Wednesday 27 February 2008

சாதியமும் வர்க்கமும் தேசியமும்

சாதியமும் வர்க்கமும் தேசியமும்
சாதியம் தொடர்பாக எழுந்துள்ள கோட்பாடு மற்றும் நடைமுறைப் பிரச்சனைகளில் நமது அணுகுமுறை.
புரட்சிப் பண்பாட்டு இயக்கம்- தமிழ் நாடு.(1987 ஓகஸ்ட் 15-16)
சாதியம் நீண்ட நெடுங்காலமாகவே தமிழகத்தில் வேரூன்றிப் படர்ந்துள்ளது. ஏனைய நாடுகளில் பொதுவுடமைப் புரட்சியாளர்கள் எதிர் கொள்ளாத ஒருசமூகவியல் அம்சமாக சாதியம் தமிழகத்தில் - இன்னும் விரிவாகச் சொன்னால் இந்தியப்பகுதிகளில் உள்ளது. சாதியின் தோற்றம் வளர்ச்சி குறித்து விரிவான ஆய்வுகள் உள்ளனவெனினும், அவை பற்றி இறுதியானதும் தீர்க்கமானதுமான ஆய்வு முடிவுகளை வகுத்துக் கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன.இந்த அணுகுமுறைக் கட்டுரையில் சாதியம் தொடர்பாக எழுந்துள்ள கோட்பாடு, நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து நமது கருத்துக்கள்தொகுக்கப்பட்டுள்ளன.
சாதி அமைப்பின் தனிக் குறிப்பான இயல்புகள்:
சாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது;விருப்பம், தகுதி அடிப்படையில் அல்லாமல் பிறவியின் அடிப்படையில் தொழில் அமைவது; ஒரு குறிப்பிட்ட உணவு முறையைக் கட்டாயமாக்குவது;சமூக அமைப்பில் பல படி நிலைகளைத் தோற்றுவிப்பது; தனிமனித ஒழுக்கங்களை கட்டுப்படுத்தக் கூடியது;பொது நலன்களை மக்கள் அனைவரும் அனுபவிப்பதைத் தடை செய்வது.
சாதி அமைப்பு அடிக் கட்டுமானத்தைச் சார்ந்ததா? மேற் கட்டுமானத்தைச் சார்ந்ததா?

சாதி என்பது வேலைப் பிரிவினையின் வடிவம்; உற்பத்தி உறவின் வெளிப்பாடு.இந்த விதத்தில் அது அடித்தளப் பகுதியாக அமைகின்றது.அதேநேரத்தில் மணமுறை, உணவு முறை , ஒழுக்க நெறிமுறை, சமூகபடி நிலைகளைப் பேணுதல் ஆகியவற்றை வலியுறுத்தும் போது அது கருத்தியல் அம்சமாக விளங்குகின்றது. இந்த விதத்தில் மேற் கட்டுமானமாகவும் தொழிற்படுகிறது.இதை அடிக் கட்டுமானத்துக்கும் மேற்கட்டுமானத்துக்கும்இடையிலான உறவில் காண வேண்டும்.

சாதிக்கும் வர்க்கத்துக்கும் இடையிலான உறவு:

தமிழக தமிழ்ச் சமுதாயத்தில் சாதிக்கும் வர்க்கத்துக்கும் இடையிலான உறவு இன்னொரு பிரச்சனையாகும்.உழைப்புப் பிரிவினையும், உபரி மதிப்பும்தோன்றிய போதே வர்க்கங்கள் தோன்றி விட்டன.எனவே வர்க்கம் சாதிக்கு முந்தையதாகும்.ஆனால் சாதி என்ற அமைப்பு,வேலைப் பிரிவினையின்வடிவமாகவும் வாழ்வியல் சிந்தனையியல் கூறாகவும் அமைந்த பின்னர் சாதி என்பதே வர்க்க வேறுபாட்டின் வெளிப்பாடாக அமைந்து விடும்.குறிப்பாகநில உடமைக்காலத்தில் சாதி என்பது வர்க்க அமைப்பின் கூறாகவே இருந்திருக்கும்.அதாவது ஒரு சாதி என்பதே ஒரு வர்க்கமாகஇருந்திருக்கும்.ஆனால் நிலவுடமைக் கூறுகள் தகர்ந்து முதலாளியக் கூறுகளின் வளர் முகத்தில் -அதாவது- தகுதி திறமையின் அடிப்படையில்தொழில் அமையுங்காலத்தில், சாதியின் ஆதாரக் கூறுகள் தகர்கின்றன. ஒரே சாதிக்குள் பல வர்க்கங்கள் தோன்றுகின்றன.இங்கு சாதியின் பொருளியல்கூறுபாடு-அடித்தளம்- தகரத்தொடங்குகின்றது. உணவுமுறை, பழக்க வழக்கங்கள் போன்ற கலாச்சாரக் கூறுபாடுகளில் மாற்றங்கள் படிப் படியாகஏற்படினும்,படி நிலை அமைப்பைப் பேணல் பொது நலன்களை அனைவருக்கும் சமமாக அனுபவித்தலைத் தடை செய்தல்,போன்ற கலாச்சாரக்கூறுபாடுகளில் மாற்றங்கள் நிகழாமல் சாதியின் கருத்தியல் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

வர்க்கப் போராட்டத்துக்கும் சாதியத்துக்கும் இடையிலான உறவு:
வர்க்கம் என்பது சாதியின் மறு வடிவமாக இருந்த நிலவுடமைக் காலச்சூழலில் நிலமை சற்று சிக்கலானதாகும்.ஆனால் பொருளாதாரத்துறையில்ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையானவையாகும்.சாதிகளை ஒழித்தாலே வர்க்கப் போராட்டம் நடத்த இயலும்என்ற தத்துவம் (திராவிடர் கழகம்,அம்பேத்கார் இயக்கம் போன்றவை) சாதியையும் வர்க்கத்தையும் தனித்துப் பார்ப்பதாகும்.ஒரேசாதிக்குள்ளே காணப்படும் பகமை வர்க்கங்கள் தம்முள்மோதிக்கொள்ளும் சூழலும், அடிப்படை வர்க்கத்தினர் - பெரும்பான்மையாக இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகள் மேல் நிலை சாதிகளுக்குள் இருக்கும்ஆளும் வர்க்கத்தினருடன் மோதும் சூழலும் தவிர்க்க இயலாதவை ஆகும்.

சாதியின் தோற்றமும் வளர்ச்சியும்:
சாதியின் தோற்றமும் வளர்ச்சியும் எளியவகைப்பட்ட மறு உற்பத்தியுடன் தொடர்பு கொண்டிருந்தவை ஆகும்.இது நிலவுடமைக்காலத்திய சுயதேவைஉற்பத்தி முறைக்கானதாகும்.ஆனால் முதலாளிய வளர் முகச் சூழலில், குலைந்து விரிவாக்கப்பட்ட மறு உற்பத்தி பரவுகிறது.இத்தகு சூழலில் சாதியின் பொருளாதார அடிப்படை தகர்கிறது.எனினும் சாதியின் கலாச்சாரப் பிடிப்புத் தளரவில்லை.முதலாளிய விவசாயமுறை பரவிய இடங்களில் கூட, உபரி மதிப்பைக் கொள்ளையடிக்க சாதியின் கலாச்சார அம்சம் பயன்படுகிறது. இந்தவிதத்தில் சாதி என்பது பொருளாதாரம் தவிர்ந்த ஒடுக்குமுறை வடிவமாகவும் உள்ளது.

சமயத்துக்கும் சாதிக்கும் உள்ள உறவுப் பிரச்சனை:
சமயம் என்பதுபிறவியின் அடிப்படையிலானதெனினும் விருப்பார்ந்த முறையில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஜனநாயக உரிமைபெற்றதாகும்.மதமாற்றம் என்பது திருநாவுக்கரசர் காலம் தொட்டு இருப்பதாகும்.ஆனால் சாதி மாற்றம் அங்கீகரிக்கப்பட இயலாதது.சைவ வைணவ சமயங்கள், சாதி அமைப்பிற்கும் வேறுபாட்டிற்கும் இடம் வகுத்(அளித்)துள்ளன.சாதி வகையிலான ஏற்றத்தாழ்வுக்கும் இடம் அளித்துள்ளனஆனால் வரலாற்றின் சிற்சில கட்டங்களில் இந்தச்சமயங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போது சாதிகளுக்கு இடையில் சமத்துவம் பேணப்படலும் உண்டு.இந்த விதத்தில் தான், எல்லா சாதிகளையும் சேர்ந்த சைவ நாயன்மார்களும் ஒரு காலகட்டத்தில் வருகின்றனர்.வேதத்தை எல்லா மக்களுக்கும் ஓதி இராமானுயர், அனைவரையும் பார்ப்பனர் ஆக்குகின்றார்.இன்றைய நிலையில் ஐயப்பன் வழிபாடு, ஆதிபராசக்தி வழிபாடு போன்றவற்றில் சாதிகளுக்கு இடையே ஜனநாயகமும் சமத்துவமும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை நெருக்கடி காலத்திய தற்காலிக சமரசங்கள் ஆகும்.இவற்றிலும் கூட முழுமையான சமத்துவம் இல்லையெனினும் இந்து சமயவுலகில் ஏற்படும் நெருக்கடிகளை இவை தற்காலிகமாக தணிக்க வல்லவையாகும்.ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து மத அமைப்புக்களும் தம் உறுப்பினர்கள் எவ்வித சாதி அமைபுக்களிலும் இருக்கக் கூடாதென நிபந்தனை விதித்துள்ளன. எனினும் இவை சாதிய வேறுபாடுகளை நிராகரிப்பவையாக இல்லை.
அரசியல் சமூகத்துறையில் சாதியம்.
அரசியல் சமூகத்துறையிலும் சாதியின் பிடிமானம் அதிகம் உள்ளது.முதலாளியச் சூழல் வளராத இடங்களில் சாதியின் பொருளாதாரப் பிடிமானம் இன்னும் தகரவில்லை.முதலாளியச் சூழல் வளர்ந்த பகுதிகளில் (கிராமமாயினும், நகரமாயினும்) சாதியின் கருத்தியல் ஆதிக்கம் இன்னும்தளர்ந்துவிடவில்லை. நிலவுடமைச்சூழல் இன்னமும் நிலவிக்கொண்டிருக்கும் இடங்களில் நிலப்பிரபுக்களின் அரசியல் அதிகாரம் இறுக்கமாகவேஉள்ளது.ஏதேனும் ஒரு ஓட்டுக்கட்சியின் வங்கியாகவே கிராமங்கள் உள்ளன.எந்தவொரு ஓட்டுக்கட்சியும் பெரும்பான்மைச் சாதியைக் கணக்கில்எடுக்காமல் வேட்பாளரை நிறுத்துவது இல்லை.வெற்றி அலை வீசுகிறபோதும் கூட எந்தக் கட்சியும் இந்த அம்சத்தை அவசியம் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறுவதில்லை.தனித்தனியாகத் தோன்றிய சாதிச்சங்கங்களும் (வன்னியர் சங்கம், நாடார் சங்கம் போன்றவை) இறுதி நிலையில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியுடன் இணைந்து கொண்டு விட்டன.அந்தந்தப் பகுதியில் செல்வாக்கான ஓட்டுக் கட்சிகளாக விளங்குகின்றன.இறுதியில் அந்தச்சாதிகளில் உள்ள அடிப்படை வர்க்கத்தினரை ஆளுவதற்கான அரசியல் அதிகார உரிமையை இந்தச் சாதி அமைப்புக்கள் வழங்குகின்றன.

சாதியமும் தேசியமும்:


சாதி அமைப்பு என்பது முதலாளியத்துக்கு முந்தைய உற்பத்திக்கான வடிவமாகும்.ஆனால் ஒரு தேசிய இனம் தம்மைத் தேசமாகஉருவெடுத்துக்கொள்ளும் காலத்தில் முதலாளிய உற்பத்தி முறையின் துணையுடன் தன்னை வளர்த்துக்கொள்ளும்.எனவே அதற்கு முன் தேசிய இனத்துக்குள் காணப்பட்ட சாதிப்பிரிவினைகள் முதலாளிய காலகட்டத்தில் தேசிய இன வளர்ச்சிக்கு தடையாகும்.எனவே தேசிய இன வளர்ச்சியை உந்திச் செல்லும் நோக்கம் கொண்டுள்ள இயக்கங்கள் சாதிய அமைப்புக்களை எதிர்க்கவேண்டிய தேவை உள்ளது.இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு பூண்டவையாகும்.பெரியாரின் தொடக்க கால வெற்றி இதைக்காட்டுகின்றது.தேசிய இனத்துக்கு தலைமை தாங்கும் சக்திகள் சாதியுடன்தத்துவ நிலையிலும், சாதிய அமைபுக்களுடன் நடைமுறை அளவிலும் சமரசம் செய்து கொள்ளும் போது தோல்வி அடைந்தன.சாதியின் கலாச்சாரஆதிக்கத்தை மட்டுமே நினைவிற்கொண்டு-முதன்மைப் படுத்தி-சாதியத்தை வெறும் பார்ப்பனீயமாக மட்டுமே ஏற்றுக் கொண்ட இயக்கங்களின் சாதி எதிர்ப்பு, வெறும் பார்ப்பனர் எதிப்பு என்றும், பார்ப்பனர் அல்லாத உயர் சாதியினரின் ஆதரவு என்றும் சுருங்கிப் போயிற்று.அதன் பின் (தேசிய இயக்கத்தில்) தேசிய இனத்தில் உள்ள அனைத்துச் சக்திகளுக்குமான பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது.

சாதியமும் இடஒதுக்கீடு எனும் சீர்திருத்த சலுகையும்.
படித்தோருக்கு வேலை ஒதுக்கீடு, படிப்பதற்கான இட ஒதுக்கீடு என்பவை சாதிய அமைப்புக்களின் கோரிக்கைகளாகும்.1920 கால கட்டத்தில் இந்தக்கோரிக்கைகளின் தன்மைக்கும், இன்றைய(1987) கால கட்டத்தில் இவற்றின் தன்மைக்கும்,இடையிலான வேறுபாட்டைக் காணவேண்டும்.வேலைஒதுக்கீடு என்பது அன்று முதல் இன்று வரை ஆளும் வர்க்கக் கண்ணோட்டத்தில் எல்லாச் சாதியினர்களிடத்தும் தமது நிர்வாகப் பங்காளிகளை உருவாக்க முனையும் ஏமாற்றுச் சில்லறைச் சலுகை ஆகும்.1920 களில் வேலைக்கான படிப்பறிவு நகர்மயப்பட்டே இருந்தது. ஆனால் இன்று படிப்பறிவு, கிராமமயமாகவும் தாழ்த்தப்பட்ட சாதியினர் இடத்தும் சென்றிருப்பதைக்காணலாம்.இதன் விளைவாக இன்றைய கோரிக்கை புதிய தன்மை பெற்றுள்ளது.வேலை ஒதுக்கீடு என்பது ஆளும்வர்க்கத்தின் ஏமாற்றுச்சலுகை என்பதும் உடனடி நலன்களுக்கான கோரிக்கை என்பதும் உண்மையே.எனினும் அவற்றைப் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் போராட்டங்களின் துணை விளைவாகவும் காணவேண்டியுள்ளது.வேலை ஒதுக்கீட்டுக் கோரிக்கையும் போராட்டங்களும் சாதிய அமைப்பைத் தக்கவைத்துக்கொள்ள பயன்படுவனவாகவும் உள்ளன.இத்தகைய சாதிய அமைப்புக்களில் ஆட்பட்டுள்ள அடிப்படை உழைக்கும் மக்கள் பிரிவினர்களுக்கு வர்க்க உணர்வு ஊட்டப்படும் போக்கில், இத்தகைய போராட்டங்களின் தன்மை வர்க்கப்போராட்டத்துக்குரியவையாக வளர்த்தெடுக்கப்படல் வேண்டும்.
சாதியம் தொடர்பான மூன்று வர்க்கங்களின் முவ்வேறு அணுகுமுறைகள்:
அ) ஆளும் வர்க்கங்களின் அணுகுமுறை:
சாதியமைப்பு இவர்களின் சுரண்டலுக்கு துணைநிற்கிறது.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள திறைமை வாய்ந்த 'வேலைப்படையை'வேலை ஒதுக்கீடு என்ற பெயரில் தனக்கு சேவகம் செய்யப் பயன்படுத்திக்கொள்கிறது.இவர்கள் சாதி ஒழிப்பைக் கோருவதில்லை.சாதி அமைப்பைப்பேணுவதன் மூலம் தமக்குரிய சமூக அடித்தளத்தை உறுதிப்படுத்திக்கொள்கின்றன.
ஆ) இடைத்தட்டு வர்க்கங்களின் அணுகுமுறை:
இவர்களும் சாதி ஓழிப்பைக் கோருவதில்லை. சாதிகளுக்கிடையிலான வேறுபாட்டைக்களைந்து சமத்துவம் நிலவ வேண்டும் என விரும்புகின்றனர்.சில சாதி அமைப்புக்களின் இடை நிலையில் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள மேல் மட்டப் பிரிவுகள் ஆகியவரைச் சார்ந்த குட்டி முதலாளிய வர்க்கத்தினர் தத்தம் சாதிகளை மேம்படுத்தினால் சாதி ஒழிந்துவிடும் என நினைகின்றனர்.வேலை ஒதுக்கீடு, கல்வி, இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்களின் மூலம் சாதிகளில் உள்ள அனைவரும் உயர்ந்துவிட முடியும் எனத் தாராளாமாக நினைக்கின்றனர்.
இ) பாட்டாளி வர்க்க அணுகுமுறை:
இது சாதி அமைப்பை ஒழித்துக்கட்ட விரும்புகிறது.அனைத்து ஒடுக்குமுறைகளின் ஒரு பகுதியாகச் சாதிய ஒடுக்கு முறையை காண்கிறது.
இதில் பாட்டாளி வர்க்க அணுகுமுறையைக் கொண்டுள்ள புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தீர்வு என்ன?
சாதி ஒழிப்பு என்பதில் இது முனைப்பாக இருக்கிறது. இப்போராட்டத்தை இரு கட்டங்களாக அணுகுகிறது;
அ) நீண்டகாலத் தீர்வு:
சாதியின் பொருளாதார கலாச்சாரக் கூறுகள் ஒழிக்கப்படும்போதே சாதி ஒழிப்பு சாத்தியமாகும்.மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பது அரசியல் அதிகாரக்கைப்பற்றலாகும். பொருளாதார அடிப்படையை ஒரு உடனடிப் போராட்டத்தின் மூலம் மாற்றியமைத்துவிடமுடியும்.ஆனால் அப்பொழுதும் சாதியின்கருத்தியல் ஆதிக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும்.அக்காலத்தில் சாதிகளை ஒழித்து மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டக்கூடிய கலாச்சாரப் போராட்டத்தை தொடராவிடின், புரட்சியின் பயன்கள் நீடித்து நிற்காது.இந்த நீண்ட காலப் போராட்டத்தின் விளைவாகவே சாதியின் கலாச்சார ஆதிக்கம் ஒழிக்கப்படும்.
ஆ) உடனடித்தீர்வு:
மக்கள் ஜனநாயகப் புரட்சி ஏற்பட்டாலே சாதியை ஒழிக்க இயலும் என்று சொல்லும் போது தீண்டாமை ஒழிப்பு, கல்வி இட ஒதுக்கீடு, வேலை ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளையும் நாம் ஆதரிக்க வேண்டும்.இவை நிரந்தரத்தீர்வு ஆகாதெனினும் இவற்றில் ஈடுபட்டுள்ள அடிப்படை மக்களை நியாயமானபோராட்டத்தில் ஈர்க்க இவை பயன்படும்.அடிப்படையாக சீர்திருத்தவாதத்தை எதிர்த்துக்கொண்டே அடிப்படை மக்களின் உடனடியான சமூக,பொருளாதார,அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து மக்களைத் திரட்டவேண்டும்.
(குறிப்பு: அழுத்தம்,பிரசுரக்கட்டமைப்புக்கான திருத்தங்கள்,பிரசுர உரிமை ENB உடையவை)