Saturday, 11 August 2012

நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரங்களும்.

 நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரங்களும்.
சமரன் - ஜனவரி, 1989

[சர்வதேசப் போல்சுவிசத்தின் தமிழகப் போர்வாளும், நமது தோழமைத் தலைமைக் கட்சிப் பத்திரிகையுமான சமரனில் ,ஜனவரி 1989 இல் வெளிவந்த இக்கட்டுரையை நன்றியுடனும், அநுமதியுடனும் மறுபிரசுரம் செய்கின்றோம். ஆர்]
--------------------------------------------------------------------------------------------------------------------
முதலாளித்துவ நாடாளுமன்ற முறைபற்றி முதலாளித்துவ நாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளும், பாட்டாளி வர்க்க கட்சிகளும் மேற்கொள்ள வேண்டிய
போர்த்தந்திர, செயல்தந்திர (Strategic and Tactic) அணுகுமுறையை வகுத்தளிக்கும் பொருட்டு, லெனின் தனது புகழ்மிக்க நூலான
‘இடதுசாரி கம்யூனிசம் - சிறு பிள்ளைத்தனமான கோளாறு’ என்ற  நூலில் இப்பிரச்சனை குறித்த தத்துவ கோட்பாடுகளை முன்வைத்துள்ளார்.
ஜெர்மனி, டச்சு மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இடது கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாடுகளை விமர்சித்தும், முதலாளித்துவ நாடுகளிலுள்ளபாட்டாளி வர்க்கக் கட்சிகள் முதலாளித்துவ  நாடாளுமன்ற  முறை   குறித்துப்  பிழையற்ற செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்வதற்காக
வழிகாட்டும் நோக்கத்துடனும் அவரால் இந்நூல் எழுதப்பட்டது.

முதலாளித்துவ  நாடுகளில்  உள்ள  கம்யூனிஸ்ட் -பாட்டாளி வர்க்க கட்சிகள் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை குறித்து மேற்கொள்ள வேண்டிய
செயல்தந்திர அணுகுமுறை, கோட்பாடுகள் எவை என்று இந்நூலில் அவர் வகுத்து அளிக்கிறாரோ, அவற்றை எல்லா நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் -
பாட்டாளிவர்க்க கட்சிகள் காலம், இடம், இயல்பு ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், எந்த
மாற்றமுமில்லாமலும் அப்படியே பிரயோகிக்க வேண்டும் என்று இந்நாட்டு-இந்திய- நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு கொள்வோர் வாதிடுகின்றனர்.
நம்நாட்டில் உள்ள மார்க்சிய - லெனினிய குழுக்கள் (நக்சல்பாரிகள்) என அழைத்துக் கொள்ளும் சிலரும், வலது இடது கம்யூனிஸ்டுகளான
திரிபுவாதிகளும் தங்களுடைய பாராளுமன்ற பாதையை நியாயப் படுத்துவதற்காக லெனின் பெயரை உச்சாடனம்  செய்துகொண்டு, சமாதானப் பாதைக்கும், பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்துக்கும் கவசமாக ‘இடதுசாரி கம்யூனிசம் - சிறுபிள்ளைத்தனமான கோளாறு’ என்ற நூலை
பயன்படுத்துகின்றனர்.

முதலாளித்துவ நாடாளுமன்றமும் பாட்டாளிவர்க்கக் கட்சியின் நிலைபாடும்:

‘இடதுசாரி கம்யூனிசம் - சிறுபிள்ளைத்தனமான கோளாறு‘ என்ற  நூலில் கூறியுள்ளபடி முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை குறித்து பாட்டாளி
வர்ககக் கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய போர்த்தந்திர செயல்தந்திர அணுகுமுறையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம், முதலாளித்துவமும்,
முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது. அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவடைந்து விட்டது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் துவங்கி விட்டது. எனினும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை வரலாற்று வழியில்
காலாவதியாகி விட்டது என்பதன் அடிப்படையில் பாட்டாளிவர்க்கக் கட்சிகள் தமது செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ளக் கூடாது, முதலாளித்துவ
நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் (நடைமுறையில்) காலாவதியாகி விட்டதா  இல்லையா என்பதை பொறுத்தே தமது செயல்தந்திரங்களை
வகுத்துக் கொள்ள வேண்டும் என்று லெனின் கூறினார்.
    
ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா, இல்லையா என்பது அந்நாட்டில் நிலவும்
நிலைமைகளைத் துருவிப் பரிசீலிக்கும் பகுத்தாய்வினால் அறியக் கூடியதும், நிரூபிக்கக் கூடியதுமாகும். ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ
நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகாத வரை அதைப் புறக்கணிக்கக் கூடாது. அதை ஒரு பிரச்சார மேடையாகப் பாட்டாளி வர்க்கக்
கட்சிகள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.ஒரு நாட்டில் நிலவும் நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா என்று மதிப்பீடு செய்வதற்கான அடிப்படையையும், அவற்றில் பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கு கொள்வதின் நோக்கத்தையும், முறையையும், அவற்றைப் புறக்கணிப்பதற்கான நிபந்தனைகளையும் அவர் எடுத்துக் காட்டினார்.

இவை  அனைத்தும் முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளித்துவ நாடாளுமன்ற முறையையும், அவை நிலவிய புறவயமான நிலைமைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டும், பாட்டாளி  வர்க்க  இயக்கத்தின்  நடைமுறை  அனுபவத்தை  தொகுத்ததின் அடிப்படையிலும்,
அவர் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை குறித்து பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கு வகுத்தளித்த போர்த்தந்திர, செயல்தந்திர அணுகு முறையாகும்.

லெனினின் வரையறைகள்

லெனின் முன்வைத்துள்ள இரண்டு அடிப்படையான வரையறைகள்:

1.முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது - அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவடைந்து விட்டது, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் துவங்கி விட்டது.
2. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா என்பதைப் பொறுத்தே பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இப்பிரச்சனை குறித்து தமது செயல்தந்திரத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்டதில் முதல் வரையறை போர்த்தந்திர அணுகுமுறையையும், இரண்டாவது வரையறை செயல்தந்திரத்தை வகுத்துக் கொள்வதற்கான
அடிப்படையையும் வழங்குகின்றது. இவ்விரண்டு வரையறைகளும் முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளிவர்க்கக் கட்சிகளால் பிரயோகிக்கப் படுவதைப் போன்றே காலனிய, அரைக்காலனிய, சார்பு நாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளில் எவ்வித மாறுதலும் இன்றி, அப்படியே பிரயோகிக்கக் கூடியனவா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

லெனின் வழிகாட்டுதலில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உலகப் புரட்சிப் போக்கின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும், பாதைகளையும்; அதன்
இயக்கு சக்திகளையும், சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதார நெறிகளையும், போர்த்தந்திர, செயல்தந்திரப் பிரச்சனைகளையும் நிர்ணயித்தது.

அவற்றுடன் ஒப்பிட்டே மேற் கூறப்பட்ட இரண்டு வரையறைகளையும் பரிசீலிக்க வேண்டும். மேலும் காலனிய சார்பு நாடுகள் மற்றும்
முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளின் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் அனுபவத்தோடும்    ஒப்பிட்டே
பரிசீலனை செய்யவேண்டும். அடிப்படைப் புரட்சிக் கோட்பாடுகள் வெவ்வேறு நாடுகளில் தனித்த நிலைமைகளுக்குத் தகவமைக்கப்பட வேண்டும்
என்பதன் அடிப்படையிலும் மேற்கூறப்பட்ட இரண்டு வரையறைகளைப் பரிசீலிக்க வேண்டும்.

இன்றைய சகாப்தத்தில் முதலாளித்துவ நாடாளுமன்றம்:

முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது  அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற
முறையின் சகாப்தம் முடிவடைந்துவிட்டது, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் துவங்கிவிட்டது என்ற வரையறையின்  (லெனின்) முதலாளித்துவ
நாடுகளுக்கும், காலனிய சார்பு நாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளுக்கும் ஆகிய
இருவகைப்பட்ட நாடுகளுக்குமுள்ள பொருளும் முக்கியத்துவமும் என்ன? இந்த அனைத்தையும் தழுவிய உண்மை எவ்வாறு வெளிப்படுத்திக்
கொண்டது? இவ்வரையறையை இருவகைப்பட்ட நாடுகளுக்கு லெனின் எவ்வாறு பிரயோகப்படுத்தினார்? இவ்வரையறையானது மேற்கூறப்பட்ட
இருவகைப்பட்ட நாடுகளின் கட்சிகளுடைய வேலைத்திட்டத்தையும், போர்த்தந்திரங்களையும் வகுப்பதில் எப்படி வழிகாட்டும் கோட்பாடாக அமைகிறது? என்பனவற்றைப் பரிசீலிப்பது அவசியம்.

இன்று நாம் வாழும் சகாப்தம் ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் சகாப்தமாகும்; இன்றைய சகாப்தத்தில் சமூக வளர்ச்சியை ஆளுமை புரியும் விதிகளால் மேற்கூறப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதின் அடிப்படையிலும் பரிசீலிக்கப்பட வேண்டும்.

வரலாற்று வழியில் முதலாளித்துவ நாடாளுமன்றத்தின்காலாவதி:

ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியினதுமான இன்றைய சகாப்தத்தில் முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டதின் பொருள்:

“உலக அரசியல் நிலைமை இப்போது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கிறது. உலக அரசியல் நிகழ்ச்சிகள், சோவியத் குடியரசுக்கு எதிரான உலக முதலாளிகளின் போராட்டம் எனும் தனியொரு மையத்தின் மீது தவிர்க்க முடியாதபடி ஒரு முகப்படுத்தப்பட்டுள்ளன. சோவியத் ருஷ்யக் குடியரசை சுற்றிலும் எல்லா நாடுகளிலுமுள்ள முன்னணித் தொழிலாளர்களின் சோவியத் இயக்கங்கள் ஒரு புறமும் , காலனிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மத்தியிலான எல்லா தேசிய விடுதலை இயக்கங்கள் மறுபுறமும் தவிர்க்க முடியாதபடி சேர்ந்து நிற்கின்றன. உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சோவியத் அமைப்புமுறை பெறும் வெற்றியில் மட்டும்தான் தமது விமோசனம் இருக்கிறது என்பதை அவை தமது கசப்பான அனுபவத்திலிருந்து உணர்ந்து வருகின்றன.”

(கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கான ஆராய்ச்சி உரைகள். தேசிய மற்றும் காலனிப் பிரச்சினைகள் மீதான பூர்வாங்க நகல் ஆராய்ச்சி உரைகள்.)

மேற்கூறப்பட்ட மேற்கோள் ஒரு முக்கியமான செய்தியை நமக்குப் போதிக்கின்றது.

ருசிய அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு, ஏகாதிபத்தியத்தை (உலக முதலாளித்துவத்தை), எதிர்த்த போராட்டத்தில் உலக சோசலிசப் புரட்சியின்
ஒரு பகுதியாக காலனிய மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் புரட்சிகர தேசிய விடுதலை இயக்கம் மாறிவிட்டது என்பது மட்டுமல்ல, உலக
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து  சோவியத் அமைப்பு முறை பெறும் வெற்றியில்தான் இந்நாடுகளின் விமோசனம் அடங்கியிருக்கிறதே ஒழிய, பழைய வகைப்பட்ட பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் மூலம் அல்ல என்பதேயாகும். (அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மூலம் அல்ல என்பதாகும்) இன்றைய சகாப்தத்தில் அனைத்து நாடுகளுடைய மக்களின் விமோசனம் சோவியத் அமைப்புமுறை பெறும் வெற்றியில்தான்
அடங்கியிருக்கிறது என்பதன் பொருள், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே வரலாற்று வழியில் காலாவதியாகி
விடவில்லை, காலனிய, சார்பு நாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்திமுறை மேலோங்கி நிலவும் நாடுகளிலும் கூட முதலாளித்துவ நாடாளுமன்ற முறை வரலாற்றுவழியில் காலாவதியாகி விட்டது என்பதே ஆகும். (அழுத்தம் ப-ர்)

எனினும், முதலாளித்துவமும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகியாகி விட்டது என்ற வரையறையின் பொருள் மேற்கூறப்பட்ட இருவகைகளைச் சேர்ந்த நாடுகளுக்கும்
ஒன்றாகவே அமைகிறதா? இல்லை.

இருவேறு பொருட்கள்:

முதலாளித்துவ நாடுகளைப் பொறுத்தமட்டில், முதலாளித்துவமும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி
விட்டது - அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவடைந்துவிட்டது, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் சகாப்தம்
தொடங்கிவிட்டது - என்பதன்  பொருள், இந்நாடுகளில் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் குறிக்கோளாகச் சோசலிசப் புரட்சி நடைபெற்று முதலாளித்துவ
அரசுக்குப் பதிலாய் அதனிடத்தில் ஒரு புதுவகையான அரசை, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை அமைத்திடுவதாகும். இந்நாடுகளில் பாட்டாளிவர்க்கக் கட்சிகளின் நோக்கம் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை (ஆளும் வர்க்கங்களால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அரசு இயந்திரத்தை) தகர்த்தெறிந்து விட்டு பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தையும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையிலான அரசு முறைக்கு மாறாக சோசலிஸ்ட் சோவியத் அமைப்பு முறையிலான அரசையும் நிறுவுவதாகும்.

அதே வேளையில், காலனிய, சார்பு நாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறை மேலோங்கி நிலவும் நாடுகளில் முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டதன் பொருள் வேறு ஒன்றாக இருக்கிறது.

தேசிய, விடுதலைப் புரட்சிகளின் முதலாளித்துவ ஜனநாயக அடிப்படை:

காலனிய,சார்புநாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய  உற்பத்தி முறை மேலோங்கி நிலவும் நாடுகளின் தேசிய புரட்சிகர இயக்கங்கள்
ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்துடன் நல்லிணக்கம் கொண்டுள்ள சீர்த்திருத்த முதலாளிவர்க்கத்தை எதிர்த்துப் போரிட வேண்டியதாக இருப்பினும், இந்நாடுகளில் முதலாளித்துவ விடுதலை இயக்கங்கள் மெய்யாகவே புரட்சிகரமானவையாக இருந்தால் மட்டுமே, அவற்றின் பிரதிநிதிகள் விவசாயிகளையும் மற்றும் பிற சுரண்டப்படும் மக்கள் திரளையும் ஒரு புரட்சிகரமான உணர்வில் பயிற்றுவித்து ஸ்தாபன ரீதியில்  திரட்டும் தமது வேலையைத் தடை செய்யாதபோது மட்டுமே ஆதரிக்க வேண்டியதாயிருப்பினும் இத்தகைய நாடுகளின் தேசியப் புரட்சி இயக்கமும், விடுதலைப் புரட்சியும் அவற்றின் சாராம்சத்தில் ஒரு முதலாளித்துவ ஜனநாயக இயக்கமே ஆகும். காரணம், அவற்றின் நோக்கம் ஏகாதிபத்தியத்தையும் அதனுடன் நல்லிணக்கம் கொண்ட முதலாளிவர்க்கத்தை மட்டுமே ஒழிக்க கூடியதும், முதலாளித்துவத்தை முழுவதுமாக ஒழிப்பதல்ல என்பதால் மட்டுமல்ல, மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலான விவசாயிகள் பூர்ஷ்வா - முதலாளித்துவ உறவுகளைப் பிரதிநிதித்துவப்- படுத்துவோராக இருப்பதால் எந்த ஒரு தேசிய இயக்கமும் முதலாளித்துவ ஜனநாயக இயக்கமாகவே இருக்கும் என்றார் லெனின்.

புதிய வாய்ப்பு:

இத்தகைய நாடுகளின் தேசிய புரட்சிகள் அவற்றின் சாராம்சத்தில்   முதலாளித்துவ  ஜனநாயகத்  தன்மையைக் கொண்டனவாக இருப்பினும்,
சோசலிச அரசு ஒன்றின் உதயமும், பொதுவான உலகப் புரட்சி இயக்கத்தில் அது ஆற்றிய தலைமைப் பங்கும், முதலாளித்துவ நாடுகளின்
பாட்டாளிவர்க்க இயக்கம் ஒடுக்கப்பட்ட நாடுகளின் தேசிய புரட்சிகர இயக்கங்களுக்கு நல்கிய உதவியும், தேச விடுதலைக்காகப் போரிடும் எல்லா
தேசத்தாரும் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்துக்குள் அடிவைக்காமலேயே சோசலிசத்தை சென்றடைவதற்கான வாய்ப்பினை கிடைக்கச் செய்தனர்.
ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியினதும் சகாப்தத்தில் ஒடுக்கப்பட்ட நாடுகள் முதலாளித்துவ வளர்ச்சிக்கட்டத்தின் ஊடாகச் செல்லாமலேயே ஒரு சில வளர்ச்சிக் கட்டங்களின் ஊடே கம்யூனிஸத்திற்கு  மாறிச்செல்ல முடியும் என்பதை லெனின் பின் வருமாறு கூறினார்:

“ ....வெற்றி வாகை சூடிய புரட்சிகரப் பாட்டாளிவர்க்கம் அவற்றின் மத்தியில் முறையான பிரச்சாரம் நடத்தும் பட்சத்தில், சோவியத் அரசாங்கங்கள் தம் வசமுள்ள சகல சாதனங்களுடனும் அவற்றுக்குத் துணைபுரியும் பட்சத்தில், பின்தங்கிய மக்கள் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தின்  ஊடே  தவிர்க்க முடியாதபடி கடந்து செல்ல வேண்டும் என்று கருதுவது தவறாகக் கொள்ளப்படும் முடிவாகும். எல்லாக் காலனிகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் நாம் போராளிகளின் சுயேச்சையான படைப் பிரிவுகளையும் கட்சி நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, விவசாயிகள் சோவியத்துகளை ஒழுங்கமைப்பதற்கான பிரச்சாரத்தை உடனே துவக்கிவைத்து அவற்றை முதலாளித்துவத்துக்கு முந்திய நிலைமைகளுக்குத் தகவமைக்க முயல்வது மட்டுமல்ல, அதோடு முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் உதவியுடன் பின்தங்கிய நாடுகள் சோவியத் அமைப்பு முறைக்கும், ஒருசில வளர்ச்சி கட்டங்களின் ஊடே கம்யூனிசத்திற்கும், முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தின் ஊடே கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலே மாறிச் செல்ல முடியும் எனும் கருத்துரையை அதற்கு உரியதான தத்துவார்த்த அடிப்படையுடன் கம்யூனிஸ்டு அகிலம் முன்வைக்க வேண்டும்.”
தேர்வு நூல்கள் பன்னிரண்டு தொகுதிகளில் (தொகுதி 11 பக்கம் -78).

எனவே காலனிய, அரைக்காலனிய சார்புநாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளைப் பொறுத்தமட்டில், முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது என்பதன் பொருள், முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டாலும் இந்நாடுகளின் தேசிய புரட்சியும், விடுதலையும் அவற்றின் சாராம்சத்தில் இன்னும் முதலாளித்துவ ஜனநாயகத் தன்மையைக் கொண்டவையாகவே இருக்கின்றன, அதே சமயம், முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டதின் காரணமாக, இந்நாடுகள் முதலாளித்துவ வளிர்ச்சிக் கட்டத்தின் ஊடே கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலே, ஒருசில வளர்ச்சிக்   கட்டங்களின்   ஊடே 
கம்யூனிஸத்துக்கு  மாறிச் செல்ல முடியும்.

ஒடுக்கப்பட்ட நாடுகளின் உண்மையான விடுதலைக்கான பாதை:

முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டதால் ஏகாதிபத்திய முதலாளிவர்க்கம் காலனியாதிக்க முறைகளைக் கைவிடும் என்று பொருள் கொள்ளக் கூடாது. அதற்கு மாறாக அவை காலனியாதிக்கத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடரவே முயல்கின்றன மேலும் இந்நாடுகளின் தேசியப் புரட்சி முதலாளித்துவத்தன்மை யுடையவை -யாய் இருப்பினும் ஏகாதிபத்தியம், பாட்டாளிவர்க்கப் புரட்சி ஆகியவற்றின் சகாப்தமான இந்த சகாப்தத்தில் அவற்றின் விமோசனம் முதலாளித்துவச் சர்வாதிகாரத்தையும், முதலாளித்துவ ஜனநாயக குடியரசையும் நிறுவுவதற்கு மாறாக, சோவியத் அமைப்பு முறை வெற்றி பெறுவதில்தான் அடங்கியிருக்கிறது என லெனின் எடுத்துரைத்தார்.

ஏகாதிபத்தியவாதிகளின் மோசடிகளை அம்பலப்படுத்தும் பொருட்டும், காவுத்ஸ்கி வாதத்தை மறுதலித்தும் எதிர்காலத்தில் புதிய வேடங்களில்
தோன்றக்கூடிய நவீன திரிபுவாத குருசேவ், டெங்கு கும்பல்களின் செப்படி வித்தைகளைப் பற்றி (காலனியத்தின் மறைவு கோட்பாடு   போன்றவற்றைப்
பற்றி)  எச்சரிக்கை செய்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட நாடுகளின் உண்மையான விமோசனத்திற்கான  பாதையைச் சுட்டிக்காட்டும் பொருட்டும் லெனின் தனது ஆய்வுரையில் பின்வருமாறு கூறினார்:

“ ஆறாவதாக, அரசியல் ரீதியில் சுதந்திரமான அரசுகள் என்ற வேடத்தில் அவற்றைப் பொருளாதார ரீதியிலும், நிதி விஷயத்திலும் ராணுவத்துறையிலும் முழுமையாகச் சார்ந்து நிற்கும் அரசுகளை நிறுவும் பான்மையில் ஏகாதிபத்திய வல்லரசுகள் திட்டமிட்டுச் செயல்படுத்திவரும் மோசடியை எல்லா நாடுகளின், குறிப்பாக பின்தங்கிய நாடுகளின் பரவலாக உழைக்கும் மக்கள் திரள் மத்தியில்  இடையறாது விளக்கிக்கூறி அம்பலப்படுத்துவது அவசியம். இன்றுள்ள சர்வதேச நிலைமைகளின் கீழ், ஒரு சோவியத் குடியரசுகளின் ஒன்றியத்தில் மட்டுமின்றி வேறு வழியில் பலவீனமான சார்புநாடுகளுக்கு விமோசனம் கிட்டாது.”
(‘கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கான ஆராய்ச்சி உரைகள். தேசிய மற்றும் காலனியப் பிரச்சினைகள் மீதான பூர்வாங்க நகல் ஆராய்ச்சி உரைகள்’. லெ-தெ-நூ-தொகுதி 11 பக்கம்-18).

இந்நாடுகளின் மீது சுமத்தப்பட்டிருக்கிற காலனியாதிக்க முறைகளை ஏகாதிபத்திய முதலாளிவர்க்கம் கைவிடாது; அவற்றின் விமோசனம் சோவியத் அமைப்புமுறை வெற்றி பெறுவதில்தான் அடங்கி இருக்கிறது என்றாலும், இந்நாடுகளின் சோவியத்துகள் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு அமைப்புகள் இல்லை; அவை விவசாயிகளின் சோவியத்துகளும், உழைக்கும் மக்களின் சோவியத்துகளும் ஆகும் என்றார்  லெனின். காரணம் இந்நாடுகளின் தேசியப் புரட்சி ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகளையும் தகர்த்தெறியும் தன்மையுடையதாகவும் ஜனநாயகத்
தன்மையுடையதாகவும் இருப்பதால் முதலாளித்துவமும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது எனும்
வரையறை பொருத்தக் கூடியதாகயிருப்பினும், அவை விவசாயிகளின் சோவியத்துகளும் உழைக்கும் மக்களின் சோவியத்துகளுமாகவே இருக்கின்றன.பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாகவோ, சோசலிஸ்ட் சோவியத்துகளாகவோ இருக்க இயலாது. இந்நாடுகளின் சோவியத்துகளைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறினார்:

“முதலாளித்துவத்துக்கு முந்தியதான உறவுகள் மேலோங்கியிருக்கும் நாடுகளில் ‘உழைக்கும் மக்களின் சோவியத்துகள்’ போன்றவற்றை நிறுவுவது மூலம் சோவியத் அமைப்பு முறையின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பிரயோகிக்க சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுவது பிரத்தியேகமாயும் அவசியம்”. (மேற் கூறப்பட்ட நூல் பக்கம் 17).

சீனப் புரட்சியும் ‘புதிய ஜனநாயகமும்’:

முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது என்ற லெனின் வரையறையையும், தேசிய
மற்றும் காலனிப் பிரச்னை  பற்றிய  லெனினின்  தத்துவம்,  கோட்பாடு  மற்றும்  கொள்கையையும் தோழர் மாசேதுங் சீனாவின் குறிப்பான
நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகித்தார். ஏகாதிபத்தியம், பாட்டாளி வர்க்க புரட்சி ஆகியவற்றின் சகாப்தத்தில், அவற்றை காலனிய மற்றும் சார்பு
நாடுகளுக்குப் பிரயோகித்து, இந்நாடுகளின் புரட்சி பற்றிய கோட்பாடாக புதிய ஜனநாயகத்தை முன்வைத்தார்.

காலனிய, அரைகாலனிய மற்றும் சார்பு நாடுகளைப் பொருத்தவரை, ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில், முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டது என்ற வரையறையின் பொருள் என்னவென்பதை மாவோவின் பின்வரும் கூற்றிலிருந்து அறியலாம்;

“முதல் ஏகாதிபத்திய உலகப்போர் வெடித்த பிறகு, 1917 - ல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியின் மூலம் உலகப் பரப்பளவில் ஆறில் ஒரு பகுதியில் சோசலிச அரசு உருவானதற்குப் பிறகு, சீன ஜனநாயகப் புரட்சியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு, சீன பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி பழைய உலகப்பூர்ஷ்வா ஜனநாயக புரட்சியின் பழைய வகையைச் சேர்ந்ததாகவும், அந்தப் பழைய உலக பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவும்  இருந்தது.அதற்குப் பிறகு சீன பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி தனது    குணாம்சத்தை    மாற்றிக்  கொண்டது.   அது   இப்பொழுது புதிய பூர்ஷ்வா ஜனநாயப் புரட்சி வகையைச் சேர்ந்ததாக இருகிறது புரட்சி அணியைப் பொறுத்த வரையில், அது இப்பொழுது உலகப் பாட்டாளி வர்க்கச் சோஷலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.”

அவர் மேலும் கூறுகிறார் :

“இந்த சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்திற்கு, அதாவது சர்வதேச பூர்ஷ்வா வர்க்கத்திற்கு, அல்லது சர்வதேச முதலாளித்துவத்திற்கு எதிராக காலனி அரைக்காலனி நாடுகளில் நடத்தப்படும் எந்தப் புரட்சியும் இனிமேல் பழைய உலகப் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் வகையைச் சேர்ந்ததாக இருக்கமுடியாது. அது புதிய வகையைச் சேர்ந்ததாகவே இருக்கும். இனி அது பழைய உலக பூர்ஷ்வா அல்லது உலக முதலாளித்துவப் புரட்சியின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. அது புதிய உலக பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச புரட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது. இம்மாதிரியான புரட்சிகரமான காலனி, அரைக்காலனி நாடுகள் உலக முதலாளித்துவ எதிர்ப் புரட்சி அணியின் நேசசக்தியாக கருதப்படக் கூடாது; ஆனால் அவை உலக சோஷலிசப் புரட்சி அணியின் நேச சக்திகளாகக் கருதப்பட வேண்டும்.காலனிய, அரைக்காலனிய நாட்டு மக்கள் நடத்தும் இந்தப் புரட்சியின் முதல்  கட்டம் தனது சமூகக்குணாம்சத்தின்படி,  அடிப்படையில் இன்னும் பூர்ஷ்வா ஜனநாயகத் தன்மைகளையே கொண்டிருக்கிறது; அப்புரட்சியின் முதல் கட்டத்தின் ஸ்தூலமான திட்ட வட்டமான தேவைகள் முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் பாதையில் உள்ள தடைக்கற்களை அகற்றுவதாகவே உள்ளது; இப்படி இருந்த போதிலும், இத்தகைய புரட்சி, இனி பூர்ஷ்வா வர்க்கத்தால் தலைமை தாங்கப்படுவதும் பூர்ஷ்வாவர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ சமூகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதுமான பழைய வகையைச் சார்ந்த பூர்ஷ்வா புரட்சியாக இருக்கவில்லை. ஆனால் இது பாட்டாளிவர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் புதிய வகைப்பட்ட புரட்சிகர வர்க்கங்கள் அனைத்தின் கூட்டு  சர்வாதிகாரத்தின் கீழ் அரசை அமைப்பதாகும். இவ்வாறாக, இந்தப் புரட்சி சோஷலிச வளர்ச்சிக்கான பாதையை விரிவாக்குவதற்கு உண்மையிலே சேவை செய்கிறது.”  (புதிய ஜனநாயகம் பக்கம் 9, 10)

முதலாளித்துவ நாடாளுமன்ற முறை வரலாற்று வழியில் காலாவதி- யாகிவிட்டது என்பதின் பொருளைப் பின்வரும் மாவோவின் வாசகங்களிலிருந்து அறியலாம்:

“ஒரு புறத்தில் ஏற்கனவே பழைமையாகிவிட்டதும் பூர்ஷ்வா சர்வாதிகாரத்தினால் ஆளப்படுவதும் ஆன மேலை நாட்டு வகையைச் சேர்ந்த முதலாளித்துவக் குடியரசில் இருந்து நம் புதிய ஜனநாயகம் வேறுபட்டது மறுபுறத்தில் சோவியத் ரஷ்யாவில் ஏற்கனவே உள்ள பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் அமைந்த சோவியத் வகையான சோஷலிசக் குடியரசில் இருந்தும் சீனப் புதிய ஜனநாயகக் குடியரசு மாறுபட்டது. மேலும் எல்லா முதலாளித்துவ நாடுகளில் அமைய இருப்பதும் தொழிலளவில் மிகவும் முன்னேறியுள்ள நாடுகளில் சந்தேகத்திற்கு இடமின்றி அமையப் போவதுமான சோவியத் வகையான சோஷலிசக் குடியரசில் இருந்தும் சீனப் புதிய ஜனநாயக குடியரசு மாறுபட்டது. ஆயினும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பூர்வமான காலகட்டத்தில் காலனி, அரைக்காலனி நாடுகளில் சோவியத் வகையைச்சேர்ந்த குடியரசைக் கொண்டுவரமுடியாது; எனவே இந்நாடுகளில் அரசு வடிவம் (form of state) ஒரு மூன்றாவது வகையைச் சார்ந்ததாகவே இருக்கும். அதுதான் புதிய ஜனநாயகக் குடியரசாகும். இந்த அரசு வடிவம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்திற்கு ஆனது. ஆகவே இது இடைக்காலத் தன்மை  கொண்டது ஆனாலும் இது தவிர்க்க முடியாத, மாற்ற முடியாத இடைக்கால வடிவமாகும்.”
 (புதிய ஜனநாயகம். பக்கம் 21)

மேலே எடுத்தாளப்பட்ட மேற்கோளில்,  “ஆயினும், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பூர்வமான காலகட்டத்தில் காலனி, அரைகாலனி நாடுகளில்
சோவியத் வகையைச் சேர்ந்த குடியரசைக் கொண்டு வர முடியாது” என்ற வாசகத்திலிருந்து லெனின் சொன்ன சோவியத் அமைப்பு முறை
எந்நாடுகளுக்கும் பொருந்தாது என மாவோ கருதுவதாகக் கொள்ளக் கூடாது. மேற்சொன்ன வாசகத்தின் பொருள் சோஷலிஸ்ட் சோவியத்துகள்
(பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம்) இந்நாடுகளுக்குப்  பொருந்தாது என்பதே ஆகும். சீனாவின் சிவப்பு அரசியல் அதிகாரத்தின் ஸ்தாபன வடிவம்
கிட்டதட்ட சோவியத் அரசியல் அதிகாரத்தினுடையதை ஒத்திருந்தது என அவர் கூறியதிலிருந்து அறியலாம்.

(தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவப் படைப்புகள் பக்கம் 17.(குறிப்பு எண்.7) )

தொகுத்துக் கூறுவோமானால் காலனி, அரைக்காலனி நாடுகளைப் பொறுத்தவரையில், ஏகாதிபத்தியம் பாட்டாளிவர்க்கப்  புரட்சி  ஆகியவற்றின் 
சகாப்தத்தில், முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டது என்பதின் பொருள்:

1. இந்த சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக காலனி அரைக்காலனி நாடுகளில் நடத்தப்படும் எந்தப் புரட்சியும் புதிய வகை பூர்ஷ்வா ஜனநாயகப்
புரட்சியே ஆகும்.

2. இந்நாடுகளின் மக்கள் நடத்தும் இந்தப்புரட்சியின் முதற்கட்டம், அதனுடைய சமூகக் குணாம்சத்தின்படி அடிப்படையில் இன்னும் பூர்ஷ்வா ஜனநாயகத்
தன்மைகளையே கொண்டிருப்பினும் இத்தகைய புரட்சி இனி பூர்ஷ்வா வர்க்கத்தால் தலைமைதாங்கப் படுகின்ற ஒன்றாகவோ, பூர்ஷ்வா வர்க்கச்
சர்வாதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ சமூகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட ஒன்றாகவோ பழைய வகையைச் சார்ந்த பூர்ஷ்வா புரட்சியாகவோ
இல்லை.

3. அவை பாட்டாளிவர்க்கத்தால் தலைமை தாங்கப் படுவதாகவும் புதிய வகைப்பட்ட பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியாகவும் புரட்சிகரவர்க்கங்கள்
அனைத்தின் கூட்டு சர்வாதிகாரத்தின் கீழ் அரசை அமைப்பதாகவும், சோசலிச வளர்ச்சிக்கான பாதையை விரிவாக்குவதற்கு உண்மையிலே சேவை
செய்வதாகவும் முதலாளித்துவச் சர்வாதிகாரத்தினால் ஆளப்படும் முதலாளித்துவக் குடியரசை அமைப்பதற்கு மாறாக ஒரு புதிய ஜனநாயக குடியரசை அமைப்பதாகவும் அமையும். இந்த அரசுவடிவம் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்திற்கானதாகையால் அது இடைக்கால வடிவமாகும்.
எனவே முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது, அதாவது முதலாளித்துவ
நாடாளுமன்ற முறையின் சாகப்தம் முடிவடைந்துவிட்டது. பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் துவங்கிவிட்டது என்ற வரையறையும், சோவியத் அமைப்பு
முறையின் அடிப்படைக் கோட்பாடும் ஒன்றாகவே இருப்பினும் பாட்டாளி வர்க்கக் கட்சியால் அதன் பிரயோகம் வேறுபட்ட நிலைமைகளுக்கு ஏற்ப
மாறுபட்ட வழிகளில் வெளிப்படுகிறது.

முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டது என்ற வரையறையும் சோவியத் அமைப்பு
முறையின் அடிப்படைக் கோட்பாடும், ஏகாதிபத்தியம், பாட்டாளிவர்க்கக் புரட்சி ஆகியவற்றின் சகாப்தத்தில் இருவகைப்பட்ட நாடுகளுக்கும் பொருந்தக்
கூடிய ஒன்றாக இருப்பதால் முதலாளித்துவத்துக்கு முந்திய உறவுகள் மேலோங்கி நிலவும் காலனிய, அரைக்காலனிய மற்றும் சார்பு நாடுகளுக்கும்
பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரமும், சோசலிஸ்ட் சோவியத்துக்களும்தான் பாட்டாளிவர்க்க கட்சியின் உடனடி குறிக்கோளாக வரையறை செய்யவேண்டும் என்று யாராவது சொன்னால் அது எவ்வாறு பொருந்தும்? அவ்வாறு  சொல்வது ஒரு கோட்பாட்டை காலம், இடம், இயல்பு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் பிரயோகிக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பாகுமே தவிர வேறு ஒன்றுமல்ல.

முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தத்தின் முடிவும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் துவக்கமும்:

அரசு பற்றிய லெனின் போதனை:

ஜனநாயகக் குடியரசு என்று சொல்லப்படும் ஒரு அரசும் கூட, ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் அடக்குமுறை செய்வதற்கான ஒரு இயந்திரமே
தவிர வேறு எதுவும் இல்லை. ஆக ஜனநாயகமான ஒரு முதலாளித்துவக் குடியரசு முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தையும், விரல் விட்டு
எண்ணக்கூடிய ஒரு சில முதலாளிகள் பெரும் திரளான உழைக்கும் மக்களையும் ஒடுக்கப் பயன்படும் ஒரு இயந்திரமாகவே உள்ளது. ஆக சுதந்திரமான ஒரு குடியரசிலும்கூட முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரமாகவே இருக்கின்றது. மேலும் தற்கால ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளில் ராணுவ வகைப்பட்ட சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருப்பதையும் காணலாம். இது அரசு பற்றிய ஜனநாயக குடியரசு பற்றிய மார்க்சிய-லெனினியப் போதனை ஆகும்.

தற்கால முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசுகள் அனைத்தும் இந்த அரசு இயந்திரத்தை நீடித்து வைத்திருக்கின்றன. எனவே “பொதுவான
ஜனநாயகம்” என்று ஆரவாரத்துடன் கூக்குரலிடுவது உள்ள படியே முதலாளித்துவ வர்க்கத்தினரையும், சுரண்டலாளர்கள் என்ற முறையில் அவர்களது தனியுரிமைகளையும் ஆதரிப்பதே ஆகும் என லெனின் எடுத்துரைத்தார்.

முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறையின் கீழ் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு
ஒருமுறை சொத்துடமை வர்க்கங்களின் எந்த பிரதிநிதி நாடாளுமன்றத்தில் “மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவர் மற்றும் அடக்குவார்” என்பதை
முடிவு செய்யும் உரிமைகளை அனுபவிக்கின்றன என்ற மார்க்சியப் போதனையை லெனின் திரும்பத் திரும்ப நினைவூட்டினார்.

பாரீஸ் கம்யூன் அனுபவம்:

பாரீஸ் கம்யூன் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறை மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரலாற்று வழியிலான மரபுவழிபட்ட
தன்மையையும், வரம்புக்குட்பட்டதான மதிப்பையும் மிகத்தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது. முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்புகள் மத்திய
காலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் முன்னேற்றமானவையாக இருப்பினும், பாட்டாளிவர்க்கப் புரட்சி சகாப்தத்தில் இவற்றை அடிப்படையாக
(முற்றாக) மாற்றுவதென்பது தவிர்க்க முடியாத தேவையாகும் என்ற வரலாற்றுப் படிப்பினையை தொகுத்துக் கூறி முதலாளித்துவ நாடாளுமன்ற
ஜனநாயகம் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டது என்பதை எடுத்துக் காட்டினார்.

கம்யூனானது முதலாளித்துவ அரசு இயந்திரத்தையும் அதிகார வர்க்கம் நீதித்துறை இராணுவம் மற்றும் போலீஸ் இயந்திரம் ஆகியவற்றின் அடித்தளம் வரைக்கும் சென்று அவற்றை நசுக்கவும் முயன்றது. சட்டமியற்றல் மற்றும் நிர்வாக அதிகாரத்திற்கு இடையே பிரிவினை இல்லாத தொழிலாளர் திரளின் ஒரு சுயாட்சி நிர்வாக நிறுவனம் மூலம் மாற்றீடு செய்ய முயன்றது இம்முயற்சிகளில்தான் உண்மையிலே கம்யூனின் முக்கியத்துவம் அடங்கி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டி பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தைப் பற்றிய மார்க்சீய போதனையை எல்லா வகையான சந்தர்ப்பவாதிகளின் தாக்குதலில் இருந்தும் பாதுகாத்தார்.

பாரீஸ் கம்யூனின் அனுபவத்திற்கு பிறகு மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவத்தினால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு அதைத் தனது குறிக்கோளுக்குப் பயன்படுத்த முடியாது, அதை தகர்த்தெறிய வேண்டும் என்று எடுத்துரைத்த புரட்சியைப்பற்றிய அடிப்படையான விதியை  லெனின் உறுதியாக ஆதரித்ததுடன் அதை மேலும் செழுமைப்படுத்தினார்.

புரட்சியின் உயிர்நாடி:

மார்க்சீய-லெனினிய போதனையின்படி ஒவ்வொரு புரட்சியிலும் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரப் பிரச்சினைதான் பாட்டாளி வர்க்கப்புரட்சியில் உயிர் நாடியான பிரச்சினை பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரதைக் கைப்பற்றும் பொருட்டு, முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களைப் பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக் கட்டி, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதும் ஆகும்.

திருத்தல்வாதிகளுக்கு எதிரான லெனினின் போராட்டம்:

பலாத்காரப் புரட்சியையும், பழைய அரசு இயந்திரத்தை உடைத்தெறியும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் பெர்ன்ஸ்டைன் எதிர்த்தார்.
முதலாளித்துவம் சமாதான முறையில் “சோசலிசமாக வளர்ச்சியடையும்” என்று அவர் வாதிட்டார். நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் அரசியல்
அமைப்பு அழிக்கப்படக் கூடாது என்றும் அதற்கு மாறாக, அது மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பெர்ன்ஸ்டைன் கூறினார்.

திருத்தல்வாதத்தின் தலைமகன் பெர்ன்ஸ்டைனை லெனின் பின்வருமாறு விமர்சனம் செய்தார்:

“மார்க்சியத்தின் நேரடியான புரட்சிகரத் தன்மையைத் தவிர்த்துவிட்டு பிறவற்றை மட்டுமே மார்க்சியமாக பெர்ன்ஸ்டைன் வாதிகள்  
ஏற்றுக்கொண்டனர் இப்பொழுதும் ஏற்கின்றனர். பாராளுமன்றப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் ஆயுதங்களில்
ஒன்று என்று அவர்கள் கருதவில்லை மாறாக “பலாத்காரம்”, “கைப்பற்றுதல்”, “சர்வாதிகாரம்” போன்றவற்றை தேவையற்றதாகச் செய்து
விடுகிற முக்கியமான ஒரே போராட்ட வடிவமாக பார்க்கின்றனர்.”

(லெனின் - இராணுவப் படைகளின் வெற்றியும், தொழிலாளர் கட்சியின் பணிகளும்)

முதலாளித்துவப் பாராளுமன்ற அமைப்பில் “வர்க்க முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மேற்கொள்ள இனியும்
இடமில்லை” என்றும் “பலாத்காரத்தின் மூலம் அரசைத் தூக்கியெறிய வேண்டும் எனப் பிரசாரம் செய்வது கேலிக்குரியது” என்றும் ஓடுகாலி
காவுத்ஸ்கி கூறினார்.  “இதுவரை இருந்தது போலவே இப்போதும் நமது அரசியல் போராட்டத்தின் நோக்கம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை
பெற்று, நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின் எஜமானனாக மாற்றி, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகத்தான் இருந்து வருகிறது” என்று ஓடுகாலி
காவுத்ஸ்கி வாதிட்டார் அவரை  லெனின் பின்வருமாறு விமர்சனம் செய்தார்.
“கயவர்களும் முட்டாள்களும்தான் முதலாளித்துவ நுகத்தடியின் கீழ், கூலி அடிமை என்ற நுகத்தடியின் கீழ் நடத்தப்படும் தேர்தல்களில் பாட்டாளி
வர்க்கம் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிக்கு வரும் என்று நினைக்க முடியும். இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று அல்லது முட்டாள்தனமாகும். இது
வர்க்கப் போராட்டத்துக்கும் புரட்சிக்கும் பதில் பழைய அமைப்பின் கீழ் பழைய அதிகாரத்துக்கு ஓட்டுப் போட்டுக்  கொண்டிருக்க வேண்டும் என்று
போதிக்கிறது.”
(லெனின் - ‘இத்தாலியன், பிரெஞ்சு, ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு வாழ்த்துக்கள்’)

பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அனைத்தையும் தழுவிய விதிகளில் ஒன்றான பலாத்காரப்புரட்சி என்ற விதியையும், பழைய அரசு நிறுவனங்களை
ஒழித்துக் கட்டுவதின் அவசியத்தையும் ஆளும் வர்க்கங்களின் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அதனிடத்தில் பாட்டாளிவர்க்கத்தின்
தலைமையின் கீழ் ஆளப்படும் வர்க்கங்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதின் அவசியத்தையும் முதலாளித்துவச் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு
அதனிடத்தில் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதின் அவசியத்தையும், பண்டைய திருத்தல் வாதிகளிலிருந்து நவீன திருத்தல் வாதிகள் வரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். சமாதான மாற்றத்திற்கு வாய்ப்புண்டு என்று வாதிடுகின்றனர். கத்தியின்றி, இரத்தமின்றி “சுதந்திரம்” பெற்று விட்டதாக கூறிக்கொள்ளும் இந்நாட்டில் இந்த வாதம் விலை போவதற்கான வாய்ப்புகள் நிரம்ப இருக்கின்றன. சமாதான மாற்று பாதைக்காக வாதிட்ட பழைய திருத்தல் வாதிகள் தங்களது வாதத்திற்கு நியாயம் கற்பிப்பதற்காக, 1870- களில் அமெரிக்க இங்கிலாந்து போன்ற நாடுகளில் “தொழிலாளர்கள் தங்கள் இலட்சியத்தை சமாதான முறையில் அடைய முடியும்” என்று மார்க்ஸ் கூறியதை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.ஓடுகாலி காவுத்ஸ்கியைப் பற்றி விமர்சனம் செய்த போது லெனின் இந்த வாதத்தை மறுத்தலித்தார். அவர் பின்வருமாறு கூறினார்:

“சாத்தியப்பாட்டை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டார் என்ற வாதம் குதர்க்கவாதிகளின் வாதம். மேற்கோள்களையும் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு செப்பிடுவித்தைகாட்டுகிற ஏமாற்றுப் பேர்வழிகளின் வேலையாகும்.

முதலாவதாக, இந்த சாத்தியப்பாட்டை ஒரு விதிவிலக்கு என்ற அளவில்தான் அவர் ஏற்றுக் கொண்டார்.

இரண்டாவதாக, அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம், அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை.

மூன்றாவதாக, அப்போது இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றுள்ளது போல முதலாளித்துவ அரசு இயந்திரத்தில் முழுமையான
கருவியாக பணிபுரியக் கூடிய இராணுவம் இருக்கவில்லை. ”

(லெனின், “ பாட்டாளிவர்க்க புரட்சியும் ஒடுகாலி காவுட்ஸ்கியும்”)

குருச்சேவின் நவீன திருத்தல்வாதம்:

இவ்வாறு சமாதான மாற்றத்திற்கான சாத்தியப்பாடு உண்டென்ற வாதத்தை  லெனின் மறுதலித்த பிறகும் கூட, “சமாதான மாற்றம்”  அல்லது
“நாடாளுமன்ற பாதையின் மூலம் சோஷலிசத்திற்கு மாற்றம்” என்ற வழியை நவீன திருத்தல்வாதி குருசேவ் முன் வைத்தார். முதலாளித்துவச்
சர்வாதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு பாட்டாளி வர்க்கம் நாடாளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மையை
பெறமுடியும் என்றும்; அவ்வாறு பெரும்பான்மை பெறமுடிந்தால் அதுவே, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை 
நொறுக்கி எறிந்ததும் ஆகும் என்றும்; பெரும்பான்மையைக் கைப்பற்றி அதனை ஒருமக்கள் அதிகாரத்தின் கருவியாக மாற்றிவிடுவது என்பதின் பொருள் முதலாளித்துவ வர்க்கத்தின் இராணுவ அதிகார வர்க்க இயந்திரத்தை அழித்துவிட்டு அதனிடத்தில் பாராளுமன்ற வடிவிலான ஒரு புதிய பாட்டாளி
வர்க்க மக்கள் அரசை நிறுவியதாகும் என்றார் குருசேவ். குருசேவ் கூறுவது அனைத்தும் கோமாளித்தனமே அன்றி வேறு ஒன்றும் அல்ல.

நாடாளுமன்றத்தின் அதிகார எல்லை:

நாடாளுமன்ற முறை அரசாங்கம் உள்ள முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்ற அமைப்புகள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறதே ஒழிய, அதிகார வர்க்கமும், இராணுவமும் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை, அவை நிலையானவை. இந்த அரசு பொறியமைவு முதலாளி வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாடாளுமன்ற அமைப்புகளுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் உண்டே ஒழிய அதற்கு செயலாற்றும் அதிகாரம் இல்லை. அரசாங்கத்தின் அலுவல்கள் அனைத்தும் நாடாளுமன்றம் என்ற திரைக்குப் பின்னால் தேர்ந்தெடுக்கப்படாத அந்த நிலையான அமைப்பினால் (பொறியமைவினால்) செய்யப்படுகிறது. புதிதாக ஒரு நாடாளுமன்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த அமைப்பும் கூட அந்த தேர்ந்தெடுக்கபடாத இராணுவ, அதிகார வர்க்க அமைப்பால்தான் பெரும்பாலும் கூட்டப்படுகிறது. தேர்ந்தெடுக்கப் படாத நிலையான அமைப்புகளான அதிகார வர்க்கமும், போலீசும், இரணுவம் ஆகியவைதான் நாடாளுமன்ற அமைப்புகளுக்கான தேர்தலையே நடத்துகிறது.

நாடாளுமன்ற மாயைக்கு எதிரான மாவோவின் போராட்டம்:

முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்த அமைப்புகளால் நடத்தப்படும் தேர்தல்களில் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி
பெரும்பான்மை பெறுவதோ, அவ்வாறு அது பெற்றாலும் அந்த வர்க்கத்திற்கு எதிராக பாராளுமன்றங்கள் செயல்பட அனுமதிக்கும் என்பதோ,
அமைதியாக அதிகாரத்தைப் பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துவிடும் என்பதோ நடவாத காரியம். இவ்வாறு கூறுவது பாட்டாளி வர்க்கத்தையும் பிற
உழைக்கும் மக்களையும் நாடாளுமன்ற மாயையில் மூழ்கடிக்கச் செய்வதற்கான ஒரு மோசடியே தவிர வேறொன்றுமல்ல. இருப்பினும் குருசேவின் நவீன திரிபுவாதத்தால் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் பீடிக்கப்பட்டிருந்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் 1957ஆம் ஆண்டு பிரகடனமும்,1960 அறிக்கையும் குருசேவின் திரிபுவாதத்தைக் கொண்டிருந்தன. மேற்கூறப்பட்ட இரண்டு ஆவணங்களில் அடங்கியுள்ள குருசேவின் திரிபுவாதத்தை மாவோவின் தலைமையில் இருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி பின்வருமாறு சுட்டிக் காட்டிற்று:

1.“ஆளும் வர்க்கம் தானாகவே அதிகாரத்தைத் துறக்காது என்பதைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில் இந்த இரண்டு ஆவணங்களும் உள்நாட்டுப் போரின்றி பல முதலாளித்துவ நாடுகளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று கூறுகிறது.

2.பாராளுமன்றமல்லாத பாதையின் மூலம் வெகுஜனப் போராட்டங்களை நடத்தவேண்டும் என்று கூறும் அதே சமயம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் உழைக்கும் மக்களுக்குச் சேவை செய்யும் கருவியாக அதை மாற்ற முடியும் என்று சொல்லப்படுகிறது.

3.சமாதானமற்ற மாற்றத்தைப் பற்றிக் குறிப்பிடும் அதே வேளையில், பலாத்காரப் புரட்சியின் உலகு தழுவிய விதியை அது வலியுறுத்த தவறி விட்டது.”

இந்திய திருத்தல்வாதிகளின் ஏமாற்று வித்தை:

ஏற்கனவே நாடாளுமன்றப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத் தலைமைக்கு இது ஓர்
ஆயுதமாகப் பயன்பட்டது. இன்று வலது, இடது திரிபுவாதிகள் நாடாளுமன்றப் பாதையைப் பின்பற்றி இந்தியாவின் ஜனநாயகப் புரட்சிக்கு பெரும்
துரோகமிழைக்கின்றனர். நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளில் சட்ட மன்றங்களில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் உழைக்கும் மக்களுக்கு
சேவை செய்ய முடியும் என்று கூறி மக்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களாக செயல்பட்டு வருகின்றனர், பலாத்காரப் புரட்சி என்பது பாட்டாளி
வர்க்கப் புரட்சியின் விதிகளில் ஒன்றாகும்; மார்க்சிய லெனினிய அடிப்படைகளில் ஒன்றாகும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் இவ்விதியைப் பற்றி மாவோ பின் வருமாறு கூறுகிறார்:

“ஆயுத சக்தியால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், யுத்தத்தால் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்பது புரட்சியின் கேந்திரக் கடமையும், அதன் அதி உயர்ந்த வடிவமும் ஆகும், புரட்சி பற்றிய இந்த மார்க்சிய - லெனினியக் கோட்பாடு சர்வவியாபகமாகப் பொருந்தியது, சீனாவுக்கு மாத்திரமல்ல, இதர நாடுகளுக்கும் பூரணமாகப் பொருந்தியது. “
(மாவோ- போர்த்தந்திரம் குறித்த பிரச்சினைகள்)

கோட்பாடு ஒன்றாக இருந்தாலும் பாட்டாளி வர்க்கக் கட்சியால் அதன் பிரயோகம் வேறுபட்ட நிலைமைக்கேற்ப வேறுபட்ட வழிகளில் வெளிப்படுகிறது.

முதலாளித்துவ நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா? என்ற பிரச்சனையும் செயல்தந்திரங்களும்:

லெனினும் பாட்டாளிவர்க்க கட்சியின் செயல்தந்திரங்களும்:
முதலாளித்துவ நாடாளுமன்றம் வரலாற்று வழியில் காலாவதியாகி இருப்பினும் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் தங்களது செயல் தந்திரங்களை அதன் அடிப்படையில் வகுத்துக் கொள்ளக்கூடாது என்றார் லெனின். ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில்
காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதைப் பொறுத்தே அவை தமது செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.
நாடாளுமன்ற முறை (நடைமுறையில்) அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதா இலலையா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஓர் அடிப்படையையும், அது அரசியல் வழியில் காலாவதியாகாத பட்சத்தில் ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி அதில் பங்கு கொள்வதின் நோக்கத்தையும், அவ்வாறு அதில் பங்குக் கொள்ளும் போது ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி செய்ய வேண்டிய பணிகளையும், அதில் பங்கு கொள்வதற்கு ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி கடைபிடிக்க வேண்டிய முறையையும் சில குறிப்பிட்ட நிலைமைகளில் நாடாளுமன்ற முறையையும் தேர்தல்களையும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி புறக்கணிக்க வேண்டிய பட்சத்தில் அவ்வாறு புறக்கணிப்பைத் தீர்மானிப்பதற்கான அணுகுமுறையையும்  லெனின் வகுத்தளித்தார்.

ஒரு தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளிவர்க்கக்கட்சி பங்கு கொள்ளும் பிரச்சினை எழுமானால், அவ்வாறு பங்கு கொள்வதற்கு அது வகுத்துக் கொள்ள வேண்டிய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் தீர்மானிப்பதற்கான அணுகுமுறையையும் லெனின் வகுத்தளித்தார்.

சுருங்கக் கூறின், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை பற்றி ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி தனது செயல் தந்திரங்களை வகுத்துக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையை அவர் வகுத்தளித்தார்.
எனினும், இவை அனைத்தையும் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நிலவிய புறவயமான அம்சத்தைப் பற்றிய ஆய்விலிருந்தும், அந்நாடுகளின்
தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து பெற்ற நடைமுறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டும் அவர் வகுத்தளித்தார்.“இடதுசாரி கம்யூனிஸம் சிறுபிள்ளைத்தனமான கோளாறு”, “ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் வேறுபாடுகள்”, “பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்,” என்ற அவருடைய நூல்களிலிருந்தும் மற்றும் பிற அவருடைய எழுத்துக்களிலிருந்தும் இதை நாம் அறியலாம். தவிர,” இடதுசாரி கம்யூனிஸம் - சிறுபிள்ளைத்தனமான கோளாறு” என்ற நூலை அவர் எழுதிய காலத்தில் காலனிய, அரைக்காலனிய மற்றும் சார்பு நாடுகளில் கம்யூனிஸ்ட் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இல்லை. அதற்குப் பிறகே அவைக் கட்டப்பட்டன. ஆகையால் அவர் இந்நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கக் கட்சிகளைக் கட்டியமைப்பதற்கான தத்துவம் மற்றும் அடிப்படையான கோட்பாடுகளை வகுத்தளிப்பதோடு நிறுத்திக் கொண்டார்.

அவர் வரைந்த “தேசிய மற்றும் காலனிப் பிரச்சினைகள் மீதான பூர்வாங்க நகல் ஆராய்ச்சி  உரைகள்” என்ற ஆவணத்தில்“இந்த நாடுகளில் பெயரில்
மட்டுமின்றி மெய்யாகவே கம்யூனிஸ்டாக இருக்கப்போகும் வருங்காலப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் சக்திகள் ஒன்று திரட்டப்படும், தமது சொந்த
தேசங்களில் முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களை எதிர்த்த போராட்டத்தின் தங்கள் விசேஷப் பணிகளைப் புரிந்துக் கொள்வதற்குரிய பயிற்சி தரப்படும் எனும் நிபந்தனையின் மீது மட்டுமே காலனி மற்றும் பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவ ஜனநாயக தேசிய இயக்கங்களுக்கு
கம்யூனிஸ்ட்டு அகிலம் ஆதரவு அளிக்க வேண்டும்”  என்று சொல்லப்பட்டதிலிருந்தே நாம் மேற்கூறியதை உணரலாம்.

எனவே, ஐரோப்பிய தொழிலாளர் இயக்கமும் பாட்டாளிவர்க்கக் கட்சிகளும் கடை பிடித்த செயல் தந்திர அணுகுமுறையும் கோட்பாடுகளும் பொதுவாகவும் முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதைப் பற்றி குறிப்பாகவும் பிரயோகிக்கும் பிரச்சினை எழும்போது, அவை முதலாளித்துவத்திற்கு முந்திய உறவுகள் மேலோங்கி நிலவும் காலனிய, அரைக்காலனிய மற்றும் சார்பு நாடுகளின் புறவயமான அம்சத்தின் வளர்ச்சிப்போக்குக்கும், புறவயமான நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பொருந்தும் வண்ணம் பிரயோகிக்கத் தகுந்தனவாகவே இருக்கின்றன.

ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளுமன்றமுறைபற்றி செயல்தந்திரத்தை வகுத்துக் கொள்வது கோட்பாடு ரீதியில் அமையும்
பொருட்டு, ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா? அது அரசியல் வழியில்
காலாவதியாக வில்லை என்றால் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி அவ்வமைப்புகளில் பங்கு கொள்வதன் நோக்கம்; அவ்வமைப்புகளில் அது
செய்யவேண்டிய பணி; பங்கு கொள்வதில் அது கடைபிடிக்க வேண்டிய முறை; மற்றும் நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளையும்
தேர்தல்களையும் புறக்கணிப்பதைத் தீர்மானிப்பதற்கான அணுகு முறை ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காண்கிறார். நாடாளுமன்ற முறை அரசியல்
வழியில் காலாவதியாகி விட்டதா? என்ற வினாவை எழுப்பி “துருவி பரிசீலிக்கும் பகுத்தாய்வினால் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று இது” என
விடையளிக்கிறார்.

நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகவில்லை என்பதைப் பற்றித் தீர்மானிப்பதற்கு அவர் கூறும் காரணங்கள்:

* “.....பாட்டாளி வர்க்கத்தினரில் இலட்சக் கணக்கானோரும்”, “எண்ணற்றோரும்” இன்னமும் பொதுவாக நாடாளுமன்ற முறையை ஆதரிப்பதோடன்றி, அப்பட்டமான “எதிர்புரட்சி தன்மை வாய்ந்தோராகவும்” இருக்கையில், “நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதென்று”  கூறுவது எப்படி!? ஜெர்மனியில் நாடாளுமன்ற முறை இன்னமும் அரசியல் வழியில் காலாவதி ஆகிவிடவில்லை என்பது தெளிவு...”
(“இடதுசாரி கமுயூனிஸம் - இளம்பருவக் கோளாறு”  லெனின் நூல்திரட்டு  தொகுதி 4 பக்கம்-73)

* “ஜெர்மனியிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு நாடாளுமன்ற முறை “அரசியல் வழியில் காலாவதியானதுதான்”  ஆனால்- இதுவே இங்குள்ள முக்கிய விசயம் - நமக்கு காலாவதியாகி விட்டதால் அதுவர்க்கத்துக்கும், வெகு ஜனங்களுக்கும் காலாவதியாகி விட்டதாகும் எனக்கருதக் கூடாது... ஆனால் அதேபோதில் (வர்க்கத்தின் கம்யூனிஸ்டு முன்னணிப்படை மட்டுமின்றி) வர்க்கம் அனைத்தின் (உழைப்பாளி மக்களின் முன்னேறிய பகுதியோர் மட்டுமின்றி) உழைப்பாளி மக்கள் அனைவரின் வர்க்க உணர்வு, தயார் நிலை இவற்றின் எதார்த்த நிலவரத்தை நீங்கள் நிதானமாய்க் கவனித்து மதிப்பிட்டாக வேண்டும்.

* ஆலைத் தொழிலாளர்களில் “லட்சக்கணக்கானோரும்”  “எண்ணற்றோரும்” வேண்டாம். ஒரளவு பெரிதான சிறுபான்மையினர் மட்டும்தான் கத்தோலிக்கப் பாதிரிமார்களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றாலும்கூட கிராமாந்திரத் தொழிலாளர்களிலும் இதுபோன்ற சிறுபான்மையினர் மட்டும்தான் நிலப்பிரபுக்களையும் பணக்கார விவசாயிகளையும் பின்பற்றுகிறார்கள் என்றாலும்கூட -   ஜெர்மனியில் நாடாளுமன்ற முறை இன்னமும் காலாவதியாகிவிட வில்லை...” (மேற் கூறப்பட்ட நூல் பக்கம்-74)
*  “....இங்கு எழும் கேள்வி முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் அதிககாலம் இருந்துள்ளனவா அல்லது சிறிது காலமாய்த்தான் உள்ளனவா என்பதல்ல; பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும், முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் (அல்லது அது கலைக்கப்பட அனுமதிக்கவும்) எந்த அளவுக்கு (சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும், நடைமுறையிலும்) தயாராய் இருக்கின்றார்கள் என்பதே இங்கு எழும் கேள்வி...” (மேற்கூறப்பட்ட நூல், பக்கம்-76)
 * “...முதலாளித்துவ நாடாளுளுமன்றங்களையும் இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை, அவற்றில் நீங்கள் வேலை செய்தே ஆகவேண்டும்....” (மேற்கூறப்பட்ட நூல், பக்கம்-75)

மேலே எடுத்துக்காட்டப்பட்ட  மேற்கோள்களிலிருந்து ஒரு நாட்டில் உள்ள நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதா என்பதை
எவ்வாறு மதிப்பீடு செய்வது? என்பதை பற்றியும், அது அரசியல் வழியில் காலாவதியாகிவிடவில்லை என்பது பற்றியும் பின்வருமாறு தொகுத்து
கூறலாம்.

1.ஒரு நாட்டில் உள்ள நாடாளுமன்றமுறை நீண்ட நாட்களாக இருக்கிறது என்பதாலோ, கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளி வர்க்கத்தினுடைய, உழைக்கும் மக்களுடைய முன்னணிப் பகுதியினரும் நாடாளுமன்றம் காலாவதியாகி விட்டது என்பதை உணர்ந்து விட்டதாலோ, ஒரு நாட்டிலுள்ள நாடாளுமன்றம் வர்க்கத்துக்கும் வெகுஜன மக்களுக்கும்கூட அரசியல் வழியில் (நடைமுறையில்) காலாவதியாகிவிட்டது என்று மதிப்பீடு செய்யக்கூடாது.
வர்க்கம் அனைத்தினதும் உழைக்கும் மக்கள் அனைவரினதும் வர்க்க உணர்வு, தயார் நிலை ஆகியவை பற்றிய எதார்த்த நிலவரத்தை ஒரு நிதானமான மதிபபீடு செய்யப்படுவதின் அடிப்படையில்தான் ஒரு நாட்டிலுள்ள முதலாளித்துவ நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகி- விட்டதா இல்லையா என்பது பற்றிய முடிவுக்கு வரவேண்டும்.

2.(அ) தொழிலாளர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களில் ஒரளவு பெரிதான சிறுபான்மையினர் நாடாளுமன்ற முறையை ஆதரித்தாலும், ஆளும்
வர்க்கத்தினரையும் மதகுருமார்களையும் (ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்) அவர்கள் பின்பற்றினாலும்
நாடாளுமன்ற முறை இன்னும் அரசியல் வழியில் காலாவதியாகி விடவில்லை என்பதேயாகும்.

(ஆ) பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்புகளை ஏற்றுக் கொள்ளவும், முதலாளித்துவ - ஜனநாயக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும்
தயாராகாதவரையிலும்; முதலாளித்துவ நாடாளுமன்றங்களையும் இதர பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் பாட்டாளிவர்க்க
இயக்கத்திடம் இல்லாத வரையிலும் நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விடவில்லை என்பதேயாகும்.

முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பாட்டாளிவர்க்கக் கட்சியின் பணி:

ஒரு நாட்டிலுள்ள நாடாளுமன்றம் அரசியல் வழியில் காலாவதியாகாத வரையில் பாட்டாளிவர்க்கக் கட்சி அதில் பங்கு கொண்டே ஆகவேண்டும்
என்றும் லெனின் கூறுகிறார்.

ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கு கொள்வதின் நோக்கத்தையும், அதில் ஆற்ற வேண்டிய பணியையும் பற்றி
லெனின் கூறுவது என்ன?

நாடாளுமன்ற முறை இன்னமும் அரசியல் வழியில் காலாவதியாகாதவரை “புரட்சிகரப் பாட்டாளிவர்க்கக் கட்சி அதன் சொந்த வர்க்கத்தின் பிற்பட்ட
பகுதியோரைப் போதனை பெறச் செய்யும் பொருட்டும், அடக்கி ஒடுக்கப்படும், வளர்ச்சியில்லாத, அறியாமையில் ஆழ்ந்த கிராமாந்திர வெகுஜனங்களைப்
போதனை பெறச் செய்து அறிவொளி தரும் பொருட்டும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்ற அரங்கில் நடைபெறும் போராட்டத்திலும்
பங்கெடுத்துக்கொள்வது இக்கட்சியின் கடமையாகும் என்பதையே, இது சந்தேகத்துக்கு இடமின்றி குறிப்பிடுகிறது. முதலாளித்துவ
நாடாளுமன்றங்களையும் இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை அவற்றில் நீங்கள்வேலை செய்தே ஆகவேண்டும்: ஏனெனில் பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும் கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டு வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் காண்பீர்கள்” என லெனின் கூறினார். (மேற்கண்ட நூல் பக்கம் 74,75)

ஒரு நாட்டிலுள்ள முதலாளித்துவ நாடாளுமன்றம் அரசியல் வழியில் காலாவதியாகாமல் இருக்கும் பட்சத்தில் அவ்வமைப்புகளில் ஒரு பாட்டாளி
வர்க்கக் கட்சி பங்கு கொள்வதின் நோக்கம், பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளச் செய்யும் பொருட்டும்,
முதலாளித்துவ ஜனநாயக நாடாளுமன்றம் கலைக்கப் படுவதை ஏற்றுக்கொள்ளச் செய்யும் பொருட்டும் அவர்களை சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறை வழியிலும் தயார் செய்வதே ஆகும். இதை பின்வரும் லெனின் கூற்றிலிருந்து அறியலாம்.

“...சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சிலவாரங்களே முன்னதாகவும், இந்த வெற்றிக்குப் பிற்பாடுங் கூட, முதலாளித்துவ ஜனநாயக நாடாளுமன்றம்
ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வதானது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்திற்குத் தீங்கிழைப்பதற்குப் பதிலாக, இதுபோன்ற நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட
வேண்டியது எப்படி அவசியமென்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனப் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும்.
இந்நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய்க் கலைக்கப்படுவதற்கு வகை செய்கிறது என்பதும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை “அரசியல்
வழியில் காலாவதியாக்குவதற்குத் துணை புரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.” (மேற்படி நூல் பக்கம்-77)

மேற் கூறப்பட்ட மேற்கோள் ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்குகொள்வதின் நோக்கத்தையும், அதில் பங்கு கொள்ள
வேண்டிய அவசியத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது எதிர்ப்புரட்சி நாடாளுமன்றத்தின் உள்ளே சோவியத் எதிர்த்தரப்பு ஒன்று இருப்பது
நாடாளுமன்றத்தின் கலைப்புக்கு இடையூறாக இலலையென்றும் அதற்கு அணுசரணையாகவே இருந்தது என்றும் அவர் கூறுகிறார்...

“புரட்சியின் போது பிற்போக்கு நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெறும் வெகுஜன நடவடிக்கைகள், நாடாளுமன்றத்தினுள் செயல்படும் புரட்சி
அனுதாபங்கொண்ட (நேரடியாக புரட்சியை ஆதரிப்பதாய் இருப்பின் இன்னும் நல்லதே) ஓர் எதிர்த் தரப்புடன் இணைக்கப் படுவதானது பெரும் பயன்
தரத்தக்கதென்பதே இப்புரட்சிகளின் அனுபவமாகும்” என்றும் அவர் கூறுகிறார். (மேற்படி நூல் பக்கம் -80)

ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளு மன்றத்தில் செய்வது எதுவாயினும் -  நாடாளுமன்றத்தை   ஒரு பிரச்சார மேடையாகப்
பயன்படுத்துதல்; 

நாடாளுமன்ற வடிவிலான போராட்டத்தையும் நாடாளுமன்றத்திற்கு புறம்பானவற்றையும் இணைத்தல்;

ஊழல் மலிந்த இந்த முதலாளித்துவ நிறுவனங்கள் உழைக்கும் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வஞ்சகமான நடவடிக்கைகளையும், அரசியல்,
பொருளாதார, நிதி, அயல்நாட்டு உறவு, இராணுவத் துறை மற்றும் பிறவாழ்வு துறையிலும் நாடாளுமன்றத்தின் பேரால் அரசும், அரசாங்கமும்
ஆளும்வர்க்கங்களுக்குச் செய்யும் சேவையும் இன்னும் பிறவற்றையும் நாடாளுமன்ற மேடையிலிருந்தே அம்பலப்படுத்துதல்;

உழைக்கும் மக்களையும் நாட்டையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளின் மீது பல்வேறு சமுதாய வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்
கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பற்றியும் நாடாளுமன்ற மேடையிலிருந்து உழைக்கும்
மக்களுக்கு எடுத்து உணர்த்துதல்; இன்னும் பிறவும்-

இவற்றில் எது ஒன்றாயினும் பரந்துபட்ட மக்கள் சோவியத் அமைப்பை ஏற்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் அவர்களை சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும், நடைமுறை வழியிலும் தயாரிக்கும் நோக்கத்திற்காக் செய்யப்பட வேண்டும் என்பதே ஆகும். முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் ஒரு பாட்டாளிவர்க்க கட்சி பங்கு கொள்ளும்போது, அது அவ்வமைப்பிலிருந்து செய்ய வேண்டிய பணி எது என்று அவர் சொன்னாரோ அப்பணியை அங்கிருந்து செய்வதின் நோக்கம் இதுவே ஆகும்.

ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளு மன்றத்தில் பங்கு கொள்ளும் முறையைப் பற்றி  லெனின் கூறும்போது, திட நம்பிக்கையும்
பற்றுறுதியும் கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்ட்டுகளால் ஆனதும், கட்சியின் மத்தியக் கமிட்டியின் கண்டிப்பான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதுமான ஒருதனி
நாடாளுமன்ற குழுவினை நிறுவி, அதன் மூலம் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினாரே தவிர, பாட்டாளிவர்க்கக் கட்சியை ஒரு
நாடாளுமன்ற நடைமுறைக்கே உகந்த ஒரு கட்சியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறவில்லை. (அழுத்தம் ப-ர்)

முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கு கொள்வதின் அவசியத்தை உணர்த்தும்போது கூட அவர் எல்லாக் காலங்களிலும் பங்கு கொண்டே 
தீரவேண்டு மென்றோ புறக்கணிப்பதே கூடாது என்றோ அவர் சொல்லவில்லை. தவிர இடதுசாரி கம்யூனிசம் சிறுபிள்ளைத்தனமான கோளாறு என்ற நூலில் இடது போக்கின் புறக்கணிப்பு வாதத்தை விமர்சனம் செய்வதற்கு அழுத்தம் தரப்படும் முறையில் அவர் எழுதியிருந்தாலும் பங்குகொள்வதின் அவசியத்தை வலியுறுத்தும் போது அவர் பின்வருமாறு கூறினார்:

“....காலத்துக்கு ஒவ்வாத கருத்தை யாராவது உரைத்தால், அல்லது முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்குகொள்வதை எல்லா நிலைமைகளிலும் நிராகரிக்கலாகாது என்று பொதுவாகவே யாராவது கருதினால், அது தவறே ஆகுமென்பதில் சந்தேகமில்லை. பகிஷ்காரம் பயனுள்ளதாயிருக்கும் நிலைமைகளை வரையறுக்க இங்கு நான் முயற்சிப்பதற்கில்லை. ஏனெனில், இந்த கட்டுரையின் நோக்கம் அவ்வளவு விரிவானதல்ல; அதாவது, சர்வதேசக் கம்யூனிஸ்டுச் செயல்தந்திரம் சம்பந்தமான இந்நாளையப் பிரச்சினைகள் சிலவற்றில் ருஷ்ய அனுபவத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்”. (மேற்படி நூல், பக்கம் - 81)

லெனினும் தேர்தல் புறக்கணிப்புச் செயல்தந்திரங்களும்:

இடதுசாரி கம்யூனிசம்-சிறு பிள்ளைத் தனமான கோளாறு என்ற நூலில் புறக்கணிப்பு பயனுள்ளதாயிருக்கும் நிலைமைகளை வரையறுக்க அவர்
முயற்சிக்கவில்லை என்றாலும்கூட, புறக்கணிப்பு செயல்தந்திரத்தை உருவாக்குவதற்கான ஒரு அணுகு முறையை அளித்திருக்கிறார். அவர்
அளித்துள்ள அணுகு முறையைப் பரிசீலித்து அதைப்பற்றி ஒரு கருத்தாக்கத்தைப் பெறுவது அவசியம்.

புறக்கணிப்புச் செயல்தந்திரமா அல்லது பங்குபெறும் செயல் தந்திரமா என்பதைத் தன்னிச்சையாகவும் நமது “மன விருப்பங்களிலிருந்தும்” அல்லாமல் மார்க்சிய வழியில் உருவாக்கும்பொருட்டு பரிசீலிக்க வேண்டிய முதன்மையான அடிப்படையான புறநிலை விவரங்கள் பின்வருமாறு:

வர்க்கங்களுக்கு இடையில் உள்ள யதார்த்த உறவு, நிலவுகின்ற பிரதிநிதித்துவ நிறுவனங்களின் உள்ளும், புறமும் வர்க்கங்களின்  (பொருளாதார,
அரசியல் ) பாத்திரம், புரட்சியின் எழுச்சி அல்லது வீழ்ச்சி, நாடாளுமன்ற போராட்ட வழி முறைக்கும் நாடாளுமன்றத்திற்குப் புறம்பான போராட்ட
வழிமுறைக்குமுள்ள உறவு-என லெனின் கூறினார்.
(லெனின் தொகுப்பு நூல், பக்கம் 52-58)

புறக்கணிப்புப் பிரச்சினையை மார்க்சிய வழியிலிருந்து எவ்வாறு அணுக வேண்டும் என்பதை ரசிய அனுபவத்திலிருந்து சில உதாரணங்களை எடுத்துக்
காட்டினார்.

புல்கின் டூமாவை போல்சுவிக்குகள் புறக்கணித்தது ஒரு சரியான செயல்தந்திரம் என்பதற்குப் பின்வரும் விளக்கத்தை அளித்தார்.
“இந்த புல்கின் டூமாவைப் புறக்கணித்த செயல் தந்திரம் சரியானது என நிரூபிக்கப்பட்டுவிட்டது; ஏனெனில், வளர்ந்து வந்த சமூக சக்திகளின் யதார்த்த அணி சேர்க்கைக்கு ஏற்பனவாக அப்புறக்கணிப்பு இருந்தது, ஜார் ஆட்சி புல்கின் டூமா என்ற திரை மறைவிலே ஜோடனை செய்யப்பட்ட ஒரு சமரச நிறுவனத்தை அமைத்தது. அந்த நிறுவனம் நாடாளுமன்றச் செயல்பாட்டில் இறங்குவதற்கு மனப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை. மக்களைப் புரட்சியிலிருந்து திசை திருப்புவதற்காகவே இத்தகைய புல்கின் டூமாவைப் பழைய ஆட்சி அமைக்க முயன்றது.

பழைய ஆட்சியைத் தூக்கி எறியும்படி ஒரு முழக்கத்தை அப்புறக்கணிப்பு முதிர்ந்து வந்த புரட்சிக்கு அளித்தது. பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும்
நடத்திய நாடாளுமன்ற வழிமுறைக்குப் புறம்பான போராட்டங்கள் பலமாக இருந்தன. இவையே புல்கின் டூமாவைப்  புறக்கணிப்பதென்ற, சரியான
செயல்தந்திரத்தை, யதார்த்த நிலைமைகளுக்கேற்ப அமைந்த செயல் தந்திரத்தை உருவாக்கிய கூறுகளாகும்.” (மேற்படி நூல்)

புல்கின் டூமாவைப் புறக்கணித்ததுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் (இடது சாரிகம்யூனிசம் - சிறுபிள்ளைத் தனமானகோளாறு என்ற நூலில்) லெனின்
பின்வருமாறு விளக்கம் தந்தார்.

“1905 ஆகஸ்டில் ஆலோசனை அந்தஸ்துடைய “நாடாளுமன்றம்” கூட்டப் படுவதாக ஜார் பிரகடனம் செய்தபோது போல்சுவிக்குகள் எல்லா
எதிர்கட்சிகளுக்கும் மென்ஷெவிக்களுக்கும் எதிரான நிலையை ஏற்று, அதனைப் புறக்கணிப்பு செய்யும்படி அறைகூவினர். உண்மையில் இந்த
“நாடாளுமன்றம்” 1905 அக்டோபரில் மூண்ட புரட்சியால் துடைத் தெறியப்பட்டது. அக்காலத்தில், புறக்கணிப்பே பிழையற்றதாக இருந்தது. 
பிற்போக்கு நாடாளுமன்றங்களில் பங்கு கொள்ளாது இருப்பது பொதுவாகச் சரியானதே என்பதல்ல காரணம்; எதார்த்த நிலைமையை நாங்கள்
பிழையின்றி மதிப்பிட்டதே, மதிப்பிட்டோம் என்பதே காரணம். வெகுஜன வேலை நிறுத்தங்கள் முதலில் அரசியல் நிறுத்தமாகவும், புரட்சிகர
வேலைநிறுத்தமாகவும், முடிவில் ஓர் எழுச்சியாகவும், வேகமாய் வளர்ச்சியுற்று வந்தன என்பதே அப்போதிருந்த எதார்த்த நிலைமை. தவிரவும்,
முதலாவது பிரதிநிதித்துவ சபை கூட்டப்படுவதை ஜாரின் கையில் விட்டுவிடுவதா, அல்லது அதனைப் பழைய ஆட்சியிடமிருந்து பறிப்பதற்கு முயற்சி செய்வதா என்பதே அக்காலத்திய போராட்டத்தின் மையப் பிரச்சினையாக இருந்தது. எதார்த்த நிலைமை இதை யொத்ததாக இருக்கும் என்ற நிச்சயம் இல்லாத போதும், இருக்கமுடியாத போதும், இதையொத்த ஒரு போக்கும் இதேவளர்ச்சி வேகமும் இருக்குமென்ற நிச்சயம் இல்லாதபோதும், இருக்க முடியாதபோதும் புறக்கணிப்பு சரியானதல்ல.

1905ல் போல்சுவிக்குகள் “நாடாளுமன்றத்தைப்” புறக்கணித்ததானது, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு மதிப்பிடற்கரிய அரசியல் அனுபவத்தை
அளித்து செழுமைப் படுத்திற்று. சட்ட பூர்வமான, சட்ட விரோதமான போராட்ட வடிவங்களும் நாடாளுமன்ற, நாடாளுமன்றத்திற்கு விரோதமான
போராட்ட வடிவங்களும் ஒன்றிணைக்கப்படுகையில், சில நேரங்களில் நாடாளுமன்ற வடிவங்களைக் கைவிடுவது பயனளிப்பதாக இருப்பதுடன்
அவசியமும் ஆகிவிடுகிறது என்பதை அது தெளிவுபடுத்திற்று.  ஆனால் இந்த அனுபவத்தைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே காப்பியடிப்பதும்,
விமர்சனப் பார்வையின்றி பிற நிலைமைகளிலும் பிற சூழல்களிலும் அனுசரிப்பதும் பெருந்தவறாகிவிடும்.”

(இடதுசாரி கம்யூனிஸம்-சிறுபிள்ளைத்தனமான கோளாறு பக்கம்.33, 34)

புறக்கணிப்பு எப்போது தேவை?

மேலே எடுத்துக்காட்டப்பட்டமேற்கோள்களிலிருந்து பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

1) ஒரு புரட்சி எழுச்சியின்போது மக்களின் புரட்சிகர போராட்டங்களை திசை திருப்புவதற்காகவே ஆளும் வர்க்கங்களால் அமைக்கப்படும் போலித்தனமான
நாடாளுமன்ற அமைப்புகளும், தேர்தல்களும் புறக்கணிக்கத் தக்கவையாகும்.

2) மக்கள் இயக்கத்தின் வெள்ளம் பெருகி முன்னேறிக் கொண்டுள்ள போதும், புரட்சி அலை ஏற்றத்தின் போதும், ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி தாக்குதல்
செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் போதும் நாடாளுமன்றத் தேர்தல்களைப் புறக்கணிப்பது சரியானதே.

3) சட்டபூர்வமான சட்டவிரோதமான போராட்டங்களும் நாடாளுமன்ற, நாடாளுமன்றத்துக்கு விரோதமான வடிவங்களும் ஒன்றிணைக்கப் படுகையில், சில நேரங்களில் நாடாளுமன்ற வடிவங்களைக் கைவிடுவது பயனளிப்பதாக இருப்பதுடன் அவசியமும் ஆகிவிடுகிறது.

4) நாடாளுமன்றங்களில் பங்கு கொள்வதற்கு காரணமாக உள்ள பின்வரும் நிபந்தனையான - “முதலாளித்துவ நாடாளுமன்றங் களையும் இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை அவற்றில் நீங்கள் வேலை செய்தே ஆகவேண்டும்” என்பது நிறைவேறும்போது - அதாவது முதலாளித்துவ நாடாளுமன்றங் களையும் இதர பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும்
பலமிருக்கும்போது, அதுவே புறக்கணிப்பதற்கான நிலைமையாக ஆகிவிடுகிறது.

இந்திய நாடாளுமன்ற முறையிலான தேர்தல்களில் பங்குகொள்வது பொருந்தாது:

இரண்டு வகைச்  செயல்தந்திரங்கள்:

முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகாத போது, பரந்துபட்ட மக்கள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும், பாட்டாளிவர்க்க சோசலிஸ்ட் சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்க செய்யும் பொருட்டு அவர்களைச்சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும், நடைமுறை வழியிலும் தயார்செய்யும் நோக்கத்திற்காக, நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளிலும் தேர்தல்களிலும் பங்குகொள்ளும் செயல் தந்திரங்கள் பாட்டாளி வர்க்கக் கட்சிகளால் வகுக்கப்படுகின்றன.

புரட்சி எழுச்சியின் போது தாக்குதல் செயல் தந்திரங்களை மேற்கொள்ளும் பொருட்டும், ஆட்சி அதிகாரத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழும் பரந்துபட்ட
புரட்சிகர மக்களின் போராட்டங்களைத் திசை திருப்பும்பொருட்டும் ஆளும் வர்க்கங்கள் போலி நாடாளுமன்றத்தை முன்வைத்து தேர்தல்கள் நடத்துவது
போன்ற சதிச்செயல்களைச் செயலிழக்கச் செய்யும் பொருட்டும், பெரும் திரளான மக்கள் சோவியத் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தை க் கலைக்கத் தயாராக இருக்கும் போது புறக்கணிப்புச் செயல் தந்திரங்கள் வகுக்கப்படுகின்றன.

இரண்டுமே ஒரு குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டின் புரட்சி அலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்பவே வகுக்கப்படுகின்றன. ஒன்று புரட்சி அலை தணிந்து
இருக்கும் போதும், மற்றொன்று புரட்சி அலை எழுச்சியின் போதும் வகுக்கப்படுகின்றன. இருப்பினும் இரண்டின் நோக்கமும் ஒன்றே. இரண்டுவகை செயல் தந்திரத்தை வகுப்பதின் நோக்கமும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பாட்டாளிவர்க்கச் சோசலிஸ்ட்டு சோவியத் அதிகாரத்தை நிறுவுதல் என்னும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் போர்தந்திரத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

நாடு தழுவிய எழுச்சியும் நாடாளுமன்றத் தேர்தலும்:

முதலாளித்துவ நாடாளுமன்றத்தைக் கலைப்பதும் பாட்டாளி வர்க்கச் சோசலிஸ்ட் அதிகாரத்தை நிறுவுவதும் அமைதியான முறையில் நிகழ்வதல்ல. ஓர் உள்நாட்டு யுத்தத்தின் மூலம் நிகழ்வதாகும். முதலாளித்துவ நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தம் ஒரு ஆயுதம் தாங்கிய எழுச்சியின் மூலம் நாடு தழுவிய அளவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு பாட்டாளிவர்க்கமும் பிற உழைக்கும் மக்களும் பாட்டாளிவர்க்கக் கட்சியின் தலைமையில் நடத்தப்படுவதாகும். இந்நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தில் பங்கு கொண்டு பரந்து பட்ட மக்களை நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும் சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான தயாரிப்பு, நாடுதழுவிய அளவில் செய்யக் கூடியதாகும்.

அதைப் போன்றே புரட்சி அலை எழுச்சியின்போது மேற்கொள்ளப்படும் செயல்தந்திரங்களும். பெரும்திரளான மக்கள் சோவியத் அதிகாரத்தை ஏற்றுக்
கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தயார் நிலையும், அதன் அடிப்படையில் அமையும் புறக்கணிப்பும் நாடுதழுவிய அளவில் செய்யக்
கூடியதாகும்.

அந்நாடுகளில் புரட்சி அலை தணிவதும், புரட்சி அலை எழுச்சியுறுவதும், இரண்டுமே நாடுதழுவிய அளவில் இருப்பதால் அவ்வாறு அமைகிறது. இதற்கு ஏற்றவாறே அரசியல் தந்திரங்களும் போராட்டம் மற்றும் அமைப்பு வடிவங்களும் - முழக்கங்களும் அவற்றை மாற்றிச் செல்லுதலும், சட்டரீதியான போராட்டத்துடன் சட்ட விரோதமானதையும் இணைத்தல் நாடாளுமன்ற முறைக்குப் புறம்பான போராட்ட வடிவத்துடன் இணைத்தல், இன்னும் பிறவும் அமைகின்றன.

தொகுத்துக் கூறுவோமானால், பங்கு கொள்வதின் நோக்கம் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும், சோவியத் முறையிலான அரசு அமைப்புகளைக் கட்டியமைப்பதற்கும், பரந்துபட்ட மக்களைத் தயாரிப்பதாகும், புறக்கணிப்பதற்கான நிபந்தனை புரட்சி எழுச்சியின்போது தாக்குதல் செயல்தந்திரத்தை மேற்கொள்வதற்கான நிலைமைகளும் நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் சோவியத்துக்களைக் கட்டியமைப்பதற்கும் தயாராக இருப்பதும் ஆகும்.

இரண்டுமே ஏககாலத்தில் நாடுதழுவிய அளவில் நிகழ்பவையாகும். இந்த அளவுகோல்கள் அல்லது நிபந்தனைகள் முதலாளித்துவ நாடுகளில்
நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்குகொள்வதற்கும், அல்லது அவற்றைப் புறக்கணிப்பதற்குமான செயல்தந்திரங்களை வகுப்பதற்கு அடிப்படையாக
அமைகின்றன. இவை அனைத்தும் நாடு தழுவிய எழுச்சி என்ற உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்
போர்த்தந்திரத்திற்குச் சேவை செய்யும் முறையில் வகுக்கப்படுகின்றன.

புரட்சியின் சமச்சீரற்ற வளர்ச்சியும் நாடாளுமன்றமும்:

மேற்கூறப்பட்ட அளவுகோல்களும் நிபந்தனைகளும் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சமச்சீரற்ற வளர்ச்சியுடைய நாட்டில், அவ்வாறு
சமச்சீரற்ற வளர்ச்சியுற்றிருப்பதின் காரணமாக புரட்சியின் எழுச்சியும் சமச்சீரற்ற வளர்ச்சியுறும் நிலைமைகளில் நாடாளுமன்ற முறை பற்றிய செயல் தந்திரங்களை வகுப்பதற்குப் பொருந்துமா? இந்தியாவிற்குப் பொருந்துமா?

அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏற்ற தாழ்வாக (சமச்சீரற்ற முறையில்) வளர்ச்சி பெற்றுள்ள நாட்டில், புரட்சியின் புறவயமான அம்சம்
ஏற்ற தாழ்வான முறையில் வளர்சியுறுவதால் புரட்சியின் அகச் சக்திகளின் வளர்ச்சியும் ஏற்ற தாழ்வாக இருக்கின்றது. ஆகையால் புரட்சி அலை
தணிவதும், புரட்சி அலை எழுச்சியுறுவதும் ஏற்ற தாழ்வானதாகவே இருக்கின்றன. ஒரே நேரத்தில், நாடு தழுவிய அளவில் பரந்துப்பட்ட மக்கள்
நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும், சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு,
அவர்களைச் சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறை வழியிலும் தயார்  செய்தல் நாடுதழுவிய அளவில் நடைபெறுவது
சாத்தியமானதல்ல எனவேதான் அதன் அடிப்படையில் நாடாளுமன்ற அமைப்புகளில் பங்கு கொள்ளும் செயல் தந்திரத்தை நிர்ணயம் செய்ய முடியாது. செயல்படுத்தவும் முடியாது.

அதைப் போன்றே புரட்சி அலை எழுச்சியும் நாடு தழுவிய அளவில் ஏற்படுகின்ற ஒன்றாக இல்லாததால், தாக்குதல் செயல்தந்திரங்களை வகுத்துக்  கொள்வதும், நாடு தழுவிய அளவில் பெரும் திரளான மக்கள் சோவியத் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு தயாராக இருப்பதும் சாத்தியமில்லை. எனவே இதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் புறக்கணிப்புச் செயல்தந்திரம் வகுக்க முடியாது. இத்தகைய
நாடுகளில் புரட்சி எழுச்சி சமச்சீரற்ற முறையில் வளர்ச்சியுறுவதின் காரணமாக ஏக காலத்தில் ஒரு நாடு தழுவிய அளவில் புரட்சி எழுச்சிக்கு
வாய்ப்பில்லை.

எனவே ஒரு நாடு தழுவிய அளவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மாறாக, பிரதேசவாரியாக விடுவிப்பதிலும் தளங்களை
நிர்மாணிப்பதிலும் அதன் மூலம் நாடு தழுவிய எழுச்சியைத் துரிதப் படுத்துவதும், புரட்சி யுத்தத்தின் குணாதிசயமாக இருக்கின்றது. இதுவே புரட்சி
யுத்தத்தை நடத்துவதற்கான மார்க்கத்தையும் இந் நாடுகளில் போர்த் தந்திர, செயல் தந்திர கோட்பாடுகள் பலவற்றையும் தீர்மானிக்கின்றது. இராணுவ
போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகளை மட்டுமல்ல, அரசியல் போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகள் பலவும் இதனால் தீர்மானிக்கப் படுகின்றது.

எனவே பிரதேச ரீதியில் விடுவித்து நாட்டின் புரட்சி எழுச்சியைத் துரிதப்படுத்தும், இறுதியாக நாடு முழுவதையும் விடுதலை செய்யும் புரட்சிகர
யுத்தத்தோடு முதலாளித்துவ நாடாளுமன்ற முறையில் பங்குகொள்வதற்கும் மற்றும் புறக்கணிப்பதற்கும் முதலாளித்துவ நாடுகளில் வைக்கப்படும்
நிபந்தனைகளும் மற்றும் நிலைமைகளும் பொருந்தாது. நாட்டின் ஒரு சில பிரதேசங்களை விடுதலை செய்வதற்கான போராட்டத்தையும் (அரசு
இயந்திரத்தை தகர்த்தெறிந்துவிட்டு சோவியத்துக்கள் நிறுவுவதற்கான போராட்டத்தையும்) பிறபகுதிகளில் தேர்தல்களில் பங்குகொள்ளுதலையும்
மற்றும் நாடாளுமன்ற முறையைப் பயன்படுத்தலையும் ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்க இயலாது என்பது மட்டுமல்ல; சாத்தியமானது மல்ல.
சட்டரீதியான போரட்டத்தையும், சட்டவிரோதமான போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் மற்றும் நாடாளுமன்ற முறைக்கு அப்பாற்பட்ட முறையிலான போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் ஆகியவையும் இதுவும் ஒன்றல்ல.

தவிர புரட்சி எழுச்சிக்குத் தயாரிக்கும் பணியோடு இணைக்கப்பட்டாலும், புரட்சி எழுச்சியின்போது தாக்குதல் செயல்தந்திரங்கள் வகுத்துக்கொள்வதை
அடிப்படையாக கொள்ளாமலும், புரட்சி இயக்கத்தின் புறநிலை அம்சத்தின் வளர்ச்சிப் போக்குக்கு இசைவாக இல்லாமலும் திட்டமிடப்படுகின்ற
செயல்தந்திரங்கள் தன்னியல்பானதாகவோ சீர்திருத்த வகைப்பட்டதாகவோ, அராஜகமானதாகவோ அல்லது அரசியல் அதிகாரத்தைப் புரட்சிகர
முறையில் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொள்ளாததாகவோ அமையும்.

எனவே அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத்தாழ்வாக வளர்ச்சி பெற்றுள்ள நமது நாட்டில், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற
அமைப்புமுறை மற்றும் தேர்தல்களில் பங்கு கொள்ளுதல் அதே நேரத்தில் சில பகுதிகளில் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான ஆயுதப்
போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் என்பது சாத்தியமல்ல. ஆகவே நமது நாட்டில் நாடாளுமன்றமுறை மற்றும் தேர்தல்களைப் புறக்கணிப்பது
சரியானதும் தகுந்ததும் ஆகும். நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்ளும் செயல்தந்திரம் பொருந்தாது.

நாடாளுமன்றமுறை அமைப்புகளிலும், தேர்தல்களிலும் பங்கெடுப்பதில்லை என்பதால் சட்டரீதியான போராட்ட முறைகளையும், வெளிப்படையான
போராட்ட முறைகளையும், பயன் படுத்தக்கூடாது என்று கொள்ளக்கூடாது. சட்டரீதியான போரட்டதினைச் சட்டவிரோதமான போராட்டத்துடன்
ஒன்றிணைக்கக் கூடாது என்றோ, இரகசியமான போராட்ட வடிவங்களையும், வெளிப்படையான போராட்ட வடிவங்களையும் ஒன்றிணைக்கக் கூடாது
என்றோ கொள்ளக் கூடாது.

நாடாளுமன்றமும் தற்காலிகப் புரட்சி அரசாங்கமும்:

முதலாளித்துவ நாடாளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாக பயன்படுத்தும் செயல்தந்திரமும் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் மற்றும் அதில் ஒரு
பாட்டாளிவர்க்கக் கட்சி பங்குகொள்வது பற்றிய செயல்தந்திரமும் வெவ்வேறானவை. இரண்டும் ஒன்றல்ல. தற்காலிக புரட்சி அரசாங்கம் மற்றும் அதில் பாட்டாளி வர்க்கம் பங்கு  கொள்வது பற்றிய செயல்தந்திரம் குறித்த மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளும், போதனைகளும் அரைக் காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப் பாதைக்குப் பொருந்துமா என்பது நம் முன்னால் உள்ள பிரச்சனை யாகும்.

போர்த்தந்திரத்திற்குத் துணைபுரியும்பொருட்டு அதன் வெற்றிக்கான பாதையை நிச்சயமானதாக ஆக்கும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட தருணத்தில்
நிலவுகின்ற திட்ட வட்டமான நிலைமைகளுக்கு ஏற்றவாறு அதாவது எதிரிகள் முகாமிலும் பாட்டாளிவர்க்க முகாமிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு
ஏற்றவாறு பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடத்தை விதியைத் தீர்மானிப்பது செயல் தந்திரத்தின் முக்கியமான பணியாகும்.

எனவே ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தின் புரட்சிப் பணிகளடங்கிய கட்சியின் பொது வேலை திட்டத்தை நிறைவேற்றுவதை நிச்சயமானதாகவும், எளிமையானதாகவும் ஆக்கும்பொருட்டு எதிரி முகாமிலும் நமது முகாமிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு இசைவாகவும் பொது எதிரியை எதிர்த்த அனைத்து சக்திகளையும் பாட்டாளி வர்க்கம் தனது அணியில் சேர்க்கும் வண்ணம் அப்பொது வேலை திட்டத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பான திட்டத்தை வகுத்துக் கொள்வது இயல்பானதாகும் (இன்றியமையாததாகும் (ப-ர்)).

ஆகையால் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய மார்க்சிய - லெனினியக் கோட்பாடுகளும், போதனைகளும் நமது புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்குப் பொதுவாக பொருந்தக் கூடியது என்றாலும் அவற்றை இன்றைய கட்டத்தில் இந்தியப் புரட்சியில் பாட்டாளி வர்க்கக் கட்சியின் பிரயோகம் கூட இந்தியாவின் புறநிலைமைகளுக்கு ஏற்றவாறு அமைகிறது.

இப்பிரச்சனை குறித்த லெனினிய போதனைகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

1.தற்காலிகப் புரட்சி அரசாங்கம் எனபது புரட்சியின் ஒரு வரலாற்றுக் கட்டத்திற்குள் தொடர்ச்சியான சில இடைமாற்றங்களும், இடைமாற்றக்
கட்டங்களும் இல்லாமல் ஒரு பின்தங்கிய நாட்டில் அதை ஒரு சோஷலிசப் புரட்சியாக மாற்றிட முடியாது என்பதின் அடிப்படையில், அதற்கு
ஏற்றவாறு வகுத்துக் கொள்ளப்படும் செயல் தந்திரம் ஆகும்.

2.தற்காலிகப் புரட்சி அரசாங்கம் என்னும் செயல் தந்திரம் புரட்சி எழுச்சியின் போது பாட்டாளிவர்க்கக் கட்சி தாக்குதல் செயல் தந்திரங்களைச் செயல்
படுத்துவதற்கான ஒரு அமைப்பு வடிவமும் போராட்ட வடிவமும் ஆகும்.

3.தற்காலிகப்புரட்சி அரசாங்கம் என்பது ஒரு நாட்டில் ஏற்கனவே நிலவியுள்ள அரசமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு அமைக்கப்படுகின்ற ஒரு
அரசாங்கம் அல்ல. அதற்கு மாறாக அது மேலிருந்து நடத்தப்படும் போராட்ட வடிவமாகும் என்பது மட்டுமல்லாமல் அதுவே ஒரு “புரட்சி எழுச்சியின்
உறுப்பாகிய புரட்சி அரசாங்கம்” ஆகும். இத்தற்காலிகப் புரட்சி அரசாங்கம் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சபையாகவும், அனைத்து
மக்களுடையதாகவும், அரசியலை நிர்ணயிப்பதற்குரிய அதிகாரமும் பலமும்  பெற்றிருக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

4.புரட்சியின் வரலாற்றுக் கட்டத்திற்குள் ஒரு காலப்பகுதியின் புறநிலைமைகளோடும் பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தின் குறிக்கோளோடும்
பொருந்தும்படியான செயலுக்குரிய ஒரு வேலை திட்டத்தை நிறைவேற்றுவது இந்தத் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் பணியாகும். இத்திட்டம் உடனடியான அரசியல், பொருளாதார மாற்றங்கள் பற்றிய வேலைத் திட்டமாகும். ஒருபுறத்தில், அவற்றை இன்றுள்ள சமுதாய, பொருளாதார உறவு முறைகளின் அடிப்படையிலே, முற்றாக நடைமுறையில் சாதிக்கக்கூடியதும், மறுபுறத்தில், அடுத்து முன்னோக்கி அடியெடுத்து வைப்பதற்கும் அக்கட்டப் புரட்சியின் பணிகளைச் சாதிப்பதற்கும் சோசலிசத்திற்கு மாறிச் செல்வதற்கும் அது தேவைப்படுகின்றது.

5.தற்காலிகப் புரட்சி அரசாங்கம் என்பது ஒருபுறம் அரசதிகாரத்தைப் பற்றிய அராஜக கருத்துக்களுடனும், மறுபுறம் சீர்திருத்த வாதத்துடனும் முற்றாக
முறித்துக்கொள்வதால் இத்தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி பங்குகொள்வது கோட்பாடு ரீதியில் அனுமதிக்கத்தக்கது.

6.கோட்பாடு ரீதியில் அனுமதிக்கதக்கதாய் இருந்த போதிலும் நடைமுறைப் பொருத்தமுடையதா? எந்த நிலைமையின் கீழ் மேலிருந்து நடத்தும்
இப்போராட்ட வடிவம் பொருத்த முடையது? போன்ற வினாக்களுக்குப் பதில் சக்திகளின் பரஸ்பர ஒப்பு போன்ற ஸ்தூலமான நிலைமைகள் பற்றி
உடனடியாக சொல்வது சாத்தியமில்லாததால் தற்சமயம் சொல்லக்கூடாது (சொல்ல முடியாது (ப-ர்)). ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி கலந்து  கொள்வதின் தன்மையையும் குறிக்கோளையும் மட்டும்தான் குறிக்க முடியும்.

தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கு கொள்வது பின்வரும் இரண்டு நோக்கங்களைக் கொண்டதாகும்:

எதிர்ப்புரட்சி முயற்சிகளை எதிர்த்து விட்டுக் கொடுக்காமல் போராடுவது.
தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரமான நலன்களைப் பாதுகாப்பது, இப்படிப்பட்டப் போராட்டத்தில் எதிர்ப் புரட்சியை எதிர்த்து உண்மையான போர்
நடத்தும் பணியைப் பற்றி கவனம் செலுத்துமாறு பாட்டாளி வர்க்கக் கட்சி அறைகூவி அழைப்பது பொருத்தமானதாகும்.

7.கடைசியாகப் பகுப்பாய்ந்து பார்க்கும்போது அரசியல் சுதந்திரம் வர்க்கப் போராட்டம் பற்றிய மாபெரும் பிரச்சினைகளைப் பலம் ஒன்றுதான்
தீர்மானிக்கிறது. பாதுகாப்புக்கு மட்டுமின்றி தாக்குதலுக்கும் இந்த பலத்தைத் தயாரிப்பதும் ஒழுங்கமைப்பதும் தீவிரமாகப் பயன்படுத்துவதும் பாட்டாளி
வர்க்கக் கட்சியின் வேலையாகும். ஒரு புதிய சகாப்தத்தில், அரசியல் எழுச்சிகளும், புரட்சிகளும் நடக்கும் காலப்பகுதியில் பழைய மாறுதலற்ற
சூத்திரங்களோடு ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி தன்னை நிறுத்திக்கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. மேலிருந்து செயல்புரியவும் மிகவலுவான
தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்யவேண்டும். அப்படிப்பட்ட செயலுக்குரிய நிலைமைகளையும் வடிவங்களையும் பயில வேண்டும்.

8. மேலிருந்து செயல்புரிய முடியாமற் போகக்கூடிய நிலைமையில் பாட்டாளி வர்க்கக் கட்சி தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிகப் புரட்சி
அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி கொண்டு வரவேண்டும். கீழிருந்து நிர்ப்பந்தத்தை செயல்படுத்தும் பொருட்டு          
                              
 (1) பாட்டாளிவர்க்கம் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும்.
 (2)  ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை வகித்திருக்க வேண்டும்.

இவ்வாறு ஆயுதம் ஏந்தி செலுத்தும் நிர்ப்பந்தத்தின் நோக்கம்: புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பது, கெட்டிப்படுத்துவது, விரிவுபடுத்துவது - அதாவது புரட்சியின் ஆதாயங்களை முதலாளித்துவ வர்க்கம் அபகரித்துக் கொண்டு விடாமல் தடுத்து நிறுத்துவதாகவும் அந்த ஆதாயங்கள் நம் குறிப்பான வேலை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதாகவும் அமைய வேண்டும்.

(ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் - லெனின் நூல் திரட்டு தொகுதி.1 பக்கம் 95 - 180 வரை காண்க.)

தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய லெனினிய போதனையும் கோட்பாடும் பொருந்தக்கூடியது என்றாலும் நடைமுறைப் பொருத்தமுடையதா என்ற
பிரச்சனையைத் தீர்மானிப்பதில் பின்வரும் அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்  கொள்ள வேண்டும்:

1.அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதயிலும் ஏற்ற தாழ்வான வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவில், புரட்சியின் புறவயமான அம்சம் ஏற்றத்தாழ்வான
முறையில் வளர்ச்சியுறுவதால் புரட்சியில் அகசக்தியின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வாகவே இருக்கிறது. இவ்  அம்சம் புரட்சி யுத்தத்தை நடத்துவதற்கான மார்க்கத்தையும் இந்நாட்டின் அரசியல் மற்றும் இராணுவப் போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகள் பலவற்றையும் தீர்மானிக்கிறது.

2.இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் சாரமாக விவசாயப் புரட்சி இருப்பதுடன் விவசாயப் பிரச்சனை புரட்சியின் மையமான பிரச்சினையாகவும் இருக்கிறது.

தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி பங்குகொள்வது என்பதும் தற்போதைய நிலையிலுள்ள தரகு முதலாளித்துவ,
நிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார அரசில் உள்ள பாராளுமன்ற முறையிலான அரசாங்கங்களில் பங்கு கொள்வது என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது. முன்னால் கூறப்படுவது லெனினியக் கோட்பாடு வழியில் அமைந்ந ஒரு சரியான பாட்டாளிவர்க்கச் செயல்தந்திரமாகும். இரண்டாவது வகைப்பட்டது இந்நாட்டில் வலது, இடது போலிக் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தும் சீர்திருத்தச் செயல் தந்திரங்கள் ஆகும்.
(அழுத்தம் ப-ர்)

இப்போலிக் கம்யூனிஸ்டுகளால் செயல்படுத்தப்படும் சீர்திருத்தச் செயல்தந்திரங்கள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவைச் செய்யக் கூடியதாகவும்  புரட்சியைத் திசை திருப்புவதாகவுமே இருக்கிறது.

இச் செயல்தந்திரங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணங்களில்
ஒன்று, பாட்டாளி வர்க்கம் ஆயுதப்படை கொண்டு அரசியல் அதிகாரத்தை வெல்ல வேண்டும் என்பதற்கு மாறாக சோசலிசத்திற்குச் சமாதான மாற்றம்
என்ற பாதையை மேற்கொள்வது;

இரண்டு, இந்திய நாடாளுமன்றத்தைக் குறித்து செயல் தந்திரங்களை வகுத்துக் கொள்வதில் லெனினியச் செயல் தந்திரத்தைக் கடைப்பிடிப்பதாகக்
கூறிக் கொண்டு இந்தியாவில் நிலவும் புறவயமான நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்து அல்லது  வேண்டுமென்றே மறைத்து
முதலாளிய நாடாளுமன்ற அமைப்புகளில் பங்குகொள்ளும் சீர்திருத்தச் செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்வது ஆகியனவாகும்.

இந்தப் பாராளுமன்ற முறையை மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும். இந்தப் பாராளுமன்ற முறையிலான அரசாங்கங்களைப் புரட்சியின்
தயாரிப்புக்கான ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும் என்று சொல்லப்படும் வாதங்கள், சந்தர்ப்பவாதிகளினுடைய செப்பிடுவித்தை ஆகுமேயொழிய
இந்தியப் பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்திற்குச் சேவை செய்யக் கூடியது அல்ல.

இறுதியாக தொகுத்துக் கூறுவோமானால், அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி பெற்றுள்ள அரைக்காலனிய-அரை
நிலப் பிரபுத்துவ இந்திய நாட்டின் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்கு நாடாளுமன்ற அமைப்பு முறையிலும் தேர்தலிலும் பங்கு
கொள்வது உகந்ததல்ல.

தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் செயல்தந்திரம் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப் பாதைக்குக் கோட்பாடு
ரீதியில் பொருந்தக் கூடியதே ஆகும்.

சமரன் - ஜனவரி, 1989.

Monday, 16 July 2012

அரசியல்கைதிகளை விடுதலை செய்ய ஒன்றுபட்டுப் போராடுவோம்!



பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும், விடுதலைப்புலி  யுத்தக்கைதிகளையும் நிபந்தனையின்றி  விடுதலை  செய்ய   ஒன்றுபடுவோம்!             -                 போராடுவோம்!!

( சர்வதேச ஜனநாயக சக்திகளுக்கு ஒரு பகிரங்க அழைப்பு )

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகத்தை நேசிக்கும் சான்றோரே, மனிதநேயத்தை மதிக்கும் மானுடரே,சட்டவாளர்களே, புத்திஜீவிகளே, மாணவர்களே, இளைஞர்களே,தாய்மாரே தந்தையரே;

1) இலங்கை என்கிற நாடு இரண்டு தேசங்களைக் கொண்டதாகும்.

2) இலங்கையில் தமிழீழ தேசத்தவரான தமிழ் பேசும் மக்கள் மீதான அடக்குமுறை அதன் ஆரம்பம் முதலே வன்முறை வடிவிலானதாகும்.

3)  தமிழ் பேசும் மக்கள் மீது  இந்த ஆயுதமேந்திய அரச வன்முறை ஒரு புறம், 1915,1953,1956,1958,1977,1981,1983 களில் `இனக்கலவரம்`, என்ற பெயரில் தமிழர்களின் இருப்புக்குச் சவாலாகவும், மறு புறம் `தேசியப் பாதுகாப்பு` என்ற பெயரில் தமிழ் இளைஞர்களை நீதி விசாரணையின்றி படுகொலை செய்யும் இராணுவ அடக்குமுறைகளாகவும் பல தடவைகள்  பாரிய அளவில் ஏவப்பட்டது,

(1979) இல் யாழ்ப்பாணம் நவாலியில் இன்பம், செல்வம் என்கிற இரு தமிழ் இளைஞர்கள் இராணுவச் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு இரவோடு இரவாக பண்ணைப்பாலத்தில் காட்சிக்காக வீசப்பட்டிருந்தனர்!  இவ்வாறு எண்ணற்ற கோர,கொடிய,நிகழ்வுகள் அரங்கேறின.

4) இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும்  மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள தள்ளப்பட்டனர்.

5) இந்த சுமார் 30 ஆண்டு கால அரச வன்முறை வரலாற்றின் தவிர்க்க இயலாத, தர்க்க ரீதியான  விளை பொருளே தமிழீழ விடுதலைப் புலிகள்-Liberation Tigers of Tamil Eelam (Tamil Tigers)-  ஆகும்.

6) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதமேந்திய தற்காப்பு, 1983 ஜுலை இனப்படுகொலையுடன் உள்நாட்டு யுத்தமாக மாறியது.

7) 30 ஆண்டுகள் நீடித்த இந்த யுத்தத்தில் பல தடவை பல நூற்றுக்கணக்கான அரசபடையினர் விடுதலைப்புலிகளால் யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

8) இந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சிறீலங்கா அரசிடம் சரணடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பகிரங்கமாக வேண்டிக்கொண்டார். சிறீலங்கா அரசாங்கமும் வேண்டிக் கொண்டது.

9) மேன்மை தங்கிய சிறீலங்கா ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்சே அவர்கள் மே 18, 2009 இல் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததாக உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

10) பாதுகாப்பு செயலர் மேன்மை தங்கிய திரு.கோத்தபாய  அவர்கள் சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் அரசாங்கத்திடம் சரணடைந்ததாகவும் அவர்களில் 11ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளவர்கள் சுமார் 700 பேர் வரையிலானவர்களே என்றும், இவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டு முடிவு காணப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக மனோ கணேசன் அவர்களும், விடுதலை செய்யப்பட்டவர்கள் கூட சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாக திரு.கஜேந்திரன் அவர்களும் பகிரங்கமாக கூறியுள்ளனர்.

11) மேலும் இந்த 700 பேரைத்தவிரவும், பல ஆயிரக்கணக்கானோர், கடந்த 30 ஆண்டு காலத்தில் விடுதலைப் புலிகளின் யுத்தத்திற்கு உதவியவர்கள் என்ற `குற்றச்சாட்டில்`, பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

12) பயங்கரவாதச் சட்டம் தன்னளவிலேயே `பயங்கரமானது`. ஆனால் அது அமூல் படுத்தப்பட்டமுறையோ அதைவிடப் பயங்கரமானது.

13) இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வகை தொகை இன்றி எழுந்தமானமாகக் கைது செய்யப்பட்டு, எந்தவிபரங்களும் வெளியிடப்படாமல், எந்த விசாரணைகளும் நடத்தப்படாமல், எங்கிருக்கின்றார்கள் என்பதே வெளியிடப்படாமல்,`காணாமல் போனவர்களாக` சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும், அதிகாரபூர்வமற்ற `பாதாளச் சிறை`களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

14) இவர்கள் எந்தவித அரசியல் உரிமைகளும் அற்றவர்களாக, அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படாதவர்களாக நவீன அடிமைகளாக அதிகார துஸ்பிரயோகத்துக்கும், கொடிய சித்திரவதைகளுக்கும் மிக நீண்டகாலம் உள்ளாகிவருவதாக மனித உரிமை ஸ்தாபனங்கள் நெடுங்காலமாகவே சுட்டிக்காட்டி வருகின்றன.

இந்த  ஆயிரக்கணக்கான  பிள்ளைகளின் பாதுகாப்பு, விடுதலை, எதிர்காலம் குறித்து நாம் ஆழ்ந்த கரிசனையும் கவலையும் அச்சமும் கொண்டுள்ளோம்.

1) இவர்கள் உள் நாட்டு யுத்த சூழலில் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் சரணடைந்தவர்கள்.

 2) அரசியல் கைதிகள் பற்றிய புள்ளிவிபரங்கள் அனைத்தும்  ஒரு உத்தேசக் கணிப்பாகவே உள்ளது. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடம் தாண்டியுள்ள  நிலையிலும் இவர்கள் ஒவ்வொருவரதும்  பெயர் விபரங்களையும் சரியான தொகையையும் இன்றுவரை அரசாங்கம் வெளியிடவில்லை.

3) இவர்களில் பெண்கள், இளம் வயதினர், பாடசாலை செல்லும் பருவத்தினர், யுத்தத்தினால் ஊனமுற்றவர்கள், காயம்பட்டவர்கள், மன விரக்திக்கு உள்ளானவர்கள், மிக நீண்டகாலமாக உற்றார் உறவினரை, தாய் தந்தையரைப் பிரிந்து கானகத்தில் வாழ்ந்தவர்கள் , அரசாங்க பணியாளர்கள், மதகுருமார், மற்றும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே கைது செய்யப்பட்ட அப்பாவிப் பொதுஜனங்கள் எனப் பலரும் அடங்குவர்.

4) யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னால் அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பல ஆதாரங்கள் உள்ளன.

5) 1983 ஜூலையில் உலகைக் குலுக்கிய ஒரு சிறைப்படுகொலை இலங்கையில் நடந்தது, இன்று வவுனியாவில் நிமல ரூபன் படுகொலையோடு மீண்டும் தொடங்கியுள்ளது.நிமலரூபன் படுகொலையை அரசாங்கம் `மாரடைப்பு` என்று கூறுகின்றது!

6) 1987 இல் நீதி விசாரணையற்று பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு உடல் அடையாளம் தெரியாதவாறு ரயர் மூட்டி எரிக்கப்பட்டு தெருவோரங்களிலும் களனி ஆற்றிலும் வீசப்பட்டனர். ரிச்சாட் டி சொய்சா என்கிற மனித உரிமைப் போராளி கல்லைக்கட்டி கடலில் எறிந்து கொல்லப்பட்டார் (1990 மாசி).

7) ‘காணாமல் போதல்’என்பது இலங்கையில் அன்றாட நிகழ்வாகும்.இது குறித்து வடக்கு- கிழக்கு மனித உரிமைகள் செயலகம், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) UTHR(J), சர்வதேச மன்னிப்புச் சபை(AI),  மனித உரிமை கண்காணிப்பகம் (HRW), போன்ற ஸ்தாபனங்கள் பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

8) மேலும் இறுதி யுத்தத்தில் கணக்கற்று இருக்கின்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குறித்து இலங்கை அரசின் மீது சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

9) இலங்கையின் சமூக வாழ்வில் இராணுவம் ஒரு அங்கமாக மாறி வருகின்றது.

10) பத்திரிகைச் சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுந்திரம் ஆகியன அருகி வருவதும்,சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் சுதந்திரமாக இயங்கிவருவதும், நீதித் துறையில் தலையீடு செய்வதும் என சட்டத்தின் ஆட்சி சீர்குலையும் போக்கும் இலங்கையில் தலையெடுத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி திருமதி.சந்திரிக்கா பண்டாரநாயக்கா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கா ஆகியோர் கூட இது குறித்து பெரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள், மற்றும் விடுதலைப்புலி யுத்தக்கைதிகளின் பாதுகாப்பு, விடுதலை, எதிர்காலம் குறித்த நமது கவலையையும் கரிசனையையும் அச்சத்தையும் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம்.

எனவே  யுத்தம் முடிவடைந்து மூன்று வருடம் தாண்டியுள்ள நிலையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், தொடர்ந்தும் இவர்களை சிறைவைத்திருப்பது, நீதி நியாயமற்றதும் ஏற்கத்தகாததுமாகும்.

இதனால்அரசியல் கைதிகள், மற்றும் விடுதலைப்புலி யுத்தக்கைதிகளின் விடுதலைக்காக, ஒரு சர்வதேச சட்டவாளர் மன்றம் ஒன்றை அமைக்கவும், மக்களைத் திரட்டிப் போராடவும், பரந்துபட்ட ஜனநாயக வெகுஜன முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்ப தங்கள் ஆதரவைத் தெரிவித்து ஒன்றிணையுமாறு தயவுடன் வேண்டுகின்றோம்.

வலைத்தளசமூக நண்பர்கள், ஊடகங்கள், பரந்துபட்ட மக்கள் மத்தியில் இப்பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு  தோழமையுடன் கோருகின்றோம்.

இலங்கை அரசே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும், விடுதலைப்புலி  யுத்தக்கைதிகளையும் நிபந்தனையின்றி  விடுதலை  செய்! 

ஒன்றுபடுவோம்!                               போராடுவோம்!!
புதிய ஈழப்புரட்சியாளர்கள்
===================================
குறிப்பு:(முதல் நகல் - விவாதத்துக்காக)  தொடர்புக்கு: enb1917@ymail.com

Saturday, 14 July 2012

கறுப்பு ஜூலை 2012 நினைவாக!


பக்ச பாசிச சிங்களமே;
 
* தமிழீழ தேசத்தை வேரறுக்கும் தேசிய இன அழிப்புக் கொள்கையைக் கை விடு!
 
 * தமிழீழ தேசத்தை அழிக்க நடத்தும் திட்டமிட்ட சிங்கள, இராணுவ,குடியேற்றத் திட்டங்களை நிறுத்து!

* தமிழீழ விடுதலைப்புலி யுத்தக்கைதிகளை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!

* தனியார்மய, தாராளமய, உலகமய ஏகாதிபத்திய பொருளாதார நலன்களுக்கு இலங்கையை விற்காதே!

* ஏகாதிபத்திய உலக மறு பங்கீட்டின் போர்க்களமாக இலங்கையை மாற்றாதே!

விரிவாதிக்க இந்திய அரசே;

* ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!

விடுதலைப் புலிகளைச் சரணடையக் கோரிய அமெரிக்க ஒபாமா நிர்வாகமே,

* நிராயுதபாணியான ஈழத்தமிழர்கள் மீதும், சிறைக் கைதிகள் மீதும், சிங்களத்தின் தொடரும் வெறியாட்டங்களுக்கு பொறுப்பெடு!

ஓடுகாலிக் கூட்டமைப்பே,
* ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக் கோரிப் போராடு!

* மக்கள் போராட்டங்களை வாக்குப் பொறுக்கப் பயன்படுத்தி தேர்தல் பாதையில் சீரழிக்காதே!

ஏகாதிபத்திய தாச புலம் பெயர் தமிழர் பேரவைகளே,

* அமெரிக்க,பிரித்தானிய, இந்திய அரசுகளுக்கு அடிபணிந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு குழிபறிக்காதீர்!

புதிய தலைமுறை ஈழப்புதல்வர்களே விடுதலைப் புரட்சியைக் கற்றறியுங்கள்!
உழைக்கும் தமிழ்பேசும் மக்களே சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடித்து, புரட்சிப்பாதையில் முன்னேறுங்கள்!

ஒடுக்கும் சிங்கள மக்களே தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்!

தங்கள் இன்னல்களுக்கு காரணம் பக்ச பாசிஸ்டுக்களின் உலகமயமாக்கல் கொள்கைகளே தவிர தமிழர்கள் அல்ல என்பதை உணருங்கள்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

மார்க்சிய லெனினிய மா ஓ சேதுங் சிந்தனை வெல்க!

Monday, 18 June 2012

13வது திருத்தச்சட்டமும் மாகாணசபைகளும்


13 ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபைகளும்

ஏப்ரல் 1989
====================
குறிப்பு: ஜூலை 24 1983, தமிழினப் படுகொலையைத் தொடர்ந்து, தனது விரிவாதிக்க நலனை அடைய இந்திய அரசு ஈழப்பிரச்சனையில் தலையிட்டது.ஜுலை 13 1985 இல் ஈழப்போராட்டத்தை சமரசப்படுத்த போராளிக்குழுக்களுக்கும் சிங்களத்துக்கும் இடையே பூட்டான் நாட்டின் திம்பு நகரில் ஒரு பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்தித்தது.இப்பேச்சுவார்த்தையில் போராளிக்குழுக்கள் முன் வைத்த தமிழீழ சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்களத்துடன் இணைந்து தனது மேலாதிக்க நலனை அடைய ஜூலை 29 1987 இல் ஒப்பந்தம் செய்துகொண்டது.இவ் ஒப்பந்தந்தின் அடிப்படையில் மாகாணசபைகள் ( Provincial Councils) எனும் அமைப்புக்கள் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டன. இம்மாகாணசபைகள் 1978 அரசியல் யாப்புக்கு 14 நவம்பர் 1987 இல் செய்யப்பட்ட 13வது திருத்தத்துக்கு அமைய நாடு முழுவதும் உருவாக்கப்பட்டன.

கிழக்கு மாகாண மக்களிடையே தேர்தல் நடத்தி இறுதி முடிவு எடுக்கும் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணசபைகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. இத்தற்காலிக வடகிழக்கு மாகாணசபைகளை ஏற்றுக் கொண்டு, ஆயுதங்களை ஒப்படைத்து ஈழப்போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் கலக்குமாறு போராளிகளை இந்திய அரசு பயமுறுத்தியது. பல்லாயிரக்கணக்கான போராளிகள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கினர். EPRLF உம் இதர அமைப்புக்களும் இந்தியப் படையின் கைக்கூலிகளாகி விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.மேலும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து தென்னிலங்கையில் ஜே.வி.பி ஆயுதக்கிளர்ச்சியில் இறங்கியது.நாடு தழுவிய போர்ச்சூழல் உருவானது.

இச்சூழலில்தான் இக்கட்டுரை இரகசியப் பத்திரிகையாக  ஏப்ரல் 1989 இல் இலங்கையில் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

இப்போர்ச்சூழலும் அது சார்ந்த நிலைமைகளும் இன்று  கால் நூற்றாண்டு கடந்த வரலாறாகிவிட்டன.ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபைகளும் இன்னும் சமகால நிகழ்வில் சம்பந்தப்பட்டவையாய்  உள்ளன.இம்மாறியுள்ள நிலைமையை கவனத்திற்கொண்டு கற்குமாறு வாசகரை வேண்டுகின்றோம்.

(சுமார் ஒரு பக்கம் அளவிலான கட்டுரையின் முதற்பக்கமும், கடைசிப்குதியும் சிதைந்து விட்டமைக்கு வருந்துகின்றோம்)
=======================

13 ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபைகளும்

1) மாகாணசபைகளும் அவற்றுக்குள்ள அதிகாரங்களும்

அ). தற்போதைய வடக்குக் கிழக்கு இணைப்பானது இப்போதும் தற்காலிகமானதாகவே உள்ளது. மேலும் இது அருகருகாக உள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் தமிழ்ப் பிரதேச இணைப்பை துண்டாடும் பாசிச அரசின் கபட நோக்கங்களையும் தன்னுள் கொண்டதாக உள்ளது.

ஆ). தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் “அரச காணி” என்பதன் பேரால் சொந்தம் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் அவ் அரச காணி
தொடர்பில் அனைத்து அதிகாரங்களையும் தன் வசமே வைத்துக் கொண்டுள்ளது. “நீர்ப்பாசன காணிஅபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொள்ளல், தேசிய இனவிகித அடிப்படையில் காணிகளை பங்கீடு செய்து ஒதுக்குதல்”, ஆகியன தொடர்பில் “இச்செயற்திட்டங்களுக்கான நிர்வாகமும்
முகாமையும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பிலேயே இருக்கும்” என உறுதியாகக் கூறப்படுகிறது. அதே வேளை, “மாகாணசபை காணி பங்கீடு
தொடர்பில் (பேரினவாத) அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தேசிய காணி ஆணைக்குழுவின் கொள்கைகளை கருத்திற் கொள்ள வேண்டும்” என
எச்சரிக்கப்பட்டுள்ளது.. (இந்தக் கொள்கைகள் எத்தகையதாக அமையக் கூடும் என்பதை ஊகிப்பது கடினமானதல்ல!)

ஆக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தையோ பிரதேச அபகரிப்பையோ துண்டாடலையோ கைவிடும் நோக்கம் எதுவும் மேன்மைதங்கிய இலங்கை
அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அது மட்டுமல்ல அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தையும் அது மாகாண சபையிடம்
இருந்து பறித்துக் கொண்டுள்ளது. (என்னே அதிகாரப்பகிர்வு!)

இ). ஒரு தேசிய இனம் தன் சொந்தத் தேசத்தை பாதுகாக்க தனக்கு ஒரு சொந்தப் படையை வைத்திருக்கும் அதிகாரத்தை மறுக்கிறது. ஜனாதிபதி,
தேசிய பொலிஸ் ஆணைக்குழு, ஐஜிபி, டிஐஜிபி என்பதோடு “அதிகாரப்பரவலாக்கம்” நின்றுவிடுகிறது. இதற்கு மேல் மாகாணப் பொலிஸ்
ஆணைக்குழுவுக்கோ, முதலமைச்சருக்கோ எந்த அதிகாரமும் இல்லை. மேலும் தன் பாசிச கொலைப்பட்டாளங்களை மற்றும் உளவாளிகளை மக்கள்
மீது ஏவிவிட இலங்கை அரசு அதிகாரம் பெற்றிருப்பதுடன், அதற்குத் துணை நிற்கவும் மாகாண அரசாங்கத்தை கடமைப்படுத்தி உள்ளது. இல்லையேல்
மாகாண அரசாங்கம் கலைக்கப்பட்டுவிடும்!!

ஈ). “மாகாணத்திற்கான நிதி தொடர்பிலான அனைத்துக் கருமங்களும் ஆளுநரால் ஆக்கப்படுகின்ற விதிகளினால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்”,
என்ற ஏற்பாடானது, தன் சொந்தத் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் புனர் நிர்மாணப் பணிக்கும் மாகாணசபை முற்றிலும் பேரினவாதப்
பாராளுமன்றத்தையே நம்பியுள்ளதைக் காட்டுகிறது. மேலும் அனைத்துப் பொருளாதாரத் திட்டங்களும் நிதி செலவிடப்படும் முறைகளும்
பாராளுமன்றத்தாலேயே (நிதி ஆணைக்குழு மற்றும் ஆளுநராலேயே) தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. ஆக சிங்களத் தரகு முதலாளித்துவ வர்க்க
புத்தமதவாத பேரினவாத அரசு அனுமதிக்கும் அளவுகளை மிஞ்சி எத்தகைய பொருளாதார அபிவிருத்திகளையும் புனர் நிர்மாணத்தையும்
மேற்கொள்வதற்கு மாகாணசபை அதிகாரமற்றதாக இருக்கிறது.

உ). தமிழ் மொழியைப் பொறுத்தவரை வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழ் மொழியை அரச கரும மொழியாக நடைமுறைப்படுத்துவதை சட்டத்தின்
மூலம் தடை விதித்துள்ளதுடன் ``தமிழை அரச கரும மொழியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை பாராளுமன்றமே கொண்டுள்ளது”. அத்தகைய அதிகாரம் மாகாணசபைக்குக் கிடையாது.

ஊ). ’பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம்’ எனக் கள்ளப் பெயர் சூட்டியுள்ள மக்கள் விரோத பாசிசக் கறுப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் மாகாணசபை
இயங்க வேண்டும். இலங்கையின் பாதுகாப்ப்பு அச்சுறுத்தப்பட்டால், அல்லது கறுப்புச் சட்டம் மீறப்பட்டால் அல்லது மீறப்படும் என ஜனாதிபதி
கருதினால் அதற்கான நிலைமைகளை ஒடுக்குவதற்கு இந்த மாகாணசபை கடமைப்பட்டது. அதனை நிறைவேற்றத் தவறினால் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட இந்த மாகாணசபை (?), ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் கேட்டுக் கேள்வியின்றிக் கலைக்கப்பட்டுவிடும். இதுபற்றி எந்த
நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்தப்படுதலாகாது. மூச்! (தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை கோருவது இலங்கையின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது
என்பதும், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறுகிறது என்பதும் சொல்லாமலே புரிந்து கொள்ளக் கூடியது. ஆக மாகாணசபையின் கடமை
என்னவாக இருக்கமுடியும்?)

எ). பிரதேசம், பொருளாதாரம், பாதுகாப்பு, மொழி, கல்வி, பண்பாடு இவற்றில் எதனையும் சிங்களத் தரகு முதலாளித்துவ வர்க்க புத்தமதவாத
பேரினவாத பாசிச இலங்கை அரசின் திட்டமிட்ட அழித்தொழிப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்கு இந்த மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை என்பதை
மேலே கூறப்பட்டவையிலிருந்து (13 ஆவது திருத்தப்படி) புரிந்து கொள்ள முடியும்.

எனவே மக்களின் நலன் என்கிற பக்கத்திலிருந்து ஆராய்கிறபோது “தேசியப் பெருவழிகள், தேசிய பெருவழிகள் மீதான பாலங்களும் பாதைகளும்
தவிர்ந்த குறுந்தெருக்கள் ஒழுங்கைகளைத் திருத்தவும், நன்னடத்தைப் பள்ளிகள் நடத்தவும்” மற்றும் இது போன்ற அற்பச் .சீர்திருத்த வேலைகளைச்
செய்வதற்கு மேல் இந்த மாகாணசபையால் எதுவும் முடியாது. ஆனால் கேள்வியெல்லாம் மக்களின் நலன் என்கிற ஒரு பக்கம் மட்டும்தானா? இந்த
மாகாணசபைக்கு உண்டு என்பதுதான். அவ்வாறில்லை, அவ் மாகாணசபைக்கு இந்திய இலங்கைப் பாசிச அரசுகளின் நலன் என்கிற மற்றொரு பக்கமும்
உண்டு. அந்நலன்களைக் காப்பதன் பெயரிலேயே இந்த மாகாணசபை அரசாங்கம் உருவெடுத்து நிற்கிறது.
 
2. இன ஒடுக்கலுக்கான இந்திய இலங்கை பாசிச அரசுகளின் கூட்டுச் சதியே மாகாணசபை!

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதற்கான தமிழ் தேசிய இனத்தின் ஆயுதப் போராட்டம் இலங்கையின் அரைக் காலனிய அரசின் அத்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்த போது, இலங்கை அரசைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க ரஷ்ய ஏகாதிபத்தியங்களின்
வழிகாட்டுதலின் கீழ் இந்திய அரசினது பிராந்திய மேலாதிக்கத்தை இலங்கை அரசு ஏற்பதெனவும் இந்திய அரசு தமிழ் மக்களின் விடுதலைப்
போராட்டத்தை நசுக்கி இலங்கை அரசைக் காப்பது எனவும், இந்திய இலங்கை அரசுகள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தன.

இந்த உடன்பாடு எட்டப்படும் வரை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி வந்தது
இலங்கை அரசு. ஆனால் இந்த ஒடுக்கலுக்கு எதிரான பெரும் எழுச்சியை, விடுதலைப் போராட்டத்தின் தீவிர வளர்ச்சியைக் கண்டபின்னர்,
போராட்டத்தை ஒடுக்க உண்மைத் தோட்டாக்களை மட்டும் பயன்படுத்தினால் போதாது என்பதை உணர்ந்து, தேன் தடவிய தோட்டாக்களைப்
பயன்படுத்த அதாவது ஒடுக்குமுறையுடன் சில்லறைச் சீர்திருத்தங்களையும் நிலமைக்குத் தக்கபடி கலந்து பயன்படுத்துவது என இந்திய இலங்கை
அரசுகள் திட்டமிட்டுக் கொண்டனர். இதற்கமைய ’அதிகாரப் பகிர்வுமுறை’ என்ற புனைபெயரில் முன்வைக்கப்பட்டவைதான் இந்த மாகாணசபைகள்.
இத்திட்டமானது வடக்குக் கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கமட்டுமே சம்மதிக்கிறது. தற்காலிகமான இணைப்பை அறிவித்த மறுகணமே இவ்விணைப்பைத் துண்டிக்கவும் தமிழ்மக்களை சாதி மத பிரதேச ரீதியாகவும் பிளவுபடுத்தி துண்டாடுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் இலங்கைப் பேரினவாதப் பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவின் மீதும் இந்த இரண்டு மாகாணங்களுடன் வேறு ஒரு
மாகாணத்தை இணைக்கவும், அல்லது இவ்விரு மாகாண இணைப்பை ரத்துச் செய்யவும், அல்லது இம்மாகாணங்களில் ஒன்றை (கிழக்கு மாகாணம்?)
வேறு ஒரு அருகில் உள்ள சிங்கள மாகாணத்துடன் இணைக்கவும் முடியும்.திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்றவோ, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களால் சிங்களமயமாக்கப்பட்ட பிரதேசங்களை வெட்டிப் பிரிக்கவோ மறுப்பதுடன், தொடர்ந்தும் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றத்தை நடத்துவதற்கு ஏதுவாக நிலத்தின் மீதான குடியேற்ற அதிகாரத்தை மைய அரசின் வசமே வைத்துக்கொண்டுள்ளனர். இது சிங்களக் குடியேற்றத்தைத் தொடரவும், தமிழினத்தின் பிரதேச தொடர்ச்சியைத் துண்டாடவும், ஒரு இனமாக இல்லாதொழிப்பதற்கான முழு அக்கறையோடும் தீட்டப்பட்ட  திட்டமாகவே உள்ளது.

ஆக, இந்திய இலங்கைப் பாசிச அரசுகள் தமிழ்மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்க மறுப்பது ஒரு புறமிருக்க, இவர்கள் தமிழ் மக்களை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்க, தமிழர் அனைவரையும் ஒரே மாநில ஆட்சி அமைப்பினுள் கொண்டு வந்து அவர்தம் தனித்துவத்தைப்
பேணிக்காப்பதற்கான உத்தரவாதத்தைக் கூட வழங்கத்தயாராக இல்லை. இத்தகைய ஒரு ஆட்சி முறையா இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டப்
போகிறது? இதனை ஏற்கச்சொல்லி தமிழ் மக்களை யுத்தத்தின் மூலம் நிர்ப்பந்திக்கிற இந்திய அரசா தமிழ் மக்களின் நண்பனாக இருக்க முடியும்?

இந்த மாகாணசபைக்கு பெயரளவிலான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளன. பிரதேசக் கட்டுக்கோப்பைப் பாதுகாக்கவோ, பொருளாதார வளர்ச்சியை
உத்தரவாதம் செய்யவோ, மொழி,கல்வி,கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கவோ அதிகாரம் அற்றதாகவே உள்ளது. மாகாண சபைக்கான அதிகாரம்
பேரினவாதப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தின் படியே வழங்கப்படுகின்றது. இந்த அதிகாரங்களை பாராளுமன்றம் பறித்துக்கொள்ள முடியும், வரம்பிட
முடியும். தேவையேற்படின் இந்த அதிகாரங்களை ஜனாதிபதி தடுத்து தன் கையில் எடுத்துக்கொள்ளவும் முடியும்! இன ஒடுக்கலில் இருந்து விடுதலை
பெறுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு தேசிய இனத்திற்கு நியாயமான தீர்வாகக் காட்டப்படும் இந்த மாகாணசபையும் இதற்குரிய அதிகாரங்களும்,  நாடு முழுவதற்கும் பொருந்தி வருவதைக் கொண்டே இதன் மோசடித் தன்மையை புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு பாராளுமன்றத்தின் ‘வேலைக்காரர்களாக’ மாகாணசபைகளை உருவாக்கிவிட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பசப்புகின்றன இந்திய இலங்கைப் பாசிச அரசுகள். தமது அதிகாரக் கோட்டையில் ஆரோக்கியமாக அமர்ந்து கொண்டு ஆளும் கும்பல்கள் எடுத்து வீசுகிற எலும்புத் துண்டுதான் இந்த மாகாணசபை. இதனால் இவை இலங்கையை ஆளுகின்ற வர்க்கங்களின் அதிகாரத்தின் அத்திவாரத்தை உடைக்காது. ஒடுக்கப்படும் தேசத்தின் தமிழ் தேசிய இனத்திற்கு, ஒடுக்கும் தேசத்தின் சிங்களத்தேசிய இனத்துடன் சம உரிமை வழங்கிவிடாது. இத்தகைய ஆட்சி முறையில் இலங்கையில் ஒரு ஜனநாயகக் குடியரசு முறை ஏற்பட்டுவிடாது. இன ஒடுக்குமுறையும் ஒழிந்து விடாது. மாறாக சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் கைகளில் உள்ள அதிகாரம் பாதுகாக்கப்பட்டவும் பாசிச அரசாங்கத்தை மேலும் கெட்டிப்படுத்தவுமே உதவுவதாக உள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளின்படி (1989) இலங்கைப் பாராளுமன்றத்தில் சிங்களப் பேரினவாதக் கட்சிகள்  85வீதத்துக்கு
மேற்பட்ட பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ளன. ஏனெனில் இலங்கையை ஆளும் வர்க்கங்கள் தங்களது ஆசனத்தை நிலைநிறுத்த சிங்களப் பேரினவாதத்தையும் புத்த மதவாதத்தையும் ஆதாரமாகக் கொண்டுள்ளன. அதன் மீது தமது பாசிச அரசை நிறுவியுள்ளன. இந்த நிலைமையில் ஒரு மாகாணசபை அரசாங்கம் இலங்கையை ஆளும் பேரினவாதிகளுக்கும், நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் சுரண்டும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் விசுவாசமாக இருந்து இந்த அரசமைப்புக்கும் இன ஒடுக்குதலுக்கும் துணைபோகும் வரைக்கும்தான் ஆட்சி பீடத்தில் இருக்க அனுமதிக்கப்படும். அதற்கு மாறாக தனது மக்களதும் தேசிய இனத்தினதும் நலன்களை உறுதியாக பற்றி நின்று அரசுக்கு எதிராக செயற்படுமானால் “அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டளைகளை மீறுகிறது” எனக் குற்றம் சாட்டப்பட்டு கலைக்கப்பட்டுவிடும்.

எனவே இந்த மாகாணசபையால் இந்நாட்டில் நிலவும் அரைக் காலனிய  அரை நிலவுடமை முறையையும் அதைக் கட்டிக் காக்கப் பயன்படும், இனஒடுக்கு
முறையையும் இம்மியும் அசைக்க முடியாது. பதிலுக்கு  இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்தும் தரகு முதலாளிகளும், நிலவுடமைச் சக்திகளும்,
பேரினவாதிகளும், தமிழினத்தின் மத்தியிலுள்ள சமரச சக்திகளுக்கும், சரணடைவு வாதிகளுக்கும் மாகாணசபை எனும் எலும்பை வீசித் தமிழினத்
துரோகிகளைப் புதிய புதிய அமிர்தலிங்கம் தொண்டமான்களை தயாரிக்கவும், சிங்களப் பேரினவாதிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கும்
சேவைசெய்ய தமிழர்களிடம் இருந்து புதிய சக்திகளைச் சேர்க்கவும் தேசிய இனத்தைப் பிளவுபடுத்தி கோடரிக்காம்புகளின் துணையோடு விடுதலை
இயக்கத்தை ஒடுக்கவும், தமது உண்மையான விடுதலையை வென்றெடுக்க போராட்டப் பாதையில் முன்னேறும் மக்களை சமரசப் பாதையில்
இழுத்துவிட்டுச் சீரழிக்கவுமே பயன்படுவதாகும். சுருங்கச் சொன்னால் இந்திய இலங்கை அரசுகள் கூட்டாக முன்வைக்கும் இந்த ஆட்சிமுறை 
இனஒடுக்கலுக்கும் இந்நாட்டில் நிலவும் பிற்போக்கான சமூக அமைப்பைக் கட்டிக் காப்பதற்குமான ஒரு கருவியாகவே உள்ளது. இதனால் இது இந்திய
இலங்கை அரசுகளின் நலன்களோடு பிரிக்கமுடியாதவாறு பிணைக்கப்பட்டதாகவும் உள்ளது.

ஆக, இந்திய இலங்கை பாசிச அரசுகளின் அடிவருடிகளான அமிர்தலிங்கம் தொண்டமான் ஆகியோரையும் இன்னும் பதவி வெறியர்களும்
பிழைப்புவாதிகளுமான பத்மநாபா, வரதராஜபெருமாள் போன்ற கைக்கூலிகளையும் தம் பக்கம் நிறுத்துவதற்காக அற்பச் சலுகைகளை வழங்குவது, மறுபுறம் தமிழ் இனத்தின் விடுதலை இயக்கத்தையும், விடுதலைப் போராளிகளையும், சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயகச் சக்திகளையும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் ஒடுக்க உண்மையான தோட்டாக்களையும் பயன்படுத்துவது என்ற இரட்டைக் கொள்கையின் ஒரு பக்கமே இந்த மாகாணசபைத் திட்டமாகும். சுருங்கச் சொன்னால் தமிழ் இனத்தின் ஒரு பிரிவை அற்பச் சலுகைகளைக் காட்டி உடைத்தெடுத்து தம் பக்கம் சேர்த்துக் கொண்டு விடுதலைப் போரில் உறுதியாக நிற்கும் மறு தரப்பை இராணுவ ரீதியாக ஒழித்துக் கட்டுவது, இதற்காக தமது கைக்கூலிகளையே உபயோகித்துக் கொள்வது இந்திய இலங்கை அரசுகளின் தற்போதைய தந்திரோபாயமாகும். இப்புதிய தந்திரோபாயத்தை செயற்படுத்துவதற்காக இந்திய அரசானது- மக்களை ஏய்த்து  சமரத்துக்குப் பின்னால் திரட்டவும், விடுதலைப் போராளிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவுமாக- அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த மாகாணசபைத் திட்டத்தை இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாகக் காட்டி இலங்கை அரசு இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண இறங்கி வந்துள்ளதாகவும்
போராளிகளும் இறங்கி வந்து இத்தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் ஒரு நடுநிலையாளன் வேடத்தைப் போட்டுக் கொண்டு பசப்புகின்றது.
போராளிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஆயுதங்களை கீழேபோட்டுச் சரணடைந்து, இலங்கை அரசு திறந்துவைத்துள்ளதாகக் கூறும் ஜனநாயக
வழிமுறைக்கு வரும்படியும், வன்முறை எந்தப் பயனையும் தராது அன்பு அகிம்சை வழியாலேயே எதனையும் அடைய முடியுமெனவும் மக்கள் இன்று
அமைதியையே விரும்புகின்றார்கள் எனவே அமைதியை நிலைநாட்ட போராளிகள் சரணடைய வேண்டும், மாகாணசபைத் தீர்வை ஏற்று தேர்தல்
பாதைக்குத் திரும்ப வேண்டுமெனவும் அழைப்புவிடுகிறது; இந்த வகையான உபதேசங்கள் மூலம் தன்னை ஒரு நியாயவானாகக் காட்டிக் கொள்ள
முயல்கிறது  (இந்திய அரசு).
 
ஆனால் இலங்கை அரசுக்கு நெருங்கிய கூட்டாளியாக செயற்பட்டபடியே இந்த நாடகத்தை இந்திய அரசு ஆடிவருகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கும்
ஆக்கிரமிக்கப்பட்டவர்களுக்கும் இடையே, ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையே என்ன விட்டுக் கொடுப்பும் சமரசமும் சாத்தியமாக முடியும்? ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பைக் கைவிட்டு வெளியேறுவது ஒடுக்குபவர்கள் ஒடுக்குமுறையைக் கைவிட்டு சுயநிர்ணய உரிமையை வழங்குவது என்பதை விடவும் வேறு தீர்வு ஏதும் இருக்க முடியுமா? இந்திய அரசு கூறும் இருபுறமும் விட்டுக் கொடுத்து சமரசத்துக்கு வருவதென்பது “நீ அவல் கொண்டுவா, நான் உமிகொண்டு வருகின்றேன் இருவருமாக ஊதி ஊதிச் சாப்பிடலாம்.” என்பது போன்ற ஒரு ஏமாற்றாக மட்டுமே இருக்க முடியும். விடுதலை அல்லது அடிமைத்தனம் என்பதற்குமேல் ஒடுக்கப்படும் மக்கள் இனங்களுக்கு வேறுஎன்ன மூன்றாவது தீர்வு இருக்கமுடியும்? ஒரு தேசிய இனம் தனது அடிப்படையான அரசியல் ஜனநாயக உரிமையான சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டு எதைப் பெற்றாலும் அது ஏதாவது ஒரு வழியிலான அடிமை வாழ்வாகவே இருக்கும்.

இந்த நிலைமையில் மக்களின் ஜனநாயக உரிமை என்பது ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதும் இன ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதும் அல்லவா! மக்கள் தமது வாழ்வைத் தாம் விரும்பும் பாதையில் அமைக்கவும்  தம் முன் வைக்கப்படும் எந்த ஒரு தீர்வையும் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ அவர்களுக்குள்ள உரிமையே ஜனநாயக உரிமையாகும். இந்த வகையில் தமிழ் மக்கள் பிரிந்து செல்வதா?, இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்புக்குள் வாழ்வதா?, என்ற பிரச்சனையில் மக்களுக்கு ஜனநாயகபூர்வமாக முடிவுசெய்யும் (கருத்துக் கணிப்பு) வாய்ப்பு வழங்கப்படுமா?.இதைச் செய்வதற்கு இந்திய இலங்கைப் பாசிச அரசுகள் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல இலங்கையின் ஒற்றையாட்சி என்கிற இனஒடுக்குதலுக்கான ஆட்சிமுறைக்குள்ளேயே தாம் வைக்கும் மாகாணசபை ஆட்சிவடிவத்தை ஏற்கிறார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவும் மக்களின் வாக்குகளுக்கு உரிமை இல்லை. எத்தகைய ஆட்சிவடிவம்? எது பரப்பெல்லை? எந்தளவு அதிகாரம்? எல்லாவற்றையுமே அவர்கள் தீர்மானித்துவிட்டு, இதில் பங்கு கொள்கிற அமைப்புக்களையும் தாமே உருவாக்கிவிட்டு அவற்றுக்கு வாக்களிப்பதை மட்டும் ( சொல்லப்போனால் வாக்கையும் கூட அவர்களே தான் அளித்தார்கள்) ஜனநாயக நீரோட்டத்தில் கலப்பதாக கூறுகிறது இந்தியா! யாருக்குத் தேவை இந்த நீரோட்டம் தூ! …….

குறிப்பு: (இத்துடன் இணைந்து வந்திருக்க வேண்டிய மற்றெருபக்கம் தற்சமயம் நம்கைவசம் இல்லை. தயவுசெய்து மன்னிக்கவும்)


புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Thursday, 10 May 2012

முள்ளிவாய்க்கால்ப் பிரகடனம்


முள்ளிவாய்க்கால்ப் பிரகடனம்

1) இலங்கையின் ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய காலம் முதல், மனித சமூகத்தினர்- ``பழைய கற்கால மக்கள்`` வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்களின்
வரலாற்று வழித்தோன்றல்களாகவே பிற்கால தமிழ் சிங்கள இனக் குழுக்கள் உருவாகி, தற்கால தேசிய இனங்கள் தோன்றின.

2) இந்நீண்ட ( ``இற்றைக்கு முன் 25000 ஆண்டுகால`` ) வரலாற்றில்,  தமிழகத்திலிருந்து பிரிந்த 7000 ஆண்டுகளில் ஆக இறுதி அறுபத்தைந்து  ஆண்டுகளே இன மதப்பூசல்கள் ஓங்கி வளர்ந்த காலமாகும்.

3) இன மதப் பகைமைக்கான விதைகள், ஆங்கிலேய காலனியாதிக்க வாதிகளால் ஊன்றப்பட்டு அதிகாரக் கைமாற்றத்தின் பின்னர் சிங்கள ஆளும் கும்பல்களால் அரசதிகாரத்தை ஏகபோகமாக்கவும், தொடர்ந்த நவீனகாலனியாதிக்கச் சுரண்டலை மூடிமறைக்கவும் ஊட்டி வளர்க்கப்பட்டது.

4) தமிழர்களின் நிலப்பரப்பு- ஆட்சிப் பரப்பு, சிங்களவர்களுடன் தமிழ் மக்களின் சுயவிருப்பு அறியப்படாமல் கட்டாயமாக ஆங்கிலேய
காலனியாதிக்கவாதிகளால் இணைக்கப்பட்டது.

5) தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை ஒருபுறம், தனிச் சிங்களச்சட்டம் மூலம் அதிகார எந்திரத்திலிருந்து தமிழர்களை வெளியேற்றுதல், திட்டமிட்ட
குடியேற்றத்தின் மூலம் வாழ்நிலத்தில் இருந்து தமிழர்களை வெளியேற்றுதல், ஒற்றையாட்சி மூலம் அரசதிகாரத்தில் இருந்து வெளியேற்றுதல் எனவும், மறுபுறம் இடையறாத ``கலவரங்கள்`` மூலம் இனப்படுகொலை செய்வது என்பதாகவும் தொடர்ந்தது.இவ்வாறு இலங்கையில் சிங்களம், இன ஒடுக்குமுறையின் மீது கட்டியமைக்கப்பட்டது.
இன ஒடுக்குமுறையை தனது இருப்புக்கு ஆதாரமாக்கிக் கொண்டது.

6) தனிச் சிங்களச் சட்ட எதிர்ப்பு , 1972 அரசியல் யாப்பு புறக்கணீப்பு, 1978 ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு, 1981 மாவட்ட அபிவிருத்தி சபை எதிர்ப்பு,
1987 இந்திய இலங்கை ஒப்பந்த எதிர்ப்பு, 13வது திருத்த மாகாணசபை எதிர்ப்பு என இன ஒடுக்கலின் அரசியல் ஏற்பாடுகள் எதிர்க்கப்பட்டன. மாறாக
ஆரம்பகால சமஸ்டி இயக்கம்,1977 வட்டுக்கோட்டைத்தீர்மானம்,1985 திம்புக் கோரிக்கைகள், 2001 இடைக்கால அதிகாரசபை- அக சுய நிர்ணய உரிமை-
போன்ற தீர்வுகள் மூலம் இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட தமிழர் பிரதிநிதிகள் முயன்றனர்.

7) எந்தத்தீர்வுகளுக்கும் தயாரின்றி சிங்களம் இன ஒடுக்குமுறையைத் தொடர்வதில் குறியாகவுள்ளது.குறிப்பாக தமிழீழ தேசத்தின் காப்பரணான
விடுதலைப் புலிகளை நயவஞ்சகமாகக் கொன்றொழித்த பின் தமிழீழ தேசத்தை சூறையாட வெறிகொண்டு அலைகின்றது.

8) விடுதலைப்புலிகளை நயவஞ்சகமாகப் பலியெடுத்தது, சிங்களம் மட்டுமல்ல; அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும், இலங்கையை தமது செல்வாக்கு மண்டலத்தின் கீழ்க் கொண்டுவரமுயலும் சீன, ரசிய வல்லரசுகளுமேயாகும்.

9) உலகமயமாக்கலினதும், உலக ஏகபோக முதலாளித்துவ பொது நெருக்கடியினதும், உலக மறுபங்கீட்டினதும் நலன்களே, விடுதலைப் புலிகளை வேட்டையாட இவர்களை ஒன்று சேர்த்தன. இன்று அதே நலன்கள் முழு இலங்கை நாட்டு மக்களுக்கும் எதிராக திரும்பிவிட்டன. இதன் மையமாக பக்ச பாசிஸ்டுக்களின் சிங்களம் திகழ்கிறது.

10) எனவே தமிழீழ தேசம் தனது பிரிந்து செல்லும் உரிமையை வென்றெடுக்க, சிங்கள-மலையக-முஸ்லிம் மக்களை ஐக்கியப்படுத்த, உலகத்
தொழிலாளர்களுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராடும்.

 மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வழி நடப்போம்!

 மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

தமிழீழம் மே 11  2012

Sunday, 29 April 2012

மே தினம் 2012 : புதிய ஈழப்புரட்சியாளர்கள்

நவீன காலனியாதிக்க ஆட்சிக்கவிழ்ப்பு, அந்நியத் தலையீடுகளை, புதிய ஜனநாயக உள்நாட்டுப் புரட்சியால் தோற்கடிக்க எழுக!

உலகத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட தேசங்கள் ஒன்றுபடுக!

தமிழீழ சுயநிர்ணய உரிமைப் போராட்டம் ஓங்குக!

மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!

மேதினி போற்றும் மே நாள் வாழ்க!


அன்பார்ந்த தமிழீழ மக்களே, இளைஞர்களே, மாணவர்களே;

இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் மூன்றாம் ஆண்டு நினைவாகும். சர்வதேச தொழிலாளர் தினத்துடன் ஆரம்பிக்கும் இம்மாதத்தில் தமிழீழ அரசியல் விடுதலைப் போராட்டத்தை – சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான குறிப்பான பணிகள் பாதைகள் பற்றிய வரையறையைச் செய்து கொள்வது புரட்சிகர இயக்கத்தின் முன்னாலுள்ள பிரதான கடமையாகும்.

முள்ளிவாய்க்கால் பிரளயம் முடிந்த இந்த மூன்று ஆண்டுகளில், அதாவது விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை அழித்தொழிக்கப்பட்டதன் பின் தமிழீழ விடுதலை இலட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஒரு அரசியல் தலைமை தோன்றவில்லை. இதன் காரணத்தால் விடுதலை இலட்சியம் புறம் தள்ளப்பட்டு சீர்திருத்தவாத சந்தர்ப்பவாத வழிகளில் மக்கள் திசைதிருப்பப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய வாதிகள், உலகமுதலாளித்துவப் பொதுநெருக்கடியின் சுமைகளை, தங்கள் நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் மீதும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீதும் திணிப்பதை எதிர்த்து - உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் எழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

எனவே இவ்வாண்டு மேதினத்தை நாம் புறவயமாக- சர்வதேச ரீதியாக உலகெங்கும் ஒரு புரட்சிகரச் சூழல் கொந்தளித்திருக்கும் நிலையிலும், அகவயமாக- உள்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட்டு புரட்சி அலை தணிந்து அரசியல் தலைமையற்ற நிலையிலும் எதிர்கொள்கின்றோம்.

சர்வதேச ரீதியான புரட்சிகர அலை எழுச்சியின் உயர் நிலையைப் பற்றிப்பிடித்து மீண்டும் எவ்வாறு ஒரு புரட்சிகர அலை எழுச்சியை ஈழத்தில் – இலங்கையில் கட்டியமைப்பது என்பதே இன்று எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

இக்கேள்விக்கு விடைகாணும் பொருட்டு நாம் இன்றைய சர்வதேச, உள்நாட்டுச் சூழ்நிலைகளையும், அவற்றில் இருந்து எழும் பிரதான அரசியல் போக்குகளையும், இப்போக்குகள் பால் பல்வேறு சமூக வர்க்கங்களின் நிலைப்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.இதன் மூலம் மட்டுமே தமிழீழத் தேசிய விடுதலைக்கான இன்றைய எமது போராட்டப் பாதையையும், பணிகளையும், வகுத்துக் கொள்ளவும், புரட்சிகரத் தலைமையைக்  கட்டியெழுப்பவும் முடியும்.

இன்றைய சர்வதேசச் சூழ்நிலை:

1) மீளமுடியாப் பொருளாதார நெருக்கடியில் ஏகபோக முதலாளித்துவ உலகம்

 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிநெருக்கடி, முதலாளித்துவ மிகை உற்பத்தியால் ஏற்பட்டதாகும். இந்த நெருக்கடி ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் பரவி நீடித்து வருகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2010ல் 4 சதவீதமாக இருந்தது, 2011ல் 2.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. அது மேலும் வீழ்ச்சியடையும் என்று ஐ.நா. ஆய்வு அறிக்கை அபாயச்சங்கை ஊதியுள்ளது*.
---------------------------------------------------------------
*The bank estimates that global GDP growth will be 3.3% this year against 3.9% in 2010, with emerging markets growing by 6%.
Overall, global growth is projected to ease from 3.8 percent in 2010 to 3.2 percent in 2011, before picking up to 3.6 percent in each of 2012 and 2013. The slowdown for high-income countries (from 2.7 percent in 2010 to 2.2 percent in 2011) mainly reflects very weak growth in Japan due to the after-effects of the earthquake and tsunami (see note on the Impact of the disaster in Japan). Growth in the remaining high-income countries is expected to  remain broadly stable at around 2.5 percent through 2013, despite a gradual withdrawal of the substantial fiscal and monetary stimulus introduced following the financial crisis to prevent a more serious downturn.
For developing countries growth is projected to decline from 7.3 to 6.2 percent between 2010 and 2012 before firming somewhat in 2013, reflecting an end to bounce-back factors that served to boost growth in 2010 and the tightening of monetary and fiscal policies as capacity constraints become increasingly binding (see note on the Synopsis of regional outlooks and the regional annexes to this document for more details on recent economic developments and the outlook for low– and middle-income countries — including country specific forecasts). (மூலம்:உலக வங்கி)
------------------------------------------------------------------
அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2010ல் 2.3 சதவீதமாக இருந்தது, 2011ல் 1.8 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. அங்கு வேலையின்மையோ வரலாறு காணாத அளவிற்கு 18.4 சதவீதமாக உயர்ந்துவிட்டது. பெருகிவரும் வேலையின்மை, குறைந்து கொண்டே செல்லும் ஊதியம், மக்களின் வாங்கும் சக்தியை குறைத்து விட்டது. அமெரிக்கா இன்று உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக மாறியுள்ளது *
-------------------------------------------
*$15,064,816,000,000- The U.S. GDP in 2011. The debt as of Jan 1st, 2012 is 15,170,600,000,000. United States now owes more money than its yearly production (GDP).
Statue of Liberty seems rather worried as United States national debt soon to pass 20% of the entire world's combined GDP (Gross Domestic Product). In former President Bill Clinton's first-ever State of the Union address, he announced that if America's debt were stacked in thousand dollar bills, it would "reach 267 miles" into space.
Today, the U.S. debt is $14.3 trillion and the government is currently embroiled in a fierce debate over whether to raise the allowed borrowing amount further. Stacked and bundled into one-hundred dollar bills, the national debt would be as wide and long as two football fields and as high as the Statue of Liberty, reports graphic design artist Oto Godfrey
-------------------------------------------- 
உலகப் பொருளாதாரத்தின் உந்துசக்தியாக கருதப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புதை சேற்றில் மூழ்கிவருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமோ தற்கொலைப் பாதையை நோக்கிச் செல்கிறது. பிரிட்டனின் ஒட்டுமொத்த உற்பத்தி 0.5 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளிலும் மந்தநிலை தொடர்கிறது. கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து போன்ற நாடுகள் கடன் பொறியில் சிக்கியுள்ளதானது ஐரோப்பிய யூரோ நாணயத்தின் நீட்டிப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஸ்பெயினில் 50 சதவீத இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். (The euro area unemployment rate rose by 0.1 percentage point (for the eighth consecutive month) to 10.8% in February, maintaining a record high since the start of the global financial crisis.) என ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

மூன்றாம் உலக நாடுகள், அல்லது `வளர்ந்துவரும் நாடுகள்` என பொய்யாகவும் கொச்சையாகவும் அழைக்கப்படும் ஒடுக்கப்படும் கீழைத்தேசங்கள் அதன் பிற்போக்கு ஆளும்வர்க்கங்களால் ஐ.எம்.எஃப் இனதும், உலக வங்கியினதும் கட்டளைகளுக்குப் பணிந்து தமது தேசங்களின் சொந்தத் தேசியப் பொருளாதாரங்களை ஏகபோக முதலாளித்துவத்தின் நலன்களுக்கு சேவகம் செய்யும் – சேவைத்துறைத் துணைப் பொருளாதாரமாக மாற்றியமைத்துவிட்டன.

இதனால் இன்று முதலாளித்துவ உலகில் தொடரும் மீளமுடியாப் பொருளாதார நெருக்கடிகள் தவிர்க்க இயலாமல் ஒடுக்கப்படும் கீழைத்தேசங்கள் அனைத்தையும் கடுமையாக பாதித்து வருகின்றன. இதற்கு இலங்கை போன்ற நமது மிகச் சிறிய நாடு கூட விதிவிலக்கில்லை.(இலங்கையின் வரவு செலவுத் திட்டம் குறித்த ஆய்வைப் படிக்க இணைப்பை அழுத்துக.)
-----
2) உலக மறுபங்கீடும் யுத்தங்களும்.

ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாடுகளை- சந்தைகளையும் மூலவளங்களையும், அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகள் மறுபங்கீடு செய்து தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இந்த நவீன காலனிய ஆதிக்கப்போக்கு இன்னமும் முடியவில்லை. உலகு தழுவிய ஏகபோக முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி இதனை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.கிழக்கைரோப்பா, பொஸ்னியா, கொசோவோ, சூடான், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மேலும் சிரியா, ஈரான் ஆகியவை இப்போக்கின் தொடர்ச்சியேயாகும்.

3) அரபு எழுச்சி

 
அமெரிக்க ஏகாதிபத்தியம், ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தமது நவீன காலனிய உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், மத்திய கிழக்கில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது ஏகபோகத்தை நிறுவவும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து தமக்கு அடிபணியாத நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் ஆப்கனிலும், ஈராக்கிலும் இராணுவ ரீதியில் தலையிட்டு தமது பொம்மை ஆட்சிகளை நிறுவியுள்ளது. தற்போது சிரியா மீதும், ஈரான் மீதும் இராணுவத் தலையீட்டிற்குத் தயாராகி வருகிறது.

அமெரிக்கா மத்திய கிழக்கிலும், வடக்கு ஆபிரிக்க நாடுகளிலும் தனது ஆதரவு நாடுகளுக்கு இராணுவ ரீதியில் உதவி செய்து அந்நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளைப் பாதுகாத்து வந்தது. 2008ஆம் ஆண்டு நெருக்கடிகளின் சுமைகளை அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் இந்நாடுகளின் மீது திணித்தது. இத்தகைய புதியதாராளக் கொள்கைகள் ஏற்படுத்திய நெருக்கடிகளைத்  தாங்கமுடியாமல் அரபு நாட்டு மக்கள் தங்களது கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து கலகம் செய்தனர். துனூசியா முதல் எகிப்து, லிபியா, யேமன், சிரியா என மக்கள் வரலாறு காணாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியமோ ’மனித உரிமை காப்பு’, ’ஜனநாயக மீட்பு’ என்ற பேரில், இந்தப் போராட்டங்களின் தலைமையைக் கைப்பற்றி,இராணுவ உதவிகள் மற்றும் தலையீடுகள் நடத்தி, தமது அடிவருடிகளின் ஆட்சியை தவிர்க்க இயலாமல் அகற்றிவிட்டு, தமது புதிய பொம்மை ஆட்சிகளை நிறுவிவருகிறது. இப்பொம்மை ஆட்சிகளை எதிர்த்த அரபுமக்களின் கிளர்ச்சிகள் எகிப்திலும் லிபியாவிலும் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. அரபு மக்கள் அமெரிக்காவின் நவீன காலனிய பொம்மை ஆட்சிகளை எக்காலத்திலும் ஏற்கப்போவதுமில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவு பலிக்கப் போவதுமில்லை என்பது திண்ணம்.

4) தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசிய எழுச்சி


அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் 2008ஆம் ஆண்டின் அதல பாதாள நெருக்கடியிலிருந்து அந்நாட்டின் நிதிமூலதன திமிங்கலங்களை பாதுகாப்பதற்கு நட்ட ஈடு, ஊக்கத்தொகை என ஆண்டிற்கு 700 பில்லியன் டாலர்கள் மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்கினர். அதன் விளைவாக நிதிமூலதனக் கும்பல் கொழுத்தனவே ஒழிய பொருளாதார நெருக்கடி தீரவில்லை. மாறாக நெருக்கடிகளின் சுமைகள் முழுதும் அந்நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டது. சமூக நலத்திட்டங்கள் கைவிடப்பட்டன. அரசியல் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. ஏற்கனவே வேலையின்றி, போதிய வருமானமின்றி வாடிக்கொண்டிருக்கும் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தைத்  துவங்கினர். ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது.

 அமெரிக்க மக்கள் சந்திக்கும் துன்பதுயரங்களுக்கு  நிதி மூலதனக் கும்பல்களே காரணம் என்று கூறி அமெரிக்க மக்கள் வால்ஸ்டீரிட்டை முற்றுகையிடும் போராட்டத்தைத் தொடங்கினர். நிதிமூலதனக் கும்பல்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நிறுத்தவேண்டும் எனவும் முதலாளித்துவம் ஒழிக என்றும் அம்மக்கள் நாடுதழுவிய அளவில் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்தப் போராட்டம் ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட 87 நாடுகளில் பரவி தொடர்ந்து நடந்துவருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் அத்தகைய போராட்டங்களை ஒடுக்க கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்ட பிறகும் கூட மக்கள் அஞ்சாமல் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் இம்மேநாளில் நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. 80ஆம் ஆண்டுகளின் இறுதியில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியை (அதுவும் முதலாளித்துவ நெருக்கடிதான்) , காரணம் காட்டி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் தாசர்கள் கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்று கூத்தாடினர். ஆனால் இன்று அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ உலகம் முழுவதும் முதலாளித்துவம் ஒழிக என்று மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்!

இந்த தொழிலாளர்வர்க்க ஜனநாயக இயக்கமானது உள்நாட்டின் அரசியல் பொருளாதார மேம்பாட்டிற்கானதாக மட்டுமல்லாமல் ஏகபோக முதலாளித்துவத்தின் நவீன காலனியாதிக்கத்திற்கும், உலகமறுபங்கீட்டு அநீதி யுத்தங்களுக்கும் எதிரானதாகவும் உள்ளது.

எனவே இன்று ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்டுவரும் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியும், அரபு மக்களின் விடுதலை மற்றும் ஜனநாயகத்திற்கான கிளர்ச்சிகளும் ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்களின் தாசர்களையும் எதிர்த்து சோசலிசம் மற்றும் விடுதலைக்கான பாதையில் நடைபோடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உள்நாட்டுச் சூழ்நிலை:

”புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து” தமிழ் மக்களை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கை என்று கூறி ஒரு தேசிய இனப்படுகொலையை சிங்களம் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றி முடித்தது.இதற்கான  அரசியல் தயாரிப்பை நோர்வே பேச்சுவார்த்தை மூலம் எரிக்சொல்ஹெய்மும் அன்ரன் பாலசிங்கமும் சேர்ந்து செய்து முடித்தனர். எல்லாவித யுத்தநெறிகளையும் மீறி விசவாயு வீசிப் போராளிகளைப் படுகொலை செய்து, இலட்சக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்து தனது தேசிய இனப்படுகொலையை தொடர்ந்தது சிங்களம். அமெரிக்கா, ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், ரஷ்ய சீன பிராந்திய ஆதிக்கவாதிகள், இஸ்ரேல் பாக்கிஸ்தான், இந்திய விஸ்தரிப்புவாத அரசு அனைவரும் இந்த யுத்தத்திற்கு அனைத்து இராணுவ தளபாட மற்றும் புலனாய்வு உதவிகளையும் வழங்கி ஆதரித்தனர். ஒபாமாவும் சமாதான தூதுவர் எரிக் சோல்ஹெமும் ஒரு படி மேலே சென்று விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சிங்களத்திடம் சரணடைய வேண்டுமெனப் பகிரங்கமாகக் கோரினர்.சிங்களத்தின் கோரத் தாண்டவத்துக்குள் சிக்குண்ட மக்கள் கை கூப்பி அழுதும், தொழுதும், வேண்டியும் கூட அவர்களை அநாதரவாக விட்டு விட்டு ஐ.நா.வெளியேறியது.

சரணடைந்த முக்கிய உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் சிறைவைக்கப்பட்டனர். இவர்களின் சரியான எண்ணிக்கையோ பேர்விபரமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அறியப்பட்ட சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேறு ஒருசிலர் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பகுதியினர் என்ன ஆனார்கள் என்ற விபரம் கூட இன்றுவரை எவருக்குமே தெரியாது. பெண்போராளிகள் சிலர் இந்திய புடவை நிறுவனங்களுக்கு விளம்பர ’போஸ்’ கொடுத்து புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். வேறு சில போராளிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது, தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் கூட மீண்டும் கைது செய்யப்படுவது தொடர்கிறது.

யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்து போன இந்த மூன்று வருடங்களிலும் சிங்களம் தனது தேசிய இன அழிப்புக் கொள்கையை கைவிடவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆயுதம் ஏந்திய எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழீழ தேசத்தின் இருப்பை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு தனது அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வருகின்றது.. ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வை காண மறுத்து வருகிறது. வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பு தமிழர் தாயகம் என்பதை ஏற்க மறுக்கிறது. ஈழத் தமிழர்கள் பகுதிகள் முழுவதும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான தமிழ்மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த மறுப்பதுடன், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தைத் திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. இந்த இஸ்ரேல் பாணி நிலப்பறிப்பு மற்றும் இராணுவ மயத் திட்டமானது திட்டமிட்ட தேசிய அழிப்பாகும்.

பக்ச பாசிஸ்டுக்கள் தமிழர்கள் மீது மட்டுமல்லாது, உழைக்கும் சிங்கள மக்கள், மலையக மக்கள், இஸ்லாமியத் தமிழர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறது. தமது ஆட்சிக்கு எதிரான சிங்கள எதிர்க்கட்சியினர், மனித உரிமை அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் மீதும் வெள்ளை வான் கும்பலை ஏவிவிட்டு எச்சிறு எதிர்ப்பையும் நசுக்குகின்றது. அது இலங்கை முழுவதையும் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இத்தகைய அரசியல் தாக்குதல்கள் மட்டுமல்ல உலகமய, தனியார்மய, தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமூல்படுத்துவதன் விளைவான நெருக்கடிகளையும் இலங்கை மக்கள் மீது சுமத்துகின்றது.இதற்கு எதிரான எதிர்ப்புக்களையும் துப்பாக்கி முனையில் நசுக்குகின்றது.

இதனால் சிங்களத்தை எதிர்த்து இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவதற்கான புறச்சூழல் உருவாகி வருகின்றது.எனினும் இப்புறச் சூழலுக்குப் பொருத்தமாக அகச்சூழல் மாறவில்லை.தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனத்தவர் என்பதை அங்கீகரித்து அவர்களின் பிரிந்து செல்லும் உரிமையை உறுதி செய்ய தம் சொந்த ஆளும் கும்பல்களை எதிர்த்துப் போராட சிங்கள மக்கள் இன்னமும் தயாராக இல்லை.தமிழ்மக்கள் மத்தியில் நிலவும் குறுமினவாதமும், அதை ஏகாதிபத்திய தாச, சமரசத் தலைமைகள் தொடர்ந்து ஊட்டி வளர்ப்பதும் கூட இவ் ஐக்கியத்துக்குத் தடையாக உள்ளது. ஆனால் இந்நிலைமை மாறிவருகின்றது என்பதும், புறவய நிகழ்வுகள் இம்மாற்றத்தைத் தீவிரப்படுத்தும் திசைவழியில் பயணிக்கின்றன என்பதும் முக்கியமானதாகும்.

எனவே இத்தகைய ஒரு ஒன்றுபட்ட வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்பும் வரையில் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கை என்பது பொருத்தமுடையதே ஆகும்.அதேவேளை ஒன்றுபட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்ப பிரிவினைக் கோரிக்கை தடையாக இல்லாதிருக்கும் பொருட்டு, பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்பது அவசியமாகும். மேலும் உடனடியாக தமிழீழ மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவது,  முதன்மையான அவசரக் கடமையாக , மாறியுள்ளது.

வடக்கையும் கிழக்கையும் நிர்வாக ரீதியாக இணைத்து அதைத் தமிழர் தாயகமாக அங்கீகரிப்பது, தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவத்தை திரும்பப் பெறுவது, சிங்களக் குடியேற்றங்களை அகற்றுவது, மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளில் தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறுவது,யுத்தக்கைதிகளை விடுதலை செய்வது, யுத்தத்தால் இடம் பெயர்க்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவது,விவசாயம் மீன்பிடி மற்றும் வனத் தொழில்களுக்கு உள்ள தடைகளை நீக்குவது, யுத்தத்தால் பாழடிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியளிப்பது, யுத்தத்தால் தனித்துப் போன பெண்கள் சிறுவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பது போன்ற கோரிக்கைகளை உடனடியாக போராடிப் பெறுவது அவசியமாகும். இப்போராட்டங்களில் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கவும், இதேபோல் இதர மக்களின் குறிப்பான பிரச்சனைகளில் அவர்களுடன் ஒன்றுபட்டுப் போராடுவதும் அவசியமாகும்.

இவையல்லாமல் ஏகாதிபத்திய தாசர்களும், இன ஒடுக்குமுறையாளர்களும், சிங்கள பெளத்த வெறியர்களுமான சிங்கள ஆளும் வர்க்கத்தின் எத்தப் பிரிவினருடனும், உள்நாட்டுச் சமரசம் மூலமோ, அல்லது அந்நியத் தலையீட்டின் மூலமோ அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் எந்தச் சீர்திருத்தமும் இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டாது.மாறாக சிங்களத்தின் அடிமைத்தனத்துடன் கூடவே, நேரடியான ஏகாதிபத்திய அடிமைத்தனத்துக்குமே  வழியமைக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்துள்ள தீர்மானம் பக்ச பாசிஸ்டுக்களை இன அழிப்புப் போர்க்குற்றவாளிகள் என்று அறிவிக்கவில்லை, போர்க்குற்றங்கள் குறித்தும் எதுவும் கூறவில்லை. 2010ஆம் ஆண்டில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து உலக மக்களை திசைதிருப்பி, இலங்கையின் மீது அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கானதே இந்த தீர்மானமாகும். குற்றவாளியான இராஜபட்சேவையே நீதிபதியாகக் கொண்டு “கற்றுக்கொண்ட பாடம் மற்றும் மறுசீரமைப்பு” என்ற இலங்கை அரசாங்கம் தயாரித்த அறிக்கையை செயல்படுத்துவதையே இத்தீர்மானம் கோருகின்றது. டப்ளின் தீர்ப்பாயம், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கை அரசுடனான விடுதலைப் புலிகளின் பேச்சு வார்த்தையை சீர்குலைத்ததன் மூலமும், இலங்கை அரசுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்ததன் மூலமும் இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்கு துணைபோயின என்று கூறியது. போர் நடக்கும் போது இந்நாடுகள் வேடிக்கை பார்த்தன என்றும் எனவே இந்நாடுகள் போர்க் குற்றத்திற்கு துணை போயின என்றும் குற்றம் சுமத்தியிருந்தது. எனவே இதையெல்லாம் மூடி மறைத்து இலங்கை அரசையும், இராஜபட்சே கும்பலையும் மிரட்டி பணிய வைக்கவே தற்போது அமெரிக்கா மனித உரிமை பேசி இலங்கையில் தலையிடுகிறது. இந்திய அரசாங்கமோ அந்தத் தீர்மானத்திலும்-இலங்கை அரசின் அனுமதியுடன்தான் ஐ.நா. செயற்படவேண்டும் என்று- திருத்தம் கொண்டுவந்து ஆதரித்தது. இராஜபட்சேவுக்கு சாதகமாகத்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று மன்மோகன் சிங் கடிதம் எழுதி தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார். மேலும் இந்தப் போரை இந்தியாவிற்காக நாங்கள் நடத்தினோம் என்று இராஜபட்சே கும்பல் கூறியது. இந்திய அரசு போரை முன்னின்று நடத்தியது. இவர்களும் போர்க்குற்றவாளிகளே. இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்துவிடுவதை தடுப்பது  நோக்கமாகும். இந்தத் தீர்மானத்தால் ஈழத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவின் நடவடிக்கைகளே இதற்கு நல்லதொரு சான்றாக அமைந்துள்ளது. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டை இந்தியா பாதுகாக்கும் என்பது இன ஒடுக்குமுறையை அங்கீகரிப்பது தவிர வேறொன்றுமல்ல.

 மறுபுறம் ரசியாவும், சீனாவும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என்றும், நாடுகளின் இறையாண்மையை காப்பது என்ற ஐ.நா சாசனத்தை மீறக்கூடாது என்றும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவும் கூறுகின்றன. ஆனால் இவ்வாறு கூறிக்கொண்டு பக்ச பாசிஸ்டுக்களின் இனப்படுகொலையை இவர்கள் ஆதரிக்கின்றனர். சர்வதேச அரங்குகளில் இலங்கையைப் பாதுகாக்கின்றனர். இவர்களும் இலங்கை மீதான தங்களது செல்வாக்கு மண்டலத்தை விரிவுப்படுத்துவதற்காகத்தான் இலங்கை அரசுக்கு துணைபோகின்றனர்.

புலம்பெயர் தமிழ்ச் சமூகச் சூழல்:

புலம்பெயர் தமிழர் எனப் பொதுவாக அழைக்கப்படுவோர் இலங்கையில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேவைகளின் நிமித்தம் வெளிநாடுகளில் குடியேறியோர் ஆவர். இவர்களின் முதல் தலைமுறையினர் காலனியாதிக்க அதிகாரத்தில் பங்குகொண்ட பிரிவினரின் வழி வந்தோர் ஆவர். இரண்டாவது தலைமுறையினர் போலிச்சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில், அதிகாரபூர்வ சலுகைகளின் மூலம் உயர்கல்வி மற்றும் இதர தேவைகளுக்காக சட்டபூர்வமாக குடியேறியோர் ஆவர்.மூன்றாவது தலைமுறையினர் இலங்கையில் தமிழ்த்தேசியப் பிரச்சனையின் விளைவாக வெளியேறியோர் ஆவர்.இவர்களில் மிகப் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக புகுந்தவர்களும், பெருந்தொகைப்பணத்தை இப்பயணத்துக்காக இறைத்தவர்களும் இதன் காரணமாக கடும் உடல் உழைப்புக்கு உள்ளாக நிர்ப்பந்தப்பட்டவர்களும் ஆவர்.

இதிலிருந்து புலம்பெயர் தமிழரிடையே ஒரு ‘கற்றறிந்தோர்’ குழாம், சில்லறை வணிகர்கள், நாளாந்த கடும் உழைப்பாளிகள் என்ற சமூகப் பிரிவுகளும் தோன்றியுள்ளன.

பொருளுற்பத்தி உறவில் இவர்கள் வகிக்கும் பங்கு பாத்திரத்தின் காரணமாக இப்பிரிவினரது அரசியல் சமூக சிந்தனையும் அமைந்துள்ளது இயற்கையே!

மூத்த குடியினர் காலனியாதிக்கத்தின் கருப்பையில் பிறந்தவர்கள், கற்றறிந்தோர் குழாம் என அறியப்படுவது, சிந்தனா பூர்வமாக ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை தொழுதேற்றுக் கொண்டது, வணிகர்கள் எனப்படுவோர் ஏகபோக வணிகத்தின் முன்னால் தமது மூலதனப் பெருக்கத்துக்கு வழியற்றோர்.இந்த இழவு அவ்வளவும் ஒன்று சேர்ந்த கலவையே புலம்பெயர் நாடுகளில் சமரசத்துக்கான சமூக வேர் ஆகும்.

இதைச் சுற்றி பல்வேறு தீமைகள் படர்ந்துள்ளன.உள்நாட்டு ஆளும் கும்பல்களுடன் உள்ள உறவு, மத நிறுவனங்களுடன் உள்ள உறவு, கலைப்புவாதிகளுடன் உள்ள உறவு, என்.ஜி.ஓ கருங்காலிகளுடன் உள்ள உறவு என இந்த விச வித்து விரிந்துள்ளது.

மறுபுறம் சாமானிய உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு சமூகம் என்றமுறையில் மேலை நாடுகளில் தேசிய சிறுபான்மை இனத்தவர் ஆவர்.மேலை நாடுகளில் தேசிய சிறுபான்மை இனத்தவர்களுக்கு என்ன மதிப்பும் மரியாதையும் உண்டோ, என்ன இழிவுகளையும், ஒதுக்குதல்களையும்  அவர்கள் சந்திக்கின்றார்களோ அதை இவர்களும் சந்தித்தாக வேண்டும்.மேலும் மரணத்தறுவாயில் இருக்கும் முதலாளித்துவம் சுமத்தும் அனைத்து நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கவேண்டும்.தமது அடுத்த சந்ததியினரின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.இது சார்ந்த பண்பாட்டுக் கடமைகளையும் சுமக்க வேண்டும்.இதன் பொருட்டு தமது இருப்புக்கு ஒரு அடையாளத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.இவர்கள் தான் சுதந்திரத்தின் ஆதரவாளர்கள் ஆவர்.

இந்திய விஸ்தரிப்புவாத அரசு:

தமிழீழத் தேசியப் பிரச்சனை ஒரு உள்நாட்டு யுத்தமாக வடிவமெடுத்த 1983 முதல் ஈழத்தமிழரைக் காப்பதாக இந்தியா நாடகமாடிவருகின்றது. ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண சிங்களத்தைக் கோருவதாகவும் பசப்பி வருகின்றது.ஆனால் இந்த 30 ஆண்டுகளில் இந்தியா மூலம் ஈழத்தமிழ்மக்கள் அடைந்தது என்ன?

ஈழத்தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகளாகவும்,சிங்களத்தின் இன அழிப்பில் இருந்து அவர்களைக் காக்கும் அரணாகவும் இருந்த விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட இந்திய அரசு 1987 இல் முயன்றது.இந்த இராணுவ முயற்சி தோற்கடிக்கப்பட்டாலும், இலங்கையை அடிபணிய வைத்து இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் தனது மேலாதிக்கத்தை நிறுவிக் கொண்டது. 70 களின் பிற்பகுதியில் இலங்கை ஜப்பானின் குப்பைத் தொட்டி (பஞ்சிகாவத்த) என அழைக்கப்பட்டது. ஆனால் இன்று இலங்கை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கின்றது.ஜப்பான் வெறும் 5%என்ற நிலைக்கு பின்தள்ளப்பட்டுவிட்டது. இலங்கையின் இறக்குமதி விகிதாசாரம் வருமாறு India 19.4%, China 15.1%, Singapore 9.1%, Iran 7%, Japan 4.9% (2010).
 1987 இல் தோற்றுப்போன முயற்சியை 2008 இல் இந்தியா நிறைவேற்றியது.

முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் மிக முக்கியமான ஈடு செய்ய இயலாத இழப்பு தமிழ் மக்கள் தமது விடுதலை இராணுவமான விடுதலைப் புலிகளை களப்பலி கொடுத்ததாகும். இந்தியா ஈழப்பிரச்சனையில் தலையீடு செய்யாதிருந்திருந்தால் இப்பேரிழப்பு நேர்ந்திருக்காது.இதற்காக எத்தனை தலைமுறைக்கும் ஈழம் இந்தியாவை மன்னிக்காது.

இந்த இந்தியா இப்போது சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதாகக் கூறி தொடர்ந்தும் தமிழீழப் பிரச்சனையில் தலையீடு செய்கின்றது.ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியாகிவிட்ட இந்தியா, அமெரிக்காவின் உலக மறுபங்கீட்டிற்கு இலங்கையைப் பணியவைக்க ஈழத்தமிழர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றது.அமெரிக்கத் தீர்மானத்தை திருத்தியெழுதி இந்தியா வழங்கிய ஆதரவு இதையே காட்டுகின்றது.

அமெரிக்கத் தீர்மானம் ஒரு அரசியல் முள்ளிவாய்க்கால்:

அமெரிக்க நவீன காலனியாதிக்கத்தின் உலக மறுபங்கீட்டிற்கான இலங்கை மீதான தலையீடு, `நிரந்தர சமாதானம்` என்ற முழக்கத்துடன் நுழைவதே அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கியத்துவமாகும்.விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னால் உருவாகியுள்ள சமாதானச் சூழல்- உலகமயமாக்கல் கொள்ளைக்கான வாய்ப்பு- மீண்டும் கை நழுவிப் போய் விடாது நீடித்து நிலைத்து இருக்க வேண்டிய, சில சீர்திருத்தங்களை சிங்களம் செய்தாக வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாகும்.அந்தச் சீர்திருத்தங்கள் LLRC இல் சிங்களத்தால் முன்வைக்கப்பட்டவை ஆகும்.சிங்களம் இதனையும் அமூலாக்காது, அமெரிக்காவும் இந்தியாவும் அதை அமூலாக்கக் கோரிய வண்ணம் தொடர்ந்து தலையீடு செய்யும்.எனவே இந்த நிரந்தர சமாதானம் நிரந்தர தலையீட்டிற்கான கருவியாகிவிடும். இதன் மூலம் அமெரிக்கா தனது நலன்களை அடைந்து கொள்ளும்.

உலக மேலாதிக்கத்திற்கான தனது யுத்ததந்திரக் களமுனையாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தை அமெரிக்கா தேர்ந்துள்ள நிலையில் இத்தீர்மானம், மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதற்குமேல் தமிழர் நலன் குறித்து அமெரிக்கத் தீர்மானத்தில் எதுவும் இல்லை.சொல்லப்போனால் தமிழர் என்கிற வார்த்தையே இல்லை.இதை தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கான அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சி என்பதாக ஒபாமாவின் புலம் பெயர் தமிழர்கள் கூப்பாடு போடுகின்றனர்.

1983 இல் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதாகக் கூறி இலங்கையில் இந்தியா தலையிட்டதற்கு தமிழ் அமைப்புக்கள் துணைபோனது இன்று எந்த நிலைமைக்கு தமிழர்களைக் கொண்டுவந்து விட்டுள்ளதோ, அதைவிட மோசமான நிலைமைக்கு இன்று அமெரிக்கத் தலையீட்டிற்கு வழங்கும் ஆதரவு கொண்டு செல்லும் என்பதை தமிழர்கள் ஒரு கணமேனும் மறந்து விடக்கூடாது.

இந்த அமெரிக்கத் தீர்மான ஆதரவுப் போக்கு, இலங்கையில் ஒரு ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக இயக்கத்தைக் கட்டியெழுப்ப உருவாகிவரும் புறவய வாய்ப்புக்களைப் பயன்படுத்த இயலாமல் நாசம் செய்துவிடும்.ஈழ விடுதலைப் போராட்டத்தை அமெரிக்க ஆதரவுப் போராட்டமாக்கி சர்வதேச ரீதியாக எம்மைத் தனிமைப்படுத்திவிடும். போலி அமெரிக்க எதிர்ப்பு நாடகமாடி சிங்களம் மக்களைத் தன் அணியில் சேர்த்துக் கொள்ள வழி சமைக்கும்.

எமது எதிரிகளான அமெரிக்காவும், இந்தியாவும்,சிங்களமும் இதனால் பயன் அடைய, நாம் எல்லா முனையிலும் தனிமைப்பட்டு விடுவோம்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னால் விடுதலைப் போராட்டம் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருக்கின்ற அத்தனை சக்திகளும், அமெரிக்க-இந்திய தீர்மானத்தை விழுந்து விழுந்து ஆதரிப்பது காரணம் இல்லாமல் இல்லை.

இன்றைய அரசியல் சூழலின் பிரதான போக்குகள்:
1) ஏகபோக முதலாளித்துவத்தின் உலகு தழுவிய 3வது பொது நெருக்கடி தீர்வுகாண இயலாமல் தொடர்வது, உலக மறுபங்கீட்டு யுத்தங்கள் தீவிரமடைவது,`நிரந்தர சமாதானம்` என்கிற போர்வையில் அமெரிக்கா இலங்கையில் தலையீடு செய்வது.
2) ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த தந்திரக் கூட்டாளியாகிவிட்ட இந்திய விஸ்தரிப்புவாத அரசு, இலங்கைத் தலையீட்டில் அமெரிக்காவுடன் இணக்கம் காண்பது.
3) உலக மறுபங்கீட்டில் ஒரு போர்க்களமாகிவிட்ட இலங்கையில் அமெரிக்க-இந்திய அணிக்கு சவாலாக ரசிய-சீன அணியுடன் பேரம் பேசும் போக்கை பக்ச பாசிஸ்டுக்கள் கடைப்பிடித்து,இராணுவ சர்வாதிகார அடக்குமுறையை முழு இலங்கை மக்கள் மீதும் தொடுத்து, தமிழீழத் தேசிய இன ஒடுக்குமுறையைத் தொடர்வது.
4) இதன் விளைவாக இலங்கையில் அனைத்து மக்களும் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க, பக்ச பாசிஸ்டுக்களை எதிர்த்து ஒன்றுபட்டு போராட வாய்ப்புக்கள் உருவாகுவது.
5) புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஒரு பிரிவினர் ஏகாதிபத்தியவாதிகளுடனும், இந்திய விஸ்தரிப்புவாத அரசுடனும் அணிசேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சமரச சந்தர்ப்பவாத வழிகளில் சீர்குலைக்க முயல்வது, மறுபுறம் பெருந்திரளான மக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பின்புலமாகத் தொடர்ந்தும் நீடிப்பது.
இவையே ஈழவிடுதலைப் போராட்டம் எதிர்கொள்ளும் இன்றைய பிரதான அரசியல் போக்குகளாகும்.
 
பிரதான போக்குகள்பால் சமூக வர்க்கங்களின் (கட்சிகளின்) நிலையும், அணி சேர்க்கையும்:
 
ஒடுக்கும் சிங்களப் பெருந்தேசிய இனத்தின் ஐக்கிய தேசியக் கட்சியோ, அல்லது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்ச குடும்ப எதிர்ப்பு (சந்திரிக்கா) அணியோ, அல்லது சரத் பொன்சேகாவோ எல்லோருமே ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த யுத்தக் குற்றவாளிகள் ஆவர். இவர்கள் ஏகாதிபத்திய தாசர்களும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஆதரவாளர்களும் ஆவர். இதனால் இக்கட்சிகள் எதிரிகள் ஆகும்.
 
ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சாதுக்களின் அனைத்து அரசியல் நிறுவனங்களும் சிங்களப் பேரின வெறியையும் பெளத்த பாசிசத்தையும் அடிமட்ட கிராமப்புற ஏழை எளிய உழைக்கும் சிங்கள மக்களிடையே விதைக்கும் விசக்கிருமிகளாகும்.இதற்கு கிராமப்புற விவசாயிகளிடையே அதிகாரம் செலுத்தும் பெளத்த பாஞ்சாலைகளை பயன்படுத்துகின்றார்கள். இவர்கள் எதிரிகளின் ஆதார சமூகத் தூண்கள் ஆவர்.
 
சிங்களக் குட்டிமுதலாளிய ஜே.வி.பி பேரின வெறியிலும், பெளத்த பாசிசத்திலும் மேற்கண்டவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. சொல்லில் சோசலிசமும் செயலில் பேரினவாதிகளுமான சமூக தேசிய வெறியர்களே இவர்கள். தமிழீழத் தேசிய இன ஒடுக்குமுறையில் இவர்கள் எதிரிகளின் நம்பகமான கூட்டாளிகளாக செயல்படுகின்றனர்.
 
உதிரிகளாகவோ,சிறு சிறு குழுக்களாகவோ இருப்போரில் பெரும்பாலானோர் இந்த அல்லது அந்த என்.ஜி.ஓ வில் ஞானப் பால் குடிக்கும் பிள்ளைகளே ஆவர்.
 
இஸ்லாமியத் தமிழர்களின் கட்சிகள் என்று சொல்லப்படுபவை இரண்டு பேரினவாதக் கட்சிகளோடு கூட்டமைத்து ஆதாயம் அடையமுயலும் பிழைப்புவாத சமரசசக்திகளே ஆகும்.இஸ்லாமிய மக்களிடையே இருக்கும் அதீத மத நம்பிக்கையை இதற்கு ஆதாரமாக்கிக் கொள்கின்றார்கள். தம்புள்ள மசூதி தாக்குதலில் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனார்கள் இந்த வெறும் பேச்சு வீரர்கள்.ஈழவிடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு இவர்கள் பேரினவாதக் கட்சிகளுக்கு துணைபோகின்றனர்.
 
மலையகத் தமிழர் மத்தியிலான கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அம்மக்களுக்கு தொடர்ந்து இழைத்த துரோகத்தினால் செல்வாக்கிழந்து வருகின்றனர். மலையகத்தில் அட்டைகளைக் காட்டிலும் என்.ஜி.ஓக்கள் அதிகம்.
 
கூட்டமைப்பு பல குள்ளர்களினதும், சில நல்லவர்களினதும் கூடாரம். அமெரிக்காவும் இந்தியாவும் இவர்களைத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக்க படாதபாடுபட்டும் அது நாய் வாலை நிமிர்த்தும் கதையாகிவிட்டது. இப்போது சந்திரகாசன் என்கிற பேய், இராசதுரை என்கிற பூதம், பெருமாள் என்கிற சடலம் இவர்களை வைத்து ஒரு மயானகாண்டம் நடத்துகின்றது இந்தியா. இந்தக் கும்பல் அனைத்துமே இந்திய அடிமைகள் ஆவர்.
 
இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல `உருத்திரகுமாரனும் 40 பேரவைகளும்`, `ஒபாமாவும் அவருக்கான தமிழர்களும்`!
 
இச்சித்திரத்தில் தெரிகின்ற பொதுவான உண்மை என்னவென்றால் மேற்கண்ட பிரதான போக்குகள்பால் மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடு இந்தக்கட்சிகள் எவற்றுக்கும் கிடையாது.எல்லாம் ஏதோ ஒருவகையில் எதிரிகளுக்கு சேவகம் செய்கின்றவையே ஆகும்.குறிப்பாக ஏகாதிபத்திய தாசர்கள் ஆவர்.
 
ஏகாதிபத்தியம் மனிதகுலத்தின் எதிரி.
 
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தனது நூலில் மாமேதை தோழர் லெனின் ஏகபோகங்களது வரலாற்றின் முக்கிய கட்டங்களை மூன்றாக வகைப்படுத்துகின்றார்.(1-1860-70- 2- 1873) மூன்றாவது கட்டமாக, ``பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உயர்வேற்றமும், 1900-1903ம் ஆண்டுகளின் நெருக்கடியும், பொருளாதார வாழ்வு அனைத்தின் அடிப்படைகளில் ஒன்றாக கார்ட்டல்கள் ஆகிவிடுகின்றன.முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாற்றமடைந்து விடுகிறது`` என்பார். (தேர்வு நூல் தொகுதி 4, பக்கம் 61)
 
ஆக மனிதகுலம் ஏகாதிபத்திய நுகத்தடியின் கீழ் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாக கட்டுண்டு கிடக்கின்றது.இந்த நீண்ட காலத்தில் காலனியாதிக்கம், இரண்டு உலகப் போர்கள்,நவீனகாலனியாதிக்கம், எண்ணற்ற பிராந்திய உள்நாட்டு யுத்தங்கள், எல்லைத் தகராற்றுப் போர்கள், அணு ஆயுதப் பரவல்,பசி பஞ்சம் பட்டினி,வேலையின்மை,சமூக மோதல்கள்,கலகங்கள், வன்முறை; கொடிய நோய்கள் கொள்ளை வியாதிகள், மாசுபட்ட சூழல்,வற்றிப்போன வளங்கள்,சிறுவர் உழைப்பு, வக்கிரப் பாலியல் வன்முறை, உணவு உடை உறையுள் கல்வி குடிநீர் ஆகிய அடிப்படை மனித உரிமைகள் இழந்த இலட்சோப இலட்சம் மக்கள். நாடுகளுக்குள்ளும், எல்லைகள் தாண்டியும் அகதிகள் பட்டாளம். ஊழல் அதிகார துஸ்பிரயோகம்,சதிப்புரட்சி,இராணுவ ஆட்சி, கொடுங்கோன்மை.
 
ஏறத்தாழ உலக நாடுகளில் 25வீதமான(55) நாடுகளையும்,உலக சனத்தொகையில் 15 வீதமானவர்களையும், எண்ணற்ற வளங்களையும் வனப்பையும் உழைப்பையும் கொண்ட ஆபிரிக்கக் கண்டத்தை எவ்வாறு கடித்துக் குதறினார்கள் என்பது ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்துக்கு சான்றாகும். இத்தனையையும் மனிதகுலம் அநுபவிப்பது வெறும் 1வீதமான நிதியாதிக்க கும்பலுக்காக!
 
எனவே ஏகாதிபத்தியத்துக்கு முடிவுகட்டுவது மானுட தர்மமும், தார்மீகக் கடமையுமாகும்.
 
இதனால் இவ்வாண்டு மேநாளில், தேசிய சுதந்திரத்துக்காக மாண்ட நம் மக்களதும் மாவீரத் தோழர்களதும் வீர நினைவாக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளின் நவீன காலனியாதிக்கத்தை முறியடிக்கவும், உலகத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலையை சார்ந்து நிற்கவும், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பவும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் செயற்பட ஒன்றுபடுமாறு  அறைகூவி அழைக்கின்றோம்.
 
• மரணப்படுக்கையிலிருக்கும் முதலாளித்துவத்தைக் காப்பாற்ற மனித குலத்தைப் பலியெடுக்கும் நவீன காலனியாதிக்க உலக மறுபங்கீட்டு யுத்தங்களை எதிர்ப்போம்!
 
• ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ மயமாக்கலை எதிர்ப்போம்!
 
• நவீன காலனியாதிக்க ஆட்சிக்கவிழ்ப்பு, அந்நியத் தலையீடுகளை, புதிய ஜனநாயக உள்நாட்டுப் புரட்சியால் தோற்கடிப்போம்!
 
• ஒற்றையாட்சிச் சிங்களத்தை எதிர்ப்போம், தமிழீழ சுயநிர்ணயத்துக்காகப் போராடுவோம்! ஆறாவது திருத்தச் சடத்தை நீக்கக் கோருவோம்!
 
• இலங்கையை உலகமறுபங்கீட்டுப் போர்க்களமாக்கும் சக்திகளை எதிர்ப்போம்!
 
• ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியத் தலையீட்டை எதிர்ப்போம்! இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப் போராடுவோம்!
 
• மலையகப் பெருந்தோட்டத் தனியார் மயமாக்கலை எதிர்த்த போராட்டங்களுக்கு ஆதரவளிப்போம்!
 
• இஸ்லாமியத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்!
 
• தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக, அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவோம்!
 
• சிங்கள ஏழை விவசாயக் குடும்பப் பெண்களை கொத்தடிமைகளாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பும் கொடுஞ்செயலை தடைசெய்யப் போராடுவோம்!
 
• அபிவிருத்தி என்ற பெயரால் சிங்கள விவசாயிகளின் நிலங்களை அந்நியக் கம்பெனிகளுக்குத் தாரைவார்த்துவிட்டு, தமிழ் விவசாயிகளின் நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்றி இனப்பகையைத் தூண்டும் இழி செயலை எதிர்ப்போம்!
 
• மீன்பிடி மற்றும் வனத் தொழில் மீது விதிக்கப்பட்டிருக்கும் சட்டத்தடைகள், இராணுவக் கெடுபிடிகளை நிறுத்தப் போராடுவோம்!
 
• பக்சபாசிஸ்டுக்கள் மக்கள் மீது சுமத்தியுள்ள அத்தியாவசிய எரிபொருள், உணவுப் பண்ட விலை உயர்வு, வரிச்சுமைகளைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
 
• யுத்தக்கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்யப் போராடுவோம்!
 
• அந்நியத் தலையீட்டையும், உள்நாட்டு இனவெறிப் பாசிச இராணுவ சர்வாதிகாரத்தையும் வெற்றிகொள்ள பரந்துபட்ட தேசபக்த ஜனநாயக ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!
 
உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுவோம்!
 
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வழி நடப்போம்!
====================================================================
புதிய ஈழப்புரட்சியாளர்கள்       தமிழீழம்     மே 2012      eelamnewsbulletin@googlemail.com
====================================================================
 
குறிப்பான திட்டத்தின் செயல் முழக்கங்கள்
 
நல்லிணக்க ஆணைக்குழு விமர்சனம்http://senthanal.blogspot.co.uk/2012/01/on-llrc-report.html

2012 வரவுசெலவுத் திட்டம்http://senthanal.blogspot.co.uk/2011/11/2012-2012-7.html