Thursday 6 March 2014

புதிய பாதை! புதிய ஈழம்!

புதிய பாதை! புதிய ஈழம்! 



இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம்,லண்டன் நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு,ஜெனீவா நீதிப்பயணம்- ஒரு ஊடறுப்புச் சமர்!

=============================================== சுபா

1) 66வது சுதந்திர தினம்

 இலங்கையின் 66 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் பெப்ரவரி 4 2014 வெகு விமரிசையாகக் கொண்டாடி முடிக்கப்பட்டது. நாட்டுமக்களுக்கு
வழங்கிய செய்தியில் மாட்சிமை தங்கிய அரிச்சந்திர மகாராசன் ராஜபக்ச,அந்நியர்களுக்கு அடிபணியாமல்  இலங்கையை ஒரு கொடியின்
கீழ் அபிவிருத்திப்பாதையில் நடத்திச் செல்லப் போவதாகப் பிரகடனம் செய்துள்ளார்.

2) கரிநாள்

இந்தச் சுதந்திர நாளை  கரி நாள் எனப்பிரகடனப்படுத்தி புறக்கணித்த ஈழத்தமிழர்கள், எமது தாயக தேசம் தமிழீழம் என்று முழங்கினர்.
கூடவே இலங்கைச் சுதந்திரம் சிங்களவர்களுக்கு கிடைத்த சுதந்திரம் என்றும் கூறினர்.இது சமஸ்டி இயக்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு வாரிசு உரிமையாகக் கிடைத்து இன்றுவரை வாழ்கின்ற  கருத்து நிலையாகும்.

3) நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு

இங்கிலாந்து பாராளமன்ற வளாகத்தில்  `நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு` நடைபெற்றது.

4)ஜெனீவா நீதி

 புலம் பெயர் தமிழர்கள், தமிழ்த் தரகு அணியினரால்  ஜெனீவா நீதிக்கு அணிதிரட்டப்படுகின்றனர்.ஐ.நா.சபையின் மனித உரிமை மாநாட்டில்
அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து முன்வைக்கவுள்ள இலங்கை குறித்த தீர்மானம் தமக்கு நீதி வழங்க வேண்டுமெனக் கோருகின்றது
 இந்தக்கூட்டம்.

இந்த முக்கிய நான்கு நிகழ்வுகளின் பின்னணியில், தமிழீழ விடுதலைக்கான இரத்தம் சிந்தா போர் முன்னேறிவரும் இன்றைய கட்டத்தில், இவ் இயக்கத்தின் மேற்பரப்பில் நின்றுலாவும்  சமூக சக்திகள்- (தரகுத் தமிழ் அணி), இவ்வியக்கத்தை வழி நடத்தி செல்லும் அரசியல் திசை வழி குறித்தும், அதன் வர்க்க வேர் குறித்தும் ஆய்ந்தறிந்து, தமிழீழ விடுதலைக்கான ஜனநாயக இயக்கத்தை புரட்சிப் பாதையில் நிறுத்துவதே  இச்செய்தி ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கைச் சுதந்திரம் குறித்து.

பிரித்தானிய நேரடிக் காலனியாதிக்கத்தில் இருந்து மகாராணியின் நேரடி காலனித்துவ நிர்வாகி மகா தேசாதிபதியின் கண்காணிப்பின் கீழ்
உள் நாட்டு ஆளும் தமிழ்-சிங்கள நிலப்பிரத்துவ, காலனியாதிக்க அறிவுத்துறைப் பிரிவினர் அடங்கிய விதேசிய வர்க்கங்களின் கைக்கு,
ஏகாதிபத்திய காலனியாதிக்க அதிகாரம், பாதுகாப்பாக , பக்குவமாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட,என்றும் கண்டிக்காத,ஒருபோதும்  குரைக்காத, மிக விசுவாசமான உள்நாட்டு தரகர்களுக்கு கையளிக்கப்பட்டு, இலங்கை அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாகவும்,கட்டாய இணைப்புக்கு உட்பட்டு தமிழீழம் அடிமைத் தேசமாகவும்,  மாற்றப்பட்ட  நாளே இலங்கையின் சுதந்திர தினமாகும்.!

இந்த சுதந்திர நாளை தமிழர்கள் கரி நாள் என்கையில் அதன் அரசியல் உள்ளடக்கம் எதுவாக உள்ளது?

1) நேரடி காலனியாதிக்கம் நீங்கினாலும், மறைமுகமாக அரைக்காலனியாதிக்கம் நிலைத்திருக்கின்றது என்பதா? இல்லை!

 2) பிரித்தானிய காலனியாதிக்கத்தின் அரைக்காலனிய சோல்பரி அரசியல் யாப்பு தமிழீழ தேசத்தை கட்டாயமாக-சுயவிருப்பு அறியாமல்- 
சிங்களத்துடன் கட்டிப்போட்டது என்பதலா? இல்லை அதனாலும் இல்லை!

அப்போ எதனால்தான் இது கரி நாள்?  வரலாற்று விளக்கம் வருமாறு:

அ) 1947 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தது.
ஆ) சுதந்திர சோல்பரி அரசியல் யாப்பு சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது!
இ) சிங்களத் தலைவர்கள் இதை மீறினர்.
ஈ) தமிழர்கள் ஏமாற்றப் பட்டனர்!.

இதுதான் சமஸ்டி இயக்கத்தின் வரலாற்று விளக்கம்.!

இந்தக்கணம் வரைக்கும் இதுதான் தமிழர்களின் இலங்கைச் சுதந்திரம் குறித்த கருத்தாக்கமாக நீடித்து வருகின்றது.

2) தமிழர்கள் ``ஏமாற்றப்பட்ட`` கதை அல்லது காதை!

1) சுதந்திரத்துக்குப் பின்னால் தமிழ்த் தலைவர்கள், சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்!

2) 1981 இல் முப்பது ஆண்டுகள் நம்பிக்கை கொண்டிருந்த சமஸ்டி இயக்கத்தால் ஏமாற்றப்பட்டார்கள்

3)``இந்திரா காந்திக்குப் பின்னால்`` காங்கிரசால் ஏமாற்றப்பட்டார்கள்!

4)ராஜீவ் காந்தி ஜெ.ஆரால் ஏமாற்றப்பட்டார்!

5) தத்துவ ஆசிரியர் அன்ரன்பாலசிங்கம்  ஒற்றையாட்சி-அகசுயநிர்ணய உரிமைத்- தீர்வுக்கு உடன்பட்டு ஒஸ்லோவில் கையொப்பமிட்டதால்
 ``யுத்தப்பிரபு`` பிரபாகரன் ஏமாற்றப்பட்டார்!

6) மடுத்திருப்பதி போர்முனையானபோது கத்தோலிக்க பாதிரி சபையால் தமிழீழப் போர்க்களம் ஏமாற்றப்பட்டது!

7) முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் ஒபாமா வாலும்,வை.கோ, நெடுமாறன்,சீமான் கும்பலாலும் ஏமாற்றப்பட்டார்கள்!

8)தமிழ்மக்கள் ஐ.நா.வாலும் கைவிடப்பட்டு ஏமாற்றப்பட்டார்கள்!

9)லண்டனில் போர்நிறுத்த உண்ணாவிரதிகளும்,பல்லாயிரக்கணக்கான போர் நிறுத்த போராளி மக்களும், பிரித்தானிய தொழிற் கட்சியால் ஏமாற்றப்பட்டார்!

10) வடக்கு மாகாணசபைக்கு வாக்களித்த மக்கள், சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் மூவர் கும்பலால் ஏமாற்றப்படார்கள்!

66ஆண்டுகள் தொடரும் இந்த `ஏமாற்றக் காதை` என்று முடிவுக்கு வரும்? எப்படி முடிவுக்கு வரும்?


புதிய பிந்திய செய்தி: அமெரிக்கத் தீர்மானத்தாலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டார்களாம்!

இந்த ஏமாற்றங்கள் அத்தனைக்கும் ஒரு பொதுக் காரணம் உண்டு.அதைத் தகர்த்தால் தான் இது முடிவுக்கு வரும்.

அதாவது ஈழ தேசியப் பிரச்சனையின் வர்க்க சார்பு நிலையும், அணிசேர்க்கையும் ஆகும். இதுதான் உயிராதாரமான பிரச்சனை.
ஈழதேசியப் பிரச்சனையின் உள்ளடக்கமும் உருவகமும் முற்றிலும் யதார்த்தத்துக்கு முரண்பட்டுள்ளது.

உள்ளடக்கம்:அரைக்காலனிய  இலங்கைச் சமூகத்தை ஜனநாயக சமூகம் ஆக்கும் பொருட்டு ஈழ தேசம் சுயநிர்ணய உரிமை பெறுவதாகும்.
உருவகம்:சிங்களவர்களால் இனப்படுகொலைக் குள்ளாக்கப்படும் தமிழர்கள் தமிழீழத் தனிநாடு பெறுவதாகும்.

இது இரு வேறு உலகக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றது.

1) முதல்வகை: இனப்படுகொலையின் வேரை சிங்கள-தமிழ் விரோத வரலாற்றில் மட்டும் காண்பது.

2) இரண்டாம்வகை: இனப்படுகொலையின் வேரை அரைக்காலனிய அரசுமுறையிலும், சிங்கள-தமிழ் விரோத வரலாற்றிலும் இணைத்துக் காண்பது.

மேல்த் தோற்றத்தில் இது மிக நுண்ணிய வேறுபாடாகத் தெரிந்தாலும், ஆழ்ந்த ஆராய்வில் இது அடிப்படையில் முரண்பட்ட இருவேறு உலகக் கண்ணோட்டத்தின் வழிப்பட்ட உள் நாட்டுப் பிரச்சனை குறித்த விளக்கமும் வெளியீடுமாகும்.  

இனப்படுகொலையின் வேரை சிங்கள-தமிழ் விரோத வரலாற்றில் மட்டும் காண்கிற முதலாளித்துவ வகைப்பட்ட கண்ணோட்டம் ,
இலங்கையின் தேசிய விடுதலை,ஈழத்தமிழரின் பிரிவினைச் சுதந்திரம் பற்றிய பிரச்சனையில் ஏகாதிபத்தியத்தின் பாத்திரத்தை முற்றாக மூடி
மறைத்துவிடுகின்றது.கடந்த 66 ஆண்டு காலமும் ஈழ தேசியப்பிரச்சனை இவ்வாறு தான் உருவகப்படுத்தி வியாக்கியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.

3. இந்த ஏகாதிபத்தியதாச காலனியாதிக்க சிந்தனைக் கட்டமைப்புத்தான் - இதன் சமூக வேர் தரகுமுதலாளிய குட்டிமுதலாளிய அரைக் காலனித்துவ
வர்க்கங்களின் - தமிழ்த் தரகு அணி-  இதுவே சிங்களவர்களுக்குக் கிடைத்த சுதந்திரம் என்று கூறுகின்றது. இந்தச் சிந்தனைப் போக்குத்தான்
இலண்டனில் நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்திகின்றது. ஐ நா விடம் நீதி கோரி வீதிப் பயணம் நடத்துகின்றது.

4. லண்டன் மாநாடு

1. பிரித்தானிய காலனியாதிக்கம் இலங்கையில் அதிகாரக் கைமாற்றத்தை ஏற்படுத்தியபோது தமிழீழ நிலத்தை ஸ்ரீலங்காவுடன் கட்டாயமாக
இணைத்து சோல்பெரி அரசு யாப்பு மூலம் அதைச் சட்டபூர்வமாக்கியது.

2. உள்நாட்டில் அயர்லாந்து, வேல்ஷ், ஸ்கொட்லாந்து ஆகிய மூன்று தேசங்களை ஆண்டாண்டு காலமாக ஆக்கிரமித்துத்தான் இங்கிலாந்து நாடு
பெரியபித்தானியாவாக ஆகியிருக்கிறது.

3. காலனியாதிக்க நேரடி அதிகாரம் கைமாற்றப்பட்டு அனைத்துத் தேசங்களும் இன்றும் அரைக் காலனிகளாகவே உள்ளன. அந்த மண்ணின் மக்களுக்கு  நிலத்தின் மீது எந்த உரிமையும் கிடையாது. பாலஸ்தீனம் இன்றும் தன் மண்ணுக்காகப் போராடுகின்றது!ஆபிரிக்கக் கண்ட மக்கள் பஞ்சத்தில்
பரிதவித்து மடிகிறார்கள்!

4. ஆப்கானிஷ்தான் ஆக்கிரமிப்பில் ஒரு புராதன பூமியை அழித்தார்கள்!, ஈராக் ஆக்கிரமிப்பில் ஒரு நவீன முதலாளித்துவ நாட்டை அழித்தார்கள்!

5. லிபிய, சிரிய ஆக்கிரமிப்பில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து ஆட்சிக் கவிழ்ப்பு வன்முறை யுத்தங்கள்
நடத்தி அந்நாடுகளை அடிமைப்படுத்தினார்கள்.

6. அரபுவசந்தம் என்ற பெயரில் நவீன காலனியாதிக்க பொம்மை அரசுகளை உருவாக்கினார்கள்..

7) உக்ரெயின் ஆட்சிக்கவிழ்ப்பில் நாஜிப் பாசிஸ்டுக்களை  ஆட்சியில் அமர்த்தினார்கள்.

எனவே எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் இங்கிலாந்து பாராளுமன்ற வளாகம் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து சர்வதேச மாநாடு கூட்ட வளமான
நிலம்தான்!

இலங்கையில் நில அபகரிப்பின்  தன்மைகள் வடிவங்கள் வருமாறு:

அ. தமிழர்களின் விவசாய நிலங்களைப் பறித்து சிங்கள ஏழை விவசாயிகளுக்கு வழங்கி அதை அடிப்படையாகக் கொண்ட சிங்களக் கிராமக்
குடியேற்றங்களை உருவாக்குவது,

ஆ. இத்தகைய குடியேற்றங்களை ஈழதேசத்தின் பூகோளத் தொடர்ச்சியை துண்டாடும் நோக்கில் நிறைவேற்றுவது,

இ. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் – ஒபாமா தமிழ்மக்களை நிராயுதபாணியாக்கியதின் பின்னால் இது இராணுவ குடியேற்றம் என்ற வடிவத்தை எடுத்துள்ளன.

ஈ. மேலும் யுத்தத்தால் இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் மீள்குடியுரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்விடக்களில் இராணுவ மற்றும் சிங்கள
குடியமர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன்.

இவையே நில ஆக்கிரமிப்பின் தன்மைகளும் வடிவங்களுமாகும்.

இவை அனைத்திற்கும் தமிழர் நோக்கில் முன்வைக்கப்படுகின்ற வாதம் இலங்கை அரசு சிங்களவர்களின் அரசு என்பதால் அவர்களுக்குச் சாதகமாக
நடந்து கொள்கிறது என்பதாகும்.

ஆனால் உண்மை இதுவல்ல. தமிழர்களுடையதோ சிங்களவர்களுடையதோ இலங்கை மண்ணை சிங்கள ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய அந்நிய கொம்பனிகளுக்கும் நாடுகளுக்கும் தாரைவார்த்த வண்ணமே உள்ளனர். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னால் இது மடைதிறந்த வெள்ளமாக பாய்கின்றது. இதில் அமெரிக்க  ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் இந்தியா, ரஷ்யா, சீனா, மத்தியகிழக்கு நாடுகளுடன் போட்டிபோட்டு பங்கிட்டு தின்றவண்ணம் உள்ளனர்.

தமிழர் நிலங்களை சிங்களவர்களுக்கு பறித்துக் கொடுப்பதற்கு காரணம் சிங்களமக்கள் மேல் உள்ள பாசத்தால் அல்ல.தமிழர்களையும் சிங்களவர்களையும் இடையறாது ஒரு மோதல் நிலையில் வைத்திருப்பதன் மூலம் அவர்கள் ஒன்றுபடுவதைத் தடுக்கவே இதனைச் செய்து வருகின்றனர்.ஏனெனில் அவர்கள்  ஒன்றுபட்டால் இலங்கையின் அரைக்காலனிய அரசு தகர்ந்து விடும். இதைத் தடுப்பதற்காகவே செய்கின்றனர்.

`` இன மதப் பூசல்களை இடையறாது தூண்டி வருவது இலங்கையின் அரைக்காலனிய அரசின் இருப்புக்கு இன்றியமையாதது`` என்ற சமரனின் 1983 ஈழத்தீர்மான வரையறை மார்க்சிய நிலை நின்ற விஞ்ஞான வரையறுப்பாகும்.

இதனால் ஏகாதிபத்தியவாதிகளாலும், இலங்கையின் அரைக்காலனிய அரசைப் பாதுகாக்க தொடர்ந்து முண்டு கொடுத்து வரும் வர்க்கங்களாலும் எவ்வாறு தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பை தடுக்கமுடியும்?

இம் மாநாட்டில் கூட்டமைப்புக் கும்பலும் கலந்து கொண்டு நில ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது! சம்பந்தன் மூவர் கும்பல் வடக்கு மாகாண சபைத் தேரதல் வெற்றியை ``ஒன்று பட்ட நாட்டுக்குள், ஒற்றையாட்சிக்குள் ` அதிகாரங்களைப் பகிர்ந்து ஒன்றுபட்டு வாழ்வதற்கு மக்கள் அளித்த தீர்ப்பு எனக்கூறியது.யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததற்கு நன்றி கூறியது.சிங்க-சிங்கள கொடியேற்றி  மேதினம் கொண்டாடியது.
புலிகளின் வாலைக்கூட நாம் தொட்டதில்லை,தூரத்தில் இருந்து வரிகளை மட்டுமே எண்ணிக்கொண்டோம்  எனத் தன் ``பாவங்களை`` கழுவிக்கொண்டது!

இதையே தான் ராஜபக்சவும் கூறுகின்றான், `இலங்கை ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு கொடி,ஒரு அரசு.இலங்கையர் யாவரும் இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் வாழலாம். இலங்கையின் ஏனைய மாகாணங்களைப் போன்றவையே வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும்.வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோருவது
போல இதர மாகாணத்தவரும் கோரினால் நான் என்னுடைய  இராணுவத்தை எங்கே கொண்டு போய்வைப்பது`. ஒரு பொறுப்புமிக்க நாட்டின் ஜனாதிபதியின் எவ்வளவு  ஜனநாயகபூர்வமான வாதங்கள் இவை.தமிழ் மக்களே கூட வடக்கு கிழக்கு மாகாணத்தைத்தான் தமது தாயகம் என்கிறார்கள்.ஆனால் அதி உத்தம ஜனாதிபதியோ முழு
இலங்கையிலும் வாழலாம் என்கிறார்! எவ்வளவு பெரிய மனது இந்த மனிதருக்கு!!

இலங்கை ஒரு நாடு, ஒரு தேசம் ஒற்றையாட்சி என்ற கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டால் பக்ச பாசிஸ்டுக்களின் மேற்கண்ட வாதங்களை நிராகரிக்க முடியாது என்பது மட்டுமல்ல அவை முற்றிலும் நியாயமானவையாகவும் மாறி விடும்.

அல்லாமல் பக்ச பாசிஸ்டுக்களின் மற்றும் அவர்களது எஜமானர்களான ஏகாதிபத்தியவாதிகளதும், இந்திய விரிவாதிக்க விச வாயு அரசினதும் வாதங்களை நிராகரிப்பதாக இருந்தால் இலங்கை ஒரு நாடு இரு தேசம் என்ற முரணற்ற ஜனநாயக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

இலங்கை ஒரு நாடு, இரு தேசம்.

சிங்களவர்களுடைய சிறீலங்கா தேசம் ஒடுக்கும் தேசம்.தமிழர்களுடைய தமிழீழ தேசம் ஒடுக்கப்படும் தேசம்.வரலாற்று ரீதீயான இவ் ஒடுக்குமுறையின் தொடர் விளைவாகஇலங்கை மைய அரசு இன ஒடுக்குமுறையின் மீது கட்டமைக்கப்பட்டுவிட்டது,இலங்கையில் இன சமத்துவம் அடையப்பட வேண்டுமானால் இன ஒடுக்குமுறை அரசின் தகர்வில் மட்டுமே அடையப்பட முடியும்.இன ஒடுக்கு முறை அரசின் தகர்வு என்பது ஈழத்தமிழினம் சுய நிர்ணய உரிமை பெறுவதிலேயே அடங்கியுள்ளது.அல்லாது அனைத்து அதிகாரப் பகிர்வுத்திட்டங்களும்
இன ஒடுக்குமுறையை வேறு வழிகளில் தொடரும், இன ஒடுக்குமுறை அரசைப் பாதுகாக்கும்,சீர்திருத்த,சமரச ஜனநாயகவிரோத திட்டங்களும் பாதைகளுமே ஆகும்.

மேலும் இலங்கையின் தனிக்குறிப்பான வரலாற்று நிலமை ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையை பிரிவினைக் கோரிக்கையாக மாற்றிவிட்டது. 1977 இலேயே  தமிழ் மக்கள்
ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் இதனைத் தீர்மானித்துவிட்டனர்.

இந்த அரசியல் அடித்தளத்தில் நடந்தேறிய 30 ஆண்டுகால தமிழீழ விடுதலைக்கான தற்காப்பு யுத்தம் இறுதிக்கட்டத்தில் மட்டும் ( முள்ளிவாய்க்கால் முற்றுகை இனப்படுகொலை) ,ஒன்றரை இலட்சம் மக்களைப் பலிகொண்ட இனப்படுகொலையின் மூலம் முறியடிக்கப்பட்டது.தமிழீழ இராணுவத்தலைமை விச வாயு அடித்து ஆனந்தபுரத்தில் அழித்தொழிக்கப்பட்டது.

இதற்குப்பிந்திய ஐந்து ஆண்டுகளில் தமிழீழ ஆக்கிரமிப்பும் இனப்படுகொலையும் தொடர்கின்றது.தமிழ்த் தாய்க்குலம் மீது கட்டாயக் கருக்கலைப்பு பாசிசத் திட்டம் பலாத்காரமாகப் பிரயோகிக்கப் படுகின்றது.இந்தப் பின்னணியில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தமிழீழத்தனி நாடே தீர்வு என்பது திருத்தி எழுத முடியாத தீர்ப்பாகிவிட்டது.

இவ்வாறுதான் ஈழத்தமிழ் தேசிய இனப்பிரச்சனையை ஐனநாயகரீதியில் முன்வைக்க வேண்டும், முன்வைக்க முடியும்.

இதன் மூலம் மட்டுமே பக்க்ஷ பாசிஸ்டுக்களினதும், பௌத்த பிக்கு பிசாசுகளினதும், சிங்கள பேரின வெறியூட்டப்பட்ட அறிவுஜீவிகளினதும், பெரும் தேசிய வெறிபிடித்த  ஊடகங்களினதும், சிங்கள திருச்சபைகளதும், அழுக்கு மூட்டைகளைக் கழுவ முடியும்.கூடவே அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விரிவாக்க அரசினதும் அவர்களினது கட்டப் பஞ்சாயத்து ஐ.நா வினதும், பக்ச பாசிஸ்டுக்களின் இனப்படுகொலைக்குத் தொடர்ந்து துணை நிற்கும் பச்சைத் துரோக்கத்தையும்,வர்க்கச் சார்பையும் அம்பலப்படுத்த முடியும்.

இத்தகைய ஒரு முரணற்ற ஐனநாயகப் பாதையில் அல்லாமல் இனிமேல் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது விடுதலைப் பயணத்தில் ஒரு அங்குலமும் நகர முடியாது.

இன்று தமிழீழ விடுதலைக்கான போராட்ட இயக்கத்தின் மேற்பரப்பில் நின்று கரகாட்டம் ஆடுவோர் அனைவரும் அடிப்படையில் ஒரு முகாமைச் சார்ந்தவர்கள்.

இவர்கள் ஏகாதிபத்திய முகாமைச் சார்ந்தவர்கள்.

``ஸ்ராலினை சர்வாதிகாரி என்று பிரகடனம் செய்தது போல் ராஐ பக்ஷவையும் சர்வாதிகாரி எனப் பிரகடனம் செய்.சதாமைத் தூக்கிலிட்டது போல் ராஐ பக்ஷவையும் தூக்கிலிடு. கொசோவையும் தென் சூடானையும் பிரித்ததுபோல் தமிழீழத்தையும் துண்டாடி எமதுகையில் கொடு.`` எனக் கூக்குரல் இடுகின்ற கும்பலிது.
எவ்வளவு தன்மானமிக்க  தமிழ் முழக்கங்களை வை!

ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விஸ்தரிப்புவாத விஷவாயு அரசும், கட்டைப்பஞ்சாயத்து ஐநாவும் மீண்டும் மீண்டும் முதுகில் குத்துகின்றபோது இவர்கள் இவ்வாறு பிடிவாதம் சாதிப்பதற்கு ஒருவேளை இவர்கள் கவரிமான் சாதியென்பது காரணமாக இருக்குமோ?!

இந்தமுகாம் இரண்டு அணிகளைக் கொண்டது. ஒன்று இலங்கை அணி. இரண்டு புலம் பெயர் அணி

ரொட்ஸ்கிய திரிவுவாதத்தினதும் சந்தர்ப்பவாதத்தினதும் தர்க்கரீதியான விளைவான இலங்கை இடதுசாரி இயக்கத்தின் கடைசிவாரிசு வாசுதேவ நாணயக்கார எவ்வாறு பக்ஷ பாசிஸ்டுகளின் கைக்கூலி அரசு அதிகாரியானாரோ, ராஐ பக்ஷ தனது அரசாங்கம் ஐனநாயக அரசாங்கம் என எடுத்துக் காட்டுவதற்கு ஒரு ஆதாரமானாரோ, அதேபோலவே குறுமினவாத சந்தர்ப்பவாத சமஷ்டி இயக்கத்தின் கடைசிவாரிசு சம்பந்தனும் பக்ஷ பாசிஸ்டுகளின் கைக்கூலியாக நிற்பதைக் காண்கிறோம்.``சம்பந்தன் சுமந்திரன் விக்னேஸ்வஎரன்` மூவர் கும்பல் பக்ச பாசிஸ்டுக்களின் அடியாட்களே! `கோட் சூட் அணிந்த `டக்ளஸ்`கருணா,பிள்ளையான்` கும்பலே இம்மூவர் கும்பலாகும்.இவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் இருக்கும் எதிரியின் கையாட்கள் ஆவர்.போரின் இறுதிக் கட்டத்தில்
 புலிகள் இயக்கத்துக்குள் ஊடுருவிய ``கருணாவின் ஆட்கள்`` என்கிற எட்டப்பர் கும்பல் போரின் முன்னேற்றத்துக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி தோல்வியைத் தழுவ துணை நின்றதோ,அதே பாத்திரத்தைத்தான் யுத்தம் ஓய்ந்த பின்னான இரத்தம் சிந்தா அரசியல் போர்க்களத்தில் இம் மூவர் கும்பல் ஆற்றுகின்றது. இது பிரதானமாக பக்ச பாசிஸ்டுக்களைச் சார்ந்து, ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க நலன்களுக்கு சேவை செய்ய  தமிழ்மக்களை பகடைக் காய்களாய்ப் பயயன்படுத்துகின்றது.
இதனால் இதன் முழக்கம் ஒற்றையாட்சி, நியாயமான அதிகாரப்பகிர்வு என்பதாக இருக்கின்றது.

புலம்பெயர்  தளத்தின் தரகுத் தமிழணி, ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அந்நிய சக்திகளைச் சார்ந்துநின்று ராஐ பக்ஷவை தனிமைப்படுத்தி நாடுபிடிக்கலாமென  கனவு காண்கின்றது.

ஒரு வேளை இலங்கையில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஏகாதிபத்தியவாதிகள் திட்டமிட்டால் புலம் பெயர் பேரவைகள் ஒபாமாவுக்கான தமிழர்கள் நாடுகடந்த அரசாங்கம் என ஈழத்தமிழர்களை ஆள்வதற்கு ஒரு ஆண்ட பரம்பரை ஐரோப்பாவில் தயாராகி வருகிறது.

இந்த இரு அணிகளினதும் ஆட்சிக் கனவுகளை யதார்த்தநிலைமை அனுமதிப்பதாக இல்லை.
உள்நாட்டில் ஒரு அதிகாரப் பகிர்வுத் தீர்வுக்கு சிங்களம் ஒருபோதும் தயாராக இல்லை. 
ஏகாதிபத்தியவாதிகள் இன்றைய சூழ்நிலையில் ஒரு உடனடியான ஆட்சிக் கவிழ்ப்புக்கு தயாராக இல்லை.உள்நாட்டில் ஊடுருவல் சக்திகளும் பலமாக இல்லை. 

ஆனால் அதைநோக்கி நகர்ந்து வருகின்றனர்.  சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள்தான் இதன் சாத்தியப்பாட்டைத் தீர்மானிக்கும்.

ஆங்காங்கே வீரம் கொப்புளிக்க “இனியும் பொறுக்கமாட்டோம்”, “பாரதூரமான விளைவுகள் ஏற்படும்” போன்ற உப்புச் சப்பற்ற உளறல்களுக்கப்பால் இவர்களது ஏகாதிபத்திய நலன் விடுதலைப் போராட்டத்தில் ஊன்றி நிற்க இவர்களை அனுமதிக்காது. ஜனரஞ்சகமான மக்கள் முழக்கங்களைத் தமது கைகளில் எடுத்து மக்களைத் தம்பின்னால் திரட்டி, சமரசப் பாதையில் விடுதலை எழுச்சிக்கு வடிகால் அமைப்பதே ஒரு சமூக வர்க்கம் என்கிற முறையில் இவர்களது வரலாற்றுப் பாத்திரமாகும்.

ஜெனிவாக் காவடி

முட்டுச் சந்தியில் சிக்குண்ட இந்த நிலையில் இருந்து முன்னேற எங்காவது ஒரு இடத்தில் முறையிட வேண்டும். ஒரு ஆராய்ச்சி மணி வேண்டும். அது ஆளும் வர்க்க அதிகாரபூர்வ மணியாகவும் இருக்க வேண்டும்.  ஆக அடைக்கலம் ஐநா சபையிடம்.

இந்த ஜெனிவாக் காவடியின் அடிப்படைக் கோரிக்கை ”இறுதியுத்தப் போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை” என்பதுதான்.

இதரவற்றையெல்லாம் தலைவர்கள் அலங்காரத்துக்காக பேசுகிறார்கள்.
மக்கள் தம் சொந்த முழக்கங்களை முழங்க உரிமை பெற்றிருக்கிறார்கள். இதனால் இந்த இயக்கம் மக்கள் முழக்கத்தைச் சார்ந்ததுபோல ஒரு போலித் தோற்றப்பாட்டை அளிக்கிறது. எல்லா ஊர்வலங்களிலும்
பிரபாகரனின் இராணுவச் சீருடையணிந்த ஒரு பெரிய உருவப் பதாகை கம்பீரமாக நடந்து செல்கிறது. அதை மக்கள் காவிச் செல்கின்றனர். அதன் பின்னால்  ”நமது தலைவன் பிரபாகரன்” என்ற முழக்கம்
விண்ணதிர ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.தலைமை காதுகளை பொத்திக்கொள்ளாத குறையாக சகித்துத் தீரவேண்டியிருக்கின்றது!
இம்முழக்கம்  தொடர்ந்து வருவதால் இப்போதைக்கு இந்த சமரசவாதத் தலைமை பிரபாகரனிடமிருந்தோ அல்லது தமிழீழத்திடமிருந்தோ தன்னை கறாராக துண்டித்துக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால்
அது தமிழீழ பொதுமக்களிடம் இருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்காக ஈழவிடுதலைப் போரின் சாயங்கள் சிலவற்றை தன்மேல் பூசிக் கொண்டு இந்த அணி பயணம் செய்கிறது..

ஈழத்தமிழர் சார்பில் ஐ.நா.விடம் இறுதிக்கட்டப் போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை தேவை என முறையிட்டு நீதி கோருகின்றது. இதுதான் வழக்கு!

இந்த வழக்கின் பல்வேறு பிரச்சனைகளை இன்னும் இவ்வழக்கில் தமிழர் சார்பில் வாதிடும் அரசியல் வக்கீல்கள் முறைப்படுத்தி முரணற்ற வகையில் முன்வைக்கவில்லை. அவையாவன:

1) சிங்களம் நடத்திய குற்றப் போர், மனித உரிமை மீறலா? இனப்படுகொலையா? தமிழீழப் படுகொலையா?

2) போர்க்குற்றத்தை எங்கிருந்து தொடங்குவது? காலனியாதிக்க காலத்தில் இருந்தா? அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின்னாலா? அல்லது சிங்களம் தன்னிச்சையாக 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மாவிலாறில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை கட்டவிழ்த்த இனப்படுகொலையின் காலப்பகுதியையா?

3) 1972 ஏப்ரல் ஜே.வி.பி கிளர்ச்சியில் இந்திய-இலங்கை அரசுகளின் குற்றங்களை எவ்வாறு வகைப்படுத்துவது?

4) 1987 இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தமிழருக்கு எதிராக இழைத்த  போர்க்குற்றங்களுக்கு என்ன கணக்கு? பிரேமதாசா அரசு சிங்களப் போராளிகள் மீது ஏவிய நரபலி வேட்டைக்கு என்ன கணக்கு எங்கே விசாரணை? இவை இவ்விசாரணையில் அடங்குமா? இல்லையா? இல்லையென்றால் ஏன்?

5) இந்திய ஆக்கிரமிப்புப்படை, வெளியேற்றத்தின் பின்னால் பிரேமாதாசஅரசு தொடுத்த போரும் குற்றங்களும்;

6) பின்னால் `சமாதானத்துக்காக சனல்4 தேவதை சந்திரிக்கா தொடுத்த யுத்தம்`, நவாலித் தேவாலயப் படுகொலை; இவையெல்லாம் என்னகுற்றங்கள்? எங்கு விசாரணை? எப்போது விசாரணை??

4) ஈழதேசிய  இனப் படுகொலையின் பொறுப்பாளி இலங்கை அரசு மட்டுமா? அமெரிக்க இந்திய அரசுகளின் பாத்திரத்தின் மீது விசாரணை அவசியமா இல்லையா?

5) ஈழதேசிய இனப் படுகொலையை இலங்கை அரசு ``விடுதலைப் புலிப் பயங்கர வாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்த மனிதாபிமான நடவடிக்கை`` என்று கூறி வருகின்றது. தரகுத் தமிழணி நீதி கோரும்
அரசுகளும் மன்றங்களும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்து செய்த தடையை இன்னும் நீக்கவில்லை.இது குறித்து கருத்து என்ன?

6) தமிழீழ விடுதலைப்புலிகள் தேசிய சுதந்திர விடுதலைப் போராளிகளா? பயங்கரவாதிகளா? தரகுத் தமிழ் அணியின் நிலையென்ன?

7) போர்க்குற்றத்தில் இருந்து ஈழ தேசத்துக்கு நீதி என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களுக்கு தண்டனையா? அல்லது தேசிய இனப் படுகொலையில் இருந்து தப்பித்து வாழ பிரிந்து செல்வதற்கான உத்தரவாதமா?

8) போர்க்குற்றம் இழைத்த அரசுத் தலைவர் மீது அவர் ஆட்சிக்காலத்தில் விசாரணை செய்ய இயலாது என்கிற சர்வதேச சட்ட சிறப்புச் சலுகை சரியானதா? அநுமதிக்கத்தக்கதா?

9) அமெரிக்கா ஆக்கிரமித்துள்ள நாடுகளில் அமெரிக்க அரச படையினர் இழைக்கும் குற்றங்களை அந்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் விசாரணை செய்ய முடியாது, என்கிற சுதந்திர தேவியின் நீதி சரியானதா?
அவ்வாறெனில், இலங்கைப் படைகளை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இயலாது என்கிற பக்ச தேவதையின் கேள்விக்குப் பதில் என்ன?

10) பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து,இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, அமெரிக்காவுக்கு ஒரு நிரந்தர இராணுவத்தளத்தை உருவாக்கியது முதல்,இன்று உலகெங்கும் நடக்கும் உலக மறுபங்கீட்டு அநீதி யுத்தங்களிலும், ஆட்சிக்கவிழுப்புகளிலும் ஐ.நா.வின் பாத்திரம்,யுத்தத்தின் இறுதி நாட்களில் ஒரு கரம் கூப்பி தொழுத மக்களை சாட்சியம் இன்றி திட்டமிட்டு கைகழுவிட்ட ஐ.நா.சபை, ஒரு இலட்சத்து 44ஆயிரம் மக்களின் படுகொலைக்கு வழிசமைத்துக்கொடுத்த ஐ.நா.சபை, இன்னும் கொல்லப்பட்டவர்கள் ஆக நாற்பதினாயிரம் பேரென்றே,அதிகாரபூர்வமாக கூறிவருவது,நிரூபணமான போர்க்குற்றவாளிகளை இன்னும் தனது அதிகாரிகளாக பணியில் அமர்த்தியிருப்பது,ஹேக் நீதிமன்றம்  குறிப்பாக ஆபிரிக்க `முரட்டு அரசுகளின்` ஆட்சித்தலைவர்களையே குறிவைத்து உலக நீதி வழங்குவதாக உள்ள ஆதாரபூர்வ பலமான குற்றச்சாட்டு,இந்த கீர்த்திகளின் பின்னணியில்’ ஐ.நா.சபையை ஒரு சர்வதேசப் பிரச்சனையில் ஒரு நடுவர் மன்றமாகக் கொள்ளமுடியுமா?

11) போர்க்குற்றம் உலகப் பொது நிகழ்வாகிவிட்ட சூழலில் பாதிக்கப்பட்ட  அனைத்து தேசங்களுடனும் ஒன்றுபட்டு தமிழர்கள் போராடுவதா?  அல்லது அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு ஏகாதிபத்தியவாதிகளோடு கூட்டணி
சேர்வதா? எது சரியான செயல் தந்திரம்?

12)  தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமை-பிரிவினைப் போரை நசுக்கிய இராணுவ வழிமுறையே இனப்படுகொலை. இனப்படுகொலைப் பிரச்சனையை, சுயநிர்ணய உரிமைப் பிரச்சனைக்கு மேலாக வைப்பது சரியா?
இது சந்தர்ப்பவாதம் ஆகாதா?

13) விசாரணையா? தண்டனையா?

No Fire Zone என்கிற முள்ளிவாய்க்கால் முற்றுகை ஒரு வெகுஜனப் படுகொலை மூலம் புலிகள் இயக்கத்தைப் பூண்டோடு அழிக்கும் திட்டமே.ஆனந்தபுர விசவாயுத்தாக்குதல் நயவஞ்சகமான,கோழைத்தனமான முறையில்
புலிகள் தலைமையை அழிக்கப் போடப்பட்ட திட்டமே.உயிர் பிழைத்த ஒவ்வோரு தமிழனுக்கும் இது இனப்படுகொலை என்பது தெரியும்.உலக அரங்கில் இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.நிரூபணமான
குற்றத்தை எத்தனை தடவை விசாரிப்பது? அதுவும் குற்றவாளியே விசாரிப்பது? தண்டனை வழங்குவது யார்? எப்போது??

ஆக இவற்றில் எவற்றுக்கும் இந்த ஐந்து ஆண்டுகளில்   இந்தத் தரகுத் தமிழ் அணி தீர்வுகாணவில்லை.எல்லா மாறுபட்ட கருத்துக்களும்,அடிப்படையில் முரண்பட்ட நிலைப்பாடுகளும் அக்கம் பக்கமாக நடக்கின்றன.சமாதான
சக வாழ்வு நடத்துகின்றன!

வடக்கு மாகாணசபையும்,தமிழீழமும்; மனித உரிமை மீறலும்,இனப்படுகொலையும்; 40 ஆயிரமும் ,ஒன்றரை இலட்சமும்; பிரபாகரனும்,ஒபாமாவும் ஒரு சேரக் கை கோர்த்து களி நடனம் புரிகின்றன.

இதனால் இந்த தமிழ்த் தரகு அணியின் தலைமை ஏகாதிபத்திய தாசர்களாகவும்,இந்திய விரிவாதிக்கப் பாசகர்களாகவும்,சந்தர்ப்பவாத,சமரசத் தலைமையாகவும் இருக்கின்றது.இதனால் இது ஏகாதிபத்திய வாதிகளால்
ஊட்டி வளர்க்கப்படுகின்றது.இந்தத்தலைமையில் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதி பெறவும் முடியாது, தொடரும் ஈழதேசிய அழிப்பை நிறுத்தி விடுதலை பெறவும் முடியாது.

இனப்படுகொலைக்கு நீதி கோரும் இயக்கம் ஈழத்தமிழர்களின் ஒரு ஜனநாயக இயக்கமாகும்.எந்த இயக்கத்தையும் போலவே இந்த இயக்கமும் ஒரு ஜனநாயகத்திட்டம் இல்லாமல் வெற்றி பெற முடியாது. இந்த
ஜனநாயகத்திட்டம், தமிழீழ விடுதலைக்கான ஜனநாயகத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் வாக்களிக்கப்பட்ட  இலங்கைச் சுதந்திரத்தின் தத்துவார்த்த  அடிப்படைகளை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.ஈழதேசியப் பிரச்சனையில் ஜனநாயக நோக்கு நிலையை உருவாக்க இது மிக அவசியம்
ஆகும்.

இலங்கைச் சுதந்திரம் குறித்து:

பிரித்தானிய நேரடிக்காலனியாதிக்கத்தில் இருந்து இலங்கை அரைக்காலனிய அதிகாரக் கைமாற்றம் பெற்ற நிகழ்வு ஒரு காலகட்டத்தின் பொது நிகழ்வுப்போக்கை அநுசரித்து நடந்தேறிய ஒரு நாட்டு நிகழ்வாகும்.

அந்தக் கால கட்டம் என்ன? அந்த பொது நிகழ்வுப் போக்கு என்பது என்ன?

1) முதலாளித்துவ மிகை உற்பத்தியின் முதல் உலகப் பொது நெருக்கடி,சமாதான உலக மறுபங்கீடு முற்றுப்பெற்றுவிட்ட வேளையில் பலாத்காரச் சந்தைப் பறிப்புக்காக முதல் உலகப்போர் 1914 இல் வெடித்தது.

2) இந்தப்போர் இரு சந்தைப் பறிப்பு அணிகளுக்கு இடையில் மூண்ட போது, ``தாய் நாட்டைக் காப்போம்`` என்று கூறி ஒரு ஆதிக்க அணிக்கெதிராக மற்றொரு ஆதிக்க அணியை சாரும்  சந்தர்ப்பவாத செயல் தந்திரத்தை
திருத்தல் வாதிகள் முன் வைத்தனர். கம்யூனிஸ்டுக்களோ ``உலகப்போரை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவோம்`` என முழங்கினர்.

3)இதற்கமைய ரசியாவில் முதல் உலக சோசலிச புரட்சி வெற்றி பெற்று மனித குல வரலாற்றில் முதல் தடவையாக பாட்டாளிவர்க்க சோசலிச அரசு நிறுவப்பட்டது.

4) 1914 உலகப்போர், 1917 ரசிய சோசலிசப்புரட்சி உலகின் இயக்கப்போக்கை முழுதாக மாற்றியது.

5) இதில் முதன்மையானது நேரடிக் காலனியாதிக்கத்தின் தகர்வாகும்.இந்த நிகழ்ச்சிப்போக்கின்,தொடர் விளைவுகளின், ஒரு பகுதியாகத்தான் இலங்கையும் நேரடிக் காலனியாக இருந்ததில் இருந்து அரைக்காலனியாக மாறியது.

6) எனினும் இந்த மாற்றம், தொடரும் அரைக்காலனிய அடிமைத்தனத்திற்கும்,ஆக்கிரமிப்புக்கும்,சேவகம் செய்யும் அணியை, ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மையில் இருந்தும் தான் தெரிவு செய்துகொண்டது.

7) பிரித்தானிய நேரடிக்காலனியாதிக்கத்தை எதிர்த்து  பூரண விடுதலைக்காக இலங்கை மக்கள் - குறிப்பாக சிங்கள மக்கள்- நடத்திய போராட்டத்துக்கு எதிராக அரைக்காலனிய அடிமைத்தனம் தொடர சமரசம் செய்து கொண்டவர்கள் எந்த சிங்களத் தலைவர்களும் அல்ல! தமிழ்த் தலைவர்களே ஆகும். நேரடிக்காலனியாதிக்கத்துக்கும் அரைக்காலனிய அதிகாரக் கைமாற்றத்துக்கும் இடைப்பட்ட காலத்தின் கதாநாயகர்கள் இராமநாதனர்களே ஆவர்.

ஆக 1947 சுதந்திரம் சிங்களவருக்கு கிடைத்தது என்கிற தமிழ்த் தரகு அணியின் வாதம்; தோல்வி வாதமும் வரலாற்று இருட்டடிப்பும் முழு முட்டாள்த்தனமுமாகும்.

இலங்கைச் சுதந்திரமும் தமிழீழ விடுதலையும்.:

முதல் உலகப் போருக்கும், முதல் உலக சோசலிசப் புரட்சிக்கும் பிற்பட்ட ஏகாதிபத்திய ஒழிப்பு சோசலிச புரட்சி சகாப்த்தத்தின் தமிழீழ விடுதலைப்புரட்சி  பழைய  முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் வகைப்பட்டது அல்ல.

இது புதிய ஜனநாயக தேசிய விடுதலைப் புரட்சியின் வகைப்பட்டதாகும்.

ஏகாதிபத்தியவாதிகளோடு கூட்டணி சேர்ந்து சிங்கள அதிகாரத்தை தனிமைப் படுத்தி தமிழீழ பொம்மை அரசர்களாகி கோட்டை கொத்தளங்களோடு, கொடிகட்டி,  ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளும் கனவை துரதிஸ்ரவசமாக புறவய நிலைமைகள் அநுமதிக்காது.

மாறாக உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேர்ந்து  சிங்களத்தையும் அதற்கு முண்டு கொடுக்கும்  ஏகாதிபத்தியவாதிகளையும் இந்திய விரிவாதிக்க அரசையும் எதிர்த்து தமிழீழப் பிரிவினைக்குப் போராடுவதே தமிழீழ விடுதலைக்கான ஒரே பாதையும் வழியும் ஆகும்.

இந்த விடுதலைப் பிரவாகத்தை உருவாக்கும் பிரச்சார இயக்கத்தில் பின்வரும் முழக்கங்களை கையேந்தி பங்கேற்குமாறு அறை கூவி அழைக்கின்றோம்.

* ஈழதேசிய இனப்படுகொலை அரசை தொடர்ந்து பாதுகாக்கும் ஏகாதிபத்திய ஐ.நா.அமைப்பின் துரோகத்தை எதிர்ப்போம்!

* தமிழ்த் தரகு அணியின் சமரச சந்தர்ப்வாத ஏகாதிபத்திய தாச ஐ.நா.நீதிப்பாதையை நிராகரிப்போம்! 

* இலங்கையில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளையும்,அரசு சாரா நிறுவனங்களையும் ஒருபோதும் அநுமதியோம்!

* போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்போம்!

* புதிய ஈழம் அமைக்க புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்!!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்.