Monday 23 July 2018

கறுப்பு ஜூலை 35ம் ஆண்டு அரசியல் அறிக்கை

கறுப்பு ஜூலை 35ம் ஆண்டு அரசியல் அறிக்கை


மாவீரன் செல்லக்கிளிக்கு சமர்ப்பணம்


சுய நிர்ணய உரிமைக்கான பொதுஜன வாக்கெடுப்புக்கு போராடுவோம்!

23-07-2018 இன்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க திண்ணைவேலி கெரில்லா இராணுவத்தாக்குதலின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.24-07-2018 கறுப்பு ஜுலையின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.

சட்டப்புலமையாளர்களின் சர்வதேச ஆணையத்தின் உறுப்பினரும் நீதிபதியுமான Paul Sieghart தனது Sri Lanka: A Mounting Tragedy of Errors எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்,

''Clearly this (July 1983 attack) was no spontaneous upsurge of communal hatred among the Sinhala people – nor was it as has been suggested in some quarters, a popular response to the killing of 13 soldiers in an ambush the previous day by Tamil Tigers, which was not even reported in the newspapers until the riots began. It was a series of deliberate acts, executed in accordance with a concerted plan, conceived and organized well in advance''.

(Paul Sieghart of the International Commission of Jurists stated in Sri Lanka: A Mounting Tragedy of Errors, two months after the riots. Wikipidia)

அதாவது July 1983 attack திண்ணைவேலித் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாமல், (அரசும் அதிகாரபீடமும்) முன்கூட்டியே திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த திட்டத்தின் வெளிப்பாடாகும்.

அக்கம் பக்கமான இவ் இரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வுகளின் 35ஆம் ஆண்டின் நினைவை ஏந்துகின்ற இன்று -1983 உள் நாட்டு யுத்தம் 2009 இல் வித்தாகிப் போய் ஒன்பது ஆண்டுகள் கடந்து போன இன்று, பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வட கிழக்கில் குவிக்கப்பட்டிருகின்ற-சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் விலக்கப்படமாட்டாது என்கிற அரச அறிவிப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையிலுள்ள இணைப்பைத் தர்க்கித்து அறிந்து ஈழத் தமிழ்ப் பிரச்சனைக்கு தீர்வு காண வழி கோலுவதே இவ் அறிக்கையின் குறிக்கோள் ஆகும்.

ஈழத் தமிழர் மீதான அடக்குமுறை,ஒடுக்கும் தேசம்-ஒடுக்கப்படும் தேசம் என்ற வகைப்பட்ட தேசிய ஒடுக்குமுறையாக பரிணமித்தது அதிகாரக் கைமாற்றத்துக்கு-போலிச் சுதந்திரத்துக்கு பின்பாகும்.மேலும் இந்த ஒடுக்குமுறை எப்போதும் வன்முறை ஆகவே இருந்து வந்தது.இந்த வன்முறை மூன்று வடிவங்களில் கட்டவிழ்க்கப்பட்டது.

1) ஆயுதமேந்திய அரச படைகளின் வன்முறை.

2)காடையர்களை ஆயுதம் தரித்த காவலாளிகளாக்கி தாக்குவது,

3) ஆயுதப் படையின் பக்கத் துணையுடன் வெகுஜனங்களையே ஏவி விட்டு நடத்தும் ``கலவரம்`` என்கிற வன்முறை.

இந்தக் ``கலவரங்கள்`` எவையும் தாமாக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து, தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தியவை அல்ல.இந்தப் பொருளில்* ``கலவரம்`` என்கிற பதம் இந் நிகழ்வுகளைக் குறிக்க பொருந்தாதவை ஆகும். ஆனால் ஈழத் தமிழருக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்க்கும் ஒரு வழிமுறையாக வடிவமாக, அரசின் ஒரு ஆயுதமாக இந்தக் ``கலவரம்`` பயன்பட்டது என்கிற பொருளில் மட்டுமே இது சரியானதாகும்.

*(Riots: a noisy, violent public disorder caused by a group or crowd of persons, as by a crowd protesting against another group, a government policy, etc., in the streets. http://www.dictionary.com/browse/riot)


இனப்பகைமையை ஊட்டி வளர்த்ததால் தமழர்களுக்கு எதிராக எக்கணமும் தீ மூட்டத் தயாரான `காய்ந்த விறகுகளாக` ஒடுக்கும் தேசத்து-சிங்கள மக்களில் ஒரு பிரிவினர் செப்பனிடப்பட்டிருக்கின்றனர்.கூண்டில் அடைக்கப் பட்டிருக்கும் வேட்டை நாய்களைப் போல, இவர்களைத் திறந்துவிட்ட சம்பவம் தான் 1983 கறுப்பு ஜூலை.

இந்த வன்முறையின் காவல் அரணாக ஆயுதமேந்திய அந்நிய சிங்களப் படை-பொலிஸ்,இராணுவம்- ஈழத்தை ஆக்கிரமித்து அங்கு பலவந்தமாக நிலை கொண்டிருந்ததால் அதை முற்றாக வெளியேற்றுவதே ஈழதேசத்தின் 
விடுதலைக்கு,மண்ணின் பாதுகாப்புக்கு,மக்களின் சுதந்திரத்துக்கு, ஜனநாயகத்தின் உத்தரவாதத்துக்கு முன்நிபந்தனை ஆயிற்று.

எனவே இராணுவத்தை வெளியேற்றுவதை விடுதலைப் புலிகள் தமது முதல் பணியாக இயற்கையாகவே தேர்ந்துகொண்டனர்.சொல்லப்போனால் இது ஒன்றே அவர்களது வாழ்வும் வரலாறும் ஆனது.திண்ணை வேலித் தாக்குதலில் ஆரம்பித்து, ஆனையிறவை வீழ்த்தி வெற்றியின் எல்லையை எட்டினார்கள்.இருந்தும் அரசியல் சதியால் அவர்களின் வீர வரலாறு முள்ளிவாய்க்காலில் வித்தானது.

மீண்டும் தமிழர்கள் நிராயுதபாணிகள் ஆகினர். சிங்களப்படை ஈழத்தை மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டது. இராணுவம் விலக்கப்படமாட்டாது என அரசு அறிவிக்கின்றது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களது, 
ஈழதேசத்தினது- (ஏன் சிங்கள ஒடுக்கும் தேசத்தினதும்), அனைத்து அவலங்களுக்கும் மூல காரணம் ஈழம் இராணுவ அதிகாரத்தின் கீழ் இருப்பதாகும்.

ஆக 1983 இலிருந்த அதே அவசியம் 2009-2018 இல் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது.

நீங்கள் வேண்டுமென்றால் `விஜயகலா` என்கிற பெயரை எடுத்துவிடுங்கள், ஆனால் அந்தக் கூற்று சமுதாய அவசியம் ஆகும்.

பொதுவாகவும் குறிப்பாக இலங்கையிலும் விடுதலைப் புரட்சியில் புரட்சிகர வன்முறையின் பாத்திரத்தை நிராகரிக்க முடியாது-கூடாது.

அதேவேளை `புரட்சிகர வன்முறையோடு விளையாடக் கூடாது` என்கிற மார்க்சின் -பாரிஸ் கொம்யூன்- எச்சரிக்கையை மறந்துவிடவும் கூடாது.

யுத்தத்தைப் போலவே வன்முறையும் அரசியலின் தொடர்ச்சியாகும். புலிகளின் வன்முறை-நீதியான யுத்தம், வித்தாகிப் போனது, புலிகளின் அரசியல் -(தமிழீழத்தை அடைவதற்கான திட்டம்,யுத்த தந்திரம்,செயல் தந்திரங்கள், 
இராணுவ மார்க்கம்) முற்றுப் பெற்றதன் விளைவாகும்.

இனி ஒரு புதிய அரசியலுக்கு, அவசியப்பட்டால் மட்டுமே ஒரு நீதியான,புரட்சிகர வன்முறை தோன்ற முடியும்.அல்லாதவை வெறும் வெஞ்சினத்தின் வெளிப்பாடான பயங்கரவாத வகைப்பட்டவை, எதிரிக்கே அநுகூலமானவை.

அந்த புதிய அரசியல் என்ன?

இராணுவ அதிகாரத்தில் இருந்து ஈழ தேசம்-வன்முறை அல்லாத வழியில் விடுதலை பெற முயல்வது எவ்வாறு?

ஒரே ஒரு வழிதான் உண்டு.

ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும், சிங்களமும்,ஈழச் சமரசவாதிகளும், தமிழக ஓடுகாலிகளும் `ஒரே நாடு`-එකම රට என்கிற முழக்கத்தின் கீழ், சிங்களத்தின் ஈழ தேசிய இராணுவ- ஆக்கிரமிப்பை, அதிகாரத்தை, ஆட்சியை நியாயம் செய்கின்றனர்.சுய நிர்ணய உரிமைக்கு மாற்றாக, சுய அதிகாரம் என ஏமாற்றுகின்றனர்.

நாம் இதற்கு மாற்றாக ஈழ தேசிய சுய நிர்ணய உரிமையை உயர்த்திப்பிடித்து `ஒரே நாட்டு`க்கு எதிராக;


* வடக்கு கிழக்கு தமிழர் தேசம்-(ஆறாவது திருத்த நீக்கம்)!
* மலையக இஸ்லாமிய தமிழர்களுக்கு தனி மாநிலம்- சுயாட்சி!
* சுய நிர்ணய உரிமைக்கான பொது ஜன வாக்கெடுப்பு!

என்ற கோரிக்கைக்காக இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரிப் போராடுவதே ஒரே ஒரு வழியாகும்.

இதன் பொருட்டு ஈழ தேசம் மீதான இராணுவ அதிகாரத்துக்கு ஜனநாயகப் பசுத்தோல் போர்க்கும் அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்பது,

அனைத்து வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் பொது ஜன வாக்கெடுப்புக் கோரிக்கையோடு இணைத்து, அதற்கு கீழ்ப்படுத்தி முன்னெடுப்பது,

ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவது,இன்றியமையாதவை ஆகும்.

இறுதிவெற்றி ஈழமக்களுக்கே!


புதிய ஈழப் புரட்சியாளர்கள்
23-07-2018