Monday 12 December 2011

”யுத்தப்பிரபு” பிரபாகரனும் அரசியல் சாணக்கியன் அன்ரன் பாலசிங்கமும்


பிரபாகரன் பயங்கரவாதியோ, யுத்தப் பிரபுவோ அல்ல, தமிழீழத் தேசியத் தளபதியே!
அது எழுபதுகளின் நடுப்பகுதி, உலகம் இரண்டு துருவங்களாக பிளவுண்டு கிடந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த ஒரு துருவ அணி, ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த மறுதுருவ அணியுமாக இப்பிளவு அமைந்திருந்தது.

அணிசேரா நாடுகள் எனப்பட்டவை இவற்றில் ஏதோ ஒன்றை ஏதோ அளவில் சார்ந்து நின்றவையே ஆகும். சிங்களம் அமெரிக்க முகாமைச் சார்ந்திருந்தது. இந்திய விரிவாதிக்க அரசு ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருந்தது.

ரஷ்ய ஏகாதிபத்தியத்துக்கு சார்பான அரசு உள்ள ஒரு நாட்டில் அந்நாட்டை எதிர்த்த கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக ஒரு அரசு இருந்த நாட்டில் அவ்வரசை எதிர்த்த கிளர்ச்சியாளர்களுக்கு ரசியா ஆதரவளித்தது. இவ்வாறு ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரைக் காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் புரட்சிகர இயக்கங்கள் ஏதோ ஒரு ஏகாதிபத்திய அணியின் கைக் கருவிகளாக மாறியிருந்தனர்.

இதன் விளைவாக காலப் போக்கில் இவற்றில் பெரும்பாலானவை சிதைந்து சீர்குலைந்து சீரழிந்து போயின. வேறு சில ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து மக்களின் ஒடுக்குமுறையாளராக மாறின.

இந்தப் பொது விதிக்கு விதிவிலக்காக இருந்தவை மிக ஒரு சில இயக்கங்களே ஆகும். இவற்றில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது எமது பெருமைக்குரிய வரலாறாகும்.

தேசிய விடுதலைப் புரட்சியின் மிக ஆதாரமான இந்த அரசியல் யுத்த தந்திர பிரச்சனையில் கொண்டிருந்த எச்சரிக்கை காரணமாகத் தான் திம்புக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து சிங்களத்துடன் கைகோர்த்து இந்திய விரிவாதிக்க அரசு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் திணித்த போது விடுதலைப் புலிகளால் எதிர்த்துப் போராட முடிந்தது. ரஷ்ய சமூக ஏகாதிபத்திய ஆதரவு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இந்தியாவின் கைக்கூலியாகி, இந்திய ஆக்கிரமிப்புப் படையின் துணைப்படையாகி ஈழத் தமிழ் மக்கள் மீது படுகொலைத் தாண்டவம் ஆடியது. விடுதலைப் புலிகளோ இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடி அந்த அநியாய அந்நியப் படையை விரட்டியடித்து ஈழத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையையும் இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து வரலாறு படைத்தார்கள்.

விடுதலை யுத்தத்தின் முப்பது ஆண்டுகளில் சிங்களத்துடன் பல்வேறு அரசியல் பேச்சு வார்த்தைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள். அவற்றில் எல்லாம் தமிழர் நலன்களை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ளவில்லை. மாறாக சமாதான முயற்சிகள் தோற்கடிக்கப்பட்ட ஒவ்வொரு கணத்திலும் விடுதலைப் புலிகள் யுத்தத்தில் ஊன்றி நின்றார்கள்.

விதிவிலக்காக எரிக் சொல்ஹெயும் மிலிந்த மொறகொடவும் ஒஸ்லோவில் வரைந்து, அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டு ஈழத்தை அடமானம் வைத்த ஒஸ்லோ அகசுய நிர்ணய உரிமைத் தீர்மானம் அமைந்திருந்தது. இதற்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உடன்பாடு கொண்டிருக்கவில்லை என எரிக் சொல்ஹெயும் பகிரங்கமாக தனது வாய்மொழி மூலமாக சான்று பகர்ந்துள்ளார்.

ரோக்கியோ பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை ஒப்படைத்து ஒரு அடிமைத் தீர்வைத் திணிப்பதற்காக 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் விலை பேசப்பட்டது. அத்தகைய கேடுகெட்ட பேரத்தை தூக்கியெறிந்து விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.

இறுதியாக முள்ளிவாய்காலில் உயிர்ப்பிச்சை தருகின்றோம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுங்கள் என்று கூறினார் ஒபாமா. அப்போதும் கூட விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. மாறாக மெளனிப்பதாக அறிவித்து தமது களஞ்சியத்தை வெடிவைத்து தகர்த்தனர்.

மேலும் ஈழத்தின் நலன்களில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையின் விடுதலைக்கு எதிராக, எந்த சர்வதேச சக்திகளோடும் விடுதலைப் புலிகள் கூட்டு வைக்கவில்லை. மாறாக அச்சக்திகளை எதிர்த்துப் போராடியே வந்தார்கள்.

குட்டிமுதலாளித்துவ வர்க்க இயல்பு காரணமாக ஊசலாட்டமும், சந்தர்ப்ப வாதமும், அனுபவ வாதமும், இருந்த போதும் ஈழத் தமிழினத்தின் விடுதலை என்ற அம்சத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு விடுதலைப் போராட்டத்தை பொறுப்பேற்றிருந்த தமது முப்பது வருட வாழ்வில் எந்தத் துரோகத்தையும் இழைக்கவில்லை. இது ஒர் இமாலய சாதனையாகும். இதற்காக ஈழத்தமிழ் இனம் மற்றும் அவர்களது விடுதலையை தொடர்ந்து முன்னெடுக்கப் போகும் அடுத்த தலைமுறையினர் விடுதலைப் புலிகளுக்கு நன்றி கூற என்றும் கடமைப்பட்டவர்கள்.

ஆனால் ஈழத்தமிழின விடுதலையில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்தும், ஒடுக்கும் சிங்களத்திடமிருந்தும் தமிழீழத் தனிநாடு விடுதலை பெறுவது. இரண்டு விடுவிக்கப்பட்ட தமிழீழ நாட்டில் ஜனநாயக அரசுமுறையையும், ஜனநாயக சமூக பொருளாதார முறையையும் உருவாக்குவது. இந்த இரண்டாவது அம்சத்தை விடுதலைப் புலிகள் முற்றிலும் தலைகீழாக கையாண்டனர். இதில் அவர்கள் கொண்டிருந்த எதிர்மறையான புரிதல் விடுதலை இலட்சியத்தை பலப்படுத்துவதற்குப் பதில் பலவீனப்படுத்துவதாய் அமைந்திருந்தது. இவ்வாறு அவர்கள் இழைத்த எண்ணற்ற தவறுகளில் ஒன்றைக் கூட தங்கள் வாழ்நாள் முழுவதிலும் அவர்கள் திருத்திக் கொள்ளவில்லை. திருத்திக் கொள்ள முயலவுமில்லை என்பது ஒரு மிகவும் துரதிஷ்டவசமான சோகமாகும்.

ஆனால் இச்சிந்தனைப் போக்குக்கான முழுப் பொறுப்பும் விடுதலைப் புலிகளை மட்டும் சார்ந்தது அல்ல. அவர்களுக்கு மட்டுமே உரித்தானதும் அல்ல. அவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டதும் அல்ல. கட்சி ஒன்றும் வானத்தில் இருந்து விழுவது கிடையாது. அதுவும் ஒரு சமுதாய விளைபொருளே ஆகும்.

ஈழத்தமிழ்ச் சமூகம் ஒரு ஜனநாயக சமூகம் கிடையாது. மரபுவழியில் விடுதலைப் புலிகளுக்குக் கையளிக்கப்பட்ட அரசியல் ஒரு ஜனநாய அரசியல் கிடையாது. சமூக உறவில், தொழில் உறவில், அரசியல் உறவில் எந்த வடிவங்களிலும் ஜனநாயக அமைப்பு முறை கிடையாது.

குடும்பம், கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், வெகுஜன அமைப்புக்கள் எனப்பட்ட எவையும், ஜனநாயக ரீதியான நிறுவனங்கள் அல்ல. தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஜே ஆர் ஐக்கிய தேசியக் கட்சியை எப்படித் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாரோ அதுபோலவே தான் அமிர்தலிங்கமும் சமஷ்டிக் கட்சியை வைத்திருந்தார். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஒழுக்கக் கோவைகளை வைத்து மிரட்டுகிற அமைப்பு வழிமுறை அது. தூய தலைவன் தீய தொண்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்..எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாராளுமன்றமோ ஒரு தேசிய இனத்தை ஒட்டுமொத்தமாக ஒடுக்கிக் கொண்டிருந்தது. மலையகத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்திருந்தது. இதற்கும் மேலாக தனது சொந்தப் பிரதமரின் குடியுரிமையைப் பறித்து வீட்டுக் காவலில் பூட்டி வைத்திருந்தது. இதுதான் எமது சமூகத்தின் அனைத்துத் துறையிலும் ஜனநாயகம் வாழ்ந்த கதை.

மார்க்சியத்தோடு முற்றாக முறித்துக் கொண்டு தூரத்துறந்தோடி விட்டதன் பின்னால் இந்தச் சமுதாயத்தின் விளைபொருளான ஒரு கட்சியிடம் இருந்து எவ்வாறு ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும். இந்த வரலாற்றுக் காரணங்களின் மற்றும் நியதிகளின் எல்லைக்குட்பட்டுத் தான் ஒரு தனிநபரதோ ஒரு கட்சியினதோ வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பீடு செய்யமுடியும். மதிப்பீடு செய்யவேண்டும்.

மரபு வழியாக விடுதலைப் புலிகளுக்கு கையளிக்கப்பட்ட அரசியல், ஜனநாயக விரோத குறுமின வாதமாகும். வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றி வரலாற்றுப் பழிதேடிக் கொண்ட சம்பவம், துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறந்த அதிகாரம் மட்டுமல்ல சமூக அங்கீகாரத்துடனும் கூடியதுதான். மரபு வழியாக கையளிக்கப்பட்ட ஜனநாயக விரோத குறுமினவாத அரசியல் சிந்தனைப் போக்கு துடைத்தெறியப்பட்டு அதனிடத்தில் மக்கள் ஜனநாயக அரசியல் சிந்தனைப் போக்கு படைத்தெடுக்கப்படாமலேயே ஆயுதப்போராட்டம் தொடங்கிவிட்டது. தொங்குபாலத்தில் நடக்கிற மனிதனைப்போல ஆயுதப் போராட்டம் ஜனநாயக விரோத அரசியல் சிந்தனைப் போக்கின் மேலே நடந்து வந்தது. இது ஒரு வரலாற்று விபத்து. இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு பெரிதும் பொறுப்பாளிகள் அல்ல. உண்மையில் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் பிற்பட்ட, பலவீனப்பட்ட நிலைமையே இதற்கு முக்கிய பொறுப்பாகும்.

இது இன்னொரு சிறப்புரிமையையும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கும். உலகப் பாட்டாளி வர்க்க இயக்கம் மிகப் பலவீனமாக இருந்த, ஏகாதிபத்திய பிற்போக்கு தலைவிரித்தாடிய மூன்று தசாப்தங்களில் விடாப்பிடியாக விடுதலை யுத்தத்தில் ஊன்றி நின்றார்கள். சொல்லப் போனால் தனித்து நின்று போராடினார்கள்.நேபாளத்தில் மாவோயிஷ்ட்டுக்கள் என்று தம்மை அழைத்துக் கொண்ட பிரசாந்தாவின் கட்சி மன்னரைப் பதவியில் இருந்து இறக்கியதுமே மக்களுக்குத் துரோகமிழைத்து இடைவழிச் சமரசம் செய்து ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டமைத்து ஆயுதங்களையும், போராளிகளையும் ஐநா சிறையில் அடைத்து விட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்கள். இத்தகைய கேடுகெட்ட சமரசங்களின் புறவய நிர்ப்பந்தங்களுக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து போராடினார்கள்.

விடுதலைப் புலிகள் ஒரு ஸ்தாபனம் என்ற வகையிலோ அல்லது தேசியத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களை அதன் தலைவர் என்ற முறையிலோ ஆற்றிய வரலாற்றுப் பாத்திரத்தை மேற்கண்ட வரலாற்று நிபந்தனைகளுக்கும் நியதிகளுக்கும் நியமங்களுக்கும் உட்படுத்தித் தான் மதிப்பீடு செய்ய வேண்டும்.

அன்ரன் பாலசிங்கம், நவமார்க்சிய கலைப்புவாதி இதன் அரசியல் விளைவே அதிகாரப்பரவலாக்கம். எனவே ஏகாதிபத்திய நலன் காக்கும் சிங்களத்தைப் பாதுகாக்க எரிக் சொல்ஹெயுமும், மிலிந்த மொரகொடவும் தீட்டிய அகசுயநிர்ணய உரிமைத் திட்டத்தை பிரபாகரனின் அனுமதி இல்லாமல் பாலசிங்கம் கையொப்பமிட்டது தர்க்க ரீதியானதும் திட்டமிட்ட சதியுமாகும். இதன் தொடர்ச்சியே கருணாவின் உடைவு என்பதை நோர்வே ஆய்வறிக்கையும், ஆய்வரங்கில் எரிக் சொல்ஹெயுமின் பேச்சும் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த ஆய்வரங்கில் பேசிய சொல்ஹெயும், ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதற்கு பிரபாகரன் தெரிவித்த எதிர்ப்பை மனங்கொண்டு அன்ரன் பாலசிங்கம் கூறியதை பின்வருமாறு விபரித்தார், “ பிரபாகரன் ஒரு யுத்தப் பிரபு, அவர் ஜனநாயக சூழலில் வாழ்ந்தவர் அல்ல, மேற்குலகின் ஜனநாயகம் அவருக்குத் தெரியாது, அவர் சர்வேதேச அரசியல் அறியாதவர், சீன யுத்தப் பிரபுக்களுக்கு ஈடானவர்” இதை நான் சொல்லவில்லை. அன்ரன் பாலசிங்கம் எனக்குச் சொன்னார் என்றார் சொல்ஹெயும்.

யுத்தப் பிரபுக்கள் வட்டார மனப்பான்மை கொண்டவர்கள். ஒரு வட்டாரப் பிரபு இன்னொரு வட்டாரப் பிரபுவோடு ஐக்கியப்படுவதில்லை. அந்நிய ஆக்கிரமிப்பு ஏற்பட்டாலும் கூட ஒரு வட்டார யுத்தப் பிரபு இன்னொரு வட்டார யுத்தப் பிரபுவுடன் ஐக்கியப்படுவதில்லை. மாறாக அவருக்கு எதிராக அந்நிய ஆக்கிரமிப்பாளர்களோடு கூட்டமைத்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. இன்றைய ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் பழைய சீனமும், இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

ஆப்கானிஸ்தானில் ரசிய சமூக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய யுத்தப்பிரபு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களோடு கைகோர்த்துக் கொண்டார். இறுதியாக இவர் கார்சாய் அரசின் இராணுவத்தளபதியாக நியமனம் செய்யப்பாட்டார்! ("If you support me, I will destroy the Taliban and al Qaeda," Gen. Abdul Rashid Dostum told The Washington Times in an interview at his northern stronghold. "I don't want to be a minister, not even the defense minister. I need to be with my soldiers. Give me the task and I will do it."
Other ethnic leaders have made similar offers, but their support is problematic.Gen. Dostum is one of Afghanistan's most notorious warlords -- a Russian-educated former defense minister who turned against the Soviet Union in the 1980s but became a key figure in the Russian-backed fight against the Taliban a decade later.)

ஈராக்கில் சுனி சமூகத்தைச் சேர்ந்த யுத்தப் பிரபுக்கள் சியா சமூகத்தைச் சேர்ந்த யுத்தப் பிரபுக்களுக்கு எதிராக அந்நிய ஆக்கிரமிப்பாளனான அமெரிக்காவுடன் கூட்டணி அமைத்தனர்.இவர்களை சிறப்பு ஈராக் பிரஜைகள் என அமெரிக்கா சங்கேத மொழியில் அழைத்தது.(But alliance with U.S. forces against al-Qaeda has not translated into a new relationship with the Shia-dominated central government of Prime Minister Nouri al-Maliki in Baghdad, which has long been nervous about Petraeus' courtship of the Sunni insurgents and tribal militias – renamed "Concerned Local Citizen" (CLC) groups – that have helped in the anti-al-Qaeda fight.
http://antiwar.com/lobe/?articleid=11941)

சீனாவில் முதல் உள்நாட்டுப் புரட்சிகர யுத்தம் 1924-1927 ஆண்டுகளில் நடைபெற்றது.இது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு யுத்தமாகும்.1926 ஜூலையில் வடக்குப் படையெடுப்பு யுத்தம் தொடங்கியது. இது ஏகாதிபத்திய வாதிகளோடு கூட்டமைத்துக் கொண்ட சீன நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் சேனையாகவும் அதன் தளபதிகளாகவும் இருந்த யுத்தப் பிரபுக்களின் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.(நவ சீனப் புரட்சியின் வரலாறு- ஹோ கான் சி, தமிழ்ப் பிரசுரம் சென்னை புக்ஸ், அத்தியாயம் 4 பக்கம் 130-187)

பிரபாகரனுடைய விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய இயக்கம். வட்டார இயக்கம் அல்ல. இலங்கையில் தமிழர் தாயகப் பரப்பான வடக்குக் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து அதில் சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்காக முப்பது ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய தேசிய இயக்கமாகும். பிரபாகரன் அரசியல் அரங்கத்தில் தோன்றுகிறவரை ஈழத் தமிழர்களுக்கென்று ஒரு தேசிய இயக்கம் இருந்ததில்லை. ஒருவேளை விடுதலைப் புலிகளை யுத்தப் பிரபுக்கள் என வர்ணிப்பதாக இருந்தால் அது அன்ரன் பாலசிங்கத்துக்கும் கருணாவுக்கும் பெரிதும் பொருந்துமே அன்றி தேசியத் தளபதி பிரபாகரனுக்கு சற்றும் பொருந்தாது.

அக சுயநிர்ணய உரிமை என்கிற அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் சீர்குலைவுகளை ஏற்படுத்தி எரிக் சொல்ஹெயுமுடன் இணைந்து கருணாவை உடைத்து, கேபியை விலைக்கு வாங்கி தேசியத் தளபதி பிரபாகரனை யுத்தப் பிரபு என மாசுபடுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கும் முள்ளிவாய்க்கால் பிரளயத்துக்கும் காரணமான அன்ரன் பாலசிங்கம் தேசத்துரோகியே ஆகும்.

பிரபாகரன் அவர்கள் மரியாதையின் நிமித்தமும் அரசியல் சந்தர்ப்பவாதம் காரணமாகவும் பாலசிங்கத்துக்கு வழங்கிய ”தேசத்தின் குரல்” என்ற பட்டத்துக்கு அவர் தகுதியோ பொறுப்போ உடையவர் என்று நிரூபிக்கவில்லை. நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் முதலே நாம் பாலசிங்கத்தின் வழி நாசத்துக்கு இட்டுச் செல்லும் என சுட்டிக் காட்டி விமர்சித்து வந்தோம்.ஆனால் இன்று நோர்வே ஆய்வறிக்கை வெளிவந்த பின்னர் அன்று நாம் அனுமானித்த பல்வேறு உண்மைகளை இவ்வறிக்கை ஆதாரப்படுத்திய பின்னரும் அன்ரன் பாலசிங்கத்துக்கு ஐந்தாம் ஆண்டு நினைவு விழா எடுப்பவர்கள் மாண்ட நம் மக்களையும் மாவீரத் தோழர்களையும் தேசியத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களையும் இழிவுபடுத்துபவரே ஆவர். அது மட்டுமல்ல பாலசிங்கத்தின் துரோகத்தை மூடிமறைப்பவர்கள் அத்துரோகத்துக்குத் துணைபோவதுடன் தாமும் தொடர்ந்து தமிழீழத்திற்கு துரோகம் இழைக்கின்றனர்.

இதனால் அந்நிய சார்பு அதிகாரப் பரவலாக்கப் பாதை ஈழத்தமிழர்களின் விடுதலைப் பாதையில் ஏற்படுத்திய மாபெரும் தீங்கை முள்ளிவாய்க்காலின் படிப்பினையாக தமிழீழ மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.பின்வரும் முழக்கங்களைக் கையில் ஏந்தி மீண்டும் எழ வேண்டும்!

* தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

* தமிழீழ அரசு மக்கள் ஜனநாயகக் குடியரசு!

* தமிழீழத் தேசியத் தளபதி பிரபாகரன் நாமம் நீடூழி வாழ்க!

* மாவீரத் தோழர்களின் வீரம் நீடூழி வாழ்க!

* தமிழீழ விடுதலைப் போராட்டம் வெல்க!


                                            * இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

 
புதிய ஈழப் புரட்சியாளர்கள்

No comments: