Tuesday 18 March 2014

விபூசிக்கா குடும்பத்தை விடுதலை செய்யப் போராடுவோம்! தாயையும் சேயையும் ஒன்று சேர்ப்போம்!!

``காணாமல் போனோரைக் கண்டடையும்`` போராட்ட இயக்கத்தின் மீது தொடுக்கப்பட்ட சிங்களத்தின் பாசிசத்  தாக்குதலே போராளி விபூசிக்கா கைது!

தமிழீழ தேசம் மீது  தொடுக்கும் இனவெறி,மற்றும் இனப்படுகொலைத் தாக்குதலின் ஒரு வடிவமாக இந்த ``காணாமல் போதல்`` என்பதை சிங்களம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றது.பொலிஸ் உள்ளிட்ட அரச படைகளும்,சிங்களத்தின் அடியாள்க் குழுக்களும் மக்களைக் கைது செய்து, எந்த சட்ட முறைப் பதிவுகளும் இல்லாமல், நீதித்துறையின் பங்குபாகம்  இல்லாமல் முற்றிலும் சட்டவிரோதமாக சிறைப்படுத்தி வைத்திருப்பதாலும், அல்லது கொன்றொழித்து விடுவதாலும் இவர்கள் ``காணாமல் போனோர்`` என அழைக்கப்படுகின்றனர். இது ஒரு சில விதி விலக்கான சம்பவமாக அல்ல, மாறாக ஒரு வழிமுறையாக காலம் காலமாக சிங்களத்தால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.இந்த பாசிச அடக்கு முறைக்கு `பயங்கரவாதத் தடைச் சட்டம்` ஒரு பாதுகாப்புத் திரையாக விளங்கி வருகின்றது.முள்ளிவாய்க்கால்ப் பிரளயத்தின் இறுதி நாட்களில் சிங்களம் கைது செய்த, அல்லது சிங்களத்திடம் கையளிக்கப்பட்ட போராளிகள் , பொது மக்கள், மத போதகர்கள் காணாமல் போனது இதில் ஒரு புதுச் சேர்க்கையாகும்.இதனோடு கூடவே முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் நிராயுதபாணியான ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்களம் ஏவிய , கொள்ளையர், கொலைகாரரின் `வெள்ளைவான் பயங்கரம்` இதனை மற்றொரு கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.

இதனால் எழுந்த எதிர்ப்புணர்வு, கருத்தாகவும், கண்டனமாகவும்,
கொதிப்பாகவும் வெளிப்பட்டு முறையீடு செய்யத் தலைப்பட்டனர்.முறையீடு உள்நாட்டில் ஆரம்பித்து, நவிப்பிள்ளையின் காலில் விழுந்து கதறி அழுது, கமெரனைத் தொழுது, இறுதியாக ஒரு இயக்கமாக உருவெடுத்தது.எனினும் இது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான ஜனநாயக இயக்கமாக வளராமல், இவ்வியக்கத்தின் மீது செல்வாக்குச் செலுத்திய ``சிவில் சொசைற்றிகளின்`` கருத்துச் செல்வாக்கின் காரணத்தால் இது மனித உரிமை,மற்றும் மனிதாபிமானப் பிரச்சனையாக வடிவம் கொடுக்கப்பட்டது.தவிர்க்க இயலாமல் இத்தகைய தலைமைகளின் கீழ்த்தான் இந்த மக்கள் இயக்கம் நகர்ந்தது.

இதில் முன்னோடிப் பிரச்சாரப் பாத்திரத்தை விபூசிக்காவும், அவரது தாயாரும் தமது தொடர்ந்த பங்களிப்பின் காரணமாகவும், அயராத உழைப்பின் விளைவாகவும், அச்சம் தவிர்த்து, அஞ்ஞாமையை உடமையாய்க் கொண்டு முன்னின்று போராடியதன் விளைவாகப் பெற்றனர். சனல் 4 இன் `மனித உரிமைப் பிரச்சாரத்தில்` பாத்திரம் ஆற்றினர்.

முள்ளிவாய்க்கால் பிரளயத்துக்குப் பின்னால், அதன் பங்காளிகள் தாம் நடத்திய இனப்படுகொலையை நியாயப்படுத்த தாமே ஒரு நீதி மன்றத்தை நிறுவினர்.இந்த நீதி மன்றத்தின் பேரால் சிங்களத்துக்கு `அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அவகாசம் வழங்கினர்.இந்த அவகாச காலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த சிங்களம் முதலில் நல்லிணக்க ஆணைக் குழு என்றொரு அமைப்பை ஏற்படுத்தி பாதிப்புகள் குறித்த தகவல்களை திரட்டி, அவற்றை சீர்செய்வதற்கான திட்டங்களையும், தீர்மானங்களையும் வெளியிட்டது.காணாமல் போனோருக்கு கணக்கெடுப்பும் நடத்தியது!


ஒரு புறம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை அரசிடமிருந்து விடுதலை பெறும் தனித்தமிழீழப் போராட்டத்தைத் தொடர்கையில், மறுபுறம் ஏகாதிபத்தியவாதிகள்  நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமூலாக்கி இலங்கையில் `சமாதானமும் நல்லிணக்கமும்` என்கிற திட்டத்தை அமூலாக்க வேண்டுமென்று கோரி தனித் தமிழீப் போராட்டத் திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தை முன்வைத்தனர்.தமிழீழ விடுதலையின் அரசியல் சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையை மனித உரிமைப் பிரச்சனையாகத் திரிபுபடுத்தினர்.

இந்த மனித உரிமைத் திட்டத்தின் அடிப்படையில் `ஈழத்தமிழினப் படுகொலையை`  இலங்கை மீது தமது மேலாண்மையை நிறுவுவதற்கான கருவியாகப் பயன்படுத்தி இந்திய அமெரிக்க கூட்டணி செயற்பட்டு வருகின்றது.

இந்தச் சூழலை புலத் தமிழ்த் தரகு அணி `` ராஜபக்ச எந்தக்கணமும் அமெரிக்க மின்சாரக் கதிரையில் அமரலாம்`` என பிரச்சாரம் செய்துவருகின்றது. நிலத் தமிழ்த் தரகு அணி ஐ.நா விடம் முறையிடுகின்றது!

ஆனால் கள நிலைமையோ வேறு மாதிரி!

ஐ.நா.நீதிமன்றம் மூன்றாவது தடவையாக இனப்படுகொலையைத் தொடர
மேலும் ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் விளைவு தான் ஈழத்தில் தலைவிரித்தாடும் பாசிச தாக்குதல்கள்! தர்மபுரக் கைதுகள்!!



இந்திய அமெரிக்கத் தீர்மானம் வெளிவந்த கையோடு ``காணாமல் போனோரைக் கண்டடையும்`` போராட்ட இயக்கத்தின் மீது சிங்களம் தனது பாசிசத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.அதன் முன்னணிப் போராளிகளான விபூசிக்காவையும் அவரது தாயாரையும் பயங்கரவாத நாடகமாடி , பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்து  சிறைப்படுத்தி தாயையும் மகளையும் பிரித்து அமைதிக்கால கொடுமை நிகழ்த்தியுள்ளது.

பயங்கரவாத நாடகம்: சீருடையிலும் சீரற்ற உடையிலும் பொலிஸ் இராணுவக் கும்பல் சுமார் 700 பேர் விபூசிக்கா வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்! தாயும் மகளும் வீட்டை விட்டு வெளியே வருகின்றார்கள்! வீட்டுக்குள் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப்பிரயோகம் செய்து விட்டு தப்பிப் போய் விடுகிறார்.! 700 பாதுகாப்புப் படைவீரர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விபூசிக்காவையும் தாயாரையும் கைது செய்து சிறைப்படுத்துகின்றனர்.துப்பாக்கி தாரியைத்தேடி ஒரு பொலிஸ் நாய் கூட போகவில்லை!

நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது; தாய் பூசா முகாமில், விபூசிக்கா பாலேந்திரன்  (13) கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி வி.முத்துக்குமாருக்கு நேற்று (17) உத்தரவிட்டார்.


விபூசிக்காவையும் தாயையும் பார்வையிடச் சென்ற அமெரிக்க மனித உரிமையாளர்களும் கைது.! இலங்கையின் அமெரிக்கத் தூதரகம் சுடச் சுட கண்டனம்!தமிழ் நெற் கொதித்து கொப்பளித்து அறிக்கை, மனித உரிமைப் பாதிரியாரின் கைதை எதிர்த்து!

இது ஒரு குடும்பத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஈழமெங்கும் தொடரும் தாக்குதல் ஆகும்!

போதும் இந்த நாடகம்! போதும் இந்த பேதமை!!

ஈழதேசிய சுதந்திரப் பிரச்சனையின் ஒரு பகுதியே போர் மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சனை!

போர்க்கைதிகளை விடுவிக்கும் போராட்டம் ஈழத்தை விடுவிக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியே!

எனவே ஈழவிடுதலைப் போர்க்கொடியை ஏந்தி இந்திய விரிவாதிக்க அமெரிக்க பாசிச அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!

விபூசிக்கா குடும்பத்தை விடுவிக்கக் கோருவோம்!

``அனைத்து யுத்தக் கைதிகளையும் உடனே விடுவி!`` என அறை கூவுவோம்.



புதிய ஈழப்புரட்சியாளர்கள்  18-03-14