காகக் கொள்வது?
2) பிரச்சனையை எப்படி ஆராய்வது?
3) பொறுப்பான குழுவில் இடம்பெறுவோர் யார்?
போன்ற விவரங்கள் அதில் இருந்தன.
தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தபோதும், ஒரு சில மாதங்களிலேயே , களையெடுப்புக்குப் பொறுப்பானவர்களின் அதிகாரப்போக்கும் , தன்னிச்சையான செயல்பாடும் அத்துமீறலுக்கான
 அறிகுறிகளாக இருந்தன. களையெடுப்பு நடவடிக்கை அவ்வப்போது திறமையற்ற அராஜக குணத்தைக் கொண்டிருந்தது.
கட்சியின் உண்மையான தொண்டர்களைப் பாதுகாக்க பல சந்தர்பங்களில் கட்சித்தலைமை தலையிட
 வேண்டியிருந்தது.

எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், தந்திரசாலியாக இருந்தாலும் , எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எதிரியை இனங்கண்டு அவர்களின் முகமூடியை அகற்றும் திறமைதான் போல்ஷ்விக் கண்காணிப்பில் முக்கியமானது.

ஆயிரத்தில் ஒருவர்கூட இத்தகைய பாரபட்சமான நீக்கத்திற்கு ஆட்படக்கூடாது.

வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வோம்

-------------------------------------------------------*

தமிழீழ தேசிய விடுதலை முன்னணியில் ஏற்பட்ட பிளவு பற்றி அடுத்து ஆராய்வோம்.

1986 காலகட்டத்தில் இந்திய தலையீட்டால் சுயாதீனமிழந்த இதர இடதுசாரிக்குழுக்களிலும் உள்முரண்பாடுகள் கூர்மையடைந்திருந்தன.

1) இந்திய கைக்கூலிகளாகச் சீரழிவதா?
2) விடுதலைப்புலிகளின் பாணியிலான இராணுவ ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தி
 தேசத்தின் அரணாக, தற்காப்பு யுத்தத்தில் இறங்க வேண்டாமா?
3) அமைப்பு வடிவமற்ற குழு நிலையிலிருந்து ஈழதேச விடுதலைப்புரட்சிக்கான கம்யூனிஸ்டுக்கட்சி ஒன்றினைத் தோற்றுவிப்பது எப்படி?
4) வெறுமனே மேற்கோள்களுக்காக மேய்வதை விடுத்து , ஒடுக்கப்பட்ட
 தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைப்புரட்சிக்கான திட்ட முன்வரையறையை வைப்பதற்காக
 மார்க்ஸிய-லெனினியத்தை கற்றுக்கொள்வது எப்படி?
என்பது போன்ற கேள்விகளும், தேடல்களும் புரட்சிகர இளைஞர்களிடம் காணப்பட்டது.
மறுபுறம் அலையெழுச்சி தணிந்து அலைவீழ்ச்சி அல்லது கலைந்து போதல் நடந்து கொண்டிருந்தது.

தோழர் விசுவானந்த தேவா அவர்கள் எக்காலத்திலும் இந்திய அரசின் கைப்பாவைகளாக மாறுவதை நிராகரித்தவர்.இந்திய அரசு தேசிய இனங்களின் ஒடுக்குமுறை மீது கட்டப்பட்ட அரை நிலப்பிரபுத்துவ , அரைக்காலனிய விஸ்தரிப்புவாத அரசு என்பதனை பிரச்சாரம் செய்தவர். அவர் இன ஒடுக்குமுறை உச்சக்கட்டட்தை அடைந்திருக்கும் இந் நேரத்தில் எதிரியிடமிருந்து எம் தேசத்தைப் பாதுகாக்க  தற்பாதுகாப்பு யுத்தத்தை முன்னெடுப்பது அவசியமென நாம் கருதுகின்றோம் என பிரேரித்தார்.

தமிழீழமெங்கணும் ஏன் புகலிடங்களில் கூட புலிகளின் ஏகபோகம் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கிய அந்நாட்களில் இரும்பு உபகரணங்களுடன் இன்னொரு அதுவும் இடது சாரிக்குழு ஈழதேசத்தில் தலைதூக்குவது சாத்தியமே என அவர் உறுதியாக நம்பியிருந்தார்.

உதிரிகளாக மாறிய முன்னாள் ஆயுதக்குழுப் போராளிகள் அவருடன் இணைந்து பலம் சேர்த்தனர்.

இந்நேரத்தில் தோழரின் தொண்டர்களிலொருவரின் கவிதைத்தொகுதி வெளியாகி அத்தொகுதி தோழர் அவர்களுக்கே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

எதிரணியையே கவிஞர் பிரதிநிதித்துவம் செய்திருந்தபோதும் சமர்ப்பணம் பின் வருமாறு அமைந்திருந்தது.

''70களின் துவக்கத்திலேயே இழக்கப்பட்டு விட்ட பாட்டாளிவர்க்க கட்சி உணர்வையும் மாக்ஸிச- லெனினிசத்தையும் தனி ஒரு மனிதனாக நின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் புதிய தலை முறைக்கு கொண்டுவந்து தந்த அந்த ஒரு பங்களிப்புக்காக தமிழீழ வரலாற்றிலும் மார்க்சிச வாதிகளின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த தோழர் விஸ்வாவுக்கு ''

தோழர் விசுவானந்ததேவா அவர்களை தமிழ்த்தேசம் இழந்தது.

15-10-1986 ஈழக்கடலில் குருநகரில் இருந்து நெடுந்தீவுக்கு சென்று கொண்டிருந்த மீன்பிடிப் படகில் காணாமல் போனார்.

------------------------------------------------------------------*

தோழர் ரமணி எனப்பட்ட செல்வகுமாரன் தலைமை தாங்கிய அணி தமிழ்நாட்டுப் புரட்சிகர சக்திகளிடம் தங்களுக்கு வழிகாட்டுமாறு வேண்டி நின்றனர்.

"உங்கள் போராட்டம் தன்னியல்பானது. பயங்கரவாதம், அரசியல் சமரசம் என இரு முடிவுகளையே அது எட்டும்"

கட்சி கட்ட வேண்டுமென்பதற்காக நிறையப்படிக்க வேண்டும் என்று "கம்யூனிஸ்டுக்கட்சி அறிக்கையிலிருந்து பல புரட்சிகர இலக்கியங்களை கற்க வைத்தனர் கற்பித்தனர். இதனை ஒரு சர்வதேசிய்ப் புரட்சிப் பணியாக நிறைவேற்றினர். இதன் விளைவாக அவர்களின் வழிகாட்டலில் இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்கள அரசை ஒடுக்கப்படும் தமிழ்த்தேசம் எதிர்த்து நிற்கும் புதிய அரசியல் திட்டம் தயாரிக்கப்பட்டது.

தமிழீழ தேசிய விடுதலைக்கான தொலை நோக்குத் திட்டம்

(முதல் வரைபு)
                                                                     (1)

1. இலங்கைத் தீவானது 300 ஆண்டு காலம் அந்நியரின் நேரடி ஆதிக்கப்பிடியில் அகப்பட்டுக் கிடந்தது.

2.போர்த்துக்கேயர்களும், டச்சுக்காரர்களும்,வணிக நலன்களுக்காக நமது நாட்டை ஆக்கிரமித்தனர்.

3. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் முதலாளித்துவத்தின் உதயகாலத்தில், தமது சொந்த நாட்டில் முதலாளித்துவத்தைக் கட்டியெழுப்பும் களவுக் களஞ்சியங்களில் ஒன்றாகவும், அரசியல் ஆதிக்கத்துக்காகவும், இராணுவத் தளத்துக்காகவும் இலங்கை நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டு சுரண்டி நமது வளங்களை சூறையாடினர்.. பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையை கைப்பற்றிய காலம் மன்னராட்சி மரணத்தறுவாயிலும், இலங்கையில் தேசியம் - முதலாளித்துவ வளர்ச்சி - இளம் குழந்தையாகவும் இருந்த காலமாகும்.அதன் உற்பத்திமுறை முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையாக இருந்தது.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் நமது நாட்டின் சுதந்திர தேசிய உருவாக்கத்தை தடுத்து , தன் சுரண்டலை நடத்த, முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையை பேணிப்பாதுகாத்ததுடன், அவ் உற்பத்திமுறை தோற்றுவித்திருந்த ஆளும் வர்க்கங்களுடன் கூட்டுச்சேர்ந்து, அவர்களைத் தமது தரகர்கள் ஆக்கிக் கொண்டதன் மூலம் தரகு முதலாளிகள் என்கிற ஒரு புதிய சமூக வர்க்கத்தை உருவாக்கி தமது ஆதிக்கத்துக்கான அடிப்படை ஆக்கிக் கொண்டது.

கத்தோலிக்க மத நிறுவனங்களைக் கொண்டு ஆங்கிலக் கல்வி பயிற்றுவித்து ஒரு (அரசு சேவக) அதிகார வர்க்கத்தையும் உருவாக்கிக் கொண்டது,

4. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்; ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியின் விளைவான முதல் உலகப் போர் வெடித்தது. அதைத் தொடர்ந்து 1917 மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சி, பூமிப்பந்தில் பிரகாசித்தது. அது ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியங்களுக்குள்’ விடுதலை நெருப்பை மூட்டியது. நேரடிக் காலனி ஆதிக்கத்தை கதிகலங்க வைத்தது. காலனி ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலை நெருப்பு அகிலமெங்கும் சுவாலை விட்டெரிந்தது.

5) இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத் தேசிய விடுதலை நெருப்பை ஏந்திச்செல்ல எதிர்ப்புரட்சிகர சக்திகள் கொம்யூனிச அகில விவாத்தில் மறுத்ததன் விளைவைப் பயன்படுத்தியும் ,தாம் ஏற்கெனவே செப்பனிட்டு வைத்திருந்த ஏகாதிபத்திய தரகு முதலாளிகளைக் கொண்டும் நேரடி முழுக் காலனியாதிக்கத்தில் இருந்து மறைமுக அரைக் காலனியாதிக்கத்துக்கு -பெரும்பாலான காலனி நாடுகள் மாறியது போல- 1947 இல் இலங்கையும் மாறியது. இதுவே இன்றுவரை சிங்களவர்களாலும் தமிழர்களாலும் “சுதந்திரம்” எனப் போற்றப் பட்டுவருகிறது.

6) ஏகாதிபத்தியமானது நம் நாட்டை சுரண்டுபவன் என்ற முறையில் நாட்டின் பொருளாதார வாழ்வின் மீது குருதி குடிக்கும் ஒட்டுண்ணியாகவே உள்ளது.இந்த ஒட்டுண்ணி நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டத்தோடு ஒப்பிடுகையில் மிகப் பயங்கரமானதும் சக்திவாய்ந்ததுமான சுரண்டலாளனாகும்.இதன் சுரண்டல் வடிவம் நமது நாட்டில் தம் சொந்த நாட்டின் சுரண்டல் வடிவத்தை ஒத்ததாக அல்லாமல், உபரி மூலதனத்தை அபகரித்துச் செல்வதன் மூலமாக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை தடை செய்வதாக உள்ளது.

7) இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் போசிப்பதற்கு வழியற்றதாக ஏகாதிபத்தியவாதிகளால் மாற்றப்பட்டுள்ளது.இது இன்றுவரை தொடர்கிறது.

8) இதனால் எழும் உள் நாட்டுக் கிளர்ச்சிகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக,- சிங்கள பெரும்பான்மை மக்களை தம் பக்கம் இழுப்பதற்காக, தமிழர்களை எதிரிகளாகக் காட்டி, ‘சிங்கள பவுத்த பேரினவாதத்தை’ தனது சித்தாந்த ஆயுதமாக ஏந்தி இன ஒடுக்குமுறை அரசாக வடிவெடுத்துள்ளது இலங்கை அரசு.

9) இதன் தர்க்கபூர்வமான, வரலாற்று ரீதியான விளைவாக இரு தேசிய இனங்கள் வாழும் இலங்கை நாட்டில் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான தொடர்ந்த அடக்குமுறையே இலங்கை அரசின் இருப்புக்கு ஆதாரமாகிவிட்டது.சுருங்கச் சொன்னால் இலங்கை அரசு தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையின் மீது கட்டுண்டு கிடக்கிறது.

10) இதன் காரணமாக இலங்கையின் இன்றைய அரசுமுறைக்குள் இன சமத்துவம் என்பது அடையப்பட முடியாததாக ஆகிவிட்டது.

                                                                          (2)

 1) துரதிஸ்ரவசமாக இலங்கை ஆளும் கும்பல்களின் சித்தாந்த செல்வாக்குக்கும் ரொட்ஸ்கிய திரிபுவாதத்துக்கும் பெரும்பான்மை சிங்கள உழைக்கும் மக்கள் உட்பட்டுப் போய், தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு கடந்த 60 ஆண்டுகளாக துணை நின்றதால், இன்றும் துணை நிற்பதால், சிங்கள தமிழ் உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த புரட்சிகர நடவடிக்கையின் மூலம் இலங்கையில் ஒரு இன சமத்துவ மக்கள் ஜனநாயக குடியரசை நிறுவுவதற்கான வாய்ப்பு இல்லாது போய்விட்டது.

2) இதன் விளைவாக தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமையானது பிரிவினைக் கோரிக்கையாக மாறிவிட்டது.இலங்கை அரசின் அடிமை நுகத்தடியில் இருந்து சிங்கள இனம் விடுதலை பெறுவதற்கும் தமிழீழம் பிரிவது முந்நிபந்தனையாகிறது.

                                                                         (3)

 1) இன்றைய இலங்கை அரசு சிங்கள தமிழ் தேசிய இனங்களின் சம உரிமையை அங்கீகரித்த ஒன்றியமல்ல.இந்த கட்டாய இணைப்பை உருவாக்கியது சிங்களவர்களும் அல்ல.இது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தமிழ்மக்களின் சம்மதம் இன்றி ஏற்படுத்திய பலாத்கார பிணைப்பாகும்- கட்டாய இணைப்பாகும்.

2) 1947 இல் நேரடியான ஏகாபத்திய அதிகாரம் உள்நாட்டு தரகர்களுக்கு கைமாற்றப்பட்டு இலங்கை போலிச்சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கையில் தமிழ்த் தேசிய இனம், மற்றும் இன மத சிறுபான்மை மக்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்து வந்துள்ளது.

3) இலங்கையின் அரைக்காலனித்துவ அரசு தமிழ்த் தேசம் மீதான ஒடுக்குமுறையை தனது இருப்புக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது.இதனால் அதன் வீழ்ச்சிக்கும் சிங்கள மக்களின் விடுதலைக்கும் தமிழ் மக்களின் பிரிவினைக் கோரிக்கை வெற்றி பெறுவது முன் நிபந்தனையாகவுள்ளது.

4) சிங்கள பெரும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள், சிங்கள பவுத்த பேரினவாதத்துக்கு பலியாகி இருப்பதால் இரு இனமும் ஒன்று பட்டு இலங்கையில் ஜனநாயக குடியரசை அமைக்கப் போராடுவதற்கான வாய்ப்பு தடைப்பட்டுள்ளது.

5) இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயகமாகக் கொண்ட தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாகும். அவர்களது வட கிழக்கு மாகாணம் ஒரு தனித் தேசமாகும்.

6) இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் இனச் சிறுபான்மையினர் ஆவர்.

7) இஸ்லாமியத் தமிழர்கள், அல்லது முஸ்லிம் தமிழர்கள் மதச் சிறுபான்மையினராவர்.

                                                                          (4)

மேற்கண்ட குறிப்பான வரலாற்று நிலைமைகளின் தனித்தன்மைகளில் இருந்தே இலங்கையின் மக்கள் ஜனநாயகப் புரட்சியானது தமிழ் –சிங்கள மக்கள் ஒன்றிணைந்த நடத்தும் ஒரு புரட்சியாக அமையுமா அல்லது ஈழப்பிரிவினையின் மூலம் நிறைவேறுமா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

மார்க்சிய லெனினிய மாசே துங் சிந்தனையின் வழிகாட்டுதலில், ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் 60 ஆண்டுகால ஒடுக்குமுறை வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத ஆய்வு முறையின் அடிப்படையில் ஆய்வு செய்து ஈழத்தமிழர் பிரச்சனைக்கு நாம் காணும் தீர்வு வருமாறு

1) தமிழ்மக்களின் பிரிந்து செல்லும் உரிமையானது பிரிவினைக்குத் தள்ளப்பட்டுவிட்டதால் தமிழ் மக்கள் தமிழீழத் தனி நாடு அமைப்பதும்,

2) இஸ்லாமியத் தமிழர்கள் செறிந்து வாழும் கிழக்குமாகாணப் பிரதேசங்கள் அமையப்போகும் தமீழிழ அரசுக்குள் ஒரு சுயாட்சி மாநிலமாக அமைவதும்,

3) அரைக்காலனிய அடிமைத்தளையில் இருந்து மலையக மக்களை மீட்டெடுத்து குடியுரிமை வாக்குரிமை மற்றும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழங்கி பன்னூறு ஆண்டுகள் இரத்தமும் வியர்வையும் சிந்தி அந்த மக்கள் உருவாக்கிய மலையக மண்ணை அவர்கள் ஆளும் ஒரு ஆட்சிப் பிரதேசமாக்குவதும்.

4) அது தமிழீழத்துடன் இணைவதா அல்லது சிங்கள தேசத்துடன் இணைவதா என்பதை அவர்களின் வாக்களிப்பால் தீர்மானிப்பதும்,

5) இவையே முரணற்ற ஜனநாயகத் தீர்வுகளாகும்.

                                                                           (5)

 1) இத்தகைய ஒரு அரசியல் மாறுதலை, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே சாதிக்க முடியும்.

2) இதன் சித்தாந்தம் மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை ஆகும்.

3) இதன் தலைமை கொம்யூனிஸ்ற் கட்சியாகும்.

4) இந்நிலையில் இன்றிருக்கும் சித்தாந்த அரசியல் வல்லமையோடு நடைமுறைப் போராட்டத்தில் ஈடுபடும் அதேவேளை மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனையின் அடிப்படையில் நமது நாட்டின் சமூக பொருளாதார அமைப்பிலிருந்து எழும் தனித்துவ அம்சங்களை கண்டறிந்து அதன் அடிப்படையிலான திட்டத்தின் மீது ஒரு கொம்யூனிஸ்ற் கட்சியைக் கட்டியமைப்பதற்கு நாம் தொடர்ந்து போராட வேண்டும், பாடுபடவேண்டும்.இதற்காக புரட்சிகர சக்திகளின் சர்வதேசிய உறவை கட்டியமைத்து காப்பாற்றி வரவேண்டும்.கோட்பாட்டு நிலையில் விட்டுக்கொடாத சகோதரத்துவ விவாதங்களை தொடர வேண்டும்.கிணற்றுத் தவளைகளாய் இருக்கக் கூடாது.விவாதத்துக்கு அஞ்சக் கூடாது.

5) இன்றுள்ள அரசியல் நிலைமையில் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிவினையே தமிழ் மக்களை இன ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்கும், மற்றும் முழு இலங்கையையும் ஜனநாயகப்படுத்தும் அச்சாணியாகும்,

                                                                           (6)

 1) இன்றுள்ள அரசியல் நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு சிங்கள உழைக்கும் மக்களும் ஜனநாயக உணர்வு கொண்ட சக்திகளும் தம் பெரும் தேசிய இன ஒடுக்குமுறை அரசு தமிழீழ தேசத்தின் மீது கட்டவிழ்க்கும் அடக்குமுறைகளை எதிர்த்து தமிழீழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து தம் சொந்த அரசுக்கெதிராகப் புரட்சி செய்யுமானால் நமது அரசியல் நிலைப்பாட்டிலும், போராடும் பாதையிலும் மாற்றம் ஏற்படும்.இல்லையேல் இல்லை.

2) அமையும் தமிழீழத் தனியரசு ஒரு ஜனநாயக் குடியரசாகும்.அது ஏகாதிபத்தியவாதிகளையும்,இந்திய விஸ்தரிப்புவாதிகளையும் சுட்டெரிக்கும் நெருப்பாகும்.

3) அரசியல் ரீதியில் ஜனநாயகத்தை, சுதந்திரத்தை நிறுவுவது என்ற போர்வையில் அரைக்காலனிய அடிமை/பொம்மை அரசுகளை ஏகாதிபத்தியவாதிகள் தமது ஆதிக்க மண்டலங்களில் நிறுவி வருகின்றனர்.தமிழர் ஈழம் அத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைய நாம் ஒருபோதும் அநுமதியோம்.

4) இராணுவ நோக்கிலிருந்து வலிமை கொண்ட ஏகாதிபத்திய வல்லரசுகளின் சுற்றிவளைப்பிலிருந்து,மக்கள் ஜனநாயக, மற்றும் சோசலிஸக் குடியரசுகளை காக்கும் அரண் நம்மிடையேயான ஒன்றியமேயாகும்.

5) இன்று நாம் ஒரு தனிநாட்டை அமைத்தாலும் வருங் காலத்தில் சிங்கள தேசத்திலும், இந்தியத் துணைக்கண்டத்திலும், இந்து சமுத்திர பிராந்திய எல்லையோர நாடுகளிலும் ஜனநாயகப் புரட்சியின் ஆதரவாளர்களாக இருந்து இந்து சமுத்திர தேசங்களின் ஒன்றியத்தில் ( Union of Indian Ocean Nations – UNION) நாம் ஒன்றிணைவோம்.

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்படும் தேசங்களே ஒன்று சேருங்கள்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

----------------------------------------------------------

ந்திய அமைதிப்படை எம் தேசத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் தோழர் ரமணி மற்றும் தோழர்கள்,மலையகத் தோழர்களின் பெருந்துணையுடன் தலைமறைவு அரசியல் பிரச்சார இயக்கத்தை "இலக்கு" என்ற (The Cyclostyle duplicating process is a form of stencil copying.) சஞ்சிகையினூடாக முன்னெடுத்தனர்.

அப் பத்திரிகை சுமந்து வந்த கட்டுரைகளில்,

ஈழத்தில் வர்க்கப் போராட்டம்:
தேசிய இன விடுதலையில் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்

எனும் வர்க்க ஆய்வு முக்கியமானது

"நமது நாட்டில் முதலாளித்துவ தொழில்துறை வளர்ச்சிக்கான மூலதனத்தையும், மூலவளத்தையும் ஏகாதிபத்தியம் அள்ளிச் சென்றது. மறுபுறம் ஏகாதிபத்திய உற்பத்திப் பொருட்களின் சந்தையாகவும் நமது நாடு மாற்றப்பட்டது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்’ ஆரம்பமாகியது. இதற்கு அவசியமான சலுகைகளை அண்டி வணிக நகரங்கள் தோற்றம் பெற்றன. துறைமுகங்களோடு இணையப்பெற்ற இரயில் பாதைகள், போக்குவரத்து சேவைகள் விரிவாகின. தொலைத்தொடர்புச் சாதன வசதிகள் வந்தன. இவை ஒருங்கே அமையப் பெற்ற வணிக நகரங்களை மையப்படுத்தி (கொழும்பு), ஏகாதிபத்திய பண்ட ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்ட வணிகத் தரகுமுதலாளிய வர்க்கம் தோன்றியது. ஏகாதிபத்திய சுரண்டல் ஏற்பாடுகளின் கருப்பையில் இருந்து பிறப்பெடுத்த இந்த சமூக வர்க்கம் ஏகாதிபத்தியச் சுரண்டலின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிடுகிறது. ஏகாதிபத்திய சுரண்டல் ஒழிக்கப்படுமானால் இவ்வர்க்கமும் ஒழிந்து தீர வேண்டும் என்பதால் இயல்பிலேயே இது ஏகாதிபத்தியச் சுரண்டலின் காவல் நாயாக விளக்குகிறது. ஏகாதிபத்திய அதிகாரத்தின் இருப்பைக் கோரி நிற்கிற உள்நாட்டின் விதேசியக் குழுவாக விளங்குகிறது."
"கொழும்பை மையப்படுத்திய இவ்விதேசிய, தமிழ் வணிகத் தரகு முதலாளிய வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்த கட்சிகளாகவே தமிழர் மகாசனசபை(1921), அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்(1944), அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி(1949) என்பன உருவாகின. இவை வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களின் பிரதேச, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத்தேவைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தேவைகளைப் பிரதிபலித்து நின்றவை ஆகும்."

13வது திருத்தச்சட்டமும் மாகாணசபைகளும் April 1989 http://senthanal.blogspot.co.uk/2012/06/13.html?m=1
என்ற கட்டுரையும் முக்கியமானவை.

இந்திய அமைதிப்படை எம் மண்ணை நீங்கிக் கொண்டிருந்த வேளையில் முற்று முழுதாக ஏகபோகத்தை நிலைநாட்டிய புலிகளால் நமது தோழர் ரமணி கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார் .
 அதே காலப்பகுதியிலேயே இன்று இங்கு நினைவுகூரப்படும் தோழர்கள் அறிவு, அண்ணா என்றழைக்கப்பட்ட ரஜீஸ் மற்றும் அன்ரன் எனப்படும் சாரங்கபாணி விவேகானந்தன் மற்றும் தீப்பொறி குழுவினர் என்றழைக்கப்பட்ட கோவிந்தன் அல்லது நோபேட் ஆகியோரும் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இவ் அரசியல் போக்கின் அடுத்த முகிழ்வாக இலண்டனிலிருந்து 1990-1993,காலப்பகுதியில் "பனிமலர்" சஞ்சிகை வெளியானது.
அதில் மலர்ந்த

1) "அரசியல் தீர்வின். ஆதரவாளர்கள் தோல்வியைத் தழுவுவது ஏன்?
2) "பத்தாண்டு கால ஈழப்போர்" பாடங்களும் படிப்பினைகளும்...

3) இஸ்லாமியத் தமிழர்களின் படுகொலைகள் தமிழீழ விடுதலைக்கு எதிரான ஜனநாயக மீறல்
4) ஐக்கிய நாடுகள் சபைக்கு
விடுதலைப்புலிகள் மனு...ஆபத்தான பாதை...

போன்ற கட்டுரைகள் படிப்பிற்குரியவையாகும்


ஐக்கிய நாடுகள் சபைக்கு விடுதலைப்புலிகள் மனு
ஆபத்தான பாதை

"தமிழ்த்தலைவர்களில் ஒருவரான சதாசிவம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்களான ஒன்பது பேரும் இந்து மகா சமுத்திரத்தில் மரணமடைவதற்கு இந்திய அரசாங்கம் காரணமாக இருந்தது" இக்குற்றத்தை விசாரிக்க "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்துக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபை, விசாரணை மன்றமாகச் செயற்படக்கூடிய விசேட குழு ஒன்றினை அமைக்குமாறு " தமிழீழ மக்களின் சார்பில்`` விடுதலைப்புலிகள் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையைக் கோரியுள்ளது.

வளைகுடா யுத்தம், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி ஆகிய இரு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் சர்வதேசிய அரசியற் சூழ்நிலை மாறிவிட்டது. இதற்கு முன் உலகைப்பங்கு போட்டுக்கொள்ள போட்டியிடும் இரு ஏகாதிபத்திய வல்லரசுகளாக அமெரிக்காவும்ரஷ்யாவும் இருந்தன. இவற்றின் தலைமையில் அரசியல் பொருளாதார இராணுவக் கூட்டணிகள் இருந்தன. இவ்வாறு உலகம் இரு ஏகாதிபத்திய முகாம்களாகப் பிளவுண்டிருந்தது.

இம்முகாம்களுக்கிடையில் எழும் பிணக்குகளின் மையமாக ஐ நா சபை விளங்கியது. உறுப்புநாடுகளின் பொருளாதார வலிமை அதற்கமையக் கிடைக்கும் வாக்குப் பலம் ஐ. நா சபையின் தீர்மானங்களைத் தீர்மானிப்பதாயிருந்தது.

இன்று நிலைமை மாறிவிட்டது. உலக மேலாதிக்கத்திற்காக போட்டியிட்டுக் கொண்டிருந்த இரு மேல்நிலை வல்லரசுகளின் தலைமையிலான இரு ஏகாதிபத்திய கூட்டணிகளில் சோவியத் சமூக ஏகாதிபத்திய அணி வீழ்ச்சியடைந்து விட்டது. இன்று சர்வதேச அரசியல் அரங்கில் பிரதான சக்திகளின் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஜெர்மன் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய அரசுகள் ஏற்க மறுக்கின்றன. ஏகாதிபத்திய கூட்டணிகள் புதிதாக உருவாகும் சூழ்நிலைமையையும் உலகம் எதிர் கொண்டிருக்கின்றது. ஆகையால் இன்று உலகம் மாறும் நிலையிலுள்ள ஒரு கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது.

இக்காலப்பகுதியின் குணாம்சங்களிலொன்று அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள்
ஐ. நா சபையை ஏகபோக முதலாளித்துவத்தின் அரசியல் அடக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்துவதாகும்.

ஈராக்கிலும் யூகோஸ்லாவியாவிலும், சோமாலியாவிலும் இதனையே காண்கின்றோம் . இன்று அமெரிக்காவுக்கும் ஐ்நா சபைக்கும் இடையேயான உறவு "ஐ. நா சபை வரும் முன்னால் - அமெரிக்கப்படை வரும் பின்னால்" என்பதாக உள்ளது.

மறுபுறம் வளைகுடா யுத்தத்தில் இருந்து இன்றுவரை உலகின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதன் ஒரு பகுதியாக இந்தியாவை தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்த அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளுக்கெதிராக இந்திய ஆளும் வர்க்கம் தனது சுண்டு விரலைத் தானும் அசைக்கவில்லை. மாறாக ஈராக் யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்கப் போர்விமானங்களுக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைகளுக்கு இடமளித்துள்ளது. IMF , உலகவங்கி ஆணைக்கு கட்டுப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து நிர்வாணமாக நிற்கின்றது.

தெற்கு ஆசியாவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று
 கர்ணாஜி அறக்கட்டளையைச் சேர்ந்த அமெரிக்க அறிஞர்கள் வற்புறுத்துகின்றார்கள்.முன்நிபந்தனை விதிக்காமல் தெற்கு ஆசியாவில் இந்தியாவுக்கு முதன்மை அளிக்கக் கோருகின்றார்கள்.இந்தியாவையும், சீனாவையும் சமனாக நடத்த வேண்டும். பாகிஸ்தானுடனான இராணுவ உதவி ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும். இந்தியாவுக்கான கடனின் அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கோருகின்றார்கள்.

இந்த " தென்னாசியாவின் முக்கியத்துவம்என்பது என்ன? இப்பிராத்தியத்தின் ஏகாதிபத்திய ஏஜெண்டாக இருந்து, பிராந்திய நாடுகளின் விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமான இயக்கங்களை நசுக்கி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது தானே. இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் " இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ உறவு தென்னாசியாவின் பதற்ற நிலைக்கு காரணமான சக்திகள் என அமெரிக்கா கருதுகின்றவற்றை அகற்ற உதவும்.இதன் மூலம் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் நன்மையடையும்." எனக் கூறியிருப்பதும் காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா உட்பட தனது கூட்டணி நாடுகள் தலையிடல் கூடாது என அமெரிக்கா ஆணையிட்டிருப்பதும் இதையே காட்டுகின்றன.

எனவே, இன்றைய சர்வதேசியச் சூழ்நிலையில் உலக மேலாதிக்கத்துக்கான போட்டியில் அமெரிக்கா தனது ஏகபோகத்தை -" புதிய உலக ஒடுக்குமுறையின் கருவியாக ஐ நா சபையிருப்பதையும், தென்னாசியாவின் நாடுகள் மீதான நவீன காலனியாதிக்கத்துக்கு இந்திய ஆளும் வர்க்கத்தை காவலாளியாக கருதுவதையும் காண்கின்றோம்.

இச்சூழ்நிலையில் ஏகாதிபத்திய மற்றும் விஸ்தரிப்புவாத நலன்கள் காரணமாக , தமிழீழப் போராட்டத்தை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டி நிற்கும் இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கும் , விடுதலைப்புலிகள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கும் ஐ நா சபையிடமிருந்து நீதி கிடைக்கும் என எதிர் பார்க்க முடியுமா? இது ஐ நா சபை மீது தமிழ்மக்களுக்கு தவறான நம்பிக்கையை ஏற்படுத்துவது ஆகாதா?

"இந்திய மத்தியஸ்துவத்தை நம்பி பட்டபாடு போதாதா?

இன்னொரு ஐ. நா மத்தியஸ்துவம் பற்றிப்பேசி இரத்தத்தால் விலை கொடுக்கப் போகிறோமா?
 "தமிழீழ மக்கள் தமது முறைப்பாடுகளை எடுத்துக்கூற ஐ நா சபையைத் தவிர வேறு ஸ்தாபனம் எதுவும் இல்லை " என்கிறார்கள் விடுதலைப்புலிகள்.
இது எதிரிகளுக்குடையிலான முரண்பாட்டை கணக்கில் எடுத்துக் கொண்டு போராடுவதற்குப் பதிலாக அவர்களைச் சார்ந்து நின்று போராடுவது என்பதைக் குறிக்கின்றது.

அதே நேரத்தில் "வேறு ஸ்தாபனம் எதுவும் இல்லை" என்பது உலகெங்கும் தமது விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களையும் அவர்களுக்கு தலைமை தாங்கும் ஸ்தாபனங்களையும் நிராகரிக்கின்றது.

இணைத்துப் பார்த்தால் , விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியாக உதவும் சக்தியாக அல்ல, மாறாக, எதிரிகளுக்கிடையிலான முரண்பாடு மறைமுகமாக மட்டுமே உதவமுடியும். அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர அவற்றைச் சார்ந்து நின்று போராடி விடுதலையை வென்றெடுக்க முடியாது.
விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரையிலும் எதிரிகளுக்குப் பணிந்து தமிழீழ இலட்சியத்தை விட்டுக் கொடுத்து விடவில்லை என்றாலும்கூட அவர்கள் கடைப்பிடிக்கும் மேற்கண்ட பாதை அந்த இலட்சியத்தை அடைவதற்குப் பொருத்தமற்றதாக- எதிரானதாக இருக்கின்றது.

ஆசிய , ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளெங்கும் தேசியவிடுதலைப்போராட்டங்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றன.

இந்நாட்டரசுகளின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சாதிகாரத் தன்மை காரணமாகவும்,உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக ஏகாதிபத்திய நாடுகள் பின்பற்றும் தந்திரங்கள் காரணமாகவும் இப்பிராந்திய நாடுகளில் போராட்டங்கள் மேன்மேலும் தீவிரமடையும்.

ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும் , உள்நாட்டுக் கொடுங்கோண்மையையும் சுட்டெரிக்கும் வல்லமை ஒடுக்கப்படும் தேசங்களின் மக்களுக்கே உண்டு. ஈழத்தமிழ்மக்கள் தங்கள் "முறையீடுகளை" இந்த மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.தமது நட்புறவை இவர்களோடு வளர்த்துக் கொள்ளவேண்டும். தமது நம்பிக்கையை தம்மீதும் இம்மக்கள் மீதும் வைக்கவேண்டும். ஐக்கியநாடுகள் சபையிடம் அல்ல. ஈழத்தமிழினத்தின் தேவை வெறும் பிரிவினை அல்ல. அவர்களுக்கத் தேவை விடுதலை பெற்ற மக்கள் குடியரசு. இதை அடைவது ஏகாதிபத்தியங்களை எதிர்த்த போராட்டங்களில்தான் அடங்கியுள்ளது.
-------------------
இப்பிரச்சார இயக்கத்தின் தொடராகவும், நவீன கால முன்னேற்றமாகவும் "தமிழீழச் செய்தியகம்" உருவாக்கப்பட்டது.

அந்நிய சார்பு அதிகாரப் பரவலாக்கப் பாதை ஈழத்தமிழர்களின் விடுதலைப் பாதையில் ஏற்படுத்திய மாபெரும் தீங்கை முள்ளிவாய்க்காலின் படிப்பினையாக தமிழீழ மக்கள் பெற்றுக் கொண்டு மீண்டெழுந்து போராட வழிகாட்டும் முழக்கங்களையும் , அரசியல் அம்பலப்படுத்தல்களையும், அரசியல் த த்துவார்த்த வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.

சமகால அரசியல் நிலவரங்கள் பற்றிய வழிகாட்டல்கள், பிற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் எழச்சிகளுடன் இணைந்து நிற்றல்,சர்வதேச அரசியல் நிலவரம் சம்பந்தமான கட்டுரைகள், கருத்துப்படங்கள் வாயிலாக "பாசிசம்" வலுப்பட்டு வருவதையும், மறுகாலனித்துவ பிராந்திய யுத்தங்கள் ஓயாது மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி ஏகாதிபத்தியத்தியங்கள்  முன்னேறுவதனையும், எம் அன்னை பூமியை விதேசிச் சிங்களத்தின் துணையுடன் படைத்தளமாக்கி வருவதனையும் உணர்த்தி நிற்கின்றது.

அரசியல் கைதிகளை விடுவிக்க ஒன்றுபட்டுப் போராடுவோம் என முழங்கும் அதேவேளை தமிழீழ தேசத்திற்கெதிரான சிங்களத்தின் இனப்படுகொலைக்கு சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் தண்டணை வழங்க வேண்டும் என்பதனையும் தொடர்ச்சியாக எடுத்துரைக்கின்றனர்.

இழுத்தடிப்புக்கும்,ஈழ மண் பறிப்புக்கும் ஐ.நா பாதையை முறியடிப்பதற்காக அல்லும் பகலும்தமிழீழச் செய்தியகம் நவீன வழி அஞ்சல்களை காற்று வெளியூடு காவி வருகின்றது.

இலங்கையில். உலகமயம் அரசியல் வரலாற்றுப்போக்கை விரித்துரைப்பதனூடாக போலிச்சுதந்திரம் பொசுங்கியே தீரும், ஈழப்புரட்சி வெடித்தே தீரும் என்ற நிதர்சனத்தை உரக்க முழங்கி
எழுக மாவீரம்...
                                    எழுக தமிழீழம்...
                                                                ஒழிக சமரசம் ...
                                                                                                   ஒழிக சமஸ்டி...

என முழங்கி ஈழப்பிரிவினைக்கு பொதுவாக்கெடுப்பு கோரிப் போராடுவோம் , ஈழம் யார் நிலம் சிங்களமே பொதுவாக்கெடுப்பு நடத்து என புதிய ஈழப்புரட்சியாளர்கள் அறைகூவி அழைக்கின்றனர்.
 
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 உலகத்தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசமக்களே ஒன்றுசேருங்கள்


===========================================

Editor’s note: The opinions in this article are the author’s, as published by our content partner, and do not represent the views of ENB