Friday 2 November 2007

சுப.தமி்ழ்ச்செல்வன் படுகொலை- ராஜபக்ச அரசின் பேடித்தனம்!


சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை- ராஜபக்ச அரசின் பேடித்தனம்!
இன்று(02-11-2007) தாயகநேரம் அதிகாலை 6.00 மணியளவில் ஸ்ரீலங்கா விமானப்படை கிளிநொச்சி இரணைமடுவில் நடத்திய வான்வெளிக் குண்டு வீச்சுத்தாக்குதலில் சுப தமிழ்ச்செல்வனும் மேலும் ஐந்து போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இதனை உறுதி செய்துள்ளது.
சுப தமிழ்ச்செல்வன் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர்.மேலும் 2002 நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பித்ததில் இருந்து பேச்சுவார்த்தைக் குழுவின் ஒரு பிரதான உறுப்பினரும் பேச்சாளரும் ஆவர். இக்கடமைகளின் பாற்பட்டு அவர் பகிரங்க உறுப்பினராகவே செயற்பட்டு வந்தார்.2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஆயுதம் இன்றி அரசியல் பிரச்சாரம் செய்வதை உத்தரவாதம் செய்கிறது.இவ்வாறிருக்கையில்;
அரசியல் பேச்சுவார்த்தையின் பகிரங்க பேச்சாளரைப் படுகொலை செய்திருக்கிறது ஸ்ரீலங்கா அரசு.
மேலும் இதனை ''கரும்புலிகளின் தளத்தையும், விடுதலைப் புலித்தலைவர்கள் ஒன்று கூடும் இடத்தையும்'' தாக்கி அழித்ததாகவும், அதில் ''பயங்கரவாதத் தலைவர் தமிழ்ச் செல்வன்'' கொலைசெய்யப்பட்டதாகவும்
உரிமை கோரியுள்ளது.இதன் மூலம் இதுவரையிலும் தோல்விகளையே தழுவிய 'அரசியல் தீர்வின் ஆதரவாளர்களுக்கு', இனிமேல் மரணத்தைத் தழுவுவீர்கள் என எச்சரித்துள்ளது.
இந்நடவடிக்கை ராஜபக்ச அரசின் பேடித்தனத்திற்கு மற்றொரு உதாரணமாகும்.
மேலும் ஸ்ரீலங்கா அரசின் இந்தக் குணாம்சம் நவீன ஜனநாயக அரசியல் விழுமியங்களை எட்ட இயலாத அதன் காட்டுமிராண்டி நிலையையே காட்டுகிறது.
அம்பும் ,வில்லும், கோடரிவாளும், குதிரைகளுக்கும்,குத்தீட்டிகளுக்கும் பதிலாக;
சர்வதேச ஏகாதிபத்தியமும், இந்தியவிஸ்தரிப்புவாத அரசும் வழங்கும் நவீன படைக்கலன்களை கொண்டிருக்கிறது ஸ்ரீலங்கா அரசு. ஆனால் இது எந்தவகையிலும் ஏகாதிபத்தியத்தின் தரகனாகவும், சிங்களப் பேரினவாத்தினதும்,பெளத்த மதவாதத்தினதும் காவலனாகவும் இருக்கும் அதன் அரசியல் காட்டுமிராண்டி நிலையை சற்றும் மாற்றவில்லை.
இதன் காரணமாகவே நவீன ஈழதேசம் இந்த கட்டாய இணைப்பிற்குள் இனிமேலும் வாழுவது சகிக்க இயலாததாக ஆகிவிட்டது.

பிரிவினைக் கோரிக்கையை உயர்த்திப்பிடித்து விடுதலை யுத்தத்தில் முன்னேறும் ஈழதேசத்தின் புரட்சிகர உத்வேகத்தை இப்பேடிகளின் ஈனச்செயல்கள் தடுத்து நிறுத்தப்போவதில்லை.மாறாக மேலும் உக்கிரப்படுத்தவே உதவும்.

ஈழமக்களின் தாகம், மக்கள் ஜனநாயக குடியரசு!
இறுதிவெற்றி ஈழமக்களுக்கே!!
ENB